“பறந்து போய்டுச்சு. இப்ப இல்லை…” என்றவனின் குரலில் மொபைலை மீண்டும் பார்த்தவள்,
“இனிமே கால் பண்ணாதீங்க…” உடனே.
“ஏன்?…”
“இதுவே பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்டா இருக்கட்டும். கால் பண்ணாலும் நான் எடுக்கமாட்டேன்…”
“ஏன் உனக்கு என்ன தோணுது மேகா? நான் இந்த இஷ்யூவால தான் உன்னை காண்டேக்ட் பண்ண முடிவு பண்ணேன்…” என்றதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவள் அமைதியாக இருக்க,
“ஓகே, நான் கால் பண்ணலை. பேசலை. போதுமா?…” என்றவனை மேகா இன்னும் குழப்பமாக பார்த்தாள்.
தன்னிடம் இத்தனை பேசவேண்டிய அவசியமே இல்லையே இவனுக்கு. அவன் பார்க்காத பெண்களா?
மேகாவிற்கு அதிரனை வேறு எப்படியும் யோசிக்க முடியவில்லை. ஆனால் உள்மனம் அத்தனை எச்சரித்தது அவளை.
வீட்டிற்கு தெரிந்தால் இன்னுமே பிரச்சனை ஆகுமே என யோசித்தபடி கலக்கத்துடன் அவள் இருக்க,
“மேகா…” என்றான் ஆழ்ந்த குரலில்.
விழிகளை மட்டும் அவள் உயர்த்தி பார்க்க ஒருநொடி அன்றைக்கு போல தலைசாய்த்து அவன் பார்த்து புன்னகைக்கவும்,
“என்ன? என்ன இத்தனை பார்வை? இனிமே இப்படி செஞ்சீங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிருவேன்…” என்று விரல் நீட்டி அவள் எச்சரிக்க அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான் அதிரன்.
அவனின் அந்த புன்னகை மேகாவை பலமாய் தாக்கியது. தன்னால் முடியாதென்று தானே இத்தனை சிரிக்கிறான் என.
அந்தவகையில் அவனை எதுவும் செய்யமுடியாத இயலாமைவில் மீண்டும் கண்ணில் நீர் கோர்க்க பார்த்தாள்.
“ஹேய் மேகா அழாதடா…” என்றான் அனுசரணையாய்.
“இல்லை நீங்க இப்படி பேச வேண்டாம். சிரிக்கவும் வேண்டாம். என்னால எதுவுமே செய்ய முடியாதுன்ற மாதிரி இருக்கு எனக்கு…” என்றவள்,
“இதுவே உங்க வீட்டுல யாருக்காச்சும்ன்னா இப்படித்தான் பேச விட்டு வேடிக்கை பார்ப்பீங்களா?…” என்றாள் கொதிப்புடன்.
“நான் ஒருத்தி, உங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லைல்ல. அப்படியே நியூஸ் வந்தாலும் இதோ இப்ப என்கிட்டே பேசி சிரிக்கிற உங்களுக்கு இதே விஷயம் நடந்திருந்தாலும் சிரிச்சுட்டே போயிருப்பீங்க….” என்றாள் காட்டமாக.
அவளுக்கு அதற்கு மேல் எப்படி கடுமையாக பேசவென்று தெரியவில்லை. இதே நேரம் அவன் நேரில் இருந்து இதை பேசியிருந்தால் நிச்சயம் அதிரன் கன்னம் பழுத்திருக்கும்.
அவ்வளவு கோபத்தில் இருந்தவளுக்கு இதற்கு மேல் கடுமையான வார்த்தைகள் மட்டும் வரவில்லை.
“இப்போ என்ன உனக்கு? என் மேல கம்ப்ளைன்ட் குடுக்கனுமா? குடு. ஆனா என்னன்னு குடுப்ப?…” என்றான் அமைதியாக.
“சிரிக்காம பேசுங்க. ஏன் சிரிக்கறீங்க?…” என்றாள் கோபமாக.
“சொல்லு கம்ப்ளைன்ட் தரியா மேகா? நான் கண்டிப்பா என்னோட எந்த இன்ஃப்ளூயன்ஸ் யூஸ் பண்ண மாட்டேன்…”
“நீங்க ஏன் இவ்வளவு இறங்கி பேசறீங்க? என்ன வேணும் உங்களுக்கு? என்கிட்டே நீங்க இப்ப பேசனும்னு கூட அவசியம் இல்லை. ஆனா பேசறீங்க? கம்ப்ளைன்ட் தர சொல்றீங்க…”
“வேற என்ன செய்யனும்?…” என்றான் அவளிடமே கேள்வியை விட்டு.
