மீண்டும் மீண்டும் போன் அடித்துக்கொண்டே இருக்க அதை எடுக்கும் துணிவு மட்டும் வரவே இல்லை மேகவர்ணாவுக்கு.
சில நொடிகள் அழைப்பு அப்படியே அடங்கி போனது. சற்றே நிம்மதியாகி அந்த எண்ணை ப்ளாக் செய்துவிடுவோம் என்று போனை எடுத்தாள்.
அவளின் விரல்கள் வேகம் கொண்டு திரையை தொட அந்த எண்ணிலிருந்து குறுஞ்செய்தி.
“மேகாவுக்கு போன்ல பேச விருப்பமில்லை போல. நேர்ல பேசலாம்…” என்று அனுப்பியிருந்தான்.
அவ்வளவு தான் சர்வமும் நடுங்கி போனது. பார்க்காததுக்கே இந்த நிலைக்கு தன் குடும்பம் வந்துவிட்டிருக்க, இப்போது நேரிலா?
அவள் அதிர்ந்து அதனை கிரகிக்கும் முன் மீண்டும் அழைப்பு வர தன்னை போல போனை எடுத்தாள்.
“வீடியோ கால் பன்றேன். காட் இட்…” என அவன் அவளின் பதிலுக்கு காத்திராமல் கட் செய்துவிட்டு வீடியோ காலில் வந்தான்.
பதட்டமும், பயமும், கோவமும் அவளை மாற்றி மாற்றி அரணமைக்க எழுந்து சென்று கதவை தாழிட்டு வந்த பின் அட்டன் செய்தாள்.
அவனை பார்த்த மாத்திரத்தில் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கிவிட கோபத்துடன் அவனை எரிக்கும் பார்வை பார்த்தாள்.
மேகாவின் கண்ணீரை கண்டவனின் உள்ளம் இங்கே கலங்கியது. இந்த உணர்வை ஆழ்ந்து அனுபவித்தவன் அவளை அணுவணுவாய் தன் கண்களால் கொள்ளையிட்டான்.
“மேகா…” என மென்மையாக புன்னகையுடன் அழைக்க அதுவே அவளை இன்னும் அவனை விட்டு ஓட செய்தது.
‘எப்படி சிரிக்கிறான்? என கடுப்புடன் பார்த்தவளுக்கு அவன் மீதான பிரமிப்புகள் எல்லாம் தண்ணீரோடு கலந்து கரைந்துவிட்டதை போல எங்கோ காணாமல் அடித்து செல்லப்பட்டிருந்தது.
“எதுக்காக கால் பண்ணுனீங்க? எங்க வீட்டுல உங்களால ஏற்கனவே அவ்வளோ பிரச்சனை?…”
“கேள்விப்பட்டேன். அதை பத்தி பேசத்தான் கூப்பிட்டேன் உனக்கு…”
“இதெல்லாம் எதுக்கு தெரிஞ்சுக்கறீங்க? நீங்க யார் எங்களுக்கு? இதை பேச நீங்க யாருமே இல்லை. நான் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை…” என்றாள் வெட்டுதலாக.
“பட் என்னால நீ பாதிக்கப்பட்டிருக்க…”
“நான் மட்டுமில்லை என் குடும்பமும்….” என்றவள்,
“நீங்க அன்னைக்கு என்னை ஏன் அப்படி பார்த்தீங்க? கட் பண்ணிட்டு போயிருக்கலாமே?…” என்று கேட்கவும் மௌனமாக பார்த்தான் அதிரன்.
அவளை எப்போதும் வேறு எப்படியும் பார்க்க முடியுமென்று அவனுக்கு தோன்றவில்லை என்பதை அவளுக்கு இப்போது புரிய வைக்க முடியாதே?
“என் கண்ணுக்கு நீ அழகா தெரிஞ்ச. பார்த்தேன். பட், ஊரே பார்க்க பார்த்திருக்க கூடாது தான். இப்போ அதுக்கு என்ன பண்ணலாம் மேகா?…”
“ஒன்னும் பண்ண வேண்டாம். இனிமே கால் பண்ணாதீங்க. இப்படி மிரட்டாதீங்க…”
“வாட், நான் மிரட்டினேனா?…” அழகாய் புன்னகைத்து புருவமுயர்த்தினான்.
“கால் அட்டன் பண்ணலைன்னா நேர்ல பார்க்கலாம்ன்னு நீங்க தானே சொன்னீங்க? அது மிரட்டல் இல்லாம? வீட்டுக்கு வந்தீங்கன்னா?…”
“பார்க்கறேன்னு சொன்னேன். உன் வீட்டுக்கு வரேன்னா சொன்னேன்?…” அவளை தெளிவாய் குழப்பினான்.
‘ம்ஹூம், இவன் பேச்சை வளர்க்கிறான். எதற்காக தன்னிடம் பேச நினைக்கிறான்?’ என யோசித்தவள்,
“எதுக்காக கூப்பிட்டீங்க. சொல்லிட்டு வைங்க…”
“ஏன்? உடனே என் நம்பரை ப்ளாக் பண்ணனுமா?…” என அவன் கேட்டதும் மேகாவின் விழிகள் விரிந்துகொண்டன.
அந்த அகலத்தில் விழுந்து எழுந்தவன் மனது இன்னும் நிலைபெறாமல் தள்ளாடியது.
“ஓஹ் நோ…” என தன் விழிகளை லேசாய் திருப்பிக்கொண்டவன் சின்ன சிரிப்புடன்,
“அப்போ என்னோட கெஸ்ஸிங் கரெக்ட் தான் இல்லையா?…” என்றான் கண்டுகொண்டதை போல.
