“எல்லாத்துக்கும் ஒவ்வொரு வார்த்தை தான். என்ன நடக்குது அதி?…” என்று அவர் கவலையுடன் கேட்க,
“ம்மா அதான் பதில் சொல்றேனே?…”
“சரி விடு, ஆமா அந்த பையன் நல்ல பையனா?…”
“எந்த பையன்?…”
“அதான் முதல்ல அந்த பொண்ணுக்கு நிச்சயம் பண்ணிருந்த பையன்…” என கேட்க தாய் எங்கே வருகிறார் என்று புரிந்தது.
“நான் இதை நிப்பாட்ட எதுவும் பண்ணலைம்மா…”
“ஐயோ உன்னை சொல்லலைப்பா. ஆனாலும்…”
“அவன் நல்லவனாவே இருக்கட்டும். ஆனா மேகாவுக்கு பொருத்தமா ஒருத்தரை என்கிட்டே கேட்டா என்னை தவிர பெஸ்ட்டா நான் யாரையும் சொல்லமாட்டேன்…”
எதற்கு இந்த பதில் என்று சுபத்ராவிற்கு புரியவில்லை. ஆனால் அதை மகன் சொல்லிய விதம்? அசையாமல் பார்த்தார் அவனை.
“இது உங்களுக்கும், மத்தவங்களுக்கும் திமிரா, கர்வமா தெரியலாம். ஆனா எனக்கு இதுதான்…” என்று சொல்லியவன்,
“உள்ள போகலாம். வாங்க…” என்று புன்னகையுடன் செல்ல சுபத்ரா அவ்விடத்தை விட்டு நகர முடியவில்லை.
மகனை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அன்று பேசியதோடு சரி. அதன் பின் எப்போதும் மேகா என்ற ஒருத்தியை பற்றி பேசியதில்லை அவன்.
மேகாவிடம் சொல்லியதை போல அவனின் வாக்கை அத்தனை தீவிரமாக காப்பாற்றினான்.
அவளின் புது எண் கிடைத்தும் தொடர்புக்கொள்ள நினைக்கவில்லை. அவனின் அசாத்திய நம்பிக்கை அவளை தன்னிடம் இந்த காலம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதுதான்.
ஆனால் மேகா சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் நாள் தவறாமல் அவனுக்கு வந்துகொண்டே தான் இருந்தது.
முதலில் அந்த உணர்வில் மூழ்கி நீந்தி திளைத்தவனுக்கு நாளுக்கு நாள் மனதின் சுகம் கனமாய் கனக்க துவங்கியது.
இந்த நேசம் இத்தனை வதைக்குமா என உளப்பூர்வமாய் உணர்ந்த தருணங்கள் அவை எல்லாம்.
ஆரம்பத்தில் இலகுவாய் கடந்துவிடலாம் என அகமாய் இருந்தவனுக்கு அந்த காதல் ஆட்டம் காட்டியது.
“இதென்ன என்னை இத்தனை தேட வைக்கிற நீ? தூரமே இவ்வளோ படுத்துது. பக்கத்துல இருந்தா மேகா, நான் நிச்சயம் தொலைஞ்சு போய்டுவேன்…” என்று தனிமையில் வாய்விட்டே புலம்பிவிட்டான்.
“நோ மேகா என்னால முடியலை. கொஞ்ச நாள் தள்ளியே இரு…” என்று மனதிற்குள் அவளை எட்ட வைக்க பார்க்க இன்னுமே பக்கம் வந்து நின்றது அவளின் நினைவுகள்.
நினைத்த நேரமெல்லாம் தங்களை இணைத்து வந்த அந்த வீடியோ கிளிப்பிங் தான் அவனுக்கு ஆறுதல்.
பார்க்காமல் அவன் நாள் முடிந்ததும் இல்லை. விடிந்ததும் இல்லை. அந்த வெட்க புன்னகையில் இன்னும் மூழ்கி கொண்டு தான் இருந்தான்.
“அன்னைக்கு கழுத்து நிறைய பூ இருந்ததால அந்த மச்சத்தை நான் பார்க்கலை. எவ்வளோ அட்ராக்ட் பண்ணுது…” என்று கண்ணை மூடியபடி அன்று பேசியதில் அவளின் முகத்தை ஞாபகத்தில் கொண்டு வருவான்.
“பேசும் போதே கேப்சர் பண்ணாம விட்டுட்டேன். பண்ணிருந்திருக்கனும்…” என்று தோன்றாமல் இல்லை.
மனதில் அவனுக்கவனே போட்டுக்கொண்ட ஒரு வேலி அதை செய்ய அனுமதியளிக்கவில்லை.
எதிர்பாராமல் நடந்தது வேறு. ஆனால் தானே அழைத்து நம்பிக்கையுடன் அவள் பேசியிருக்க அதை அவளுக்கு தெரியாமல் படம் பிடிக்க மனது இடமளிக்கவில்லை.
இப்போதும் அவளின் செயல்பாடுகள் அவனை அடையுமே தவிர அது வெறும் செவி வழி செய்திகளாக மட்டுமே தான்.
இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. போஸ்ட் ப்ரடக்ஷன் வேலைகள் எல்லாம் முடிவடைந்து படம் வெளிவர இன்னும் ஒரு சில நாட்களே என்னும் நிலையில் இருந்தது.
மேகாவும் சி.ஏ படிப்பிற்கென்று தனியே ஏற்கனவே பயின்ற சென்டரில் கோச்சிங் செல்ல ஆரம்பித்திருந்தாள்.
ஆரம்பத்தில் அவள் எதிர்கொண்டதை கடக்க வெகுவாய் சிரமப்பட்டு போனவள் நாளடைவில் தெளிவுக்கு வந்துவிட்டாள்.
படிப்பை மட்டுமே கொண்டு அவள் தன்னை அனைத்திலிருந்து தூரமாய் வைக்க அவள் கேட்காமலே அதிரன் சம்பந்தமான ஏதோ ஒன்று அவனை ஞாபகப்படுத்திக்கொண்டே தான் இருந்தது.
பயம் குறைந்திருந்தது. அவன் தன்னை தொடர்புகொள்ளாததில் பெரும் நிம்மதியுடன் தான் இருந்தாள்.
இந்த நேரம் தன்னை மறந்திருப்பான் அவன் என்று அவள் நினைத்திருக்க அவளை தவிர வேறு கனவுகள் ஏது என்பதை போல இன்னும் அவளை தொடர்ந்துகொண்டிருந்ததை உணராமல் போனாள்.
இதற்கிடையில் உமேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் பி.எஸ் மேலும், நடிகர் சங்கத்தில் அதிரன் தேவராஜ் மேலும் புகார் தந்திருந்தான் தன்னை மோசடி செய்ததாக.
இந்த புகாரினால் உமேஷ் மீதான அபிமானம் இன்னுமே குறையத்தான் செய்தது.
இன்னும் அதிரனுடனான அந்த படம் வெளிவராமல் இருக்க இந்த நேரத்தில் இப்படி செய்து பெயரை கெடுத்து கொள்கிறானே என்று தான் பலரும் அவனின் காதுபட பேசிக்கொண்டனர்.
உமேஷிடம் யாரும் அறிவுரையோ, ஆலோசனையோ சொல்ல என்று நெருங்க முடியவில்லை.
அத்தனை ஈகோ. எதையும் கேட்கும் நிலையில் இல்லை அவன். அதிரனிடம் சவால் விட்டதை போல மேகவையும் நெருங்க முடியவில்லை.
பல்லவனை சந்திக்க நினைத்து செல்ல அவன் திரைத்துறை என்றாலே மிளகாயாய் காய்ந்தான்.
இப்படி எந்த பக்கம் சென்றாலும் அவனால் தான் நினைப்பதை சாதிக்க முடியவில்லை.
எல்லாவற்றிற்கும் மேல் பரத்தை வைத்து அதிரனை நாயகனாக்கி அடுத்த படத்திற்கான பூஜையும் போடப்பட்டுவிட்டது.
ஹர்ஷத்துடன் சேர்ந்து பட பூஜைக்கு உமேஷை அழைக்க பரத் செல்ல இன்விடேஷனை சுக்குநூறாய் கிழித்து பரத்தின் முகத்தில் விட்டெறிந்தான் உமேஷ்.
“நீ எப்படி இந்த படத்தை கம்ப்ளீட் பன்றன்னு பார்க்கறேன்?…” என்று சொல்லி அனுப்ப பரத்திற்கு தாளமுடியவில்லை.
“என்ன ஸார் இவர் இப்படி இருக்கார்? இது என்னோட முதல் படம். விஷ் பண்ணலைன்னாலும் இப்படி செஞ்சிருக்க வேண்டாம்….” என்று பூஜையன்று அதிரனிடம் பரத் பேச,
“என்ன மேன் நீங்க? அவர் சொன்னா உடைஞ்சிடறதா? உங்க திறமை மேல நம்பிக்கை வைங்க மேன்…” என்று இலகுவாய் அவன் தேற்ற பரத்திற்கும் சற்றே ஆறுதலாக இருந்தது.
படத்தின் பூஜை மற்றும் முடிந்த படத்திற்கான ப்ரமோஷன் என்று திரும்பிய பக்கமெல்லாம் கட்டவுட்களில் அதிரன் கடந்து செல்வோரின் கண்களை நிறைத்தான்.
மறக்க நினைத்தும் நித்தமும் அவளின் மூளைக்குள் வண்டாய் குடைபவனை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாமல் திண்டாடி போனாள் மேகவர்ணா.
பார்க்கும் திசைகளில் எல்லாம் விழிகளில் இருந்து அவனை விரட்டியடித்தவளும், மனத்தால் அவளை வருடுபவனும் மீண்டும் சந்திக்கத்தான் செய்தனர்.
சேர்த்து வைக்கும் என அவன் நம்பிய காலம், பார்த்துவிடவே கூடாது என அவள் வேண்டிய காலம் எதற்கும் காத்திராமல் தன் சூழ்நிலை விளையாட்டினால் இருவரின் சந்திப்பிற்கும் காரணமாய் அமைந்தது.