“பார்த்திண்ணா, இவனை உனக்கு தெரியுமா?” என சிவப்ரியா கேட்க, பார்த்திபன் பதிலின்றி தடுமாற, “என்ன நடக்கக்கூடாதுனு நினைச்சேனோ அது நடந்துடுச்சு, கல்யாணத்துக்கு போய்ட்டு வந்து மூனு நாலு நாள் பக்கம் உர்ருனே இருந்தா.
இவ போன்ல அருள் படத்தை நம்ம சனம் பார்த்தா என்ன நினைப்பாங்க?” என அங்கலாய்த்தார் கல்யாணி.
சிவப்ரியாவிற்கு அத்தை மகனின் தற்போதைய வடிவம்தான் தெரியாது, சிறு வயதில் வரும்போது அத்தை அருளு என அழைப்பது நியாபகம் இருக்கவே, அருள் என்றதும், “இவன் நம்ம அத்தை மகனா பார்த்திண்ணா?” என்றாள் அதிர்வோடு.
ஆமாம் என பார்த்திபன் தலையசைக்க, “எங்க பார்த்த? இவன் கல்யாணத்துக்கு வரலைனு இல்ல பார்த்தி சொன்னான்.” என விசாரித்தார் கல்யாணி.
“என்ன சொன்னான்?” என கல்யாணி கேட்க, சிவப்ரியா நடந்ததை சொல்ல, “அச்சோ, அங்க எத்தனை பேர் இவ பேசினதை பார்த்தாங்களோ தெரியலையே, இவ அத்தை மாமியாருக்கு மட்டும் இந்த விசயம் போனதுனா அவ்வளோதான். என் மகள் வேணும்னே செய்தானு ஊரெல்லாம் சொல்லி வச்சிடும்.” என அங்கலாய்த்தார் கல்யாணி.
அருணாச்சலம் பார்த்திபனை முறைக்க, “ஃபேமலியோட அத்தை உள்ள வரும்போது அருள் இல்லை சித்தப்பா, அதனால வரலைனு நினைச்சு ஃப்ரண்ஸோட சாப்பிட அனுப்பினேன்.” என்றான் குற்றவுணர்வோடு.
“ஏய்… முதல்ல அவன் படத்தை அழிடி.” என்றார் கல்யாணி.
மொபைலில் அழித்தால் என்ன? அருள் அத்தை மகன் என்றதும் சிவப்ரியா எண்ணங்களில் திண்ணமாய் அமர்ந்திட்டானே. அவனை நமக்கு தெரியாவிட்டாலும், நம்மை அவன் அடையாளம் கண்டிருக்கிறான், அதனால்தான் திட்டிச் சென்றிருக்கிறான். என அருட்செல்வனின் யோசனையில் இருந்தாள்.
“ஏய் சிவா, நான் சொல்றது காதுல விழல? அருள் படத்தை மொபைல்ல அழி.” என்றார் கட்டளையாக.
“ம்.. ம்மா” என அருட்செல்வனின் படத்தை அழித்தவள், “டெலிட் பண்ணிட்டேன்ம்மா, ஆனா அன்னைக்கு அவன் திட்டினது என் கண் முன்ன இன்னும் நிக்குதே, நான் என்ன பண்ணினேன்? எதுக்கு என்மேல இவ்வளோ கோபம்னு இதே கேள்வி திரும்ப திரும்ப தோணுதே? அந்த நினைப்பை எப்படி மனசுலயிருந்து அழிக்கிறது?” என்றாள் அழுத்தமாக.
“சிவா.” என அருணாச்சலம் அதிர, “உங்ககிட்ட எதையும் நான் மறைச்சதில்லப்பா, அதான் இந்த உண்மையையும் சொன்னேன்.” என உள்ளே சென்றாள் தனிமை வேண்டி.
அத்தை விசயத்தில் அன்று மௌனம் காத்த தந்தை மீது கட்டுக்கடங்காத கோபம் இருந்தபோதும், அவமதிக்கவும் மனமில்லாமல் உள்ளே வந்திருந்தாள் சிவப்ரியா.
