வீரன், ‘மீனாள் எங்கே?’ என்று கேட்டிட… அங்கை அவளின் அறையை கை காண்பித்தாள்.
மேலே இருந்தது அவளது அறை. படிகளில் தாவி ஏறினான். வேட்டியை மடித்துக் கட்டியவனாக.
“ஏதும் பெரும் பிரச்சினையா அமிழ்தா? வசந்தி வூட்டுக்கு பத்திரிகை கொடுக்க போனவுக கெளம்பியிருப்பாய்ங்களே! அவீங்களுக்கு போன் போடட்டுமா?” என்று கைகளை பிசைந்தபடி கேட்டார் மகா.
மருதனும், பாண்டியனும் நல்லானுக்கு பத்திரிகை வைப்பதற்கு, முன் அதிகாலையில் தான் சென்னைக்கு புறப்பட்டு சென்றிருந்தனர்.
“போனு போட்டா… உடனே வந்திடுவாய்ங்களா? சாயங்காலம் நாலு மணிக்குத்தேன் புறப்படுறதா ட்ரைவரை கேட்கும்போது சொன்னாரு. கெளம்பி ஒன்றை மணி நேரந்தேன் ஆவும். நீங்க இப்போ ஏதும் சொன்னாக்கா, என்னவோ ஏதோன்னு தவிச்சிகிட்டே வருவாய்ங்க” என்று படியேறியபடி பதில் கொடுத்த வீரன் “நானு என்னேன்னு கேக்குறேன்” என மீனாளின் அறை கதவை தட்டிட, கையை வைத்ததும் கதவு திறந்து கொண்டது.
மகாவும், அங்கையும் அவன் பின்னோடு வந்து நின்றனர்.
மீனாள் படுக்கையில் சுருண்டு படுத்திருக்க… அவளின் உடல் குலுங்கியதில் அழுகிறாள் என்பது தெரிந்ததும், மகாவை திரும்பி பார்த்தவன், பட்டென்று உள்ளே நுழைந்திருந்தான்.
“தங்கம்…”
வீரனின் குரல் கேட்டது தான் தாமதம், பாய்ந்து அவனின் இடையோடு அழுத்தமாகக் கட்டிக்கொண்டு அவனது வயிற்றினிலே முகம் புதைத்து சத்தமிட்டு அழத் தொடங்கிவிட்டாள்.
மகா பதறிக்கொண்டே உள்ளே வந்தார்.
“ஆத்தா மீனாளு…” மகாவின் குரலுக்கும் அவள் அசையவில்லை.
“ஐயோ என் கொலை நடுங்குதே. இப்புடி என்னன்னு சொல்லாமா அழுதாக்கா, நானு என்னத்தன்னு நெனக்க… கண்டதும் தோணுதே” என்று அவரும் கண்ணீர் உகுக்க… மீனாளின் அழுகை அதிகமாகியது.
“அச்சோ… அத்தை!” என்ற வீரனின் அதட்டலில்,
“ம்மா… நீயி கொஞ்சம் கம்மின்னு இரு. அதேன் மாமா கேட்டுக்கிறேன் சொன்னுதுல. செத்த வாப்பெட்டியை சாத்து” என்று மகாவை அமைதியுற செய்தாள் அங்கை.
மீனாளின் முதுகை தட்டிக்கொடுத்த வீரன்,
“மீனாம்மா… இங்க பாரு” என்று அவளின் தலையை உயர்த்த முற்பட, அவளின் பிடி இறுகியது. மாட்டேனென்று தலையை அசைத்து, முகத்தை இன்னும் அழுந்த புதைத்தாள்.
“நானு ஆத்தாவை வர சொல்லுறேன். எனக்கு வெதுக்குன்னு வருது” என்று மகா அறையை விட்டு வெளியே வர, மீனாட்சியும், அபிராமியும் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தனர்.
“என்னட்டி மொவம் வாட்டமா தெரியுறாப்ல இருக்கு?”
“உடம்புக்கு சொவமில்லையா மதினி?”
மீனாட்சியும், அபிராமியும் மாற்றி மாற்றி நலன் விசாரித்தனர்.
