வீரன் எங்கு சென்றான்? லிங்கம் ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை? காரணம் தெரியாது பெண்கள் அமர்ந்திருக்க…
“இம்புட்டு நேரமாச்சே. எல்லாரும் உறங்குங்க. வர நேரம் வரட்டும்” என்று மீனாட்சி சொல்ல, அவரவர் அப்படியே கூடத்திலே படுத்துக்கொண்டனர்.
“அண்ணே ஏதோ கோபமா வந்தமாறி இருந்துச்சு அப்பத்தா. அண்ணே என்னைய பஸ் ஏத்திவுட்டு வூட்டுக்கு போனதும் மெசேஜ் பண்ணுன்னு சொன்னாங்க. நான் பண்ண மெசேஜும் பார்த்துட்டாய்ங்க. நம்ம மருதையில தானே இருக்காங்க, வெசனப்படமா இருங்க” என்று அனைவருக்கும் திடமாக பேசிய நாச்சி, மீனாளை சென்று பார்த்துவிட்டு வந்து, முற்றத்தில் வான்வெளியை பார்த்தவாறு படுத்திருந்த அங்கையுடன் படுத்துக்கொண்டாள்.
“உறங்காம என்னட்டி வானத்தை வெறிச்சிட்டு இருக்க?”
“மதினி… வீரா மாமாக்கும் அக்காவுக்கும் கல்யாணம் ஆச்சுதுன்னா நல்லாயிருக்கும்ல?” என்று அங்கை கேட்டது அந்த நிசப்தமான இரவில் கூடத்தில் படுத்திருந்த மூத்த பெண்களுக்கும் கேட்கவே செய்தது.
தலையை உயர்த்தி பெரியவர்களை கவனித்த நாச்சி…
“இதை நீயோ நானோ முடிவு பண்றது இல்லை சின்னக்குட்டி. நீயி உறங்கு” என்று கண்களை மூடிக்கொண்டாள்.
பிரேமிடமிருந்து அழைப்பு வர,
வேகமாக அலைப்பேசியை எடுத்து அழைப்பை துண்டித்தவள்,
“உங்க வூட்டுலதேன் எல்லாரும் ஒட்டுக்கா படுத்திருக்கோம். இன்னைக்கு பேச முடியாது” என்று தகவல் அனுப்பி வைத்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள்.
“ராவுலாம் ஒரே லவ்சூதானே மதனி?”
அங்கை போர்வைக்குள் சென்று நாச்சியின் காதில் கிசுகிசுக்க…
“நிலைமா புரியாம நீப்பாட்டுக்கு வெளாடிட்டு இருக்க அங்கை” என்றாள் நாச்சி.
“வீரா மாமா பாத்துக்கும். என்னத்துக்கு எதையும் நெனச்சு வெசனப்படனும்?” அங்கை கேட்டது அனைவருக்கும் கேட்டிட, வீரன் என்ற பெயர் அமைத்திக்கொள்ளச் செய்ய கண்ணயர்ந்தனர்.
*****
வீரன் அதிவிரைவாக வந்து சேர்ந்தது அவர்களது தலைமை ரெசிடன்ஷியல் ஹோட்டலிற்குத்தான். இந்த வேகம் எதனால் என்பது, சில நிமிடங்களுக்கு முன்னால் நடந்த ஒன்றென்று அவன் மட்டுமே அறிவான்.
அந்நேரத்திலும், உணவு பகுதி கூட்டம் நிரம்பி வழிந்தது.
கொண்டாட்டம் நடைபெறும் ஹாலில், யாரோ ஒருவரின் திருமண வரவேற்பு விமர்சையாக நடந்து கொண்டிருக்க… ஹோட்டல் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது.
மாலை போல் மற்ற கிளை ஹோட்டலிற்கு மேற்பார்வைக்கு சென்ற லிங்கம், நாச்சியின் அழைப்பில் தான் அங்கு வந்தான்.
நாச்சி ஆடை அலங்கார தையல் கடைக்கு சென்றிருந்தாள். அவளுக்கு சொந்தமாக கடை ஆரம்பிப்பதற்கு முன், முன் அனுபவம் வேண்டுமென வீரன் பேச்சைக் கேட்டு அதே கடையில் வேலைக்கும் சேர்ந்திருந்தாள். அவளுக்கு அழைத்த வீரன் வேலை முடிந்ததும் ஹோட்டலிற்கு வரக் கூறினான்.
