சர்க்கரை ஆலை கட்டவிருக்கும் இடம் வீரனின் பெயரில் இருந்தது. அதன் மதிப்பு பல கோடி. மிகவும் பரந்த பெரும் பரப்பு. சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காக மட்டுமின்றி, தன் உடன் பிறந்தவனை பலமாக எண்ணியே… கட்டவிருக்கும் தொழிற்சாலையை லிங்கத்தின் பெயரில் பதிவு செய்ய நினைத்துக் கூறினான்.
“அது உன்னுடைய உழைப்புண்ணே!” என்று லிங்கம் சொல்லியதில் எவ்வித உள்ளர்த்தமும் இல்லையென்றாலும், லிங்கம் பிரித்து கூறியதைப்போல் உருவகம் கொண்டுவிட்டது. வீரனின் மனதில்.
தம்பியைப் பற்றி எல்லாம் தெரிந்தும் வீரனால் இந்த பிரிவு, வேற்றுமை என்பதை மட்டும் எப்போதும் எளிதில் கடக்க முடிவதில்லை.
முன்பு பிரேம் விடயத்தில் மருதன். இப்போது லிங்கம்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவினை உண்ணும் சமயம் கூட யாரிடமும் எவ்வித பேச்சும் பேசாது, விரைந்து உண்டு விட்டு அறைக்குள் வந்திருந்தான்.
தன்னைப்போல் வீரனின் கால்கள் சன்னல் பக்கம் செல்ல, கதவினை அறைந்து சாற்றி, திரையை இழுத்து மூடி கட்டிலில் வந்து விழுந்தான்.
அத்தனை உடல் உழைப்பின் போது ஏற்படாத களைப்பு, மனதின் சிறு சுணக்கத்தில் ஏற்பட, கண்களை மூடி உறங்க முயற்சித்தான்.
சில நிமிடங்களில் லிங்கம் “அண்ணே” என்று அழைக்கும் சத்தம் கேட்டும் அசையாது படுத்திருந்தான்.
வீரனிடம் பதிலின்றிப்போக லிங்கம் கதவினை திறந்துகொண்டு உள் சென்றான்.
வீரன் சீரனா உறக்கத்தில் இருப்பதைப்போல் இருந்தது. சிறிது நேரம் அவனின் காலருகே மெத்தையில் அமர்ந்தான்.
“என்கிட்ட கோச்சிக்கலாம் வருமாண்ணே உனக்கு?” என விழிகள் மூடிய வீரனின் முகம் பார்த்து வினவிய லிங்கத்தின் முகத்தில் அப்படியொரு புன்னகை.
“அவுச்… வலிக்குதுடே” என்று கன்னத்தை பிடித்தபடி எழுந்தமர்ந்தான் வீரன்.
“உறங்களையாட்டுக்கு?”
“நீயி பேய் மாறி வருவன்னு பிசாசு கனவுல வந்து சொல்லுச்சு, அதேம் உறக்கம் ஓடிப்போச்சு” என்ற வீரன், “நான் கோவமாத்தேன் இருக்கேன். எதையும் சொல்லி என்னைய சமாதானம் செஞ்சிப்புடலாம் நெனக்காதடே” என்ற வீரன் முகத்தை பொய் கோபமாக வைத்துக்கொண்டான்.
“சர்க்கரை ஆலை உன்னோட எம்புட்டு வருச கனவுண்ணே. முழுக்க முழுக்க உன் முயற்சி. அது உனக்குன்னு மட்டுமே இருந்தாதேன் நல்லாயிருக்குமாட்டிக்கு” என்றான்.