“புள்ளைக்கு செய்ய சொல்லியிருந்த நகையை இப்போதேன் ஆசாரி கொண்டாந்து கொடுத்திட்டு போனியான். உன்கிட்ட காட்டலான்னு அபி வந்தா(ள்). நாச்சியா தச்சி வந்த துணி சரி வரலன்னு, அவ வேலை பாக்குற கடைக்கே மருதைக்கு கெளம்பிப்போனா இன்னுமாட்டி வரல. வூட்டுல நா என்னத்த தனியா உட்கார்ந்திருக்கிறதுன்னு கூடால வந்துப்புட்டேன்” என்ற மீனாட்சி அப்படியே கால் நீட்டி தரையில் அமர,
மகா மீனாளின் அறையை மேல்நோக்கி பார்த்து… “அங்கன இருக்கியான்?” என்றுகூறியதோடு கண்ணீர் சிந்த…
“ஏய் என்னாட்டி… என்னத்துக்கு சொணங்குற?” என்று பதறி எழுந்தார் மீனாட்சி. அதற்குள் அபி மீனாளின் அறை வாயிலுக்கு சென்றார்.
அங்கை நின்றிருக்க, வீரனை கட்டிக்கொண்டு மீனாள் இருந்த தோற்றம் அவருக்கு தவறாக தோன்றவில்லை… மீனாளுக்கு என்னவோயென்று பதைபதைக்க வைத்தது.
“என்னாச்சு அமிழ்தா?”
“கொஞ்சம் கம்மின்னு இருங்கம்மா” என்ற வீரன், முரண்டு பிடித்து அழுது கொண்டிருப்பவளிடம் என்னவென்று கெஞ்சிக்கொண்டிருந்தான்.
“தங்கம்… இங்க பாரேன். என்னைய பாருடா! எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுடே… நான் பார்த்துக்கிடுதேன்” என்று வீரன் பலவாறு கேட்டும் அவளிடம் பிரதிபலிப்பு இல்லை.
வீரன் கேட்டுக்கொண்டிருக்க, மகாவும், மீனாட்சியும் அமைதியாக வந்து நின்றனர்.
“பிரிச்சு விலக்கி நாலு கன்னத்துலே கொடுத்து என்னமாட்டின்னு கேளு அமிழ்தா. நம்ம பயம் எங்கட்டு அவளுக்கு வெளங்குது” என்ற மாகாவை, “செத்த சும்மா இருங்க. இல்லை வெளிய போயி நில்லுங்க அத்தை” என்றுவிட்டான் வீரன்.
“என்னாச்சோ எதாச்சோ அவளே வெம்பிக்கிட்டு இருக்கா… நீயும் பேசி வைக்குற” என்ற மீனாட்சி தன் மகளை அமைதியாக இருக்க வைத்தார்.
“தங்கப்பொண்ணு… நிமிர்ந்து பாரேன்” என்று அவளின் தாடையை பிடித்து முகம் உயர்த்தி தன் முகம் காண வைத்தவன்,
“என்னன்னு சொல்லுடே… நீ இப்படி உக்கி அழுவுறது உள்ளுக்க என்னவோமாட்டி இருக்குடி…” என்றவன் சுற்றி இருப்பவரை அக்கணம் தன் கருத்திலே கொள்ளவில்லை.
வீரனின் உரிமையான டி என்ற விளிப்பை மூத்த பெண்கள் மூவரும் அர்த்தமாக ஆராய்ந்தனர். ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டனர்.
வீரன் எப்போதும் அவளை தங்கம், தங்கப்பொண்ணு என்று தான் அழைத்து கேட்டிருக்கிறார்கள். இப்போது அவன் சொல்லி முதல்முறை கேட்ட டி விளிப்பில் அத்தனை உரிமை இருப்பதை அவனது வார்த்தையில் விளங்கிக்கொண்டனர்.
தன் இடையிலிருந்து மீனாளின் கையை பிரித்து விட்டவன், மெத்தைக்கு கீழே அவள் முன் குத்திட்டு அமர்ந்து… அவளின் கையை இறுகப்பற்றி,
“நம்மள பத்தி ஏதும் நெனச்சு வெசனப்படுறியா?” இருக்காதென்று தெரிந்தும் கேட்டிருந்தான்.
அவனது கேள்வி அவர்களுக்குள் என்னவோ இருக்கிறது என்பதை அங்கைக்கு புரிய வைத்திருந்த போது பெரியவர்களுக்கு புரிந்திருக்காதா என்ன?
