இத்தனை நாட்களில் நிலைமை சற்றே சரியானதை போல இருக்கவும், மேகா படிக்க செல்வதை கண்டதும் சந்திரா மீண்டும் வந்து அமுதினியன் குடும்பத்துடன் சேர்ந்துகொள்ள பார்த்தார்.
அதற்கு ஏதுவாக மறுநாள் பூஜாவிற்கு பிறந்தநாள். மாலை அவள் வரவும் தன் தம்பியின் வீட்டிற்கு ஆசிர்வாதம் வாங்குவதை போல அழைத்து செல்லலாம் என்று நினைத்திருந்தார் சந்திரா.
அத்தனையிலும் மீண்டும் மண் விழ போவதேன்று அவர் அப்போது அறியவில்லை.
காலை வழக்கம் போல மேகா கோச்சிங் சென்டருக்கு கிளம்பியிருக்க அமுதனும் கடைக்கு சென்றிருந்தார்.
பல்லவன் தாமதமாக வருவதாக சொல்லிவிட்டு நேரம் சென்று பத்து மணி போல தான் கடைக்கு வந்தான். எப்போதும் ஒன்பது மணிக்குள் கடையை திறந்துவிடுவார் அமுதன்.
கடையை நெருங்கும் முன்பே முதல் வீதியிலிருந்து அத்தனை கூட்டம் பண்டிகை நாள் போல கூடியிருந்தது.
பாதுகாப்புக்கு இரும்பு தடுப்பு எல்லாம் சுவர்கள் அமைத்திருக்க அங்கேயே தெரிந்த கடையில் பைக்கை நிறுத்தி சொல்லிவிட்டு உள்ளே நடந்து வந்தான் பல்லவன்.
தங்கள் கடையை நெருங்கியவனுக்கு பார்த்ததும் தெரிந்துவிட்டது ஏதோ படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் நடப்பதாக கண்டுகொண்டான்.
“இவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா?…” என்று நறநறவென்று பற்களை கடித்துக்கொண்டே வந்தான்.
தங்கள் கடைக்கு முன்னாலும் தடுப்புகள் இருக்க அதை பார்த்துக்கொண்டே பல்லவன் கடைக்குள் நுழைய முன்னால் அமுதனை காணவில்லை.
உள்ளே நின்றுகொண்டிருந்தார் கடை பையன்களிடம் பேசியபடி. அவரை நோக்கி சென்ற பல்லவன்,
“இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை. இவங்க படமெடுக்க இப்படி பொதுமக்கள் கூடுற இடம் தான் கிடைச்சதா? ச்சை…” என கடுப்பாகி நின்றான்.
“விடுப்பா, அது அவங்களுக்கு பிழைப்பு. இதுல நம்ம சொல்ல என்ன இருக்கு?…”
“என்ன இருக்கா? நான் நம்ம பைக்கை எங்க நிப்பாட்டிட்டு வந்திருக்கேன் தெரியுமாப்பா? அங்க இருந்து நடந்து வரேன். இன்னைக்கு நம்மால வியாபாரம் பண்ண முடியுமா? எல்லாம் இவங்களால…”
“விடு பல்லவா. இன்னைக்கு வார நாள் தான. பெருசா என்ன வந்திட போறாங்க?…”
“அத தான்ப்பா சொல்றேன். வார ஒன்னு ரெண்டுபேரும் வராம போய்டுவாங்க இப்படி சுத்திக்கிட்டு வரனுமான்னு. எங்க இருந்து எவ்வளவு தூரம்?…”
“சரிப்பா…”
“ஏற்கனவே நெரிசல். இதுல இவனுங்க வேற…” என்று சொல்லிக்கொண்டிருக்க அங்கே வாசலில் திடீரென யாரோ வந்து நிற்பது தெரிந்து முன்னால் சென்றான் வேகமாய்.
பல்லவனை தொடர்ந்து அமுதனும் சென்றார். எங்கே மகன் அவர்களிடம் எதுவும் பேசிவிடுவானோ என்று.
