“சரி இங்கனவே இரு” என்ற வீரன் முதல்வரின் அறைக்குள் சென்று பத்து நிமிடங்கள் கடந்து வெளியில் வந்தான்.
“என்னண்ணே?” லிங்கம் கேள்வியாய் ஏறிட்டான்.
“சின்னக்குட்டி ஆத்திரத்தில் பண்ணான்னா… நீயி கோவத்துல பேசி வச்சிருக்க. இன்னும் ஒன்றை மாசம் பள்ளிக்கூடம் வர வேணாமா?” என்ற வீரன், “சின்னக்குட்டி பாதுகாப்புக்கு அவீங்கதேன் பொறுப்புன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். ப்ரின்சி முன்னுக்கவே, அந்த பையனோட அம்மாகிட்டையும் பேசிட்டு வந்தேன். வா போவோம்” என்று முன் நடந்தான்.
“எது பண்ணாலும், நம்ம பாதுகாப்பையும்… பொறவு என்ன நடக்குமின்னும் ரோசிக்கணும் லிங்கு” என்று தம்பியின் தோளில் தட்டிக்கொடுத்தான்.
“சின்னக்குட்டிக்கு ஒன்னுன்னாக்கா நரம்பு புடைக்குதோ! வசனமெல்லாம் பேசிருக்கவன்” என்ற வீரனிடம் தம்பியை கேலி செய்யும் சிரிப்பு.
“என்னத்தையும் சொல்லாதண்ணே” என்ற லிங்கத்திற்கு வீரனின் கேலி பிடிக்கவே செய்தது.
“என்னவாம்?”
தம்பியை கண்டு கொண்டவனாக வீரன் கேட்க, ஒன்னுமில்லையே என சிரித்து மழுப்பினான் லிங்கம்.
‘நீயி புடிக்க வேண்டிய கையி மாமா!’ அங்கையின் குரல் லிங்கத்தின் செவிகளில் எதிரொலித்தது. அவனின் முகம் விகசித்ததோ எனும் விதமாக மலர்ந்தது. பட்டென்று மறைத்துக்கொண்டான்.
“பேங்குல என்னாச்சு?”
“எல்லாம் ஓகே தேன். அடுத்தவாரம் பணம் தரமின்னு இருக்காய்ங்க” என்ற வீரன், “தொகை பெருசுடே, உன் பேரில் பாதியை ஸ்பிலிட் பண்ணனுமாட்டிக்கு” என்றான்.
“எனக்கு ஹோட்டலே போதுமிண்ணே! உன் பேரில் இருந்தா மட்டும் போதும்” என்றான் லிங்கம்.
“உன்கிட்ட சம்மதம் கேக்கலடே… நாளைக்கு பத்திரம் பதிவு. சோலி ஏதுமிருந்தா ஒதுக்கி வச்சிப்புடு” என்ற வீரனிடம், “அம்புட்டும் உன் உழைப்புண்ணே” என்று லிங்கம் மறுக்க செய்தான்.
அடுத்து வீரன் ஒன்றும் பேசவில்லை. தன் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.
லிங்கம் முகம் சுருங்க ஹோட்டலை நோக்கிச் சென்றான்.
சில மணி நேரத்தில் மீனாள் அழைத்திட, வீரன் அரிசி ஆலையில் இருந்தான்.
“நான் ஆலையில இருக்கேன். லிங்கம் மருதையிலத்தேன் இருக்கியான். அவனுக்கு போன போடு” என்று வைத்திட்டான்.
அடுத்த பத்து நிமிடத்தில் மீனாளை அழைத்துக்கொண்டு விளாங்குடி திரும்பிக் கொண்டிருந்தான் லிங்கம்.
தேர்வினை நல்ல முறையில் முடிக்க வேண்டுமென்கிற பதட்டத்தில் மறந்திருந்த காலை நிகழ்வு, இப்போது மனதில் எழும்பி மீனாளை அலைகழித்தது.
இருவரும் தங்களின் வருத்தத்தோடு அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தனர்.
வீட்டிலிருப்பவரிடம் அங்கையின் பள்ளியில் நடந்தவற்றை சொல்லிய லிங்கம், வீரனிடம் பேச முயற்சித்திட… அலைப்பேசியை எடுத்த வீரன் “அவியல் மூட்டை சரி பார்த்திட்டு இருக்கேன்” என்று வைத்துவிட்டான்.
