வேண்டுமென்றால் போராடி கை சேர்ந்திடலாம். காதல் இருப்பினும் வேண்டாமெனும் நிலையில் என்ன செய்திட முடியும். தன் நெஞ்சம் விரும்புபவர்கள் உன்னால் என் வாழ்வு அமைதி இழந்திடும் என்று சொல்லும் நிலையில், நேசம் கொண்ட இதயம் எட்ட நின்றிடத்தானே முடிவு செய்யும்.
இங்கு வீரனின் முடிவும் அதே!
மீனாளின் மீது எந்த புள்ளியில் காதல் வந்ததென்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. உயிரில் கலந்த உணர்வாய் கலந்துவிட்டவளிடமிருந்து விலகி இருக்க பலமுறை முயன்றும் முடியாது தவித்தவன், லிங்கத்திடம் அவள் பேசிய வார்த்தைகளைக் கேட்டு உயிர் உடைந்தான்.
அவளின் வார்த்தைகளில் தான் தன்னுடைய வார்த்தைகளின் வீரியத்தின் ஆழம் உணர்ந்தவனுக்கு, என்ன செய்வதென்று தெரியாது, அவளின் வேதனையிலிருந்து தப்பிடவே இழுத்து அணைத்திருந்தான். அக்கணம் அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் வேண்டியதாக இருந்தது அவ்வணைப்பு. காதலுக்கு நிகராக மறுப்பு இருந்தாலும், இருவரும் தன்னுடைய இணையிடம் மட்டுமே ஆறுதல் வேண்டி நின்றனர்.
பல பேர் தோள் கொடுத்திட்டாலும் தன்னவனி(ளி)ன் ஒற்றை அணைப்பிற்கு ஈடாகாது என்பதை வீரன் உணர்ந்துகொண்டான். உணர வேண்டியவள் அறிந்து கொண்டிருப்பாளா?
மறுநாள் முதல் எவ்வித நிகழ்வும் தன்னை பாதிக்கவில்லை என்பதாக வலம் வந்தான்.
தங்கையின் திருமண வேலைகள் அனைத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு தன்னை எப்போதும் பிஸியாகவே வைத்துக்கொண்டான்.
லிங்கம் கூட தனக்கு ஏதும் வேலையில்லையா எனக் கேட்டும், வீரனே அனைத்தும் பார்த்தான்.
வீரன் வீட்டிலிருப்பதே அறிதென்றானது.
இதற்கிடையில் அங்கையின் தேர்வுகள் முடிந்திருந்தது.
தேர்வு முடிந்த அன்று அவள் கொண்ட உவகைக்கு அளவே கிடையாது. இனி மற்றவர்கள் பார்வையில் அவள் சிறு பெண் இல்லையே. அதுவே அவளின் மகிழ்விற்கு காரணம்.
இன்னும் ஒரு வாரத்தில் நாச்சி, பிரேம் திருமணம்.
மீனாளுக்கு அன்றைய தினம் அந்த வருடத்தின் இறுதி தேர்வு. முடித்துவிட்டு வெளியில் வந்தவள் தன்னுடைய ஸ்கூட்டியை எடுப்பதற்காக வாகனங்கள் தருப்பிக்குமிடம் செல்ல, அங்கு அவளது வண்டியின் மீது ஒரு மாணவன் அமர்ந்திருந்தான்.
மீனாளை பார்த்தும் ஹாய் என்று கையசைத்தவன், வண்டியை விட்டு இறங்காது அவளிடம் பேச்சுக்கொடுக்க முனைந்தான்.
“சரி சீக்கிரம் சொல்லு” என்ற மீனாளுக்கு உள்ளுக்குள் அவன் என்ன வம்பு செய்வானென்று அச்சமாக இருந்தது.
அவன் கோகுல். நகரத்தின் பெரும் புள்ளியின் மகன். அவனது அடையாளமே அவனின் பலம். அவனது தந்தையின் பெயரை வைத்து கல்லூரியில் அவன் செய்த அட்டாகசங்கள் பல.
