நிச்சயம் முடிந்ததும் உணவு வேளை முடிய சுற்றத்தார் கலையத் தொடங்கினர்.
மெல்ல மெல்ல ஆட்கள் குறைந்து வீட்டு ஆட்கள் மட்டுமே எஞ்சினர்.
வசந்தி அங்கு நடைப்பதை ஒரு ஆராய்ச்சியோடு தான் பார்த்திருந்தார்.
நிச்சயத்துக்கே பாண்டியன் பதினோரு பவுன் செய்திருக்க…
‘நிறைய வரும்முடி வருது போலிருக்கே!’ என மனதில் ஆயிரம் கணக்கிட்டார்.
உணவுக்காக லிங்கம் தங்களுடைய ஹோட்டலில் இருந்தே சமையல் நிபுணர்களை அழைத்து வந்திருந்ததால், வீட்டு அலங்காரத்தினை கலைப்பது மட்டுமே வீட்டு ஆட்களின் வேலையாக இருந்தது.
அனைத்தும் ஓய்ந்து அனைவரும் கூடத்தில் இளைப்பாற அமர்ந்தனர்.
“ஆத்தா கொஞ்சம் கருப்பட்டி வச்சி கொடுத்தா” என்று மீனாட்சி சொல்ல அபிராமி சமையலறை சென்று அனைவருக்கும் கருப்பட்டி பானம் தயார் செய்து கொண்டு வந்து கொடுத்தார்.
“சோலியெல்லாம் வெரசா ஆரம்பிக்கணும் பாண்டியா… நாளில்லையே” என்ற மருதன், “ஆளுக்கொரு சோலியா பிரிச்சிக்கிடலாம். நகை துணியெல்லாம் வீட்டம்மா பார்த்துகிடட்டும்” என்றார்.
“அதை அவள் சொல்லமாட்டாளாக்கும். அவளுக்கு வேணுமின்னா அவள் கேட்கட்டுமே!” வசந்தி சொல்ல,
‘எப்போ எப்போன்னு நிக்குறா(ள்). ஆரம்பிக்க நேரம் பார்த்துக்கிட்டே இருப்பாள் போல.’ என்று மனதில் வசந்தியை வருத்தெடுத்த மகா, “வூட்டுக்கு வர மருமவளுக்கு நாமதேன் பார்த்து பார்த்து செய்யணும் மதினி” என்றார்.
“அது அவுகளா செஞ்சாதானே மதிப்பு. நீங்களா சொல்லி செஞ்சாக்கா வரதட்சணை தானே அது” என்று இழுத்தார் வசந்தி.
“நாளைக்கு நீயி கேக்கமாட்டியாக்கும்?” ஒரே கேள்வியில் வசந்தியின் வாயை அடைத்திருந்தார் மீனாட்சி.
வீட்டின் மூத்த பெண்மணி மண்டையில் கொட்டியதுபோல் சொல்லியதும், அதற்கு மேல் அங்கிருக்க அவமானமாக இருந்திட, வசந்தி நல்லானிடம் கண்காட்டிட… அவரும் புரிந்தது என்பதுபோல்,
“கல்யாணத்துல பாப்போம். கெளம்புறோம்” என்று எழுந்தார்.
கௌதம் சுபாவுடன் வீட்டு பின்பக்கம் தோட்டத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த்தான்.
“அப்பா வீரா மாமாக்கு என்னைய கட்டிக் கொடுக்கணும் ஆசைப்பட்டு அம்மச்சிகிட்ட பேசியிருக்கிறார். அம்மச்சி ஏதும் சொல்லாம, வீரா மாமாவே பேசறன்னு சொல்லிட்டாருன்னு சொன்னாய்ங்களாம். அதுக்கு பொறவு அப்பாவே மாமாக்கு கால் பண்ணியிருக்கார். என்ன பேசிக்கிட்டாய்ங்க தெரியல” என்று சுபா கௌதமிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அண்ணேக்கு நம்ம விடயம் தெரியுமே! நமக்கு சாதகமாத்தேன் பேசியிருப்பார். உன்கிட்ட ஏதும் நேரடியா கேட்டாக்கா… உண்மையையே சொல்லு. பொறவு நான் பேசுறேன் உன் அப்பாகிட்ட” என்ற கௌதம், “நம்ம ஒன்னு சேருறது அம்புட்டு சுளுவனா காரியமா தெரியல” என்றதோடு, ‘எங்க வூட்டுலே என்னைய வச்சு என்னென்னமோ திட்டம் போடுறாவ’ என மனதோடு நினைத்தான்.
அன்று நல்லானும், வசந்தியும் அவர்கள் வீட்டில் தங்கள் திட்டம் பற்றி பேசியதை கௌதம் கேட்காவிட்டாலும், கௌசிக் கேட்டிருந்தான். உடனடியாக தன்னுடைய அண்ணனிடம் சொல்லியும் இருந்தான்.