“வேறென்ன?” என்றவன் தன் உள்ளங்கை கொண்டு அவளின் முகத்தை அழுந்த துடைத்து விட்டான். அழுததினால் முகம் முழுக்க முன்னுச்சி கேசம் கலைந்திருக்க, இரு பக்கமும் காதோரம் ஒதுக்கி விட்டவன், அங்கு மேசையிலிருந்த தண்ணீரை எடுத்து கொஞ்சமாக பருக வைத்தான்.
“காலேஜூல ஏதும் பிரச்சினையா?”
அவளின் அமைதியே அங்குதான் என்னவொயென்று எண்ண வைத்தது.
“பரீட்சை சரியா எழுதலயா?”
இல்லையென தலையசைத்தவள்,
“பிரண்ட்ஸ்க்குள்ள ஏதும் சலம்பலா?” என அடுத்து கேட்டிருந்தான்.
“இப்போ என்னன்னு சொல்லப்போறியா இல்லையா மீனாள்? மொக்கு பாப்பாவா நீயி. அவென் கேட்டுட்டே இருக்கியான். நீயி உம்முன்னே உட்கார்ந்திருக்க” என்று மகா சத்தம் போட,
“என்னன்னு சொல்லு கண்ணு, என்னேன்னவோ நெனைக்க தோணுதல?” எனக் கேட்டார் அபிராமி.
“நீயி நவுரு அமிழ்தா நானு கேக்குறேன்” என்று மகா முன்னே வர, வேகமாக வீரனின் தோளில் கை வைத்த மீனாள்,
“மாமா” என்று கேவிட…
“என்னன்னு சொல்லுடி… உள்ளுக்குள்ள ஒரே கொடைப்பா இருக்குது. மொத கண்ணுல வர தண்ணியை நிறுத்து. என்னவோ பண்ணுது என்னைய” என்று தன் நெஞ்சினை நீவியபடி சத்தமில்லாது அதட்டினான்.
வீரனின் முக வருத்தமும், அவனின் செய்கையும் அவனது மனதை பெண்களுக்கு படமாக்கிக் கொண்டிருக்க, அதனை உணரும் நிலையில் வீரன் இல்லை. மொத்தமாக மீனாளின் அழுகையில் தன் சுயம் தொலைத்திருந்தான்.
அத்தனை நேரம் அவனின் கெஞ்சலுக்கு இல்லாத பலன் அவனது அதட்டலுக்கு இருந்தது.
ஒரே மூச்சில் அனைத்தையும் வேகமாக அழுகையோடு சொல்லி முடித்தவள் வீரனின் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டாள்.
“அங்கன அவென் பேசும்போதே அமிழ்தனுக்கு போன போட்டிருக்க வேண்டியதுதானே மீனாள். அவென் ரெண்டு நிமிசத்துல அங்கன வந்து அந்தப்பயல பொளந்து கட்டியிருப்பியான்ல” என்று அபிராமி கோபப்பட…
“இது ஆத்திரப்பட வேண்டிய விசயமில்லட்டி” என்றார் மீனாட்சி.
“இம்புட்டுதானே… இதுக்கா இம்புட்டு அழுவ? ஒண்ணுமில்லை, நானு பாத்துகிடுதேன்” என்ற வீரன், அவளின் கையில் தட்டிக் கொடுத்தவனாக…
“இனி இதைக்கேட்டு அவளை தொந்தரவு பண்ணக்கூடாது” என்றான்.
“அந்தப்பய யாரு என்னான்னு விசாரிக்க வேண்டாமா? காலேஜுல எல்லாரும் பார்க்க பேசியிருக்கியான். கைய வேற புடிச்சிருக்கியான். அங்கிருந்த வாத்தியெல்லாம் என்ன பண்ணுச்சு. இதுங்களை நம்பி புள்ளைவளை எப்படி அனுப்புறது” என்று மகா தன்போக்கில் புலம்பிட, வீரன் அபிக்கு கண் காட்டினான்.
“அதேன் அமிழ்தன் பார்த்துகிடுதேன் சொல்லிப்புட்டானே. பொறவு என்னத்துக்கு பொலம்பிட்டு இருக்க. அவென் பார்த்துப்பியான் மதினி” என்று அபி மகாவை வெளியே கூட்டிச்செல்ல…
‘புள்ளைங்க விருப்பம் தெரியாம தப்பா முடிவெடுத்துபுட்டோமோ?’ என்று தீவிர சிந்தனையில் இருந்தார்.
“சின்னக்குட்டி டீ வாங்கியா?” என்றவன், “என்னாச்சு அப்பத்தா?” எனக் கேட்டான்.