“நீயி இங்கனத்தேன் படிக்கிறியா?” எனக் கேட்டவன், “உன்னைய ஒரு நா, மீனாட்சி ஹோட்டலில் பார்த்தேன். அது உன் குடும்பத்ததுதேன்ல? முந்தாநா பரீட்சை எழுதிபோட்டு வெளியில் வரேன், எதிர்க்க கிளாசில் நீயி பரீட்சை எழுதிக்கிட்டு இருக்க! உன்னைய எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?” என்றதோடு, “எனக்கு உன்னைய கட்டிக்கணும்” என்று மீனாளின் கையை பிடிக்க முயல, வேகமாக சுதாரித்து இரண்டடி பின் நகர்ந்திருந்தாள்.
“நான் போவனும்.” முட்டி நிற்கும் கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கினாள். அவன் வார்த்தைகளில் விரசமில்லையே தவிர பார்வையாலே அவளைக் கூசச் செய்தான்.
“போவலாம்… செத்த இரு” என்றவன்
“எனக்கு படிப்பு முடிஞ்சுது. சோலிக்கு போவனுமின்னு அவசியமில்லை. எங்க ஐயா நெறய சேர்த்து வச்சிருக்காரு. அம்புட்டையும் ஆயுசுக்கும் செலவு பண்ணாலும் தீராது. நாளைக்கு உம் வூட்டுக்கு வாறோம். ஐயாகிட்ட பேசிபுட்டேன். உனக்கு இன்னையோடு முடிஞ்சுதுல. நாளைக்கு வூட்டுலத்தேனே இருப்பீய்ங்க? அதேன் சொல்லிட்டு போலாமின்னு உனக்காண்டி காத்துக் கெடந்தேன்” என்றான்.
“இதெல்லாம் வேணாம். எனக்கு ஏற்கனவே வூட்டுல பேசி வச்சிட்டாய்ங்க” என்று சத்தமே இல்லா குரலில் அவள் சொல்லி முடிக்குமுன் கழுத்தை பிடித்து பின்னிருந்த மரத்தில் சாய்த்து ஒரு அடி உயர்த்தியிருந்தான்.
அவனது பிடியின் அழுத்தத்தில் கண்கள் மேல் சொருகியது. காற்றில் ஆடிய கால்கள் நிலையாக நின்றிட அலைப்பாய்ந்தன. மூச்சுக்குத் தினறியவளின் கண்ணீர் கன்னம் வழியவே பிடியை விட்டான்.
நிலைகொள்ளாது கீழே தடுமாறி குத்திட்டு அமர்ந்தவள் இருமிட…
“உனக்கு கல்யாணமே ஆயிருந்தாலும் எனக்கு அதைப்பத்தின கவலை கிடையாது. நாளைக்கு நாங்க வரும்போது எந்தவொரு மறுப்புமில்லாம உங்க ஐயாவை கல்யாணத்துக்கு நா பாக்க சொல்லு” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்க்காது கால்களை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தவள் தலையை உயர்த்தவே இல்லை.
“பொங்கல் அன்னைக்கு மீனாட்சி கோவிலிலும் உன்னைய பார்த்தேன். கூட ஒருத்தன் கையை புடிச்சிட்டு போயிட்டு இருந்த. யாரவன்?” என்றவன், “உடன் பொறந்தவனாவே இருந்தாலும் இனி நீயி என் கைய மட்டுந்தேன் புடிக்கனும்” என்றான்.
“எங்க புடி பாப்போம்” என்று மீனாளின் முன் கையை நீட்டினான்.
கோகுல் கையை நீட்டிக்கொண்டே இருக்க… மீனாள் அவன் சொல்வதை செய்வதாக இல்லை.
நிமிடங்கள் நீடித்தது.
“இப்போ நீயி புடிக்கலன்னாக்கா, புடிக்கிற வரைக்கும் இங்கன இருந்து யாரும் போவ முடியாது” என்றான்.
தேர்வு முடித்து வந்த மாணவர்கள் வாகனங்களை எடுக்க முடியாது, என்ன நடக்கிறதென்றும் தெரியாது கோகுலின் நண்பர்களால் கட்டுப்படுத்தப்பட்டு ஆங்காங்கே நின்றிருந்தனர். இதில் பேராசிரியர்களும் அடக்கம். யாரும் மீனாளை காப்பாற்ற முன் வரவில்லை. கோகுலின் உயரம் அவர்களை எட்ட நிற்க வைத்தது. மீனாள் அவனின் கையை பிடிக்கும் நிலைக்கு ஆட்பட்டாள்.