அப்பட்டமான மறைமுக ஒதுக்கம். எப்போது லிங்கம் அழைத்தாலும், சொல்லுடே, லிங்கு என்று விளிக்கும் வீரன் இப்போது அறிவிப்பு போல் பேச முடியாது என்பதை கூறியிருக்க திண்ணையில் கால் நீட்டி அமர்ந்திருந்த மீனாட்சியின் மடியில் சென்று தலை வைத்து படுத்துக்கொண்டான்.
சுபா அன்று மதியம் போல் தன்னுடைய ஊருக்கு கிளம்பியிருந்தாள். அங்கிருந்து சென்னைக்கு தங்கியிருக்கும் விடுதிக்கு செல்ல வேண்டும்.
சுபாவின் தந்தை சுந்தரேசன் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக இருக்கிறார். சுபா மட்டும் தான். அவரின் மனைவி நோய்வாய்ப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்னவே இறந்துவிட்டார்.
சுபா பிரேமிற்காகவே தந்தையை தனியாக விட்டு சென்னையில் அவன் வேலை செய்யும் நிறுவனத்திலேயே பணி புரிகிறாள். சுந்தரேசனும் மகளின் விருப்பத்திற்கு தடை விதிக்காது சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
வீரனின் முகப்புத்தகத்தில் கௌதமின் கணக்கு காட்டிட, முகப்பு படம் பார்த்ததும் சுபாவினுள் ஒரு உணர்வு. நாளுக்கு நாள் அவனை பற்றி முகபுத்தகம் வாயிலாகவே அறிந்து கொண்டவள், அவனுக்காகவே சென்னை சென்று… அவனது அலுவலகத்தில் வேலையில் அமர்ந்தாள்.
ஆரம்ப காலங்களில் இருவரும் வெவ்வேறு குழுவில், வேறு வேறு செயல் திட்டங்களில் இருந்திட… நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் ஒரே குழுவில் இணைந்தனர்.
அனு தினமும் கௌதமை பார்த்தே நாட்களை கடத்தியவள், அன்று தான் அவனை முதன் முதலாக பார்ப்பதைப்போல் பார்த்து வைத்தாள். இரண்டு மூன்று வாரங்களில், வீரனின் உறவென்று கௌதமே கேட்கும்படி செய்தாள்.
பல வருடங்களுக்கு முன்னர் சிறு வயதில் பார்த்திருந்தவளை அவனுக்கு சுத்தமாக நினைவில்லை.
தோழியாக நட்பு கொண்டவள், உறவினள் என்று தெரிந்ததும் கௌதமும் நெருங்கியே பழகினான்.
அவனோ நட்பாக பழக, அவளோ காதலாக பழகினான்.
நல்லானுக்கு பாண்டியன் உறவினர்கள் யாரையும் பிடிக்காது. அவர்களைப்பற்றி பேசுவதைக்கூட விரும்பமாட்டார். ஆதலால் சுபா தன்னுடன் வேலை செய்வதை கௌதம் வீட்டில் சொல்லவில்லை.
சில வாரங்களில் சுபா காதலென்று அவன் முன் நிற்க… என்ன மாதிரி உணர்கிறோம் என்றே புரியாது பதில் ஏதும் சொல்லாது சென்றிருந்தான் கௌதம்.
தன் மனதிலிருப்பதை சொல்லிவிட்டோம். இனி அவனது முடிவு என்று சுபா இலகுவாக அவனிடம் முன்பு போல் பழகிட, அவள் தன்னை காதலிப்பதாக சொல்லியது உண்மை தானா என்ற குழப்பம் அவனுள். குழப்பம் அவனை தடுமாற வைத்தது. தடுமாற்றம் தடம் புரள வைத்தது. அவனுள் மெல்ல மெல்ல சுபா காதலாக தடம் பதித்தாள்.
அச்சமயம் தான் நல்லான் பொங்கலுக்கு விளாங்குடி செல்வது பற்றி சுந்தரியிடம் வீட்டில் பேசினார்.