பல்லவனின் பாத்திரக்கடைக்கும், அருகில் இருக்கும் கடைக்கும் இடைப்பட்ட பகுதியில் பெரிய குடையும் மூன்று சேர்களும் போடப்பட்டிருந்தது.
சற்று தள்ளி கேரவன் ஒன்று நின்றிருக்க அத்தனையும் எரிச்சலான முகபாவனையுடன் பார்த்துக்கொண்டு நின்றான் பல்லவன்.
“அதை பார்த்து நீ ஏன் கோவப்படற? வா உள்ள…” என்று அதட்டினார் அமுதன்.
“இவங்களுக்கு வேற இடமா இல்லை. அதுதான் அவ்வளோ பெரிய பிலிம் சிட்டி இருக்கே. அங்க போய் செட் போட்டு படம்பிடிக்க வேண்டியது தானே?…” என்று கத்தினான் பல்லவன்.
அவன் சொல்லியது வாசலில் இருந்த படப்பிடிப்பு குழுவினர் இருவருக்கு கேட்க அவர்கள் பல்லவனை கவனித்தபடி இருந்தார்கள்.
அமுதனுக்கு சங்கடமாக போனது. இப்படி எதற்கு வீண் பிரச்சனை? யாரோ என்னவோ செய்துவிட்டு போகட்டும்.
யாரின் கவனமும் தங்களுக்கு வேண்டாம் என நினைத்தார். பல்லவன் பேசி அது மேலும் மற்றவர்கள் பார்க்கும்படி ஆக வேண்டாம் என எண்ணினார் அமுதன்.
“பல்லவா அமைதியா இரு. அவங்க பர்மிஷன் வாங்கி தான் ஷூட் பன்றாங்க. பர்மிஷன் குடுத்தவங்கலையே ஒன்னும் செய்ய முடியாது. தெரியாமலா குடுத்திருப்பாங்க?….”
“ப்பா, இங்க நம்ம கடை மட்டுமா இருக்கு? சுத்தி வாசல்ல எத்தனை தள்ளுவண்டி கடைங்க. அவங்களோட இன்னைக்கு ஒருநாள், ஒருநாள் என்ன ஒருநாள். எத்தனை நாள் பர்மிஷன் வாங்கியிருக்காங்களோ?…” சலிப்பாய் பல்லவன் பேச,
“பல்லவா அப்பா சொல்றேன்ல. மாடில ஸ்டாக் செக் பண்ண சொன்னேன். போய் பாரு. இங்க இருந்தா கோவப்படுவ நீ…” என்று சொல்லி அவனை அனுப்பினார்.
ஒன்றும் செய்ய முடியாமல் பல்லவன் மேலே சென்றாலும் கண்ணாடி வழியே இதை பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
திடீரென்று புது ஆட்கள் சிலர் வந்து நிற்க அவர்களுக்கு காட்சிகள் விளக்கப்பட்டுகொண்டு இருந்தது.
அது ஒரு சண்டைகாட்சிக்கான படப்பிடிப்பு. நாயகனும், நாயகனின் நண்பர்களும் அங்கே வந்த இடத்தில் நடக்கும் பிரச்சனையை பற்றி படமாக்கிக்கொண்டு இருந்தார்கள்.
எல்லா கடைகளுக்கு முன்பும் தடுப்புகள் போடப்பட்டிருக்க அவ்வளவு மக்கள் திரண்டிருந்தார்கள் படப்பிடிப்பை பார்ப்பதற்கு.
மாடியில் இடுப்பில் கை வைத்தபடி இதனை உட்சபட்ச கடுப்புடன் பல்லவன் பார்த்துக்கொண்டு இருக்க திடீரென அவனின் பார்வை கூர்மையாகியது.
கேரவன் திறக்கப்பட அத்தனை கூச்சல்கள். மக்கள் ஆராவாரம் செய்ய உள்ளிருந்து வெளியே வந்தவனோ அவர்களுக்கு கை காண்பித்தும், வணக்கம் செய்தும் தன்னுடைய பதில் மகிழ்ச்சியை காண்பித்தான்.
