காலை எழுந்ததுமே தொழிற்சாலையின் உரிமம் பதிவதற்கான முக்கிய பேப்பர்கள் அனைத்தையும் சரி பார்த்து எடுத்து வைத்த பின்னரே வீரன் தன் அன்றாட பணிகளை கவனித்தான்.
வீரன் கிளம்பி வரும்போது லிங்கமும், பாண்டியனும் தயாராக இருந்தனர்.
மருதனுக்கு அழைக்க அவர் வீட்டு வாயிலுக்கு வந்துவிட்டதாகக் குரல் கொடுக்கவும், உண்டு விட்டு நால்வரும் புறப்பட்டனர்.
லிங்கத்தின் பெயரில் உரிமம் பதிந்தாலும், ஆலைக்கு மீனாட்சி என்று தான் பெயர் பதிந்தனர். அனைத்தும் சரியாக இருக்க, பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்திட்டு வேலை விரைந்து முடிந்தது. இங்களிக்கப்படும் பத்திரத்தை, தொழிற்சாலை செயல்பட உரிமம் வழங்கும் அலுவலகத்தில் கொடுத்து பதிய வேண்டும். அதன் பின்னரே எவ்வித சட்ட சிக்கலுமின்றி தொழிற்சாலை கட்டி முடிய இயக்க முடியும்.
ஆலை பணிகள் முடிந்ததும், அதற்குரிய துறையிலிருந்து ஆட்கள் வந்து பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்கிய பின்னரே தொடங்கிட முடியும். அனைத்திற்கும் இன்றே காகிதங்களை பதிவிட்டால் தான், விரைந்து வேலையாகுமென, பெரியவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, லிங்கத்துடன் அந்தந்த துறை அலுவலகர்களை சந்தித்துவிட்டு மாலை போல் வீடு வந்து சேர்ந்தனர்.
“வேலையெல்லாம் ஆச்சா அப்பு?”
“முடிஞ்சுது அப்பத்தா” என்ற வீரன் மாடியேற, “செத்த இரு அப்பு. உம்மகிட்ட பேசணும்” என்றார் மீனாட்சி.
“சொல்லுங்க அப்பத்தா?” என்ற வீரன் அபி கொடுத்த பனங்கற்கண்டு கலந்த எலுமிச்சை சாற்றினை வாங்கி பருகியவனாக அப்பத்தாவின் அருகில் அமர்ந்தான்.
“சுந்தரேசன் போன் போட்டிருந்தியான்” என்ற மீனாட்சி, அபிராமியை ஒரு பார்வை பார்த்தார்.
“அண்ணே பேசுச்சுங்களா? எப்போ அத்தை?” என்ற அபிராமியும் அவர்களது பேச்சினை கவனித்தார்.
“வூட்டு பெரிய மனுஷின்னு என்கிட்ட பேசுனியான்” என்ற மீனாட்சி, “சுபாவுக்கு உன்னைய முடிக்கலான்னு எண்ணமின்னு கேட்டியான்” என்றார்.
வீரன் கையிலிருந்த தம்ளரை இறுக்கி பிடித்தான்.
“மீனாள்… வாய்ப்பே இல்லையா அத்தை?” அபிராமி வருத்தமாகக் கேட்டிட, அன்னையை ஏறிட்டான் வீரன்.
“சுபா உன் அண்ணே மவ தானே அபி. பொறவு என்ன வெசனம்?” மீனாட்சிக்கு விருப்பம் என்பது அவரது கேள்வியிலேயே தெரிந்தது.
“சுபா வறதுல வருத்தமோ பிடித்தமின்மையோ இல்லையாட்டுக்கு அத்தை. மீனாளை அமிழ்தன் பக்கத்துல நிக்க வச்சு கற்பனை பண்ணிப்புட்டனே. புள்ளை படிக்குதுன்னு அமைதியா இருந்துபுட்டேன். அந்த வசந்தி முந்திக்குவான்னு நெனக்கலை. அமிழ்தனுக்குத்தேன் கொடுக்கணுமின்னு நானும் நின்னாக்கா மருதன் அண்ணே என்ன செய்யுமாம். பேசமா மல்லுக்கு நின்னுபுடுவோமான்னு தோணுது. என் கைக்குள்ள வளந்த புள்ள… வுட மனசில்லையே” என்ற அபிராமி, “சுபாவை லிங்கத்துக்கு முடிக்கலாம் அத்தை. பெரியவனுக்கு மீனாளுதேன். உள்ளுக்க சொல்லிக்கிட்டே இருக்கு” என்று அபிராமி நகர,
“எம்மோவ் செத்த நில்லு” என்றிருந்தான் லிங்கம்.
