“அன்னைக்கு நான் தெரிஞ்சுதேன் பேசினேன். உன்னைய காயப்படுத்துமின்னு தெரிஞ்சிதேன் பேசினேன்” என்ற வீரன் தன் அணைப்பை இறுக்கியவனாக,
“என்னடி பண்ண சொல்லுற என்னைய… அன்னைக்கு பிரேம் பண்ணதை உங்க ஐயா நியாயப்படுத்தவும், ரோசிக்காமல் சொல்லிப்புட்டேன். நெருஞ்சிமுள்ளா உன் மனசில் குத்திட்டிருக்க அந்த நெனப்பை போக்க… என்ன உன் காலுல விழுகணுமா? விழறேன்டி. உன்னைய என்னில் பாதியாத்தேன் பார்க்கிறேன். உன்கிட்ட எந்தவொரு ஈகோவும் எனக்கில்லையாட்டுக்கு” என்ற வீரனின் பேச்சில் அக்கணம் மீனாள் உணர்ந்ததெல்லாம் அப்பட்டமான காதல் மட்டுமே!
தான் கண் மூடி தன்னுடைய உள்ளத்து உணர்வை சொல்லிக்கொண்டிருக்க, வீரன் எப்போது வந்தான்? லிங்கம் எப்படி சென்றான்? என்பதெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை.
வீரன் இழுத்ததுமே… தன்னவனை கண்டு கொண்டவளுக்கு அந்நேரம் அவனின் அணைப்பு தேவையாக இருக்க, திமிராது அவனுள் பாந்தமாக அடங்கிப்போனாள். கண்ணீர் விழிகளோடு.
நெஞ்சம் முட்டும் ஆர்பரிப்பு அவனிடத்தில் மெல்ல அடங்குவதை அவளால் உணர முடிந்தது.
அதிலும் தன்னை முழுவதுமாக அவளின் காலடியில் சேர்பித்தவனாக அவன் பேசிய வார்த்தைகளில் அவனின் காதலை உணர்ந்தவளுக்கு மனதால் தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை.
மெல்ல வீரனிடமிருந்து பிரிந்தவள்,
“உன்னை ரொம்ப புடிக்கும் மாமா. நான் இதை உனக்கு சொல்லனுமில்லை. உனக்கு என்னைய புரியும். அதுமாறி என் மனசு வெசனத்தையும் புரிஞ்சிக்கோயேன் மாமா” என்றவள், “சரின்னு உன்னைய கட்டிக்கிறேன்னு வைய்யீ… நாம ஒன்னுமண்ணா இருக்குற நேரம் நீயி சொன்ன வார்த்தை நெஞ்சுக்குள்ள வந்துப்போச்சுன்னா?” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், வீரன் நிறுத்து நின்பதைப்போல் காட்டிய கையின் சைகையில்… தலையசைத்து மறுத்தவள்,
“உனக்கு வலியாகிப்போவும். ரெண்டேருக்கும் வாழ்க்கை நரகமாகிப்போவும். மறந்துட்டு வாழலாம். முடியமாட்டிக்கு” என்றவள், தரையில் மடக்கி அமர்ந்து முகம் மூடி, உடல் குலுங்க அழுதிட…
அவளை தனக்குள் பொதிந்து வைத்து ஆறுதல் அளித்திட துடித்த கரத்தினை அடக்கி, நகர்த்த முடியாது கால்களை நகர்த்தி அழுத்தமான நடையுடன் அங்கிருந்து சென்றிருந்தான்.
அன்று தான் பேசிய வார்த்தையை மறக்க முடியாது தவிக்கிறாள், தன்னுடன் வாழும் காலங்களில் சரிசெய்திடலாமென்றே வீரன் எண்ணியிருந்தான். ஆனால் காலங்கள் கடந்தாலும் அவளது ரணத்தின் வடு மாறாது என்று இப்போது தெரிந்துகொண்டான்.
என்ன தான் இருவருள்ளும் நேசம் வானளவு உயர்ந்து பரந்து இருப்பினும், இந்த நேசத்தால் இருவருக்கும் வலி மட்டுமே மிச்சமென்று புரிந்துகொண்ட வீரனுக்கு விலகலே சரியெனத் தோன்றியது.
பக்கமிருந்து வலி சுமப்பதற்கு, தள்ளி நின்று நேசித்துவிடலாம் என்பதே தற்போதைய அவனின் எண்ணம் மற்றும் முடிவு.