அவர்களது ஹோட்டலுக்கு பக்கத்தில் தான் அந்த கடை என்பதால் நாச்சி விரைந்து தன் வேலையை முடித்துக்கொண்டுவர,
“இந்நேரம் வரணுமின்னு என்ன அவசியம் நாச்சியா. நாளைக்கு லிங்கு கூட வந்திருக்கலாமே?” என்று கடிந்துகொண்டான் வீரன்.
“சாரிண்ணா… இன்னும் அஞ்சாறு நாலு தானே இருக்கு. இப்போ குடுத்தாதேன் சரியா இருக்குமின்னு வந்துபுட்டேன்” என்று திணறி பதில் வழங்கியவள்,
“ஏதும் சலம்பலாண்ணே?” என்று கேட்க, வீரன் பார்த்த பார்வையில் கப்சிப்.
அதன் பிறகு வீரன் மணியை பார்ப்பதும், பாண்டியனுக்கு அழைத்து எங்கு வருகிறார்கள் என்று விசாரிப்பதுமாக, அலுவலக அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, நாச்சி லிங்கத்திற்கு தகவல் அனுப்பினாள். அங்கு வருமாறு. அவனும் சில நிமிடங்களில் வந்திருந்தான்.
லிங்கம் வந்ததும் ஒரு பார்வை பார்த்தானே தவிர வீரன் எதுவும் பேசவில்லை. யாருக்கோ அழைப்பதும் பேசுவதுமாகவே இருந்தான்.
“எனக்கு எந்நேரமானாலும் இந்த நைட்டுக்குள்ள பார்க்கணும்.” வீரனின் குரலில் அத்தனை கட்டளை.
அவன் பேசி முடித்து வைத்ததும்.
“யாரண்ணே பார்க்கணும்?” என்ற லிங்கத்தின் கேள்விக்கு, அவனிடம் பதிலில்லை.
அவனின் கோபம் எதனால் என்பது தெரியாமல், லிங்கமும், நாச்சியும் விழித்தபடி நின்றனர்.
“நாச்சியை பஸ் ஏத்தி வுட்டுப்போட்டு… ட்ரைவர்கிட்ட சொல்லி அனுப்பிட்டு வா” என்று லிங்குவிடம் கூறினான் வீரன்.
“அத்தை வூட்டுக்கு போ நாச்சியா” என்ற வீரன், “போனதும் ஒரு மெசேஜ் போடு. எல்லாரையும் உண்க வச்சிப்புடு” என்று தங்கையிடம் சொல்லி அனுப்பினான்.
வீட்டிற்கு வந்து தகவல் அறிந்த பின்னர் தான், வீரனின் கோபம் நாச்சிக்கு புரிந்தது.
ஆனால் லிங்கம் மணி பத்தாகியும் என்ன விடயமென்று தெரியாது, வீரனின் முன் அவன் முகம் பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“பெரிய சம்பவமாண்ணே?” லிங்கத்தால் விடயம் என்னவென்று தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை.
வீரன் இந்தளவிற்கு கோபம் கொண்டு முதன் முதலில் பார்த்தது, பிரேம் நாச்சியிடம் நடந்துகொண்ட முறைக்குத்தான். அதன் பின் இன்று தான். இன்று அதைவிட அதீத கோபமென்றே லிங்கத்திற்கு தோன்றியது.
சிறிது நேரத்தில் வீரனுக்கு ஒரு அழைப்பு வந்திட, எடுத்து பேசியவன் அடுத்து யாருக்கோ அழைத்தான்.
“முழு டீட்டெயில் எனக்கு வேணும். வித் இன் வன் ஹவர்” என்று அழுத்தமாகக் கூறிய வீரன் “லீகள், இல்லீகள் எல்லாம் வேணும்” என்றான்.
“அண்ணே என்னன்னு சொல்றியா? நீயி பேசுறதை பாக்க அச்சமா வருது” என்ற லிங்கத்திடம்,
“சொல்றேன். மாமா, ஐயா வந்திடட்டும்” என்றான்.
உடனே லிங்கம் பாண்டியனுக்கு அழைத்து “இன்னும் எம்புட்டு நேரமாவும்?” எனக் கேட்டான்.
“ஒரு மணி நேரமாவும் போல லிங்கு” என்று அவர் சொல்ல…
“ஒரு மணி நேரமா?” என்றான் அதிர்வாய்.
“நேரா இங்கன வர சொல்லு” என்று வீரன் கூற, அவன் சொன்னதை செய்தான் லிங்கம்.
“நீயி போயி உண்கிட்டு வாடே!” என்ற வீரனிடம் மறுக்க முடியாதென்று முறைத்துக்கொண்டு சென்று உண்டுவிட்டு, வீரனுக்கும் உணவு கொண்டு வந்திருந்தான்.
