“நிஜமாவே இல்லப்பா. நம்புங்க…” என அவரின் கையை பிடித்து சத்தியம் செய்தாள்.
“அப்பா அவளுக்கு இந்த காய்ச்சல் நம்ம எல்லாரையும் நினைச்சு தான் வந்திருக்கும். முதல்ல தெம்பா வாங்க. இன்னும் எவ்வளவோ சமாளிக்கனும். இதுக்கே சோர்ந்தா எப்படி?…” என்று வந்தான் பல்லவன்.
“அதுவுமில்லாம இது சும்மா ரூமர் தான். அந்த நடிகன் எங்கையோ இருக்கான். இதுக்கும் அவனுக்கும் கூட சம்பந்தமில்லை. கொஞ்ச நாள் இந்த சலசலப்பு சுத்தமா அடங்கிரும்…” என்றான் ஆறுதலாக.
“முதல்ல நம்ம வரு எக்ஸாம் எழுதி முடிக்கட்டும். அதுக்குள்ளே எல்லாம் நார்மல் ஆகிடும். அப்போ பார்த்துக்கலாம்…” என மோனிகாவும் சொல்ல,
“கரெக்ட் மோனி. நாம இப்படி இருக்க வேண்டாம். சும்மா யாரோ எதுக்கோ பொழுது போகாம செஞ்சதுக்கு ஏன் உக்கார்ந்து கலங்கனும்? இதே மாதிரி தான் அவனுக்கும் தெரிஞ்சிருக்கும். தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்பான். நாம யோசிக்கிற மாதிரி கூட யோசிக்கமாட்டான்…” என பல்லவன்.
மேகாவிற்கு உள்ளங்கால் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது. அவர்கள் பேசிகொண்டிருந்தவனுடன் சற்று முன் தானே அவள் பேசியிருந்தாள்.
‘தப்பு தப்பு. நான் பேசியிருந்திருக்கவே கூடாது. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். பேசியிருக்கவே கூடாது’ என மேகா தன்னையே நிந்தித்துக்கொண்டு இருந்தாள்.
அவனை யோசிக்கவே கூடாதென்று இங்கே ஒருத்தி தடைபோட்டுக்கொண்டிருக்க, தன் எண்ண வழிகளில் அவனின் தடத்தை அழிக்க முற்றிலும் முற்பட அவன் இன்னும் ஆழமாய் மேகாவை தன்னுள் உருவேற்றி இருந்தான்.
——————————————————-
மேகாவிடம் பேசி முடித்தவன் மொபைலை கையினால் சுழற்றியபடி முகமெல்லாம் சிரிப்புடன் அமர்ந்திருக்க தேவராஜ் உள்ளே வந்தார்.
“அதி ப்ளாக் டீ…” என்று அவனுக்கு நீட்ட வாங்கிக்கொண்டவன்,
“உட்காருங்கப்பா…” என்றான்.
“ரொம்ப சந்தோஷமா இருக்க போல?…”
“ஹ்ம்ம், மேகாக்கிட்ட பேசினேன்…” என்று சொல்ல அதிர்வுடன் பார்த்தார்.
சற்று முன் அவன் தடுமாறி நின்றதென்ன, மேகாவை பற்றி பெரிதாய் கண்டுகொள்ளாமல் இருந்ததென்ன இப்போது என்னடாவென்றால் இந்த இடைப்பட்ட நேரத்தில்?
மகனை அவர் அழுத்தமும், வியப்பும், யோசனையுமாக பார்க்க அவரின் பாவனைகள் அதிரனுக்கு புன்னகையை பெரிதாக்கியது.
“எதுக்கு இவ்வளோ ஷாக்?…” என்றான் அவரின் தொடையில் தட்டி.
“இதை நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை. அதான் ஷாக் ஆகிட்டேன்…” என்றார்.
“மேகாவோட கல்யாணம் நின்னுடுச்சு…”
“அதி…”
“நான் எதுவுமே பண்ணலைப்பா. எனக்கு இன்பார்ம் பண்ணினாங்க…”
“அது உனக்கு சந்தோஷமா?…” என்றார் சற்றே கண்டனத்துடன்.