“ப்ரெண்ட்ஸ் வெளில கூப்பிடறாங்கண்ணா…” அவனிடம் அனுமதி கேட்க பல்லவனும் யோசித்தான்.
எங்கேயும் அவள் வெளியே செல்லேவே இல்லை இந்த பிரச்சனைகளுக்கு பின்னால். அதிலும் படிப்பு என்று அதிலேயே அவள் இருந்திருந்தாள்.
இப்போதும் அவளே மறுக்காமல் தன்னிடம் கேட்டு நிற்க ஒருவகையில் பல்லவனுக்கு அது சந்தோஷத்தை தான் தந்தது.
அவளாகவே செல்ல நினைக்கிறாளே என்று மகிழ்ந்தவன் உடனடியாக சம்மதித்தான்.
“போய்ட்டுவாடா, நீயும் வீட்டுக்குள்ளயே தான இருக்க? போய்ட்டு வா. ஆமா பணம் வச்சிருக்கியா?…”
“இருக்குண்ணா, இல்லைன்னாலும் கார்ட் இருக்கே…”
“ஓகே, எங்க போறன்னு மெசேஜ் பண்ணிடு வரு…” என்று சொல்லி போனை வைத்துவிட்டான் பல்லவன்.
“சரி கிளம்பலாம்…” என மேகா சொல்லவும் முதலில் மதிய உணவிற்கு ஹோட்டலுக்கு சென்றுவிட்டு அங்கே அருகில் இருந்த தியேட்டருக்கு படம் பார்க்க தான் அழைத்து சென்றார்கள் தோழிகள்.
“படுத்தறீங்கடி, எனக்கு மூவி பார்க்கற இன்ட்ரெஸ்ட் சுத்தமா இல்லை. வேற எங்கையாவது போயிருக்கலாம்…” உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்த பின்னும் அவள் அதையே சொல்ல,
“ஏற்கனவே லேட், சும்மா இத்தனை மாசம் படிப்புன்னு அதுலயே மண்டை காய்ஞ்சிருச்சு. பேசாம பாருடி, ஏற்கனவே பத்து நிமிஷம் லேட் வேற…” என்று ரேவதி சொல்ல,
“இவளோட படத்துக்கு வரனும்ன்னா தலையால தண்ணி குடிக்கனும்…” என்றாள் இன்னொரு பெண் புவனா.
“ப்ச்…” என்று சலித்தபடி படத்தை பார்க்க ஏசியின் குளிர் அதிகமாய் இருக்க தலைவலிக்க ஆரம்பித்தது.
“நான் வேணும்னா கிளம்பட்டுமா புவனா, எனக்கு தலை வலிக்குது. பார்க்க முடியலை…” என மேகா கேட்க,
“உதை வாங்குவ. அதான் உன் அண்ணா ஓகே சொல்லிட்டார்ல. அப்பறம் என்ன? இன்னைக்கு நீ எங்களோட தான்…” என்று ரேவதி சொல்ல,
“பேசாம இவளை அதிரன் மூவிக்கு கூட்டிட்டு போயிருக்கனும்…” என்று ரேவதி கிண்டல் பேச,
“உங்களோட வந்தேன்ல என்னை சொல்லனும்…” என்று படக்கென்று எழுந்துவிட,
“பேசாம உட்காரு…” என்று புவனா பிடித்திழுக்கவும் தடுமாறியவள் தனக்கு மறுபக்கம் அமர்ந்திருந்தவனின் காலை மிதித்துவிட்டு பதறிவிட்டாள் மேகா.
“ஸாரி ஸாரிங்க, தெரியாம பட்டுடுச்சு…” என்று மேகா மன்னிப்பு கேட்க அங்கிருந்து பதிலில்லை.
இருட்டில் எதுவும் பேசவும் முடியவில்லை. ஒன்றும் சொல்லாமல் இருக்கவும் புவனா கையை பிடித்து அமர வைக்கவும் அமர்ந்துகொண்டாள் எரிச்சலுடன்.
இடைவேளை நேரம் வர மூவரும் எழுந்து செல்லவும் மேகாவின் இருக்கையின் அருகே அமர்ந்திருந்தவனின் இதழ்கள் குறுஞ்சிரிப்பை கொட்டியது.
“மேகா…” என்றவனின் மனதிற்கு இந்த எதிர்பாராத அருகாமை என்னவோ செய்ய உள்ளுக்குள் அதை உணர்ந்தபடி எழுந்துகொள்ளவே இல்லை.
மீண்டும் மேகா மட்டும் அங்கே வர அதிரன் அவள் காணாமல் தன் முகத்தை திரும்பிக்கொண்டான்.
அப்போதும் முடிந்தளவிற்கு அவளுக்கு கொடுத்த வாக்கை அவன் காப்பாற்ற முயன்றான்.
