“அத்தை, நீங்க எல்லாம் அவ கஷ்டப்படுவா, கண்ணீர் விடுவான்னு நினைக்கறீங்க. அவ இதையும் தாண்டி வரனும். அவளும் பேசனும்…” என மோனிகா சொல்ல இருவருக்கும் சரி என புரிந்தாலும் பாசம் தடுத்தது.
அரைமணி நேரத்தில் பரமசிவமும், செல்வமும் வந்துவிட்டார்கள் தங்கள் மனைவிகளுடன்.
“வாங்க…” என்று பல்லவன் அழைக்க மோனிகா எப்போதும் போல மாமா அத்தை என்று சொல்லியே தான் அழைத்தாள்.
செல்வம் முகத்தில் கவலையும், பரமசிவம் முகத்தில் கோபமும் அப்பட்டமாய் தெரிந்தது.
“இப்படி நடந்துக்கறது இவனுக்கு நல்லாவா இருக்கு? இல்லை நாங்கல்லாம் எதுக்குன்னு நினைச்சுட்டானா?…” என கோபமாய் பரமசிவம் ஆரம்பித்துவிட,
“அவர் தூங்கிட்டு இருக்கார். என்ன விஷயம் மாமா? இவ்வளவு கோவம்?..” என மலர் மெதுவாய் எதுவும் தெரியாததை போலவே கேட்க,
“எங்களை என்ன காதுல பூ சுத்திருக்கறவன்னு நினைச்சயோ? என்னன்னு தெரியாத மாதிரி பேசற?…” என்று மலரிடம் எகிறவும்,
“என்ன பிரச்சனைன்னு சொன்னா தானே தெரியும். சொல்லாம அம்மாவை இப்படி பேசற வேலை வச்சுக்க வேண்டாம்…” பல்லவன் கடுமையாய் சொல்லிவிட்டான்.
“உன்கிட்ட எல்லாம் என்ன பேச்சு? அவன் பெரிய நடிகன், செல்வாக்குன்னதும் அப்பனும், மகனும் மடங்கிட்டீங்களோ? ஒட்டி உரசி போட்டோ எடுத்திருக்கீங்க? என்ன பேசி முடிச்சாச்சா? எப்ப கல்யாணம்?…” என்றார் பரமசிவம் எள்ளலுடன்.
“அண்ணே பார்த்து பேசுங்க. என்ன இது?…” என செல்வம் கண்டிக்க,
“என்னத்தடா பார்த்து பேச, கொஞ்சம் கூட யோசனை இல்லாம இவங்க பண்ணி வச்சிருக்க காரியத்துக்கு நாம தான் அசிங்கப்பட வேண்டியதா இருக்குது…” என பரமசிவம் கொதித்தார்.
“இங்க பாருங்க, இது எத்தேர்ச்சையா நடந்தது. யாரும் திட்டம் போட்டு எதுவும் பண்ணலை. மழைக்கு வந்து ஒதுங்கினவன். கடையாளுங்க செஞ்ச கூத்துல போட்டோ எடுக்க வேண்டியதா போச்சு…” பல்லவன் வேண்டாவெறுப்பாய் பதில் சொன்னான்.
“என்னடா கூத்தாச்சு? அவனுங்களோட சேர்ந்து நீயும் நடிக்க ஆரம்பிச்சிட்டியோ எங்கட்டையே? இந்த கதை எல்லாம் வேண்டாம். என்ன முடிவு பண்ணியிருக்கீங்க? முதல்ல உன் அப்பனை கூப்பிடு…” என்று சொல்ல இந்த கூச்சலில் அமுதினியன் வெளியே வந்துவிட்டார்.
யாரின் பேச்சையும் கேட்கும் நிலையில் பரமசிவம் இல்லை. தனக்கு தெரியாமல் இங்கே என்ன நடக்கிறது என்று கொதித்து போய் இருந்தார்.
“என்னண்ணே?…” என அமுதன் வந்து கேட்க,
“என்னடா சாவகாசமா என்னண்ணேன்னு வர? உங்க போட்டோவை போட்டு ஊரே நம்ம குடும்பத்தை நாறடிக்கிறானுங்க. நீ என்னடான்னா?…” என்று பரமசிவம் பேச,
“அண்ணே பார்த்து பேசுங்க. நாறடிக்கிற அளவுக்கு இங்க எதுவும் நடக்கலை. வார்த்தை…” என்று அமுதன் மௌனமாக இல்லாமல் பேசிவிட்டார் அன்று.