“ஒன்னுமில்லைப்பு… நீயி புள்ளைய பாரு” என்றவர் அங்கையுடன் வெளியில் செல்ல… செல்லும் அவரின் முகத்தில் விழுந்திருந்த சிந்தனையை கவனித்த வீரன் அதனை ஒதுக்கி வைத்தான்.
“அச்சமா இருக்கு மாமா!” என்று மீனாள் மீண்டும் அழுதிட தயாராக…
“இன்னொருவாட்டி கண்ணுல தண்ணீ தேங்குச்சு… சப்புன்னு ஒன்னு வச்சிப்புடுவேன்” என்று வீரன் அவளின் அருகில் அமர்ந்தான்.
அவனது மடியில் தலை வைத்து உடலை குறுக்கிப் படுத்தவள்,
“அழுதது மொவமெல்லாம் செவந்துப்போச்சு. தலை வலிக்கும், எந்திரிடாம்மா. இதை குடி” என்று மெல்ல அவளை எழுப்பி குடிக்க வைத்தான். மீண்டும் அவன் மடியிலே தஞ்சம் புகுந்தாள்.
மீனாளின் உடல் வெளிப்படையாகவே நடுங்கிக் கொண்டிருந்தது.
“அவென் பொண்டாட்டினு சொன்னியான் மாமா. அவன்பாட்டுக்கு என்னென்னவோ பேசுறியான். கழுத்தை புடிச்சு தூக்குறான்” என்று நடந்ததையே அரற்றியபடி இருந்தவளின் சத்தம் மெல்ல குறைந்தது.
வீரனின் அருகாமையில் பாதுகாப்பை உணர்ந்தவள் தன்னையறியாது உறங்கியிருந்தாள்.
மீனாளின் ஆழ்ந்த உறக்கத்தை உறுதி செய்தவன், அவளின் தலையை தலையணைக்கு மாற்றிவிட்டு படுக்கையிலிருந்து இறங்க…
அவனின் கையை பட்டென்று பிடித்திருந்தாள்.
வீரன் அவளின் முகத்தை பார்க்க, நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
“என்னையவுட்டு போவாத மாமா. பயமா இருக்கு.
“நான் உன் தங்கப்பொண்ணுதேன மாமா?” என தூக்கத்தில் பிதற்றிட,
மீண்டும் அருகில் அமர்ந்து அவளின் முன்னெற்றி கோதியவன் அவள் அமைதியாகியதும், நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்து வெளியில் வந்தான்.
“அப்பு… மீனாள்?”
“உறங்கிட்டா(ள்) அப்பத்தா” என்ற வீரன், “வரவரைக்கும் இங்கனவே இருங்க” என்றவனாக, அவர்கள் கேட்ட கேள்வி எதற்கும் பதில் சொல்லாது வண்டியை கிளப்பிக்கொண்டு பறந்திருந்தான்.
“எனக்கு உங்க முடிவுல விருப்பமில்லைன்னு சொன்னேன். மீனாளுக்கும் வீரனுக்குந்தேன் பொருத்தமின்னு சொன்னாக்கா எம் பேச்சை யாரு கேட்டீய்ங்க!” என்று அபிராமி அங்காலாய்ப்பாக பேச,
“ஆறுதலுக்கு அவனை தேடியிருந்தாலும், உரிமையா ஒட்டிக்க மனசுல விருப்பம் இருக்கணுந்தேனே ஆத்தா. ரெண்டும் ஒன்னுமண்ணா நிக்கும் போது என் கண்ணே நெறைஞ்சுபோச்சு ஆத்தா. அவீங்க வந்ததும் பேசணும்” என்று மகா கூறினார்.
“அவசரப்படாத மகா. மருதன் அமிழ்தன்கிட்ட கேட்டுப்போட்டுதேன் வசந்திக்கு முடிவு சொன்னியான். அப்படியொரு எண்ணமிருந்தாக்கா, அமிழ்தனுக்கு நேரடியாவே கேட்க தைரியமிருக்கு. புள்ளைவளுக்கு அமிழ்தன் தானே எல்லாம். அந்த பாசத்துல ரெண்டும் மருகினதை நாம தப்பா புரிஞ்சிக்கிட்டதா ஆகிப்புடக்கூடாது” என்று பொறுமையாக எடுத்துக்கூறிய மீனாட்சிக்கு பேரனின் மனம் நன்கு தெரிந்துதான் இருந்தது.