“ஏங்க, இவ படிச்சது போதும், மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிங்க.” என்றார் கல்யாணி.
அருணாச்சலத்திற்கும் அதுவே சரியெனத் தோன்ற சிறு தலையசைபோடு அமர்ந்திருந்தார் யோசனையாக.
“சித்தப்பா, இந்த ஒரு விசயத்துக்காக சிவா படிப்பை பாழாக்க வேண்டாம். அதோட இந்த நேரம் கல்யாணம் செய்துக்கோனு சொன்னா சிவா மேல நாம நம்பிக்கையில்லாம இருக்கோம்னு அர்த்தமாகிடும்.
மகள் காதலில் விழவில்லை என்றாலும், கோபமாகவோ வருத்தமாகவே எப்படியோ மகளின் மனதினுள் அருட்செல்வன் நுழைந்துவிட்டான். அதோடு அன்று தனத்திற்காக சிவா பேசியதை நினைத்தவருக்கு, மகளுக்கு திருமணத்திற்கு யோசிப்பதுதான் சிறந்தது. இதற்கு மேல் தாமதிக்கக்கூடாது என நினைத்தார் அருணாச்சலம்.
இரண்டு நாள் இருந்துவிட்டு ஞாயிறு மதியம் சிவப்ரியாவும் ஷிவாங்கியும் விடுதிக்கு கிளம்பினர். வழக்கம்போல் பார்த்திபன் அழைத்துக்கொண்டு சென்றான்.
பார்த்திபன், “சிவா, சித்தப்பா உனக்கு கல்யாணத்துக்கு பார்ப்பாருனு நினைக்கிறேன், நான் படிக்கனும்னு நீ ஸ்ட்ராங்கா சொல்லிடு.” என்றான்.
சிவப்ரியாவும் இதை எதிர்பார்த்ததால், “ம், சரிண்ணா.” என்றாள்.
“எவ்வளோ பெரிய விசயம் சொல்றேன், இவ்வளோ அசால்ட்டா சொல்ற?”
“நான் என்ன சொன்னாலும் அவங்க செய்ய நினைக்கிறதை செய்யத்தான் செய்வாங்க, பார்ப்போம் என்ன நடக்கும்னு.” என்றாள் மீண்டும் இலகுவாகவே.
அதன் பின் இதோ முடிந்துவிட்டது இரண்டு மாதம். சிவப்ரியாவும் தனலஷ்மி வீட்டிற்கு செல்ல, ஜீவிதாவை காரணம் சொல்லி பார்த்திபனிடம் பலவிதமாய் கேட்டுப்பார்த்துவிட்டாள்.
அத்தையை பார்க்க நினைக்கிறாளோ என பார்த்திபனிற்கும் சந்தேகம் வரவே, இந்த வாரம் சனிக்கிழமை பள்ளி இருக்கிறது, தேர்வுகள் நெருங்க இருக்க பாடங்களை முடிக்கவேண்டும் என தள்ளிபோட்டுக்கொண்டே இருக்க, தவித்துப்போனாள் சிவப்ரியா.
இன்று வரை கூட கட்டுப்பட்டி கிராமத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும்தான் பேருந்து இயக்கம். அதோடு பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை கிலோமீட்டர் வரை நடந்து போகவேண்டும், உரக்கடை சங்கர் வீடு என கேட்டால் சிறுபிள்ளை கூட வழிகாட்டும். ஆனால் நான்தான் வழி சொல்லியிருப்பேன் என எனக்கு பிரச்சனை ஆகிடும்,
அதோடு எந்நேரமும் உன் அத்தையின் மாமியார் வீட்டின் முன் உள்ள மரத்தடியில்தான் அமர்ந்திருப்பார்கள், வந்திருப்பது நீ என தெரிந்தால் பிரச்சனை பெரிதாகிடும். அதோடு நீ வரும் நேரம் உன் அத்தை வீட்டில் இருப்பார்களா தெரியாது, பல நேரம் கோழிப்பண்ணைக்கு சென்றிடுவார்கள் என அருட்செல்வன் வீட்டிற்கு செல்லும் பாதையையும், அதனால் வரும் பிரச்சனையையும் சேர்த்தே சொல்லியிருந்தாள் ஜீவிதா.