இருவருக்குமே தங்களின் பெற்றோரா இப்படியென இருந்தது. அதனை தன்னுடைய காதலியாகவே இருந்தாலும் இப்போது சொல்வது சரியாக இருக்காதென சொல்லாதுவிட்டான்.
“நெக்ஸ்ட் இயர் இங்கனவே வந்திடுவோம் சுபா. நான் வேலைக்காக அங்கட்டு தனியா இருப்பேன் நினைக்குறேன். எப்படியும் நம்ம கல்யாணம் இப்போ இல்லை. அப்படியொரு பேச்சு வந்தாக்கா சமாளிப்போம்” என்றான்.
“உன்னை லவ் பண்ண வைக்கவே பெரும்பாடகிப்போச்சு. கல்யாணத்துல இருக்க சிக்கல பார்த்தாக்கா… ஊப்…” என்று இடைவெளி விட்டு நிறுத்திய சுபா “விட்டுடமாட்டியே?” எனக் கேட்டிருந்தாள்.
அவளை அடிபட்ட பார்வை பார்த்த கௌதம்…
“முடிவு எடுக்கத்தான் அத்தனை ரோசிச்சேன். எடுத்த முடிவை மாத்திக்கணும் ரோசிக்கமாட்டேன். மனசார விரும்புற பொண்ணை கைவிடணும் என்னைக்கும் நினைக்கமாட்டேன். வாழ்க்கை முச்சூடும் உன்னோடத்தேன்” என்று அழுத்தமாகக் கூறிய கௌதம், “எம்மேல எம்புட்டு நம்பிக்கை உனக்கு” என்று திரும்பி நடக்க…
“சாரி கௌதம்… நான் மீன் பண்ணல” என்று அவன் கையினை சுபா பிடிக்க,
“லவ் யூ டி” என்றிருந்தான் முதன் முறையாக.
சுபாவின் காதலை ஏற்றுக்கொண்ட அன்று கூட, அவன் அவ்வார்த்தைகளை சொல்லவில்லை. இன்று ஒருவித வலியோடு சொல்லியிருக்க, சுபாவின் கன்னங்களில் கண்ணீர் இறங்கியது.
அவன் சொல்லிக் கேட்க வேண்டுமென ஏக்கம் கொண்ட வார்த்தைகளாயிற்றே. முதல்முறை கேட்கும்போது, மனதின் ஏக்கம் தீர்ந்த மகிழ்வு கண்ணீராய் வெளியேறியது.
“அண்ணே அப்பா கூப்பிடுறாங்க.”
கௌசிக்கின் குரல் கேட்க,
சுபாவின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்து உள் சென்றான் கௌதம்.
அவனின் பின்னோடு… கண்கள் கலங்கியிருக்க, முகத்தில் பொலிவோடு வந்த மகளைத்தான் அவதானித்தபடி பார்த்திருந்தார் சுந்தரேசன்.
அடுத்த சில நிமிடங்களில் நல்லான் தன் குடும்பத்தோடு புறப்பட்டிருக்க, சுந்தரேசன் வீரனிடம் தனியாக பேசிக்கொண்டிருந்தார்.
அதனை பார்க்கையில் சுபாவிடம் கலக்கம். அவர்களையே அவளது பார்வை சுற்றி வந்தது.
சுபாவும் நாளை மறுநாள் வேலைக்கு செல்ல வேண்டுமென்று சுந்தரேசனுடன் அப்போதே கிளம்பிவிட்டாள்.
பிரேமும் அன்று இரவே கிளம்பிட, நாச்சி அவனின் முகம் கூட காணாது உம்மென்று அவளது அறையிலே முடங்கி இருந்தாள்.
ஆட்கள் அனைவரும் இருக்க, அறைக்குள் சென்று அவளை சமாதானம் செய்ய முடியாது முதுகில் மாட்டிய பையுடன் வெளிநோக்கி அடி வைத்திட முடியாது அவன் தவிக்க…
“நாச்சியா” என்று அழைத்திருந்தான் வீரன்.
அண்ணனின் குரலுக்கு வெளி வந்தவள், பிரேமின் தவிப்பான பார்வையை கண்டு முறைத்தாள்.
‘என்னத்துக்கு முறைக்குறா?’ பிரேம் மனதிற்குள் மட்டுமே கேட்டுக்கொண்டான்.
“போத்தா போயி வழியனுப்பி வச்சிட்டு வா” என்று மீனாட்சி சொல்ல, வீரன் வீட்டை விட்டு வெளியேறிட அவன் பின்னுக்கு பிரேமை முறைத்துக்கொண்டே அவனுடன் சென்றாள் நாச்சி.
“நாச்சியா… அவனே ஏதோ மருகுறான். நீயும் சலம்பிக்கிட்டு…” என்று தங்கையை அதட்டிய வீரன், “வண்டியை எடுக்குறேன். வெரசா வாடே” என்று சொல்லி வாகனங்கள் நிறுத்தியிருக்குமிடம் நோக்கிச் சென்றான்.
“அழகு…”
“போயிட்டு வா” என்றவள் வேகமாக உள்ளே சென்றுவிட்டாள்.