“உங்களுக்கு எங்க பேமிலியை நல்லா தெரியும், இல்லையா?…” என கேட்டவள் கேள்வி செல்லும் திசையை கண்டுகொண்டான்.
“ஹ்ம்ம்…” என தலையசைக்க,
“அப்ப நாங்க இந்த கம்ப்ளைன்ட் எல்லாம் குடுக்க மாட்டோம்ன்னு தெரியும் தானே? அதுவும் கம்ப்ளைன்ட் என்னன்னு தர? தெரிஞ்சு தானே நீங்க இவ்வளோ தைரியமா பேசறீங்க?…” என்றாள்.
“நீ தானே ஆசைப்பட்ட?…”
“உங்களை பார்க்க கூடாதுன்னு ஆசைப்படறேன். எனக்கு நீங்க பேசவும் கூடாதுன்னு ஆசைப்படறேன். இதை நீங்க பாலோ பண்ணுங்க போதும். என்னை, என் குடும்பத்தை விட்டுட்டு…” என்றவளை மென்னகையுடன் பார்த்து தலையசைத்தான்.
“அக்ரி…”
“என்ன?…” என அவள் பார்க்க,
“நானா உன்னை பார்க்கவோ, பேசவோ முயற்சி செய்ய மாட்டேன்…” என்றதும் அவள் சந்தேகத்துடன் தான் பார்த்தாள்.
“பட், சூழ்நிலை பார்க்க வச்சா நான் அவாய்ட் பண்ணவும் மாட்டேன்…” என்று சொல்லியவன் முகத்தில் அத்தனை குறும்பு.
“அது நடக்கவே நடக்காது. உங்களை நான் மீட் பன்ற மாதிரி ஒரு விஷயம் நடக்காது…” உறுதியை மறுத்தாள் மேகா.
“பார்க்கலாம். வேண்டிக்கோ நீ என் கண்ணுல பட வேண்டாமேன்னு…” என்றவன் சிரிப்புடன் கையை விரித்து விடைபெறுவதை போல விரித்து அசைத்தான்.
எதுவும் பேசாமல் அவள் துண்டிக்க போக அவனின் பார்வை அப்படியே நின்றிருந்தது.
“மேகா…” மீண்டும் அழைக்கவும் அவள் விரல்கள் அப்படியே நின்றுவிட,
“குட்லக். எக்ஸாம்ல வின் பண்ணவும், உன்னோட ஆசைல வின் பண்ணவும்…” என்று சொல்லியவன்,
“பை மேகா…” என்று சொல்லவும் உடனே சிகப்பு வட்டத்தை அழுத்திவிட்டாள்.
அடுத்த நொடி அவனின் எண்ணையும் ப்ளாக் செய்த பின்பு தான் படபடப்பே குறைந்தது.
ஆனாலும் இன்னும் இன்னும் நம்பமுடியாத திகைப்பில் தான் சுருண்டு படுத்தாள். லேசாய் உடலெல்லாம் சூடு பரவ கண்கள் எரிந்தது.
அரைமணி நேரம் சென்றிருக்கும் மோனிகா வந்து கதவை திறந்து பார்த்து திறக்கவில்லை என்றதும் தட்டினாள்.
மேகா எழுந்துகொள்ளவே இல்லை. பயந்து போய் மீண்டும் மீண்டும் தட்டியவள் போனில் அவளுக்கு அழைக்க மேகாவின் மொபைல் இசைத்தது.
தூக்கிவாரிபோட எழுந்தமர்ந்தாள் மேகா. எங்கே அதிரன் தான் வேறு எண்ணில் இருந்து அழைக்கிறானோ என பதறிபோய் போனை எடுத்து பார்க்க மோனிகா.
சற்றே ஆசுவாசமாகி நிதானத்திற்கு வந்த பின்பு தான் கதவு தட்டப்பட்டிருப்பதே தெரிந்தது.
எழுந்து கதவை திறந்து அவள் வெளியே வர அமுதனும், மலர், பல்லவனுடன் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
அவர்களை பார்த்ததுமே மோனிகா சற்றே தாழ்ந்த குரலில் மேகாவுடன் பேசினாள்.