“அண்ணே வூட்டுக்கு போறோமின்னு முடிஞ்ச உறவெல்லாம் ஒட்டி உறவாடாத. நமக்கும் அங்கன பங்கிருக்கே. அதை விட முடியாது. இன்னும் ஒரு வருசம் தேன் எனக்கு பணி. ரிட்டையர்ட் ஆகிட்டால் அங்கட்டு தான் போகணும். அதுக்கு நாம இன்னும் எதையும் மறக்கலன்னு காட்டத்தேன் அங்கன போறோம். அந்த பாண்டியன் குடும்பத்தை பார்த்தாலே கடுப்பாவுது. அதுவும் அந்த வீரன்…” என்று பல்லை கடித்தார்.
அப்போதுதான் கௌதமிற்கு நிதர்சனம் புரிந்து தன் காதல் கைக்கூடிட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான்.
தன்னால் தன்னவளுக்கு வலி வேண்டாமென்று நினைத்தவன் விலக நினைக்க,
“பத்து நாள் ஆச்சு. என்ன சொல்லப்போற?” கௌதமின் முகம் பார்த்து சுபா கேட்டிட, காதலை பூட்டி வைத்தவனாக முடியாதென்று நிர்தாட்சண்யமாக மறுத்தான்.
“இல்லை. நீ பொய் சொல்ற கௌதம். எனக்கான காதலை நான் உன் கண்ணுல பார்த்திருக்கிறேன்” என்றவள் எவ்வளவோ மன்றாடியும் கௌதம் ஏற்கவில்லை.
அதன் பின்னர் சுபாவின் பார்வை ஏக்கமாக கௌதமை தொடர்ந்திட, வேறு குழு மற்றும் பணி நேரம் ஆகிவற்றை மாற்றிக்கொண்டான். சுபா தான் தவித்துப்போனாள். அவளின் தவிப்பு புரிந்து கௌதம் துடித்துப்போனான். இருப்பினும் மீண்டும் உறவோடு இணையும் வேளையில் தன் காதலால் ஒரு சச்சரவு வேண்டாமென்று தன்னுடைய விலகளில் உறுதியாக இருந்தான்.
கௌதமிற்காக வந்தவளுக்கு அவனை பார்க்கவே நேரம் கிட்டாமல் போனது.
அலுவலகத்தில் கௌதமிற்கும் சுபாவுக்கும் ஒரே நண்பர்கள் என்பதால், கௌதம் பொங்கலுக்கு ஊருக்கு செல்வதை அறிந்துகொண்ட சுபா அவனுக்கு முன்பு அங்கு வந்து நின்றாள். அதில் அவனுக்கு அதிர்ச்சி தான். இருப்பினும் தனக்காக என்று கர்வம் கொண்டான். அவள் மீதான அவனின் புதைக்கப்பட்ட காதல் அதிகரித்து மேலெழும்பியது உண்மை. அதனாலே அன்றைய இரவு அவளிட்ட உதட்டு முத்தத்தை விரும்பியே ஏற்றான்.
இருவருமே நேசம் கொண்டுள்ள நிலையில் வீரனுக்கு அது தவறாக படவில்லை. ஆதலாலே அன்று அமைதியாக இருந்தான். உண்மையில் கௌதமுக்கு விருப்பமில்லாமல் போயிருந்தால், அன்றே சுபாவின் செயலை நிச்சயம் வீரன் கண்டித்திருப்பான்.
மீனாள் பேசிய பின்னர் கௌதமுக்குள்ளும் நல்லதாகவே நினைப்போமே என்று தோன்றிட, மீனாள் பேசிச்சென்ற அன்றைய இரவே கௌதம் வசந்தியின் முன்பு தன்னுடைய காதலை சொல்லும் முடிவோடு நின்றான்.
வசந்தி சரியென்றுவிட்டால், நல்லானை அவர் சம்மதிக்க வைத்திடுவார் என்கிற எண்ணம் அவனுக்கு.
வசந்தி என்னவென்று கேட்டிட,
“நான்… எனக்கு… ம்மா” என்று தடுமாறியவன், “நான் காதலிக்கிறேன் ம்மா” என்று சொல்லிவிட்டு வசந்தி என்ன சொல்லிடுவாரோ என அத்தனை பயத்தோடு அவரை பார்த்தான்.
அவனின் பயம் வீண் என்று, வசந்தி பேசிட கௌதமுக்கு மயக்கம் வராத குறை தான்.
“எனக்கு தெரியும் கௌதம். உன் ஆசைக்கு குறுக்கு நிக்கமாட்டோம்” என்ற வசந்தியின் வார்த்தை அவனுக்கு நெஞ்சுவலியையே கொடுத்தது.
