ஷூட்டிங் நடந்துகொண்டிருக்க திடீரென மழை மேகமாக கூடி இருக்க எங்கே வரபோகிறது என சற்றே அலட்சியமாக இருந்தார்கள்.
வானத்தை நிமிர்ந்து பார்த்த அதிரன் பார்வையில் திரண்டிருந்த அவனின் மேகங்கள் இருளை கூட்டிக்கொண்டு இப்போது உன்னுள் கொட்டிவிடுவேன் என கண்ணாமூச்சி காண்பித்தது.
“வா…” என அதிரனின் இதழ்கள் மொழிய அழைப்பிற்கு காத்திருந்ததை போல மீசையில் கன்னத்தில் என இரு துளிகள் பொட்டென்று விழுந்தது.
சடசடவென்று மழை ஊற்ற ஆரம்பிக்க படப்பிடிப்பு கருவிகளை பாதுகாக்கவென்று எல்லாவற்றையும் பாதுகாக்க ஆட்கள் இங்குமங்கும் ஓட அதிரன் எழுந்து இலகுவாய் கடைக்குள் வந்துவிட்டான் உடனே.
பல்லவனும், அமுதனும் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. உள்ளே வந்த அதிரனோ இருவரையும் பார்த்து புன்னகைக்க,
“வாங்க…” என்று அமுதன் அழைத்துவிட்டார் அதிரனை.
கடைக்கு வருபவர்களை வரவேற்பது தானே முறை. அது யாராக இருப்பினும் அவரின் தொழில் தர்மம் தான் முன்னின்றது.
“மழை…” என்று இரு கைகளையும் வெளியில் கனபித்த அதிரன்,
“உங்க கடை தானே? கொஞ்ச நேரம் இங்க இருக்கலாமா?…” என்றான்.
இருவர்க்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அமுதன் தலை தன்னைப்போல் ஆட அதிரன் கடையை சுற்றிலும் பார்த்தான்.
“என்ன பல்லவா இது?…” என்று அமுதன் மகனிடம் கிசுகிசுக்க,
“தெரியலையேப்பா?…” என்றான் அவனும்.
“இந்த வெசல்ஸ் எல்லாம் எங்க இருந்து இறக்குமதி பன்றீங்க?…” அதிரன் பேச்சுக்குடுத்து உள்ளே செல்ல பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
அவனுடன் சென்றாக வேண்டிய கட்டாயம். அதிலும் கடை பணியாட்கள் அனைவரும் பரபரப்புடன் அதிரனையும், அவனுடன் அமுதன், பல்லவனையும் இணைத்து போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர்.
அந்த கடையின் வாசலில் அதிரனின் பாதுகாவலர்கள் நின்றுகொள்ள மற்ற யாரும் உள்ளே வரமுடியவில்லை என்றாலும் அதிரன் அங்கிருப்பதை படம் பிடித்துக்கொண்டனர்.
அதிரன் பேசிக்கொண்டே கடையின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டபடி அதனை தெரிந்துகொள்ள என்று பேசிக்கொண்டே வர அமுதனும் உடன் வர,
“நீங்க உட்காருங்க ஸார். நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு போய்டுவேன்…” என்றான் சிரிப்புடன்.
“நீங்க போங்கப்பா, நான் பேசிக்கறேன்…” என பல்லவனும் சொல்ல அமுதன் நகர்ந்துவிட்டார்.
ஆனாலும் குப்பென்று வியர்த்திருந்தது என்னவோ உண்மை. எப்படி இத்தனை சகஜமாக வந்து பேசுகிறான் என்று ஆச்சர்யமாக இருந்தது.
நடிகனை நடிகனாக மட்டுமே அதிசயித்து பார்க்கும் மக்கள் மனநிலை தான் அமுதனுக்கும்.
அவனும் சாதாரண மனிதன் என்ற பிம்பம் நடிகன் என்ற முலாம் மூலம் மறைக்கப்பட்டிருந்ததே?
அதிரன் பல்லவனுடன் பேசிக்கொண்டிருக்க ஹர்ஷத் உடன் நடக்க பல்லவனின் மொபைல் சத்தம் எழுப்பியது. மேகா தான் அழைத்திருந்தது.
“அண்ணா…”
“என்னடா வரு…” என்று பல்லவன் கேட்க அதிரனின் காதுமடல்கள் கூர்மையாகின.