“என்னடே?”
“சுபா மேல எனக்கு அப்படியொரு எண்ணமே இல்லை” என்றிருந்தான் பட்டென்று.
முன்பென்றால் சரியென்றிருப்பானோ!
இப்போது அவனது மனமே அவனுக்கு எதிராக இருக்கிறதே!
“என் அண்ணே மவளை கட்டிக்க உனக்கு என்னடே வீராப்பு?” என்ற அபிராமியிடம், “மனசு ஒப்பாமா பண்ணிக்கிட்டாக்கா கஷ்டம் ரெண்டு குடும்பத்துக்குந்தேன்” என்று சொல்லி லிங்கம் சென்றுவிட்டான்.
“அவென் கதைக்கு பொறவு வருவோம். இப்போ நீயி என்ன சொல்லுற அமிழ்தா?” எனக் கேட்டார் மீனாட்சி.
“இப்போ எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை அப்பத்தா. ஆலையை ஆரம்பிச்சு அது நல்லாமாறி ஓட ஆரம்பிச்சுதுன்னாதேன் மத்ததுல கவனம் போவுமாட்டிக்கு” என்று எழுந்து கொண்டான்.
“சுந்தரேசனுக்கு என்னடே பதில் சொல்லுறது?”
“நான் பேசிக்கிறேங்க அப்பத்தா” என்றான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் மீனாள் அங்கு வந்தாள். அபிராமியும், மீனாட்சியும் ஊருக்குள்ளிருக்கும் கோவிலுக்கு சென்றிருந்தனர்.
லிங்கம் உணவு கூடத்தில் போடப்பட்டிருக்கும் மேசையில் அமர்ந்து ஏதோ உண்டு கொண்டிருந்தான்.
“போன வேலை என்னாச்சு மாமா?” எனக்கேட்டபடி அவனருகில் சென்ற மீனாள், அவனது தட்டிலிருந்த முந்திரி பக்கோடாவை எடுத்து தன் வாயில் நிரப்பினாள்.
“வீரா மாமா செஞ்சாருக்கும்?” என்று அதன் ருசியை வைத்தே கண்டுகொண்டவளாக வினவியவள், “என்ன சொல்லு மாமா… வீரா மாமா செஞ்சாவே இந்த முந்திரி பக்கோடாவுக்கு தனி ருசித்தேன்” என்று மீண்டும் ஒன்றை எடுத்து வாயில் போட்டு “காரமா இருக்கு” என்க, மடித்து கட்டிய வேட்டியும், கையில்லா பனியனும், தலையில் சுற்றி கட்டிய துண்டுமாக, கையில் கண் கரண்டியுடன், மற்றொரு கையில் பக்கோடா நிரம்பிய தட்டுமாய் வந்து நின்றான் வீரன்.
வேகமாக லிங்கத்தின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தவள்,
“நான் கேட்டதுக்கு நீயின்னும் பதில் சொல்லல மாமா?” என்று மென் குரலில் கிசுகிசுத்தாள்.
“எல்லாம் நல்லபடியா ஆச்சு மீனுக்குட்டி” என்ற லிங்கம், “உன் ஆள பார்த்தாக்கா தொண்டையில காத்துதேன் வருதாக்கும்?” என்று அவளைப்போலவே பேசி கேலி செய்தான்.
கொண்டு வந்த தட்டை மீனாளின் முன் வைத்த வீரன், அடுக்கலைக்குள் சென்று தனக்கும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வந்து மற்றொரு இருக்கையில் அமர்ந்தான்.
தலையிலிருந்த துண்டை அவிழ்க்க…
லிங்கம் மீனாளின் தட்டில் கை வைத்தான்.
தம்பியின் கையை தட்டிய வீரன்,
“என்னுதுல எடுத்துக்கோடே” என்று தன்னுடைய தட்டினை அவன் பக்கம் நகர்த்தினேன்.