எல்லோருக்குமே அதிர்ச்சி தான் அவர் பேசியதில். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
“சும்மா அசிங்கம், தப்பு, நாறடிக்கிறாங்கன்னு என்ன நினைச்சு பேசறீங்க? சொல்ல போனா சொந்தம்ன்னு நீங்கலாம் தான் எதையோ கொண்டு வந்து மேல பூசிவிட பார்க்கறீங்க? நீங்கலாம் சும்மா இருந்தாலே போதும்…” என்று சொல்ல,
“பார்த்தியா செல்வம், பெரிய இடத்து சம்பந்தம் வரவும் நம்மளை யாரோன்ற மாதிரி பேசறதை. இவனை நான் சொல்லிட்டே இருந்தேன்ல, சரியான ஏமாத்துக்காரன்னு. இப்பவாச்சும் புரிஞ்சதா?…” அத்தனை ஆத்திரத்துடன் பரமசிவம் பேச,
“என்ன பேச்சு பேசறீங்கண்ணே? யாரா இருந்தாலும் இதுக்கும் மேல தான் கோவப்பட்டிருப்பாங்க. அவனை நீங்க தான் பேச வச்சதே? சும்மா அவனை சொல்லாதீங்க…” என செல்வமும் சொல்ல,
“காசிருக்கறவன் பக்கம் தான காத்தடிக்கும். நீயும் மாறிட்ட. வீட்டுக்கு வருவேல. பேசிக்கறேன்…” என்று அனைவரையும் முறைத்துவிட்டு சென்றுவிட்டார் பரமசிவம் மனைவியுடன்.
“என்ன பெரியப்பா, நீங்க அமைதியா இருந்திருக்கலாம்ல? எப்பவும் எங்களை பேசறது தானே? இனி அந்த வீட்டுல உங்களை வச்சு பேசுவார்…” பல்லவன் சொல்ல,
“சின்ன மாமா பேசினதுல எந்த தப்பும் இல்லை. யாராச்சும் திருப்பி சொல்லனும்ல. என்ன பேச்சு அது நாறடிக்கிறதுன்னு?…” மோனிகா செல்வத்திற்கு சப்போர்ட்டாய் பேசினாள்.
“என்னப்பா? என்ன நடந்துச்சுன்னு தான் கேட்க வந்தோம். அண்ணன் இப்படி பேசிட்டு போய்ட்டாரு…”
அவர்களும் அமர்ந்ததும் நடந்ததை விவரிக்க செல்வத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இதை தான் விதி என்பதா என்று தோன்றாமல் இல்லை அவருக்கு. அதை சொல்லவும் செய்தார்.
“ஏன் இப்படி இரண்டுமுறையும் அந்த பையனோடவே நம்ம குடும்பத்தை சம்பந்தப்படுத்துது இந்த சூழ்நிலை. விதின்னு சொல்றதா என்னன்னு சொல்ல?…” பெருமூச்சுடன் செல்வம் சொல்ல அமுதினியன் மனதிற்குள் சிறு கேள்வி உருவானது.
அந்த கேள்வி பல பதில்களை தந்தாலும் ஒவ்வொன்றிற்கும் தொடர்பில்லாததை போல தான் இருந்தது.
அத்தனை கேள்விக்குமான தொடர்பு விரைவில் அவர்களுக்கு விடையாய் வந்து சேர்ந்தது அதிரன், மேகாவின் முதல் நேரடியான சந்திப்பிலும், அதை தொடர்ந்த நிகழ்விலும்.
அப்போதைக்கு அந்த விஷயத்தை தாண்டி வருவது என்று வந்துவிட்டார்கள். செல்வம் மாலை வரை இருந்துவிட்டு கிளம்ப இருந்த சமயம் சந்திரா வேகமாய் உள்ளே வந்தார்.
அமுதனும், பல்லவனும் அப்போது தான் கடைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்கள் கடைக்கு.
“என்னடா தம்பி, அக்கா இந்தப்பக்கம் வரலைன்னா நல்லதா போச்சுன்னு தலை முழுகிறலாம்ன்னு பார்த்தியோ?…” உள்ளே நுழையும் பொழுதே கண்ணீரை கண்ணில் வைத்துக்கொண்டு கேட்க அமுதன் முகம் இறுகிவிட்டது.
ஏற்கனவே மூத்த அண்ணன் பேசி சென்றது பெரும் வலியை தந்திருக்க எல்லாம் இவரால் தானே? அன்றைய பேச்சை மறக்க முடியுமா என பார்த்தார்.
பரமசிவன் போகவுமே மேகாவும் வெளியே வந்திருக்க அவளை பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டார் சந்திரா.