“எத்தனை தடவை கதவை தட்ட? பயந்துட்டேன் நான்…” என்று சொல்ல,
“இல்லைண்ணி கொஞ்சம் அசந்துட்டேன்…” என்றவள் விழிகள் வீங்கி இருந்தது.
“அழுதியா வரு?…” என கேட்டவள், வீட்டிற்கு வந்து அமர்ந்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க சென்றாள்.
மேகாவை பார்த்த பெற்றோர் அமைதியாக சோபாவில் அமர்ந்திருக்க பல்லவன் அவளை தான் பார்த்தான்.
“இங்க வா வரு…” என அழைக்க அவனருகே சென்று அமர்ந்தவளின் சூடு பல்லவன் கையில் தெரிந்தது.
“என்னடா உடம்பு கொதிக்குது?…” என்று தொட்டு பார்த்தான்.
“தெரியலைண்ணா. தலை வலிக்கிற மாதிரி இருந்துச்சு. படுத்துட்டேன்…” என்றவள் அவனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“என்னப்பா காய்ச்சலா?…” அமுதன் கேட்க,
“ஆமாப்பா, போகும் போது இல்லை. இப்ப நெருப்பா இருக்கு…” என்றான் கவலையுடன்.
ஒருவேளை மகள் வருந்துகிறாளோ என வருத்தத்துடன் மலர் பார்க்க பல்லவன் முறைத்தான் தாயை.
“தூங்கிட்டா. இப்பதான் எழுப்பினேன்…” என மோனிகா சொல்லவும் பல்லவன் மேகாவை கவலயுடன் பார்த்தான்.
அமுதினியனுக்கு மகளின் எதிர்காலம் பெரிய பயத்தை உருவாக்கி இருந்தது. என்னதான் தைரியமாக அவள் திருமணம் வேண்டாம் என்று சொன்னாலும் அப்படியே விட முடியுமா?
அதிலும் மகள் சொன்ன அந்த வார்த்தை. என்னை மருமகளாக எடுப்பதையே அசிங்கமாக நினைப்பவர்கள் வீட்டில் நிம்மதியாக வாழ முடியுமா? என.
இதற்கு என்ன அர்த்தம்? அப்போது இது வாழ்நாள் முழுவதுமா என் மகளை துரத்தும்? பயந்து போனார்.
ஆயிரம் யோசனைகளை யோசித்தாலும் அதிரனை வேறு எந்தவகையிலும் யோசிக்கவில்லை.
அதிரன் அவரின் எண்ணங்களில் எங்குமில்லை. தன் மகளை தன் பார்வை வட்டத்தில் கொண்டு வந்துவிட்டவனை தாண்டி ஒரு வாழ்க்கை மகளுக்கு அமைய போவதில்லை என்றும் தெரியவில்லை.
அதிரனின் பார்வை என்னவோ பெரிதாய் அவரை பாதிக்கவில்லை. அவன் யாரோ என பார்த்திருந்திருக்கலாம் என்று நினைத்தார்.
அத்தனை பெரிய நடிகன், பெரும் பின்புலத்தின் வாரிசு. அவர்களுக்கு தாங்கள் எவரோ என்று தான் நினைத்தார்.
ஆனால் அதிரனோ அவரின் கணக்கீடுகளுக்குள் எல்லாம் அடங்காமல் அத்தனைக்கும் அப்பாற்பட்டு இருந்தான்.
இப்படி அவரின் யோசனைகளில் இருக்க மலர் கஷாயத்தை ஆற்றியபடி வந்துவிட்டார்.
“திடீர்ன்னு என்னடா இது காய்ச்சல்?…” என மகளை தொட்டு பார்த்து மலர் கேட்க,
“காய்ச்சல் என்ன சொல்லிட்டா வரும்?…” என்றான் பல்லவன் கடுப்பாய்.
ஏற்கனவே அவர் மீது அத்தனை கோபத்தில் இருந்தான். பிரதாப் வீட்டில் அவர்களை துளியும் மதிக்கவில்லை.
அவர்களிடம் மீண்டும் பேசிப்பார்க்களாம் என கேட்டு அங்கே கெஞ்சலுடன் நின்றவரை சத்தம் போட்டு அழைத்து வந்திருந்தான் பல்லவன்.