எடுத்த முடிவின் வலி கடந்த கால நிகழ்வை கண் முன் நிறுத்தியது.
அப்போது பிரேம் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்துக் கொண்டிருந்தான். நாச்சியும் மீனாளும் இளங்கலை முதல் வருடம்.
பிரேமுக்கு மீசை முளைத்த நாள் முதல் நாச்சியின் மீது ஈர்ப்பு. வளர வளர அவனுள் அந்த ஈர்ப்பு காதலாக மாற்றம் பெற்றது. மறைத்து வைத்திருந்த காதலை மெல்ல பார்வையாலும், சிறு சிறு சீண்டல் பேச்சினாலும் காட்டிடத் தொடங்கியிருந்தான்.
அவனது பேச்சு செய்கைகள் யாவும் நாச்சியினுள் காதலின் விதையை ஊன்றியது. அவளுக்கும் பிரேமின் மீது பிடித்தம் வேர் பிடிக்கத் துவங்கியது.
இளமை வயதுக்கே உரிய துள்ளலும் வேகமும் பிரேமிடம் அதிகம் இருந்தது.
பிரேமின் பார்வைக்கெல்லாம் நாச்சியிடம் ஒருவித நாணமும் நடுக்கமும் தென்பட அவை யாவும் பிரேமுக்கு அவளை சீண்டிடும் வேகத்தை உண்டாக்கியது.
கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நினைத்தவன், தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லிட முடிவெடுத்து நாச்சியை காண வீட்டிற்கு வந்தான்.
அவன் வந்த நேரம் அவனுக்கு சாதகமாக இருந்தது. நாச்சியை தவிர்த்து வீட்டில் யாருமில்லை.
நாச்சியிடம் பிரேம் காதலை சொல்லிட, அவளின் முகத்தில் இதுவரை அவன் பார்த்திடாத செம்மை. இளமையின் உணர்வினை கட்டுப்படுத்த தெரியாத பக்குவமற்ற அவனின் மனம் அவளின் கரம் பற்றத் தூண்டியது.
அவளின் வெம்மை ஒருவித மின்சார சிலிர்ப்பை அவனுள் பரப்பிட, பட்டென்று அவள் உணரும் முன்பு இதழோடு இதழ் பொருத்தியிருந்தான்.
என்னதான் மனதிற்கு விருப்பமுள்ளவனாக இருந்தாலும், திடீரென தன்னுடைய அனுமதியின்றி நடந்த பிரேமின் செயலை நாச்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அத்தோடு முதல்முறை ஆணின் ஸ்பரிசம் அச்சத்தை தோற்றுவிக்க, அவனை தன்னிலிருந்து பிரிக்க திமிறியவள், அவனின் இரு பக்க தோளிலும் தன் பலம் கொண்டு அடித்தாள்.
சரியாக அச்சமயம் வீரன் வீட்டிற்குள் வந்திருக்க… கண்ட காட்சி அவனை கொதித்தெழ செய்திருந்தது.
“பிரேம்” என்று வீடே அதிர கத்தியவன், அவனை பிடித்து இழுத்து கன்னத்தில் தன் பலம் கொண்டு அறைந்திருந்தான்.
ஒரே அடி… பிரேம் சுருண்டு விழுந்திருந்தான்.
நாச்சி பிரேமின் கட்டுப்பாட்டில் அழகாய் பொருந்தி நின்றிருந்தாள், அவளுக்கும் விருப்பமென்று அறிந்து வீரன் வந்த தடம் தெரியாது வெளியேறியிருப்பானோ? பின்னர் இருவருக்கும் தனித்தனியாக அறிவுரை வழங்கியிருப்பானோ? இல்லை பிரேமுக்கு கொடுத்த அடியை இணையாக நாச்சிக்கும் கொடுத்திருப்பானோ?
ஆனால் அவனது பார்வையில் தங்கையின் விருப்பமின்றி, அவளை பிரேம் பலவந்தப்படுத்தும் தோற்றமே வீரனக்கு காட்சியாக அமைந்தது.
என்னயிருந்தாலும் இவ்வயதில் இது சரியானதில்லையே!
நாச்சியின் கண்ணீர் முகம் வீரனின் கோபத்தை அதிகரிக்க, பிரேமின் சட்டையை கொத்தாக பிடித்து அவனை தூக்கி நிறுத்தியவன், சரமாரியாக இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான்.