“இந்தா பிறந்தநாளுக்கு ஆசிர்வாதம் வாங்காம அங்க என்ன பராக்கு பார்க்கற?…” என்று மேகாவின் அருகே செல்ல போன பூஜாவை பிடித்து அமுதனின் காலில் விழுமாறு சொல்ல,
“ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா…” என காலில் விழுந்தாள் பூஜா.
“நல்லாயிரு…” என்று மட்டும் சொல்லி தள்ளி நிற்க சந்திராவிற்கு போதாதே.
“என்ன தம்பி, வெறும் வாய்வார்த்தையா நல்லா இருன்னு சொல்லுற? இதுக்குத்தான் உன்னை தேடி வந்தோமா?…” என்றவர்,
“என்னதான் உன் பொண்ணால நம்ம குடும்ப மானம் போனாலும் உன்னை விட்டுக்குடுக்க முடியாம நான் தேடி வந்தா….”
“உன் பேச்சை நிறுத்துக்கா. இன்னொருதடவை என் பொண்ணை பத்தி பேசின அவ்வளோ தான். அப்படி எந்த உறவும் எனக்கு வேண்டாம். போ வெளில போ முதல்ல…” என அமுதனே சொல்லிவிட அதிர்ந்து போய் பார்த்தார்கள்.
“எதுக்கெடுத்தாலும் என் பொண்ணை சொல்ற? உன் பொண்ணு அன்னைக்கு அந்த காரியத்தை செய்யாம இருந்தா நிம்மதியா இருந்திருப்போம் நாங்க. என் பொண்ணும் இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியம் இருந்திருக்காது…”
“என்ன பேசற நீ?.,..” சந்திரா அதிர்ந்து பார்க்க,
“ஆமா இல்லைன்னு சொல்லுவியா நீ? உன்னால உன் பொண்ணால நாங்க இந்த நிலைமைக்கு வந்தோம்…” என்றவர்,
“ஆனா அதுலயும் எங்களுக்கு ஒரு நன்மை, உங்களோட குணம் முன்னாடியே தெரிஞ்சிருந்தாலும் இப்ப இவ்வளோ கேவலமா இருக்கும்ன்னு இன்னும் புரிஞ்சிக்கிட்டோம்…”
“வெளில போ, இனிமே தம்பின்னு என் வீட்டுப்பக்கம் வராத…” என்று சொல்ல,
“நீயெல்லாம் நல்லா இருப்பியா? நல்ல நாள் அதுவுமா உன்கிட்ட என் பொண்ணு ஆசிர்வாதம் வாங்க வந்தாளே?…” என்று சொல்லி ஓலம் போட எதையும் கேட்பதாக இல்லை அமுதன்.
இறுகிபோய் நின்றார். இவர்களுக்கா தான் பார்த்து பார்த்து செய்தேன் என நினைக்கையில் நெஞ்சமெல்லாம் எரிந்தது.
அன்று இரவு வரை செல்வம் இருந்துவிட்டு செல்ல மறுநாள் கடைக்கு செல்லவே யோசனையாக இருந்தது.
இன்னும் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாக சொன்னார்களே என்று நினைத்துக்கொண்டே கடைக்கு வர அதற்கு அவசியமே இல்லை என்பதை போல படப்பிடிப்பு அங்கே நடக்கவில்லை.
வேறு இடத்திற்கு மாற்றியிருந்தனர் அந்த சண்டை காட்சி படப்பிடிப்பை. அதனை கேள்விப்பட்டு அத்தனை நிம்மதியாக இருந்தது.
நிலவரங்கள் எதற்கும் அமுதனின் மனது அதிரனை குறை சொல்லி நிற்கவில்லை. அவன் என்ன செய்வான் என்று தான் யோசித்தது.
நடந்தது எல்லாம் மேகாவிற்கு பின்னடைவை தர சோர்வுடன் இருந்தவளை தேற்றி குடும்பத்தினர் பார்த்துக்கொள்ள மீண்டும் அதிலிருந்து மீண்டு முதற்கட்ட பிரிவின் தேர்வுகளுக்கு ஆயத்தமானாள்.
அன்று அவளின் முதல்கட்ட தேர்வின் கடைசி தேர்வு. அத்தனையும் நல்ல முறையில் அவள் எழுதி முடித்திருந்தாள்.
உடன் வந்த தோழிகள் இருவர் அவளை வெளியே அழைக்க முதலில் மறுத்தவள் பின் அவர்கள் வற்புறுத்தல் தாங்காமல் பல்லவனுக்கு அழைத்தாள்.