அனைத்தும் யோசிக்க தனலஷ்மியை தனியே காண்பது அத்தனை எளிதல்ல எனப்புரிந்திருந்தாள் சிவப்ரியா.
தந்தையின் செல்பேசியிலிருந்து தனலஷ்மி, சங்கரின் எண்ணை எடுத்து தனது மொபைலில் இரண்டு மாத்த்திற்கு முன்பாகவே பதித்திருந்தாள். ஆனால் அழைத்தால் பேசுவார்கள் என்ற நம்பிக்கையில்லை என்பதோடு, தான் அழைத்தது தந்தைக்கு நிச்சயம் தெரிய வரும்.
அப்பா அம்மாகிட்ட சொல்லுவாங்க, அம்மா பதட்டத்துலயே பிரச்சனையை பெரிதாக்கிடுவாங்க, அத்தையிடம் பேசிய பின்னே பிரச்சனை வந்தால் விளைவை சந்தித்திடலாம், சந்தித்துதான் ஆகனும். ஆனால் அதற்கு முன்பாகவே வந்தால் அத்தையை நெருங்குவது சிக்கலாகிடும் என தனலஷ்மிக்கு அழைக்கும் எண்ணத்தையும் கைவிட்டாள்.
மனது மிகவும் சலிப்பாக உணர்ந்தது. படிப்பு, தோழிகளோடு உரையாடுவது என எதிலும் நாட்டமில்லாமல் போக, சோர்வாகவே இருந்தாள்.
மாலை கல்லூரி முடிந்து வந்ததும் மொபைலை பார்க்க, இரண்டு முறை தந்தை அழைத்திருக்கிறார் என அழைத்தாள்.
அருணாச்சலம், “சிவாம்மா.” என்றார் அன்போடு.
“ம் ப்பா, நான் நாலரைக்குத்தான் மொபைல் பார்ப்பேனு தெரிஞ்சும் நாலு மணிக்கு கூப்பிட்டிருக்கிங்க? எதாவது முக்கியமான விசயமாப்பா?”
“ஆமாம்டா, இந்த வாரம் ஊருக்கு வரியா?”
எச்சரிக்கையானாள் சிவப்ரியா. ஆனாலும் முதலில் என்ன விசயம் என அறிந்து கொள்ளலாம், பிறகு முடிவெடுக்கலாம் என, “ஏன்ப்பா? எதாவது முக்கியமான விசயமா?” என்றாள்.
“ஆமாம்டா, இரு அம்மாகிட்ட கொடுக்குறேன்.” என மனைவியிடம் கொடுக்க, “பார்கவி வந்துருக்கா, இரண்டு மூனு நாள் தங்கிட்டுதான் போவா. அதான் நீயும் இருந்தா நல்லாயிருக்கும்னு அப்பா நினைக்கிறார்.”
“அவ… அவளும்தான். உனக்கு சொல்லிட்டு அவளுக்கு கால் பண்ணலாம்னு இருந்தோம்.” என்றார் கல்யாணி.
அன்னையின் சமாளிப்பு பேச்சிலேயே தெரிய, “அடுத்த வாரம் எக்ஸாம் இருக்கும்மா, ஊருக்கு வந்தா படிக்க முடியாதே.” என்றாள்.
“அதெல்லாம் படிச்சிடலாம், நீ வா, உறவை விட படிப்பு முக்கியமா?” என சிடுசிடுத்தார் கல்யாணி.
“சரிம்மா, நான் வரதா இருந்தா ஷிவாங்கியையும் கூட்டிட்டுதான் வருவேன், இல்ல அவ கோவிப்பா.” என இணைப்பை துண்டித்தாள் சிவப்ரியா.