கடையின் உள்ளே கடைசி பகுதிக்கு வந்திருக்க யாருமற்ற இடம், நிசப்தம். பல்லவனின் அலைபேசியில் மேகாவின் குரல் மெல்லிய இசையாக அதிரனின் காதை நிறைத்தது.
“வரும்மா…” என பல்லவன் சொல்லும்பொழுதே மகனின் குரல் மழலையாய்.
“ப்பா…” என்ற அழைப்பில் பல்லவனின் முகமும் மென்மையுற்றது.
“என்னப்பா…” தந்தையாய் இவன் உருக அதிரனுக்கு பல்லவனின் குரலில் தான் எத்தனை வித்தியாசங்கள்.
இத்தனை பேச்சிலும் ‘பேசிவிட்டு வாருங்கள்’ என பல்லவனை தாண்டி அதிரன் செல்லவில்லை.
‘பார்த்துக்கொண்டிருங்கள், பேசிவிட்டு வருகிறேன்’ என அதிரனை விட்டு பல்லவன் நகரவில்ல.
எங்கே தான் போன் பேச சென்றால் அமுதன் வருவாரோ என அங்கேயே உடன் பேசியபடி இருக்க அதிரன் அந்த பாத்திரங்களை எல்லாம் எடுத்து, பார்த்து என பாவனை காண்பித்துக்கொண்டு இருந்தான்.
பெரும் நடிகன், இது அவனுக்கு வெகு சாதாரணமாக இருந்தது. மெல்லிய சத்தத்திலும் மேகாவின் குரலில் இவன் பனியாய் உள்ளே கரைந்துகொண்டு இருந்தான்.
பல்லவனின் மகன் புரியாத பாஷையில் அவனிடம் என்னவோ சொல்ல சொல்ல இடையே மேகாவின் குரலும் கேட்டுக்கொண்டே இருந்தது.
மழலையின் குரலுக்கு புல்லாங்குழலின் அகராதி போல இங்கே அஷ்வினின் பேச்சை மொழிபெயர்ப்பு செய்தாள் மேகவர்ணா.
“சமத்து குட்டி…” என்று அங்கே மேகா குழந்தையின் கன்னத்தில் முத்தமிட மெல்லிய இச்சென்ற சத்தம்.
கையில் வைத்திருந்த டிபன்பாக்ஸை திருப்பி பார்த்துக்கொண்டிருந்த அதிரனின் செயல்கள் அப்படியே நின்றது.
தொண்டைக்குள் என்னவோ சிக்கிக்கொண்டதை போன்றொரு உணர்வு. ஒருநொடி கண்ணை மூடி அந்த சத்தத்தை கிரகித்தவன் எடுத்ததை வைத்துவிட்டு திரும்ப பல்லவன் போனை வைத்திருந்தான்.
“நைஸ்…” என்று பல்லவனை பார்த்து சொல்லியவன் மீண்டும் முன் பகுதிக்கு வந்தான்.
அதற்குள் பரத் வந்துவிட்டான் அதிரனை தேடி. மழை விட்டு விட்டு பெய்துகொண்டிருக்க ஷூட்டிங்கை தொடர முடியாதென்று பேக் செய்ய சொல்லிவிட்டதாக வந்து கூறினான்.
“ஓகே, கிளம்பறோம்…” என அதிரன் பல்லவனிடம் கூற,
“ஸார், மேல பர்ஸ்ட் ஃப்ளோர் கூட இருக்கு. நீங்க பார்க்கலையே?…” என்று அங்கே வேலை செய்பவர் சொல்ல அவரை பல்லவன் முறைக்க அதிரன் சிரித்தான்.
“இங்க தான் மூணு நாள் ஷூட். நாளைக்கு ஒரு ஃப்ளோர் பார்த்திடலாம் சரிதானே?…” என்று கேட்கவும் அவருக்கு அத்தனை சந்தோஷம்.
“ஒரு போட்டோ…” என்று கேட்டு இன்னும் பல்லவனிடம் கண்டன பார்வையை வாங்கிக்கொண்டான் இன்னொரு பணியாளன்.
“வொய் நாட்? வாங்க…” என்று அழைக்கவும் கடையின் பணியாளர்கள் அத்தனைபேரும் போட்டது போட்டபடி ஓடி வந்துவிட அமுதனுக்கு சிரிப்பு தான் வந்தது.