“உன்னையவிட என் கனவு ஆசை பெருசில்லடே! சொத்து ஒன்னா இருந்தாதேன் சொந்தம் ஒன்னா இருக்குமின்னு நினைக்கிற ஆளு நானில்லைடே” என்ற வீரன், “அரிசி ஆலை ஆரம்பிக்கும்போதே, உள்ள ஒரு கணக்கு. ஓட்டலு பண்ணையம் எல்லாம் கூட்டு, நாச்சியாக்குன்னு அதுல நாம பிரிச்சா, நாமலே மாமாவை வேத்துமையா நெனச்சு பிரிச்ச கணக்கா ஆகிப்புடும். மருமவளா மாமா வூட்டுக்கு நாச்சியா போகும்போது, சீருன்னு கொடுத்தாலும் மாமா மனசு வெசனப்படும். அதேன் அதுல பிரேமை கூட்டு வச்சேன். இப்போ என் பங்கை நாச்சியாக்கு மாத்தி வச்சு அரிசி ஆலையை மொத்தமா பிரேம்கிட்ட ஒப்படைச்சாலும், என் தங்கச்சி பேருலதானே இருக்குன்னு சொல்லிடலாம். சொந்த மாமன் வூட்டுக்கே போனாலும் அவளை வெறுங்கையா அனுப்பக்கூடாதுடே அவளுக்குன்னு சுயகௌரவம் ஒன்னு வேணுமின்னுதேன் அது. அந்த மாதிரி என் தம்பிக்குன்னு நானு கொடுக்கணுமே! ஓட்டலு முழுக்க அப்பா, மாமாக்கு சேரும். அதுல உனக்குன்னு எனக்குன்னோ பங்கு வச்சிக்கக்கூடாது. கடைசி காலத்துல அவீங்களை ஒடுங்கி நிக்க வச்சிடக்கூடாது. காலத்துக்கும் அது அவீங்க கணக்குலத்தேன் இருக்கும். அதுவுமில்லாம இது முழுக்க என் உழைப்புன்னு சொல்லிட முடியாதுடே! ஓட்டலில் வரும் பணத்தையும் தானே இதுல போடப்போறேன். அப்போ அதுல உழைக்கிற உனக்கும் கட்டப்போற ஆலையில சம உரிமை இருக்கே!” என்றான் வீரன்.
“வசந்தி அத்தை பேசுனப்பேச்சு நாளைக்கு நமக்குள்ள வந்திடக்கூடாதுடே” என்ற வீரன் காலை வசந்தி தன்னிடம் கேட்டவற்றை சொல்ல, லிங்கம் கொதித்தான்.
“யாரோ சொன்னாங்கன்னு நீங்க இப்போவே இப்படி செய்வீங்களா? நாங்க கேட்டோமாக்கும். உன்கிட்ட எங்களுக்கு சொத்து கொடுன்னு?” என்று வீரனை வார்த்தையால் உலுக்கிவிட்டான்.
“நீயி உன்னுத கொடுத்துப்புடமாட்டியாக்கும். நான் கேட்டாக்க” என்ற வீரனை தாவி அணைத்துக்கொண்ட லிங்கம், “உனக்கு ரொம்ப பெரிய மனசுண்ணே!” என்றான். நெகிழும் நேரத்தில் பன்மை விடுத்து ஒருமையில் ஒட்டிக்கொள்வான் லிங்கம்.
“சேர்த்து வச்சிக்கிறதைவிட கொடுக்கிறதுலதேன் அதீத சந்தோஷம்டே” என்ற வீரன் லிங்கத்து முதுகில் தட்டியவனாக, “என் பலமே நம்ம குடும்பம் தான் லிங்கு. அதுல நீயி எனக்கு… அர்ஜுனனுக்கு தேரோட்டிய கண்ணன் மாறி” என்றான்.
“அத்தை அப்படி பேசுனதால, நாளைக்கு நீயி அந்தமாதிரி என்கிட்ட கேட்டுப்புடுவன்னு இதுல உன்னைய கூட்டாக்கல லிங்கு. அப்படி மனசுல நெனச்சிப்புடாத, எம் பாசம் பொய்யாகிப்போவும்” என்ற வீரன், “எனக்கு சொல்லத் தெரியலடே. உன்னைய என் கைக்குள்ளவே வச்சிக்கணுமாட்டிக்கு. ஒவ்வொன்னா பார்த்து பார்த்து செய்யணுமாட்டிக்கு” என்றான்.
வீரனுக்கு சரியான வார்த்தைகள் இல்லையென்றாலும், அவனின் எண்ணத்தையும், பாசத்தையும் லிங்கத்தால் புரிந்துகொள்ள முடிந்தது.
“லவ் யூண்ணே. எத்தனை சென்மம் வாழ்க்கை இருந்தாலும், நீயி எனக்கு அண்ணனவே வேணும்” என்றான். அவனின் முகம் மட்டுமே சிரித்திருந்தது. குரலும், மனமும் அத்தனை நெகிழ்ந்திருந்தது.
லிங்கத்தின் மனநிலையை மாற்றவே வீரன் அவ்வாறு பேசினான். ஆனால் லிங்கமோ வீரன் சொல்லியதில், ‘எம்மேல அம்புட்டு உரிமையா?’ என தனக்குத்தானே கேட்டுக்கொண்டதோடு, அன்று தோப்பில் வைத்து அவள் அழுது கொண்டே பேசியவையெல்லாம் காதுக்குள் எதிரொலிக்க சிலிர்த்து அடங்கினான்.