“இது என் மொபைல். யார் நம்பரை வச்சிருக்கனும், ப்ளாக் பன்னனும்ன்றது என்னோட இஷ்டம். ரொம்ப ஸ்மார்ட்ன்னு நினைப்போ?…” என்றாள் ஆத்திரத்துடன்.
‘இவன் யார் என்னை கணிக்க? கவனிக்க?’ என்ற அவன் மீதான எரிச்சல் மடமடவென்று உயர்ந்தது அவள் மனதில்.
முகத்தில் எந்த ஒப்பனையுமின்றி கண்ணீருடன் கன்னத்தில் ஒட்டியிருந்த சிறு கூந்தல் இழைகளும், கண்ணில் தேங்கி நின்ற கண்ணீரும், இதோ கொட்டிவிடுவேன் என்பதை போன்று கீழிமையில் உருண்டு திரண்டு மின்னிக்கொண்டிருந்த ஒற்றை துளி நீரும் அவனை பார்க்க வைத்துக்கொண்டே இருந்தது.
‘யார் இவள், உன்னை இத்தனை செயலிழக்க செய்கிறாள்?’ என எப்போதும் போல அவனின் மனது அவனையே கேள்வி எழுப்பியது.
“ஹலோ மிஸ்டர்…” என்று மேகா ஒற்றை விரலால் சொடக்கிட்டு அழைக்க,
“அதிரன் தேவராஜ்…” என்றான் புன்னகையுடன்.
“சோ வாட்? யாரா இருந்தா என்ன?…” என்றவளுக்கு இன்னும் ஆத்திரம் முட்டியது.
அந்த பார்வையும், அந்த ரசிப்பும், அதற்கு பின்னால் இருந்த எதுவோ ஒன்று மேகாவை மறைமுகமாக எச்சரித்தது.
“கல்யாணம் நின்னுடுச்சு போல மேகா?…” என்றான் இப்போது.
கேட்டதும் கண்ணில் தேங்கி இருந்த நீர் அடுத்தடுத்து உருண்டு விழ அதை கண்ட அவன் புன்னகை முகம் லேசாய் பொலிவிழந்ததோ என்பதை போல அதிரனின் முகம் அவளுக்கு மாய வித்தை காண்பித்தது.
கனவோ என்பதை போல மேகா கண்ணை சிமிட்டி பார்க்க மீண்டும் அதே முறுவல் தான் அவன் முகத்தில்.
“இதுக்கு அழுவாங்களா மேகா?…” என்றான் மீண்டும்.
“உங்களுக்கு இது பெரிய விஷயமே இல்லை. ஆனா எங்களை மாதிரியானவங்களுக்கு இது குடும்பத்தோட மரியாதை சம்பந்தப்பட்டது. மரியாதைன்னா என்னன்னு தெரியுமா?…” என்றாள்.
கடுமையான தாக்குதல் தான். அவனை காயப்படுத்த வேண்டிய பேச்சை வேண்டுமென்றே பேசினாள்.
அவன் மீது இப்போது அத்தனை கோபமும் திரும்பியது. இவன் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாமே?
கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்த பேச்சே வந்திருக்காதே? அந்த பார்வை, அவன் தன்னை தலை சாய்த்து பார்த்த விதம்.
மீண்டும் அதன் நினைவில் லேசாய் அவளின் கவனம் சிதற அதிரன் மேகாவின் எண்ணங்களை ஒட்டி தனது பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்தான்.
“பார்த்திருக்க கூடாது தானே? ஏன்?…” என்று அவளுக்கவளே கேட்பதை போல சத்தமாகவும் கேட்டுவிட,
“சொன்னேனே? என் கண்ணுக்கு நீ அழகா தெரிஞ்ச. பார்க்காம இருக்க முடியலை…” என்று அதிரன் பதில் மீண்டும்.
“ஆக்சுவலி உன்னை நேர்ல பார்த்து விஷ் பண்ணனும் தான் நினைச்சேன். ஆனா…” என்றவன் மீசையை நீவிவிட்டுக்கொண்டே,
“இப்பவும் விஷ் தான் பண்ண போறேன். இது உனக்கொரு பிகினிங் தான். உன்னோட லைஃபை நீ டிஸைட் பண்ணு. நல்லா படி. நெக்ஸ்ட் மூவ் என்னன்னு யோசிக்காதே. தானா நடக்கும்…” என்றவனுக்கு மேகாவை இலகுவாக ஒருமையில் கூப்பிட முடிந்தது.
எப்போதும் மிக நெருங்கியவர்களை தவிர யாராக இருந்தாலும் பன்மையில் அழைத்து ஒரு எல்லைக்குள் நிருத்திவிடுபவன் சரளமாக அவளை ஒருமையில் அழைக்க தன் மனது புரிந்தும் சுருக்கென்ற வலி.
அவளுக்கு தன்னை அறவே பிடிக்கவில்லை என்பதில் உள்ளுக்குள் ஒரு பேரலை உருவாகாமல் இல்லை.
அத்தனையும் அடக்கியபடி முதலில் மேகாவை இதிலிருந்து வெளிக்கொண்டுவருவதில் தான் தான் கவனமாக இருக்க வேண்டும் என நினைத்தான்.
“உங்க வாழ்த்து எதுவும் எனக்கு தேவை இல்லை…” என்றாள் பட்டென்று.
“அப்படி ஏன் சொல்ற? அஸ் எ வெல்விஷரா…”
“நீங்க எனக்கு யாருமில்லை…” என்றாள் அவனை பேசவே விடாமல்.