“ஏன் இதுல எடுத்தாக்கா என்ன? அப்படி அந்த தட்டுல மட்டும் என்ன ஸ்பெஷலு? முந்திரி நிறைய போட்டிருக்கிங்களோ?” என்று ஆராய,
“ம்க்கும்… ரொம்பத்தேன் தாங்குற அண்ணே” என்று லிங்கம் வேண்டுமென்றே சீண்ட,
“டீ போடுறன்னு சொன்னியே போயி போடுடே…” என்று தம்பியை விரட்டினான்.
லிங்கம் எழ,
“மசாலா டீயி” என்றான் வீரன்.
“எதே” என்று திரும்பிய லிங்கம் மீனாளை பார்த்தான்.
“சரித்தேன்… போடுவோம்” என்றவனாகச் சென்றான்.
மசாலா தேநீர் மீனாளுக்கு விருப்பமானது.
லிங்கம் அடுக்கலைக்குள் நுழைய, அடுப்பில் தேநீரில் எல்லாம் கலந்து கொதித்துக் கொண்டிருந்தது.
வீரனே எல்லாம் தயார் செய்து கொதிக்க வைத்திருந்தான்.
“அவளுக்குன்னு ஒவ்வொண்ணும் செய்வாறாம். இவரு பெரியவங்க பேச்சைக்கேட்டு அவளை கௌதமுக்கு கட்டி வைக்கப்போறாராம்!” லிங்கம் முணுமுணுத்தவனாக சிரித்துக்கொண்டான்.
“இப்படி சின்ன சின்ன விடயத்துலக்கூட எப்புடி இம்புட்டு லவ்வை காட்டுறண்ணே” என்ற லிங்கம், “நானும் உன்னைய மாறியே சின்னக்குட்டியை லவ் பண்ணுவனாண்ணே?” என்று தன்னைப்போல் தன்னைத்தானே கேட்டிருந்தான்.
தேநீரை தம்ளரில் நிரப்பிக் கொண்டிருந்தவனின் கையில் ஆட்டம்.
கேட்ட பின்னரே தன்னுடைய வார்த்தையின் பொருள் புரிந்து மனதில் திடுக்கிட்டான்.
“லிங்கு… சாட்சிபுட்டாளாடா?” அவனின் மனசாட்சியே அவனை கேலி செய்தது.
அப்போதும் இல்லையென்று தலையை வேகமாக உலுக்கிவிட்டு கவனத்தை மாற்றினான்.
வீரன் அலைபேசியிலேயே கண்ணாக இருக்க… அவனது இருசக்கர வாகனத்தின் சாவியை மேசையில் அவன் முன் நகர்த்தி வைத்தாள்.
என்னவென்று விழி உயர்த்தி பார்த்த வீரன் மீண்டும் அலைப்பேசியை நோக்கிட…
“முந்தாநா ராத்திரி நீங்க பேசுன பேச்சுக்கு அர்த்தம் வெளங்குச்சு” என்றாள். மெல்லிய ஒலியில்.
“புரிஞ்சா சரித்தேன்” என்ற வீரன் மீண்டும் அலைப்பேசியில் தலையை கவிழ்க்க, வெடுக்கென்று பறித்திருந்தாள்.
“எனக்கு சம்மதமில்லை. ஐயாகிட்ட என்னால வேணாமின்னு சொல்ல முடியாது. நீயி சொன்னா கேப்பாய்ங்க. சொல்லு மாமா” என்றிருந்தாள்.
“என்னன்னு சொல்லணும்?”
“ஏன் மாமா தெரியாதமாறியே கேக்குற?”
“நெசமா என்ன சொல்லணும் தெரியல தங்கம்” என்றான் வீரன். உண்மையில் சொல்லு என்றவள், என்னவென்று சொன்னால் தானே அவனால் கூறிட முடியும்.
“என்னால கௌதமை கட்டிக்க முடியாது!” என்றாள். மிக மிகக் கூர்மையாய்.
“ஏன்?”
மீனாள் வீரனை முறைக்க…
“அப்படின்னு மாமா கேட்பாங்க” என்றான்.
அவளுக்கு ஆயாசமாக வந்தது. மனசு முழுக்க நீயி இருக்கும்போது இன்னொருவனை எப்படி கட்டிக்க முடியுமென அவனிடம் மனதை வெளிக்காட்டிட முடியாது தடுமாறினாள்.
“யோவ்… உனக்கு வெளங்குதா இல்லையா?” என்று மேசை மீது இருந்த பழக்கூடையில் வீற்றிருந்த கத்தியை நொடியில் எடுத்து அவன் முன் குத்துவதைப்போல் வைத்து, இருக்கையிலிருந்து எழுந்து கத்தியிருந்தாள்.