“அதிரன் தேவராஜ்…” என்று பல்லவன் பார்க்க அதிரன் புன்னகையோடு பாதுகாவலர்கள் சூழ இறங்கி வந்துகொண்டு இருந்தான்.
வந்தவனை பார்த்துக்கொண்டே பல்லவன் மேலே நிற்க அதிரன் அவர்கள் கடையின் முன்பு போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.
“இவன் படமா?…” என முனங்கிக்கொண்டு மேலே நிற்க கீழே அமுதனுக்கும் திக்கென்று இருந்தது.
“இவன் என்ன இங்க?…” என்று பார்த்தவர் பார்வை தற்செயலாக உள்ளே பார்க்க கடையில் வேலை செய்பவர்களும் ஆர்வமாய் அதிரனையும், அமுதனையும் மாற்றி மாற்றி பார்க்க நொந்துபோனார்.
அதிரன் வேண்டுமானால் மறக்கலாம். ஆனால் மக்கள் அத்தனை இலகுவில் மறந்துவிடுவார்களா? அதிலும் தன்னை நன்கு அறிந்தவர்கள்?
இப்போது தனது கடையில் வேலை செய்பவர்களே இப்படி பார்த்துக்கொண்டு இருக்க அவர்களின் பார்வையின் அர்த்தம் தெரியாதா என்ன?
அவர் அமர்ந்திருக்கும் இடமோ கடையின் முன்னால் கண்ணாடி தடுப்பு வைத்து சிறிய அறை போல போடப்பட்ட ஒரு இடம்.
அதற்கு முன்னால் கல்லா. அமுதனோ, பல்லவனோ இருந்தால் அதில் தான் அமர்ந்திருப்பார்கள். மற்ற நேரங்களில் கடையின் சூப்பர்வைசர் அமர்ந்திருப்பார்.
இப்போது அவரும் ஸ்டாக் எடுக்கும் விஷயமாக வெளியே சென்றிருக்க கல்லாவில் அமர வேண்டியவரோ அதிரனை பார்த்ததும் எழுந்து உள்ளே சென்று அமர்ந்துகொண்டார்.
அங்கிருந்து பார்த்தாலும் அதிரன் தெரிந்தான். அதிரன் திரும்பி பார்க்கிறானா? தங்களை தெரியுமா? என யோசித்துக்கொண்டே அமுதனின் பார்வை எல்லாம் அவனின் மீதுதான்.
தெரிந்துகொள்ள வேண்டாம், தங்களை தெரிந்திருக்கவும் நியாயமில்லை, வாய்ப்பும் இல்லை என்று அவருக்கு தோன்றினாலும் என்னவோ ஒரு பதட்டம்.
அமுதனின் துளைக்கும் பார்வையை அதிரனால் உணர முடிந்தது. தான் அமர்ந்திருக்கும் இருக்கை இருக்கும் இடத்தை அடைந்ததுமே கண்டுகொண்டான் அது மேகாவின் தந்தை கடை என்று.
ஆனால் வேலையாய் வந்த இடத்தில், அதிலும் அவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்பட்சத்தில் அவனால் எதுவும் எதிர்வினையாற்ற முடியவில்லை. அவர்கள் பக்கம் திரும்பவும் இல்லை.
காட்சிகள் தயாராக இருந்தது. அவன் பேசவேண்டிய டயலாக் மீண்டும் மீண்டும் படித்துபார்த்துக்கொண்டு இருந்தான்.
ஏற்கனவே சண்டைக்கான ரிகர்ஸல் முடிந்திருந்தது. மற்றதை அங்கே வைத்து ஷாட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான் பரத்.
ஆம், பரத் இயக்கும் படம் அது. என்னதான் காட்சிகளில், கதையின் கவனம் இருந்தாலும் அதிரனுக்கு அங்கே இருவர் தன்னையே பார்க்கின்றனர் என புரிந்துபோனது.