“ப்ளீஸ்… வழி விடு. வூட்டுக்கு போவனும்.” அழுகையோடு மன்றாடினாள்.
“என் கைய புடி. போவலாம்.” கோகுல் அசைந்து கொடுக்கவே இல்லை.
“அன்னைக்கு அவென் கைய மட்டும் அப்புடி இறுக்கி புடுச்சிருந்த?”
கோவிலின் உள்ளிருந்து வெளியே லிங்கத்துடன் கடை வீதிக்கு சென்றதை குறிப்பிடுகிறான் என்று மீனாளுக்கு புரிந்தது.
“இப்போ புடிக்கலன்னாக்கா… ரா பொழுது எல்லாருக்கும் இங்கனத்தேன்” என்றவன், “இருட்டுல நீயிம், நானும்” என்று இருபொருள்பட ஏதோ கூற முனைய, அவனின் பேச்சுக்கு கையை பிடிப்பது மேலென்று பட்டென்று பட்டும் படாது பிடித்திருந்தாள்.
கோகுல் கண்கள் சொக்கி அவளின் தொடுகையை ரசிக்கும் பாவனையை முகத்தில் காட்டிட, மீனாள் அருவருப்போடு முகம் சுளித்தாள்.
அக்கணம் அவளுக்கு வீரனின், “தொட்டு பேசி மயக்க பழகவிட்டுயோ?” என்ற வார்த்தை செவியில் எதிரொலிக்க, கோகுலின் முகம் வீரனின் வார்த்தைக்கேற்ப மயக்க நிலையில் இருந்திட வேகமாக தன் கையை உதறியிருந்தாள்.
என்னதான் வார்த்தைகள் வீரனுடையதாக இருந்தாலும், அவனது தொடுதலில் பாந்தமாக அடங்கிப்போனவளால் இவனிடம் அப்படியான இயல்பை உணர முடியவில்லையே. வேறு ஆடவன் தான், ஆனால் நண்பனை தொடும் உணர்வில் கூட அவளால் எண்ண முடியவில்லை.
இந்த முடியவில்லை எனும் உணர்வு வீரனின் அன்றைய வார்த்தையின் பலவற்றை அவளுக்கு புரிய வைத்தது.
அவனால் தன் மனம் சில்லு சில்லாக சிதறடிக்கப்பட்டாலும்… அதற்கு ஆறுதலும் அவனால் மட்டுமே அளித்திட முடியுமென்று.
அவளுள் போராடிய போராட்டங்கள் யாவும், கோகுல் என்பவனின் அவள்மீதான விருப்பத்தில் முற்று பெற்றதோ?
“தொட்டாக்கா கூசிப்போற… எல்லாம் இப்போதேன்…” என்றவனை முறைத்துக்கொண்டு இருந்தவளின் மனதில், ‘பிரேம் நாச்சியை சும்மா தொட மட்டுமில்லை. வேறென்னவோ பண்ணியிருக்கியான். அதை புரியாம ஐயா பேசவும், அவருக்கு புரிய வைக்க என்னைய இழுத்து பேசியிருக்கு இந்த மாமா’ என சரியான கோணத்தில் அவள் புரிந்துகொள்ள இத்தனை வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.
“என்ன மீனு ரோசனை. வூட்டுல எப்படி சொல்றதுன்னா. உனக்கு சங்கடமின்னா சொல்லு, நானே நாளைக்கு நேர்ல நாம விரும்புறோமின்னு சொல்லிடுறேன்” என்றவனின் வார்த்தை பொருளில் விழிகள் தெறித்துவிடும் அளவிற்கு உறைந்து நின்றவள்,
அவளின் அலைப்பேசி அழைப்பில் அதிர…
ஒருவித பதட்டத்திலே எடுத்தாள்.
“ம்மா…”
“என்னட்டி இன்னும் வரல. கா’மணி நேரத்துல வந்துடுவியே! பரீட்சை முடிஞ்சு எம்புட்டு நேரமாவுது?” எனக் கேட்ட மகா, “உடம்பு ஏதும் முடியலையா மீனாள்? குரல் சோர்வா இருந்தமாறி கேட்டுச்சு” எனக் கேட்டார்.