அந்நேரம் மொத்த குடும்பமும் வர,
மருதனும், பாண்டியனும் பதறி வீரனை இருபக்கமும் பிடித்து தடுத்து நிறுத்திட பிரேம் தப்பித்திருந்தான்.
அனைவரும் என்னவென்று பார்க்க பிரேம் தலை கவிழ்ந்திருக்க… நாச்சி அழுது கொண்டிருந்தாள்.
அதுவே அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவிற்கு யூகிக்க வைத்திருந்தது.
“பிரேம் என்னடே இது?”
“அது வந்து ஐயா… தப்பா எதுவுமில்லை” என்று பிரேம் முடிக்கும் முன் அவனின் வாயிலேயே குத்தியிருந்தான் வீரன்.
“அப்போ நீயி பண்ணதுக்கு என்னடே பேரு… தப்பில்லையாமே!” என்ற வீரனை,
உதட்டில் ரத்தத்தோடு மகனை கண்டதும், மருதனுக்கு பெத்த பாசம் முன் வந்துவிட்டது.
“மவன் பாசமோ?” என்ற வீரன், “அழுதுட்டு நிக்கிறவளுக்கு என்ன பதிலு சொல்லுவீயிங்க?” என்றான்.
“மொறப்பொண்ணுன்னு கையை பிடிச்சிருப்பியான். அதுக்கு ரத்தம் வர அளவுக்கு அடிப்பாங்களா?” எனக் கேட்டார் மருதன்.
மற்றவர்களும் கையை பிடித்திருப்பான் எனும் அளவுக்குத்தேன் நினைத்திருந்தனர். அவர்களால் அதை தாண்டி பிரேம் வேறு விதமாக நடந்திருப்பான் என்று நினைக்க முடியவில்லை.
“மொறப்பொண்ணுன்னா என்ன வேணாலும் பண்ணிலாமின்னு அர்த்தமா?” என்ற வீரனிடம்,
“உரிமை உள்ள இடத்துல கை வைக்கத்தேன் தோணும்” என்றார் மருதன். அவருக்கு பிரேமின் கசங்கியத் தோற்றம், சிந்தையை மழுங்க வைத்திருந்தது. என்ன பேசுகிறோம் என்பதை உணராது பேசிக்கொண்டிருந்தார்.
“மாமா…” அவர் சொல்லியதன் பொருளில் பாண்டியனே கத்திவிட்டார்.
“உரிமை உள்ள அத்தை மவ(ள்)… தொட்டு தொட்டு பேசி விளையாட இருக்க, ஆம்பள பய மனசுல ஆசை உண்டாகியிருக்கும். அதுல கையை பிடிச்சிருப்பியான்” என்று மருதன் பேசிட அனைவரும், மகாவே அவரது பேச்சில் அதிருப்தியைக் காட்டிட,
“அப்போ என்ன மயக்கத்தேன் உன் மவ மீனாளை என்னோடு தொட்டு பேச பழகவிட்டியோ?” என்று கேட்டுவிட்டான்.
லிங்கத்தின் அருகில் நின்றிருந்தவளின் மீது பார்வையை அழுத்தமாக படிய வைத்து… அவனது பார்வையில் மன்னிப்பும், கெஞ்சலும் சரிவிகிதமாக இருந்தது. உன் தந்தைக்கு உணர்த்தவே இப்பெச்சென்று.
வீரனின் சொல் இதயத்தில் ஈட்டியை இறக்கியது போலிருக்கு… மீனாளின் கண்ணில் நீர் இறங்கியது.
“அமிழ்தா!” அதட்டிய மீனாட்சி,
“அவென்தேன் கூறுக்கெட்டு பேசுறான்னா… நீயி ஏம்டே மதி இழந்து பேசுற” எனக் கேட்டார்.
“இவர் சொன்ன பதிலையே நானும் சொல்லி, அவரு மவளை என்னவும் பண்ணாக்கா… அப்பவும் உரிமை, ஆசை செஞ்சுபுட்டான்னு அமைதியா இருப்பாரா?” என்று எதிர் கேள்வி கேட்ட வீரனுக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
நீண்ட நேரம் நீடித்த மௌனத்தை உடைத்து, வீரன் தான் அங்கிருந்து முதலில் அகன்றான்.
“என்னயிருந்தாலும் நானு அப்படி பேசியிருக்கக்கூடாது. சரியெதுன்னு ரோசிக்கமா, பிரேம் மொவத்துல ரத்தத்தை கண்டதும் கண்டதை பேசிபுட்டேன். என்னை மன்னிச்சிக்கிடுங்க” என்ற மருதன், “மன்னிச்சிடுத்தா” என்று நாச்சியிடம் சொல்ல அவள் பாய்ந்து வந்து அவரை கட்டிக்கொண்டாள்.