ஹர்ஷத் மாடியில் இருந்து பல்லவன் பார்ப்பதாக சொல்ல தலையசைத்துக்கொண்டவன் இதழ்களில் மென்னகை.
எதற்கு இத்தனை பார்வையிடல் என்று நினைத்தவனுக்குள் சிறு குறுகுறுப்பு தோன்றாமல் இல்லை.
‘மேகா உன்னோட அப்பாவும் அண்ணனும் என்னை கவனிக்கிறாங்க’ உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான் அவளுக்கு.
“ஸார், பல்லவன் ஸார் கீழே வந்துட்டார்…” ஹர்ஷத் பாராததை போல கவனித்து சொல்ல,
“ஹ்ம்ம்…” என்று சிரித்துக்கொண்டான் அதிரன்.
கல்லாவில் வந்தமர்ந்த பல்லவன் மிதப்பான பார்வையுடன் அங்கே என்ன நடக்கிறது என கவனித்தான்.
சுற்றிலும் பார்த்தாலும் கடைசியில் பார்வை வந்து நின்றதென்னவோ அதிரனிடம் தான்.
“ஷாட் ரெடி…” என்று பரத் சொல்ல உடனே எழுந்துகொண்டான் அதிரன்.
அதுவரை அலட்சியமாக, எரிச்சலுடன் பார்த்துக்கொண்டு இருந்த பல்லவனுக்குள்ளும் ஒரு ஆர்வம்.
‘என்னதான் நடிக்கிறான் பார்க்கலாம்’ என்று தன்னையறியாமல் கவனிக்க ஆரம்பித்திருந்தான்.
காட்சிகள் ஆரம்பமாகியது. முதலில் சாதாரண பேச்சுவார்த்தை போல நடந்து செல்வது உடன் இருப்பவர்களிடம் என்னவோ பேசுவது என்று தெரிந்தது.
அந்த வீதியின் மத்தியில் சென்றதால் பல்லவன் சற்றே எட்டி பார்க்கவேண்டி இருக்க எழுந்து நின்றுவிட்டான் அவன்.
பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்தபடி வேடிக்கை பார்ப்பதை போல அவன் வாசலில் வந்து நிற்க ஹர்ஷத் கவனித்துவிட்டு சிரித்துக்கொண்டான்.
அதிரனுக்கு இதை கவனிக்கும் நேரமில்லை. முழு கவனமும் காட்சியில் இருக்க முகம் தீவிரமாக, அடுத்து கோபமாக மாற எதிரிருந்தவனின் வயிற்றில் ஓங்கி குத்தினான்.
பொய்யான அடி தான். அந்த ஒற்றை அடியிலேயே எதிரில் இருந்தவன் வாயிலிருந்து ரத்தம் போல சிவப்பு நிற திரவத்தை கொப்பளித்துக்கொண்டே அவன் சுருண்டு விழுந்தான்.
அடுத்து விழுந்தவனின் அடியாட்கள் சூழ்ந்துகொள்ள ஒவ்வொருவரையாய் அடித்து வீழ்த்துவதை போன்ற காட்சிகள்.
கிட்டத்தட்ட அதையே இரண்டுமணி நேரம் எடுத்தனர். அதற்கிடையே நான்குமுறை அதிரன் வந்து அமர்ந்துவிட்டு மீண்டும் சென்று என்று தான் காட்சிகள் படமாக்கப்பட்டது.
இப்போது அடியாட்கள் மேலே பறக்கும் காட்சிகள் போல அவர்களை தனியே விழ வைத்து படம்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
இடையிடையே கலர் பொடிகள், மாவுகள், பூக்கள், மற்ற இதர சில பொருட்கள் இப்படி அடியாட்களோடு பறந்தது. கீழே நின்று அதனை தூக்கி வீசிக்கொண்டு இருந்தார்கள் செயற்கையாக.
அதிரனோ இருக்கையில் அமர்ந்து அதனை பார்த்துக்கொண்டு இருந்தான் அமைதியாக.