“உண்மையாவே அவளுது நேசந்தேனா அண்ணே?”
கேட்ட லிங்கத்தை புருவத்தூக்கலுடன் ஏறிட்ட வீரன்,
“எனக்கு உறக்கம் வருதுடே” என்று கவிழ்ந்தடித்து படுத்துக்கொண்டான்.
“அண்ணே சொல்லிட்டு படும்.” வீரனின் புஜத்தை பிடித்து அவனை புரட்டினான்.
வீரன் சொல்வது உண்மை தானே. லிங்கத்தின் மனமும் தலும்ப ஆரம்பித்திருக்கிறதே. என்ன முடிவெடுப்பானோ?
லிங்கம் எதுவும் சொல்லவில்லை அப்படியே அமர்ந்திருந்தான்.
அங்கையின் நேசம் தெரிந்த நொடி வீரனுக்கும் அவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் தான் கண்ணுக்கு உறுத்தலாக தெரிந்தது. சின்னப்பெண் தானே எடுத்து சொன்னால் புரிந்து கொள்வாள் என்கிற வீரனின் எண்ணம் அவளின் அழுத்தத்தில் காணாமல் போனது.
அன்று தோப்பில் லிங்கத்திடம் அவள் பேசிய வார்த்தைகளைக் கண்டு வீரனே இத்தனை நேசமா என்று பிரம்பித்துதான் போனான்.
ஆனால் அன்று லிங்கமும் தன் பிடிவாதத்தில் இருந்ததோடு, அவன் சொல்லில் நியாயம் இருப்பதாகப் படவே அங்கையை தனித்து அழைத்துச் சென்று பேசினான்.
பேசிய சில நொடிகளில் வீரன் தான் தன் முடிவை மாற்றிக்கொள்ளும்படி ஆனது.
“லிங்கு மாமாவை மறந்திடுன்னு சொல்றதை தவிர வேறு ஏதாச்சம் பேசு மாமா” என்றிருந்தாள். எடுத்ததும்.
“லிங்கு சொல்றதுல நியாயம் இருக்குடே குட்டிம்மா!”
“எனக்கும் தெரியுமாட்டிக்கு மாமா. ஆனால் புத்திக்கு உரைக்க மாட்டிக்கே. என்ன பண்ணட்டும். வயசு வித்தியாசம், புரிதலுக்கு தடையா இருக்குமின்னு தானே வேணான்னு சொல்றீய்ங்க. என்னைத்தவிர என் மாமாவை வேற யாராலும் புரிஞ்சிக்க முடியுமா மாமா? அவுக கையிலே வளந்திருக்கேன்… என்னைத்தவிர வேற யாருக்கு அவரைப்பத்தி தெரியுமாட்டிக்கு?” என்றவள், “மாமா என்னை கஷ்டப்படுத்தக்கூட நினைக்கமாட்டாக. இப்போவே என்னைய தாங்கு தாங்குன்னு தாங்குற மாமா, கல்யாணத்துக்கு பொறவா புரிஞ்சிக்காம கஷ்டப்படுத்திடுவாறு?” எனக் கேட்டாள்.
இதற்கு வீரனால் என்ன பதில் சொல்லிட முடியும்?
சிறிய பெண்ணாக இருந்தாலும் அவளிடம் காதல் விடயத்தில் இத்தனை தெளிவையும் புரிதலையும் வீரன் எதிர்பார்க்கவில்லை.
இன்று அதனை, அங்கையின் பேச்சை லிங்குவிடம் சொல்லிய வீரன்,
“காதலில் காத்திருப்பு மிக முக்கியமானது. உன் மனசு எத்தனை வருசமானாலும் மாறாதுங்கிற திடத்தோடு நீயி இருக்கிறமாட்டி, லிங்குவும் வேணாங்கிறதுல உறுதியா இருந்தாக்கா ஏத்துக்குற பக்குவத்தை இப்போவே வளத்துக்க. வீட்டிலுள்ளவர்களின் விருப்பமும், உன் விருப்பமும் ஒன்னா இருந்தாக்கா லிங்கு நம்ம வீட்டாலுவளுக்காக கட்டாயம் உன்னைய ஏத்துப்பான்” என்று அன்று அங்கையிடம் தான் சொல்லியதையும் சொல்லிட…
“அதுக்கு உங்க சின்னக்குட்டி என்ன சொன்னாளாக்கும்?” எனக் கேட்டிருந்தான் லிங்கம்.