முன்பு எப்படியோ… இப்போது அவன் உடனில்லாத பொழுதுகள் யாவும் அவனின் நினைவாலே கடந்திட, அவனருகில்லாது முடியாது என்றே தோன்றியது. பிரிவேயில்லாத சிறு பிரிவாகினும் உடைந்து விடுவோமென்று அஞ்சியே சென்றிருந்தாள்.
விக்கித்து நின்ற பிரேமை வண்டியை கொண்டு வந்த வீரன் தான் சமாதானம் செய்து மதுரை அழைத்துச்சென்று பேருந்து ஏற்றிவிட்டு வந்தான்.
அதுமுதல் நாச்சிக்கும், பிரேமுக்கும் காதல் கண்ணாமூச்சி தான்.
*************
அன்று வார இறுதி நாள்.
லிங்கம் தென்னந்தோப்பில் இளநீர் அறுக்க வேண்டிய மரங்களைக் குறித்துக் கொண்டிருந்தான்.
“மாமா உன் போன் குடு.” லிங்கத்தின் முன் கை நீட்டி நின்றாள் அங்கை.
“மாமான்னா மாமாதேன்” என்று அவன் உணரும் முன்பு அவனின் கன்னத்தை பிடித்து கிள்ளி ஓடிவிட்டாள்.
‘இவ(ள்) மொகம் வாடுனா புதுசா உள்ள என்னமோ பண்ணுதே!’ அதற்கு மேல் அவன் சிந்திக்கவில்லை. அங்கை தீண்டிச்சென்ற கன்னம் குறுகுறுக்க அழுந்த தேய்த்துக்கொண்டான்.
“என்ன மாமா… இன்னும் கொஞ்ச நா செண்டா, கன்னத்தில் என்னடி காயமின்னு பாட்டு பாட வேண்டியிருக்கும் போல” என்றவாறு அவனின் அருகில் அமர்ந்தாள் மீனாள்.
“பார்த்துட்டியாக்கும்?”
“ம்ம்ம்.”
“என்ன சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல மீனாகுட்டி. எம் மனசும் எனக்கு எதிராவே நடக்குறாப்புல இருக்கு. சரிவருமின்னு தோணுமாட்டேங்குது. குடையுதே தவிர தெளிவான முடிவெடுக்க முடியல” என்று தன்னுடைய உள்ளத்து உணர்வை மறைக்காது தெரிவித்தான்.
“ஆனால் அங்கை ரொம்ப தெளிவாயிட்டு இருக்கா மாமா” என்ற மீனாள், நாச்சிக்கு அலங்காரம் செய்து முடித்ததும், தனக்கும் தங்கைக்கும் நடந்த சம்பாஷனையைக் கூறினாள்.
“அவ ரொம்ப தீவிரமாயிட்டு இருக்கா மாமா. உங்க ரெண்டு பேருக்குமே வயசு ஒன்னைத் தவிர வேண்டான்னு சொல்ல காரணமில்லையே… பெரியவங்களுக்கும் அது அம்புட்டு பெரிய விடயமா தெரியாது. நீயி ஒத்து வரலன்னாக்கா, அவ மொத்த குடும்பத்தையும் சரிகட்டி உனக்கு எதிரா திருப்பிடுவா” என்ற மீனாள், “உனக்கும் அவளை பிடிக்குந்தேனே மாமா… பொறவு என்னத்துக்கு உள்ளுக்க உருட்டிக்கிட்டு இருக்க?” எனக் கேட்டாள்.
“உன் தங்கச்சியை சரிகட்டி வழிக்கு கொண்டுவர முடியலன்னு… அவ பக்கம் என்னைய திருப்புரியாக்கும்?” என்ற லிங்கத்தின் கேள்வியில் தடுமாறிய மீனாள், “அவ யாரையோ விரும்பலையே மாமா. உரிமையுள்ள ஆளத்தானே விரும்புரா… உனக்காக என்னவும் செய்வான்னு தோணுது” என்றாள்.
கிட்டத்தட்ட இருவருமே ஒரே நிலையில் தானே இருக்கின்றனர். பிறருக்கு சரியென எடுத்துக்கூறும் இருவரும், தங்கள் மனதை குழப்பிக்கொண்டு தானே இருக்கின்றனர்.
“மனசு மாறும் தோணல மாமா. சொன்ன மாமாவுக்கோ, கேட்ட உங்களுக்கோ அந்த வார்த்தை அம்புட்டு வீரியமானதா இல்லாம இருக்கலாம். ஆனா, எனக்கு… என்னை குறிச்சு சொன்ன வார்த்தை… அதுநா வரை நான் சாதாரணமா தொட்ட தொடுகையெல்லாம் வேற அர்த்தமாகிப்போச்சே. கல்யாணத்துக்கு பொறவு நான் தொட்டாக்கா…” என்று கண்களை மூடியபடி சொல்லிக் கொண்டிருந்தவள் வார்த்தையை முடிக்காது கேவிட…