“பிரதாப்பை நினைச்சு பயந்திருக்கன்னு நினைக்கேன், நீ ஒன்னும் கவலைப்படாத. திரும்ப பேச முயற்சி பண்ணினா உன் அண்ணனை சொல்லி என்னன்னு கேட்க சொல்லிருவோம்….” என்ற மோனி,
“பொண்ணுங்க அழகா இருந்தா மிஸ் பண்ணிட்டோமேன்னு தோணத்தான் செய்யும் போல இந்த பசங்களுக்கு…” என்று அவளின் அறையில் கலைந்து இருந்தவற்றை ஒழுங்குபடுத்திகொண்டே பேசினாள்.
‘என் கண்ணுக்கு நீ அழகா தெரிஞ்ச. பார்க்காம இருக்க முடியலை’ மீண்டும் மீண்டும் அதிரன் உள்ளுக்குள் ஒரு அதிர்வை கொடுத்துக்கொண்டு இருந்தான்.
நிற்க முடியாமல் தடுமாறி கட்டிலில் தொப்பென்று அமர்ந்தவள் தலையை பிடித்துக்கொண்டாள்.
“வரு, என்னடா…” என்று அருகே வந்தவளை கட்டிக்கொண்டு நெஞ்சில் சாய்ந்தவள்,
“அண்ணி எனக்கு தெரியலை. ஆனா என்னவோ பயமா இருக்கு…” என்று மேகா புலம்ப,
“என்ன காய்ச்சல் கூடிருக்கு திரும்பவும்…” என்று அணைப்பில் சொன்னாள் மோனி.
“கூடவே இருங்க ப்ளீஸ்…” என மேகா அதை எதையும் கவனிக்காமல்.
அவளை சுற்றி அதிரனின் விழிகள் வட்டமிட்டு கொண்டே இருப்பதை போல தோன்றியது. அந்த அறைக்குள் இருக்கவே முடியவில்லை.
“ஓகே ஓகே, நீ வெளில வா. கொஞ்ச நேரம் ஹால்ல இரு….” என்ற மோனிகா,
“அங்க உன் அண்ணாட்ட, மாமா, அத்தைட்ட காமிச்சுக்காத. நீ தைரியமா இருக்கன்னு தான் அவங்க மனசை தேத்திக்கறாங்க. புரியுதா?…”
“ஹ்ம்ம், அண்ணி…” என்றாள் மோனிகா.
ஹாலுக்கு வர டிவியில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. பல்லவன் ஹாலில் இல்லை.
“எங்க அத்தை அவரு?…” என மோனி கேட்க மேகா சென்று அமுதனின் அருகே அமர்ந்தாள்.
“இப்பதான்ம்மா ஆடிட்டர்கிட்ட இருந்து போன் வந்துச்சுன்னு ஏதோ பில் எடுக்கனும்னு மாடிக்கு போனான்…” என்று சொல்ல,
“சரிங்கத்தை…” என்றவள் கீழ் அறையில் உறங்கும் மகனை பார்த்துவிட்டு வர செல்ல மலரும் எழுந்து உள்ளே சென்றார் அவசரமாக.
“நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாபெரும் இசை விழா…” என்ற அடைமொழியுடன் விளம்பரம் போடப்பட அதன் அதிர்வில் தந்தை மகள் இருவரின் பார்வையும் தொலைகாட்சியில் நிலைத்தது.
“உங்கள் அபிமான இசை கலைஞர்களும், மனம் கவர்ந்த பாடகர்களின் மயக்கும் குரலும். பாட்டு வெள்ளத்தில் மூழ்க தயாரா? துபாயில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியின் தொகுப்பு…” என்று அந்த வார இறுதியில் ஒளிபரப்ப போவதற்கான விளம்பரம் அது.
நடுங்கும் விரல்களை கோர்த்துக்கொண்டவளின் பார்வை அங்கேயே இருக்க அமுதனும் அதை தான் பார்த்தார்.
திரையில் அதிரனும் இடம்பெற்றிருக்க அவனின் பாடலில் ஒரு வரியுடன் சேர்ந்து விளம்பரப்படுத்தப்பட அவனின் புன்னகையில் மேகா வேகமாய் தன் விழிகளை தாழ்த்தினாள்.