ஒரு மணிநேரம் கழித்து பார்த்திபனிற்கு அழைத்து, “பார்த்திண்ணா, எதோ என்கிட்ட மறைக்குறாங்க, எதுக்கு என்னை ஊருக்கு வர சொல்றாங்கனு நிச்சயம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், என்ன விசயம்னு சொல்லுங்க.” என்றாள்.
பார்த்திபன் என்றும் தங்கைக்கு உறுதுணையாய் இருப்பவன் ஆதலால் உண்மையை மறைக்க மனமில்லாமல், “ஒரு வரன் வந்துருக்கு சிவா, சித்தப்பா கல்யாணத்துக்கு பேசும்போதே இப்போதைக்கு வேணவே வேணாம்னுதான் சொன்னேன். ஆனா இந்த பையனைப் பார்த்த பின்ன எனக்கே மனசு மாறிடுச்சு, சினி ஸ்டார் மாதிரி அவ்வளோ சூப்பரா இருக்கான். நல்ல குடும்பம், பெங்களூர்ல ஐ.டி கம்பெனியில வேலைல இருக்கான், நல்ல சம்பளம்.”
பார்த்திபன் முடிக்கும் முன்னே, “ஓகே பார்த்திண்ணா, நான் வைக்கிறேன்.” என்றாள்.
“சிவா, கோபமா?”
“ச்சே ச்சே, நான் எதுக்கு கோபப்பட போறேன்?” என்றாள் இயல்பாகவே.
“அப்போ பையன் ஃபோட்டோவை அனுப்பவா? பார்க்குறியா?”
“ம் அனுப்பு ண்ணா.”
வேலை இத்தனை சுலபமாய் முடியும் என எதிர்பார்த்திராத பார்த்திபன் சந்தோசத்தோடு மாப்பிள்ளையின் படத்தை அனுப்பி வைத்தான்.
உடனே பார்த்தாள். பார்த்த்தற்கான அறிகுறி தெரியவே பார்த்திபன் அழைத்தான் ஆர்வத்தோடு. அழைப்பை ஏற்றவள், “ம்… நல்லாத்தான் இருக்கான். ஆனா எனக்கு இரண்டு நாள் டைம் கொடுங்க.” என இணைப்பை துண்டித்தாள் சிவப்ரியா.
இரண்டு நாள் கழித்து கல்யாணி அழைத்தார். “ம் என்னம்மா?” என்றாள்.
சொந்தத்தில் முடியாமல் ஒருவர் இருக்க, இந்த நேரம் பெண் பார்க்கும் வைபவம் வைக்க முடியாதென, “சிவா இந்த வாரம் வராதே, அடுத்த வாரம் வா.” என்றார்.
“ஏன்ம்மா?”
“நம்ம பங்காளி ஒருத்தர் முடியாம இருந்தாரில்ல? இனி வைத்தியம் செய்தாலும் காப்பாத்த முடியாதுனு வீட்டுக்கு அழைச்சிட்டு போக சொல்லிட்டாங்களாம். இப்போவா அப்போவானு கிடக்கார் பாவம்.” என்றார் வருத்தமாக.
“அவர் முடியாம இருந்தா நான் ஏன் ஊருக்கு வரக்கூடாது? அடுத்த வாரம் பார்கவிக்கா ஊருக்கு போய்டுவாங்கனு கஷ்டப்பட்டு பர்மிஷன் வாங்கினேன். இப்போ லீவ் கேன்சல் செய்தா சந்தேகப்படுவாங்க, நான் வரேன். எனக்கு பார்கவிக்காவை பார்க்கனும்.” என இணைப்பை துண்டித்தாள்.
தன் வீட்டோடு ஒட்டுதலில்லை என்றாலும் ஊரில் நடக்கும் பங்காளி இறப்பிற்கு அத்தை வராமலா இருப்பார்கள்? வாய்ப்பை நழுவ விடாமல் எப்படியாவது சந்தித்தாகனும் என ஆர்வத்தோடு ஊருக்கு கிளம்பினாள் சிவப்ரியா.