எழுந்து சென்றுவிடலாம் என்றால் ஆசைகொண்ட மனது இம்மியளவும் அங்கிருந்து நகர இடமளிக்கவில்லை.
தான் மட்டும் பாத்ரூம் சென்றுவிட்டு வந்தவள் அந்த இருக்கையில் சென்று அமர்ந்து அவன் பக்கம் பார்த்தாள்.
அவன் உறங்கவில்லை. ஆனால் முகத்தை சாய்த்து திருப்பி இருக்க மீண்டும் அவனின் காலை பார்த்தாள்.
தன்னுடைய ஹீல்ஸ் நிச்சயம் அவனுக்கு பலமாய் வலியை தந்திருக்கும் என்பதில் நிச்சயம்.
இருக்கையில் அமர்ந்தவள் பேசலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் மனது கேட்காமல் அழைத்துவிட்டாள்.
“எக்ஸ்க்யூஸ்மீ. இங்க ஒரு நிமிஷம்…” என்று அழைக்க அதிரன் உடலில் அதிர்வுகள்.
“நான் தெரியாம தான் மிதிச்சுட்டேன். ஸாரி, ப்ளீஸ்….” என்று மீண்டும் மன்னிப்பை கேட்க அதற்கு மேல் அவனாலும் மௌனத்தை கடைபிடிக்கமுடியவில்லை.
தலையில் போட்டிருந்த கேப்பை கழற்றிவிட்டு விழிகள் மின்ன அவள் பக்கம் திரும்பினான்.
“அதிரன்…” என்ற முணுமுணுப்புடன் அதிர்ந்து மேகா எழுந்துகொள்ள,
“ஹாய் மேகா…” என்றான் ஐந்து விரல்ளையும் அலையென சிறகாய் விரித்து.
விளக்குகள் அணைக்கப்பட்டு படம் ஓடத்துவங்க ரேவதியும், புவனாவும் வந்துவிட்டனர்.
“என்னடி நின்னுட்டு இருக்க. இந்தா உனக்கு காபி…” என்று நீட்ட,
“சிட் மேகா…” என்றான் தலையசைத்து மெல்லிய குரல்.
மேகா அங்கே என்ன செய்வதென்று அறியாமல், இந்த சந்திப்பை கொஞ்சமும் உணரமுடியாமல் அசையாமல் நின்றவளை புவனா பிடித்து அமர வைத்து படத்தில் கவனத்தை திருப்பினாள்.
“ரொம்ப தலைவலியா மேகா?…” மீண்டும் அதிரனின் மெல்லிய குரல்.
“ஹாங்…” மேகாவின் விரல்கள் நடுங்கியது.
“நீயா பேசற வரைக்கும் நான் பேசலை. நீ என்னை இப்போ கூப்பிட்டு பார்க்கிற வரைக்கும் நானும் உன்னை பார்க்க நினைக்கலை. ஆனா இப்போ சந்திச்சிட்டோம்…” என அதிரன் சொல்ல அந்த குரலில் தான் எத்தனை உணர்ச்சியலைகள்.
மேகாவால் உணர முடிந்தது அவனின் உவகையை. இதில் இவனுக்கு என்ன இத்தனை சந்தோஷம்?
அந்த இருளில் அவனின் முகத்தில் அவள் எதையோ தேட அதிரனின் விழிகள் அசையாமல் அவளை அவதானித்தது மென்னகையுடன்.
“மேகா…” ஒரு பெயரின் அழைப்பில் இத்தனை குழைவிருக்குமா?
பார்த்துக்கொண்டே இருந்தவள் மனதில் அவனின் புன்னகை பயத்தை கொடுத்தது.
இப்படி இருவரும் அருகருகே? யாரேனும் பார்த்தால்? விஷயம் வெளுயே தெரிந்தால்? தன் தோழிகளே கவனித்தால்?
அத்தனையும் தாதஸ்து என்றன அவர்களை வட்டமிட்டுக்கொண்டிருந்த தேவதைகள்.
அந்த விழிகளின் பயத்தை அதிரன் வாஞ்சையுடன் பார்த்தான். சிறு புன்னகையுடன்,
“மேகா. யாரும் பார்க்காம நான் போய்டுவேன். இப்படி பயந்து பார்க்காத ப்ளீஸ்…” என்று கேட்டவனின் குரலில் மேகாவின் விழிகள் கலங்கியது.
அதிரனை பலமாய் பலமிழக்க செய்யும் செயல்களில் முதன்மை ஆயுதம் இதுவாகத்தான் இருக்கும்.
“மேகா…” ஆழ்ந்த குரலில் அவளை அமைதிப்படுத்த முயன்றான் அதிரன்.