“ம்ம்மா…”
“இதெல்லாமாடா அம்மாகிட்ட சொல்லுவாய்ங்க. போய் லவ் பண்ணுற சோலியை பாருடா. கல்யாணப்பேச்சை பொறவு பார்த்துக்கிடுவோம்” என்ற வசந்தி ”நீயும் மீனாளும் தோப்பில் பேசியதை கேட்டுப்புட்டேன். அதனால் எனக்கு எல்லாம் தெரியுமாட்டிக்கு” என தவறாக நினைத்துக்கொண்டுக் கூறினார்..
கௌதமுக்கு அதீத சந்தோஷம். அப்போதே சுபாவை சந்தித்து தன்னுடைய காதலை சொல்லிவிட்டான்.
தன் காதலை கௌதம் ஏற்றுக்கொண்ட மகிழ்வில் சுபா ஊர் செல்ல…
“நானும் மீனாளும் பேசியதை கேட்டுவிட்டதாகக் கூறினார்களே! முழுதாகக் கேட்டாங்களா இல்லை பிற்பாதியா?” என்ற குழப்பத்தோடு, மருதன், மீனாள் மற்றும் கௌதம் திருமணம் என்று சொல்லிய அதிர்வோடு சென்னை சென்று சேர்ந்தான்.
வீட்டிற்கு போனதும் வீரனுக்கு அழைத்துவிட்டான்.
“அண்ணே” என்று விளித்தவனின் குரலில் சுரத்தே இல்லை.
காலையில் நடந்த பேச்சினை வைத்து கலங்கியிருக்கிறான் என்பதை நொடியில் யூகித்த வீரன்,
“எல்லாம் பார்த்துகிடலாம்டே” என்று ஆறுதலாக பேசி வைத்திட்டான். ஆறுதல் சொல்லியவனைத் தேற்றிட யாருமில்லை.
‘வசந்தி ஒருபோதும் இதனை அங்கீகரிக்கமாட்டார். மீனாளும், கௌதமும் உண்மையை சொல்லும் நிலையில் மட்டுமே அவரவர் ஆசை ஈடேற வாய்ப்புள்ளது’ என எண்ணிக்கொண்ட வீரனுக்கு, மீனாள் மருதன் பேச்சை மீறிடமாட்டாளென்றே தோன்றியது.
விரக்தியாக புன்னகைத்துக் கொண்டான்.
மீண்டும் ஒருமுறை அன்னையிடம் பேசி பார்க்கலாமா என நினைத்த கௌதம் வசந்தியை தேடிச்செல்ல, அவரோ நல்லானிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
தன் கணக்கில் வரும் பணத்தைப் பற்றி.
நல்லான் பார்வையிலேயே அடக்கிவிட்டார்.
அது கணவன் மனைவி சண்டையென்று கௌதம் தன்னறைக்கு சென்றுவிட்டான்.
அவர்களின் பேச்சினை அவன் நின்று கேட்டிருக்க வேண்டுமோ?
“உன்னைய கௌரவமா நான் நடத்துறதுக்கு காரணம் உன் கணக்கில் வரும் வரும்படி தான். பண்ணையில வர உன் பங்கு மட்டுமே அம்புட்டு வரும்போது, ஓட்டலுல ஆலையில இன்னும் எம்புட்டு வரும். உன் அண்ணே மவ(ள்) நம்ம கௌதமுக்கு ஒத்து வருமான்னு பார்க்கத்தேன் இந்த ஊரு பயணமே! எனக்கு சிரமம் கொடுக்கமா நீயே கல்யாணப்பேச்சை ஆரம்பிச்சிட்ட. பொறவு நாம கேக்குறதை உன் அண்ணே நமக்கு செஞ்சுதானே ஆவணும். எனக்கு பென்ஷனும் சொல்லிக்கிற அளவு வராது. ஊரோட போயி இருக்கணுமின்னா… அங்கன நமக்குன்னு பண்ணயம் இருக்கணுமாட்டிக்கு” என்ற நல்லானின் திட்டத்தில் வசந்தி வாயடைத்துப் போனார்.
இருவருமே ஒருவருக்கொருவர் சரியான ஜாடிகேத்த மூடி என்பதை அறிந்துகொண்டனர்.