அமுதனோ இன்னும் கூர்ந்து கவனிக்க அப்போது தான் வந்த மலரும் இதனை பார்த்தார்.
“ஏங்க இது அந்த பையன் தானே?…” அமுதனிடம் கேட்டார்.
“ஹ்ம்ம், ஆமாம்மா…” என்ற அமுதனுக்கு இன்னும் நம்பமுடியவில்லை.
இந்த சமூகவலைதளமும், ஊடகங்களும் எப்படி இல்லாத ஒன்றாய் இருப்பதாய் உருவகப்படுத்தி குடும்பங்களை உருக்குலைக்க முடிகிறதோ? என யோசனையுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.
“எல்லாம் இவனால…” என மலர் சொல்லும் பொழுது மோனிகாவும் வந்துவிட்டாள் குழந்தையுடன்.
“என்னண்ணி எழுந்துட்டானா?…” என தாயின் சொல்லை கவனிக்காததை போல மேகா பேச மோனிகா அவள் பேசியதை கவனிக்கவில்லை.
“யாரை சொல்றீங்க அத்தை?…” என கேட்க விளம்பரம் முடிந்திருந்தது.
“அதான் அந்த நடிகன். இப்ப விளம்பரத்துல வந்தானே? அவனால தான் இவ்வளவும்…” என்று மலர் சொல்ல,
“சொல்றேன்னு என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்லை அத்தை. மாமா உங்ககிட்டையும் தான் சொல்றேன். என்னதான் அக்கா பொண்ணு, கஷ்டப்படறாங்கன்னு பார்த்து அவ என்ன செஞ்சாலும் விட்டுட்டீங்க…”
“அவளோட விளையாட்டுத்தனம், கொஞ்சமும் மெச்சூரிட்டி இல்லாம செய்யிற வேலையால தான் இன்னைக்கு நம்ம குடும்பம் இப்படி வந்து நின்னிருக்கு…” என்று சொல்லிவிட்டாள்.
பல்லவனும் கேட்டுக்கொண்டே தான் வந்தான் இதனை. மலர் அமுதனை பார்த்துவிட்டு,
“இவ்வளோ பட்ட பின்னாடியும் என்னன்னு கேட்கறீங்க அத்தை. இப்ப சம்பந்தமே இல்லாம அந்த நடிகனை மட்டும் சொல்ல முடிஞ்சது…”
“மோனி என்ன இது புதுசா ரெண்டுபேரும் ஆர்க்யூ பண்ணிட்டு?…” என்றான் பல்லவன்.
“பின்ன என்னங்க? ஒரு லைவ். அதுல அந்த ஆக்டர் இவளை தான் பார்த்தான்னு எப்படி ஏதுக்க முடியும்? லைவ்ல எவ்வளவோ கொஷின்ஸ் வந்திருக்கும். அதை கூட கவனிச்சிருக்கலாம். நமக்கு தெரியாது இல்லையா?…” என்றாள் மோனி.
“சரியா சொன்னம்மா, எனக்கும் அப்படித்தான் தோணுது. எத்தேர்ச்சையா நடந்த ஒன்னை வேற மாதிரி திசை திருப்பிட்டாங்க. பாதிக்கப்பட்டது நம்ம தான்…”
அமுதன் வாய் திறந்து சொல்லவும் மோனிகா தலையசைக்க பல்லவன் தாயை பார்த்து,
“இப்ப இது எதுக்கும்மா? அவன் யாரோ எவரோ. அவனை பேசி என்னாக போகுது? விடுங்க…” என்றவன்,
“வரு வா போகலாம்…” என்று முன்னே நடந்தான்.
“பார்த்துக்க மோனி, வந்திடறோம்…” என்று மலரும் கிளம்பிவிட்டார் அவர்களுடன்.
வாசலில் இறங்கி காரில் ஏற பின்னால் வந்த மோனிகா பல்லவனை பிடித்து நிறுத்தினாள்.
“வரும்போது ஒரு புது சிம்கார்ட் வாங்கிட்டு வாங்க…” என,
“ஏன்? உன் பழைய சிம்க்கு என்னாச்சு?…” என்றான்.
“எனக்கில்லை. வருவுக்கு தான். அவளோட சிம்மை உடைச்சு போட்டுட்டா…”
“ஓஹ் ஓகே. நான் பார்த்துக்கறேன்…” என்று கிளம்பிவிட்டான் பல்லவன்.