“உன்னைய எண்ணாம பேசிபுட்டேன்த்தா” என்று நாச்சியின் உச்சியில் அழுத்தம் கொடுத்தவர், “பாண்டியா என்னைய அவென் வெறுத்திட மாட்டானே” என்று உடைந்து அழ, அனைவரின் கவனமும் மருதன் பக்கம் சென்றது. மீனாளை கவனிப்போர் யாருமில்லை.
வீரனின் வார்த்தைகள், மீனாளின் உரிமையான பாசம், செயல் எல்லாவற்றையும் வேறுவிதமாக உருவகிப்படுத்தியிருக்க… மனதால் அருவருப்பை உணர்ந்தாள் மீனாள்.
“அப்போ நான் அவரை தொட்டாக்கா அதுக்கு வேற அர்த்தமா? இம்புட்டு நாளும் அவரை நான் தொட்டு பேசி, விளையாடிய எல்லாத்துக்கும் அவர் மனசுல இப்படியொரு எண்ணம் இருந்திருக்குமா? இல்லாம வாய் வார்த்தையாக எப்படி வரும்?” இரண்டும் கெட்ட வயதில் வீரனின் மருதனுக்கான பதிலாக மட்டுமே அதனை எடுத்துக்கொள்ள முடியாது துவண்டாள்.
முதல் நாள் தான் அத்தனை கனவோடு, ஆசையோடு வீரனை தான் காதலிப்பதாக லிங்கத்திடம் சொல்லியிருந்தாள்… “இப்போது என் நேசத்தைக் கூறினால், அதுவும் தவறாக பார்க்கப்படுமோ?” என்று இன்று மருகி நிற்பவளால், அதன் பின்னர் வீரனை இயல்பாகத் தீண்டிடக் கூட முடியாது தவிக்கிறாள்.
சிறு வார்த்தை என்றாலும் அதன் பொருளின் அடர்த்தி காலத்துக்கும் வதை கொடுத்திடும். அதுவே மீனாளின் நிலை.
மொட்டை மாடி தரையில் தலைக்கு கைகளை கார்த்து வைத்து படுத்தவனாக, வானில் மின்னும் நட்சத்திரங்களில் தன்னை தன்னுடைய அன்றைய பேச்சினை இன்றும் ஏற்க முடியாது மூழ்கடித்து படுத்திருந்தான்.
இங்கு சன்னல் வழி இருளை வெறித்து நின்றிருந்த மீனாளுக்கு முதல் முறையாக மனம் சரியான பாதையில் சிந்திப்பதாகத் தோன்றியது.
வீரனிடம் இன்று முடியாதென்று நிர்தாட்சண்யமாக சொல்லியிருந்தாலும், இன்று தான் ஒன்றை கண்டு கொண்டிருந்தாள். அது அவளுக்கு மகிழ்வையே கொடுத்தது.
“மாமா!” வெகு நாட்களுக்குப் பின்னர் காதலாக இதழ் பிரித்து முணுமுணுத்தாள்.
காற்றில் மிதந்து வந்த ஒலி வீரனின் செவி நுழைந்ததோ…
“தங்கப்பொண்ணு.” தன்னைப்போல் சொல்லியிருந்தான்.
“நான் உனக்கு வேணாமின்னு அம்புட்டு அழுத்தமா உன்னால சொல்ல முடியுதுன்னாக்கா… உன்னைய என் வார்த்தை எம்புட்டு காயப்படுத்தியிருக்கணும்? மன்னிச்சிடுடி தங்கம். காலம் முச்சூடும் உனக்குள்ள அடங்கியிருக்க தவிக்கிற தவிப்பு உனக்கு வெளங்கலையா? அன்னைக்கு கரும்பு காட்டுக்குள்ள எம்மேல விழுந்து கெடந்தப்பவும், இன்னைக்கு என்னை கட்டிக்கிட்டு நின்னப்பவும் நான் சொன்ன வார்த்தைங்க மண்டையில உதிச்சுதோ? அதேன் அம்புட்டு வீம்பா நான் வேணாமின்னு சொன்னியோ?” ஏதேதோ அரற்றி புலம்பியபடி இருந்தவன், அப்படியே உறங்கி போயிருந்தான்.