மீனாளின் சத்தத்தில் லிங்கம் ஓடி வந்திருந்தான்.
வீரன் அவளின் செயலுக்கு அசரவெல்லாம் இல்லை.
“அப்போ தங்கத்துக்கு என்னையத்தேன் பிடிச்சிருக்கு. நாங்க ரெண்டேறும் விரும்புறோம். தங்கம் என்னையத்தேன் கட்டிக்கிடும். சொல்லட்டா?” என்று அழுத்தமாகக் கேட்டிருந்தான்.
அவளின் தலை வீரன் கேட்டதற்கு மறுப்பாக இரு பக்கமும் அசைந்தது.
“வேண்டாமின்னு சொல்ற? பொறவு என்னத்த காரணம் சொல்ல சொல்லுற? நான் வேணான்னாக்கா காலம்பூரா இப்படியே இருந்திடுவியா என்ன? உன்னால என்னைய ஏத்துக்க முடியாதுங்கிறப்போ, பேசமா பெரியவங்க செய்றதை ஏத்துக்க” என்று தனக்குள் எழுந்த வலியோடு அவளுக்கும் வலிக்கச் செய்து அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவனால் அவளை விட்டுக்கொடுத்திட முயலாத போதும் ஏதோவொரு நம்பிக்கை. தன்னுடைய தங்கம் தன் கைக்கு மட்டுமே எனும் நம்பிக்கை. அதன் திடத்தாலே அனைத்தையும் வேடிக்கை பார்ப்பவனாக அமைதியாக ஒதுங்கி நிற்கிறான்.
வீரனுக்கு அவளாகவே சொல்ல வேண்டுமென்கிற எண்ணம். அவனாக சொல்லி, வீரன் மீது ஏற்கனவே இருக்கும் வருத்தத்தில் அவள் அனைவரின் முன்பும் மறுத்துவிட்டாள் இருவரின் காதலும் மரித்துப்போகுமே! அதனாலே வீரனின் இவ்வெண்ணம். அவளாக வர வேண்டுமென்று. அனைத்தும் மறந்து கடந்து அவன் மட்டுமே வேண்டுமென்று வர வேண்டும்.
வீரன் பேசிச் சென்றதில் லிங்கத்திற்கும் அண்ணனின் மீது கோபம். இருப்பினும் அவனது செயலுக்கு காரணமிருக்குமென்று மீனாளின் அருகில் வந்து அவளின் தலையில் பரிவுடன் கை வைத்தான்.
“மாமா” என்று அவனின் வயிற்றில் முகம் புதைத்து கட்டிக்கொண்டவள்,
“ஏன் அவீங்களுக்கு புரிய மாட்டேங்குது. எப்படி சாதாரணமா சொல்ல முடியுது?” எனக்கேட்டு கண்ணீரில் கரைந்தவளுக்கு என்ன ஆறுதல் சொல்ல வேண்டுமென்று தெரியாது தட்டிக்கொடுத்தவனாக நின்றிருந்தான்.
மீனாளின் அழுகை மெல்ல தேய்ந்தது.
“நீ வேணாமின்னு சொன்னதாலத்தேன் அண்ணே தள்ளி நிக்குது. இப்போ நீயி வந்து பேசுன்னு சொன்னாக்கா அண்ணனும் என்னத்த பண்ணும் மீனாகுட்டி?” என்ற லிங்கம், “இன்னைக்கேவா நடக்கப்போவுது. நடக்கும்போது பார்த்துகிடலாம். அழுது கரையாம… எதுக்கும் துணிஞ்சு நில்லு. நீயி என்ன முடிவெடுத்தாலும் அண்ணே அதுக்கு கட்டுப்படும். அண்ணேக்கு உன்னைத்தவிர வேற எதுவும் வேணாமாட்டிக்குடே குட்டி. கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன். உன் மனசு புரியலையா கேட்காதடே. புரிஞ்சதாலத்தேன் சொல்றேன். அண்ணே இல்லன்னா நீயிதேன் உக்கிப்போவ” என்றான்.
லிங்கத்தின் வார்த்தைகள் சத்தியமானதென்று மீனாளுக்கும் தெரியும்.
பழையதை கடக்க முடியாது அவள் படும்பாட்டை அறிவானா அவளின் வீரன்?