காரில் செல்கையில் எதுவும் கேட்கவில்லை. வெளியே வந்திருக்கிறோம் என்பதையும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டாள் மேகா.
—————————————-
“ரெடி…” என்று தேவராஜ் வந்து நிற்க ஹர்ஷதும் பின்னோடே வந்தான்.
ரெக்கார்டிங் என்று முதல் நாள் வந்தது. ஒருநாள் அங்கே இருந்து இதோ முடித்து கிளம்பிவிட்டனர்,
“நீங்களும் கிளம்பிட்டீங்களா ப்பா?…” என தந்தையை பார்த்து கேட்டான் அதிரன்.
“ஆமா. வா…” என்று அவர் முன்னே செல்ல அதிரனும் நடந்தான்.
ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்தவர்கள் நேராக கார் பார்க்கிங் வர அங்கே உமேஷ் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தான் யாரிடமோ.
“இவன் கிளம்பாம இங்க என்ன பன்றான்?…” என தேவராஜ் கேட்க,
“இங்க நம்ம ஸ்டூடியோ மட்டுமா இருக்கு? வாங்கப்பா…” என்று காரில் ஏறினான்.
“அதி…”
“ப்பா…”
“கொஞ்சம் டேஞ்சர் போல. சப்போஸ் பி.எஸ் முடிவு உமேஷ்க்கு தெரிஞ்சா பெரிய இஷ்யூவாக்குவான் தோணுது…”
“ஹேண்டில் பண்ணிக்கலாம் ப்பா…” அத்தனை இலகுவாய் மகன் சொல்ல,
“மீடியாவுக்கு போவான் அதி…”
“போகட்டும்…”
“சூர்…”
“சில் ப்பா. உமேஷ் அவரோட வாய்ப்பை இழக்கறார்ன்னா இதை கூட செய்யாம எப்படி இருப்பார்? செய்யட்டுமே?…” என்றான் புன்னகையுடன்.
பலநேரங்களில் நினைத்ததுண்டு மகனின் இந்த புன்னகையும், நிதானமும் அவனுக்கு கடவுளின் பரிசு என்று.
தேவராஜின் பார்வையை கவனித்தும் கவனியாததை போல அன்று ரெக்கார்டிங்கில் முடித்த தான் பாடிய பாடலை போட்டு கண்ணைமூடி கேட்டபடி வந்தான்.
வீட்டை நெருங்கும் வரை வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வந்ததும் தேவராஜ் இறங்கிக்கொள்ள அதன் பின்னர் தான் அதிரனும் ஹர்ஷத்தும் இறங்கி நின்றார்கள்.
“உள்ள போங்கப்பா வரேன்…” என்று அவனை அனுப்பிய அதிரன் தேவராஜின் பார்வையில் இன்னும் பெரிதாய் புன்னகைத்தான்.
“ஹ்ம்ம், ஓகே…” என்று பெருமூச்சுடன் அவர் உள்ளே செல்ல,
“ஸார்…” ஹர்ஷத் அழைப்பில்,
“கார்டன் போலாம் மேன்…” என்று நடந்தான்.
“சொல்லு…”
“அவங்க நம்பர் கிடைக்கலை…”
“மேகா அந்த சிம்மை டிஸ்போஸ் பண்ணிருப்பாங்க…” அதிரன் சொல்ல,
“அதான் பல்லவன் ஸார் புது நம்பர் வாங்கிருப்பார் போல…”
“இருக்கலாம். வாங்கட்டும்…” என்றவன்,
“ஓகே, நீ கிளம்பு…” என்றதும் ஹர்ஷத் கிளம்பிவிட கார்டனின் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான் அதிரன்.
மாலை கவிழ்ந்திருந்த அந்த மிதமான இருள் சூழும் வேளையில் அதிரன் யோசனைகளை சூழ அமர்ந்திருந்தான்.
“அதி அப்பா என்னவோ சொல்றாங்க…” என வந்தார் சுபத்ரா.
“இன்னைக்கு மௌனவிரதம் இல்லையா ம்மா…” என்று மகன் சிரிக்க அதை கண்டுகொள்ளாதவர்,
“அப்பா சொன்னார் அந்த பொண்ணுக்கு மேரேஜ் நின்னுடுச்சாமே?…” என கேட்டார் தீவிரமாக.