அவர்களுடன் சேர்ந்து குழுவாக, தனித்தனியாக என்று பொறுமையாக புகைப்படம் எடுத்துக்கொண்டான் அதிரன்.
“ஸார் நீங்க?…” என பல்லவனை கேட்க அதிரன் அவனை திரும்பி பார்த்தான்.
“எடுக்கலாமே?…” என பல்லவனின் அருகே சென்று நின்றுகொண்டு புன்னகைக்க முன் பகுதியில் இருந்ததனால் அனைவரும் இக்காட்சியை எடுத்துக்கொள்ள அமுதனும் வர வேண்டியதானது.
படங்கள் எடுத்து முடிக்கவும் அமுதனின் கையை அவர் எதிர்பாராமல் பற்றிக்கொண்ட அதிரன்,
“உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம். நாளைக்கு பார்க்கலாம்…” என சொல்லிவிட்டு புன்னகையுடன் பல்லவனிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அவன் கிளம்பி சென்றதும் வெளியே கூட்டங்களும் கலைய அவ்விடமே மழையில் வெறிச்சோடி காணப்பட்டது சிறிது நேரத்திற்கெல்லாம்.
“என்னப்பா இப்படி ஆகிடுச்சு?…”
“ஐயா, அந்த தம்பி நல்ல புள்ளையா இருக்காரு. பாருங்க எப்படி சிரிச்ச முகமா பேசறாரு. நல்ல பையன்…” என்று மூத்த பணியாளர் ஒருவர் சொல்ல,
“அண்ணே போய் வேலைய பாருங்க. மாடில வெண்கல பானை செக்ஷன்ல தூசி இருக்குது. கிளீன் பண்ணுங்க…” என்று கோபமாய் சத்தம் போட்டான் பல்லவன்.
“விடுப்பா, அவன்கிட்ட கோவப்பட்டு என்ன ஆக போகுது?…” என்றார் அமுதன்.
“ப்ச், இன்னும் ரெண்டுநாள் இங்க ஷூட்டிங். எனக்கு என்னவோ எரிச்சலா வருதுப்பா…”
“எதுக்கு எரிச்சல் படனும்? அந்த தம்பி சாதாரணமா மழைக்கு இங்க வந்து நின்னிருக்காரு. வேற கடை வாசல்ல இப்படி நின்னிருந்தா உடனே மழைக்கு ஒதுங்க தோணும்ல? அதுமாதிரி தான்…”
அமுதன் சொல்லிவிட்டு போனாலும் பல்லவனுக்கு என்னவோ உள்ளுணர்வில் ஒரு எச்சரிக்கை.
ஆனாலும் அதனை பெரிதுபடுத்தாமல் கவனத்தை திசை திருப்பி கொண்டான் பல்லவன்.
இதுவுமே செய்தியாகுமே என அப்போது அவனுக்கு மட்டுமல்ல யாருக்குமே தோன்றாமல் போனது.
———————————————-
கேரவனின் சென்று அமர்ந்த அதிரனின் இதழ்களில் ரகசிய புன்னகை பூத்திருக்க கண்களும் சிரித்தபடியே இருந்தது.
‘பார்க்கமாட்டேன், பேசமாட்டேன்னு சொல்லி இப்ப உன் பேச்சை கேட்க வச்சிட்டார் அந்த கடவுள். மேகா’ என்று உள்ளார்ந்து அவளின் அந்த பேச்சை சிரிப்போடு ஒலித்த குரலை, முத்த சத்தத்தை மீண்டும் மீண்டும் நினைத்தபடி சாய்ந்திருந்தான்.
காய்ந்து கிடந்த நிலத்தில் வானமழை தேடிவந்து நனைத்ததை போன்றொரு குளுமை அவனின் ஒவ்வொரு அணுவிலும் பரவியது.
அவளின் குரலே அவனுக்கு ஏக பலம் தந்தது. அவ்வப்போது உண்டான சோர்விற்கு பலனாய் உற்சாகபானம் போல அவள் குரல் அவனுள் இறங்கியிருந்தது.
எப்போதடா நேரில் பார்ப்போம் என்று நினைத்திருக்க, தன் குரலில் ஒருவன் காத்திருப்பை நீட்டித்துக்கொண்டத்தை மேகா உணரவில்லை.