“இல்லைம்மா… இப்போ கிளம்பிடுவேன்” என்றவள் மகா வேறெதுவும் கேட்டிடுவாரோ என வேகமாக அலைப்பேசியை அணைத்து பைக்குள் போட்டவள்,
“அம்மா போன் போட்டுட்டாங்க. லேட்டானா அச்சப்படுவாங்க” என்று கோகுலின் முகம் பாராது கூற,
“ரொம்ப கட்டுப்பாடோ?” எனக் கேட்டவன், “நம்ம கல்யாணத்துக்கு பொறவு நீயி உன் இஷ்டம் போல இருக்கலாம்” என்க, அவளின் அதிர்ச்சி கூடிக்கொண்டே போனது.
“ரொம்ப பயப்படுற நீயி” என்றவன், “நாளைக்கு நம்ம கல்யாணத்தை முடிவு பண்ணதும், நிறைய பேசலாம். அயித்த பாவுமாட்டி, காத்திருப்பாய்ங்க. நீயி கெளம்பு” என்று அவளுக்கு வழிவிட்டு நின்றான்.
எங்கு மீண்டும் பிடித்து வைத்துக்கொள்வானோ என அஞ்சியவள், வேகமாக வண்டியில் அமர்ந்து இயக்கி அங்கு தன்னையே பார்த்திருக்கும் யாரையும் கருத்தில் கொள்ளாது சென்றிருந்தாள்.
அத்தனை வேகம். அவள் இப்படியொரு வேகத்தில் வண்டி ஓட்டியதே கிடையாது.
மதுரைக்கும், விளாங்குடிக்கும் செல்லும் மத்திய சாலையில் தான் வீரனின் ஆலை உள்ளது.
அப்போதுதான் லிங்கம் ஹோட்டலில் ஏதோ வேலையென்று அழைத்திருக்க, முடித்துவிட்டு திரும்பி வந்த வீரன் ஆலையின் கேட்டில் லோடு ஏற்றிய லாரி நிற்கவும், சாலைக்கும் ஆலைக்கும் நடுவிலிருக்கும் சிறு பரப்பில் வண்டியில் அமர்ந்தவாறே என்னவென்று கேட்டான்.
“ட்ரைவரு ரிஜிஸ்டரில் கையெழுத்துப்போட போயிருக்காரு அண்ணே” என்று ஒருவன் சொல்ல,
சரியென தலையாட்டிய வீரன், வண்டியை முடுக்கி உள்ளே செல்ல முனையை சாலையில் மீனாளை கண்டுவிட்டான்.
கையில் கட்டியிருந்த வாட்சில் நேரத்தை பார்த்தவன்,
“இம்புட்டு நேரஞ்செண்டு போறா(ள்). அதுவும் இம்புட்டு வேகம்” என வாய்விட்டே கூறிய வீரன் ஆலைக்குள் நுழையாது, அவள் பின்னால் சென்றான்.
வீரன் அத்தனை வேகம் வந்தும் மீனாளை பிடிக்க முடியவில்லை.
அவளது வீட்டின் முன்னிருக்கும் களத்தில் வண்டியை ஸ்டான்ட் இடாது கீழே விட்டவள், எதிரில் வந்த அங்கையை இடித்ததுக்கூட தெரியாது தன்னறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள். தாழிடாது படுக்கையில் கவிழ்ந்து படுத்தவளுக்கு அப்படியொரு அழுகை.
தூரத்தில் வரும்போதே அவள் வண்டியை அப்படியே போட்டுவிட்டு கல்லூரி பையை கூட எடுக்காது சென்றதை கவனித்த வீரன், நேராக மருதனின் வீட்டிற்குத்தான் வந்தான்.
தனது வண்டியை நிறுத்திவிட்டு, மீனாளின் வண்டியையும் தூக்கி நிறுத்தியவன், பையை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல…
“என்ன அமிழ்தா… ஏதும் பிரச்சினையா? அவ ஏதோ கோபமா போனமாறி இருந்துச்சுன்னு அங்கை சொன்னா. என்னன்னு பார்க்கலாமின்னு வந்தாக்கா, நீயி பொறத்தாலே வார?” என்று மகா பயந்து கேட்க…