“நான் கேட்டனாடே?”
“என்னமோ பெருசா நடக்குமாட்டி தோணுது. சமாளிக்க தெம்பு வேணாமா. உண்குண்ணே” என்று அவன் முன் உணவினை எடுத்து வைக்க, எதுவும் சொல்லாது சாப்பிட்டு முடித்தான்.
அந்நேரம் அங்கு வந்த மேனேஜர்,
“பார்ட்டின்னு புக் பண்ணியிருந்த பசங்க… ஏதோ சலம்பிக்கிட்டு இருக்கானுவ சார்” என்று கூற, லிங்கம் அங்கு விரைந்தான்.
நேரம் சென்றும் லிங்கம் வரவில்லையென வீரன் இருக்கையிலிருந்து எழ, அவனுக்கு தகவல் வந்திருப்பதற்கான சத்தமிட்டது அலைப்பேசி. மீண்டும் அமர்ந்தவன், தகவலை திறந்து பொறுமையாக பார்த்திட்டான்.
அவன் பார்த்து முடிக்க,
“சார்… லிங்கம் சார் உங்களை கூப்பிடுறார்” என்று வந்தார் சிப்பந்தி ஒருவர்.
விரைந்து அங்கு சென்ற வீரன், அவ்வறை இருந்த தோற்றம் கண்டு…
“ஒன்பது மணிக்கு மேல ட்ரிங்க்ஸ் பார்ட்டி நம்ம ஹோட்டலில் அலோவ்ட் இல்லையே லிங்கு?” என கோபமாகவே கேட்டான்.
“பரீட்சை முடிஞ்சு, படிப்பும் முடிஞ்சுது. பிரண்ட்ஸ் செலபிரேஷன்… இனி எப்போ மீட் பண்ணுவோம் தெரியாது. ஃபேர்வெல் மாதிரின்னு சொல்லி மினி ஹால் கேட்டானுவண்ணே. கேக்கும்போதே எல்லாம் சொல்லித்தேன் வச்சேன்… பொண்ணுங்களாம் போயாச்சு போல. பசங்களும் கொஞ்சம் பேர் போயிட்டானுவ. இவன் குருமூர்த்தி பையனாம்” என்று லிங்கம் அந்த பையனை கைகாட்டிட வீரன் அவனை கூர்ந்து நோக்கினான்.
“கெளம்பாம அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்கியான். அவனோட நாலஞ்சு சில்வண்டும் சலம்பிட்டு நிக்குது” என்ற லிங்கம், “பொறுமையா எம்புட்டோ சொல்லிப்புட்டேன் கேக்க மாட்டேங்கிறானுவ… இவென் ஐயா பெரிய ஆளாம். அரசியல் சப்போர்ட் இருக்காம். அந்தல சந்திலி ஆக்கிப்புடுவோம் பார்த்துக்கன்னு இதுங்கலாம் அவனை கொம்பு சீவி வுடுதுங்க” என்றான்.
“அவென் அதுக்கு மேல… பின்னாடி இந்த ஹோட்டலே அவனுக்கு உரிமை உள்ளதா ஆவப்போவுதுன்னு ஓவரா துள்ளுறான்” என்ற லிங்கம், “அதேன் உன்னைய கூட்டியாற சொன்னேன்” என்றான்.
“இவரு என்ன பெரிய இஸ்க்கா… இவரு வந்தாக்கா அஞ்சி ஓடிப்போவோமா நாங்க” என்று ஒருவன் தெனாவெட்டாகக் கேட்டு வீரனின் முன்வர, வீரன் சப்பென்று வைத்த ஒரு அறைக்கு பல சுற்று சுற்றி சுருண்டு விழுந்தவனின் நிலை கண்டு மற்றவர்கள் அவனை இழுத்துக்கொண்டு தெறித்து ஓடினர்.
அந்த ஒருவன் மட்டும் வீரனை உற்று நோக்கினான்.
“உன்னையத்தேன் அவளுக்கு ரொம்ப புடிக்குமாமே!” என்று வீரனிடமும், “நீயிதேன அவ கையை புடிச்சிக்கிட்டு கடைவீதியை சுத்தி வந்தது?” என்று லிங்கத்திடமும் வினவினான் அவன்.
“உம்ம குடும்பத்தை பத்தி எல்லாம் விசாரிச்சிட்டேன்.”
“தெளிவா இருக்கியா நீயி?” வீரன் கேட்டிட,
“எனக்கென்ன… இன்னும் நாலு லார்ஜ் உள்ளப்போனாலும் ஸ்டெடித்தேன் நானு” என்ற அவன், “ஒன்பது மணிக்கு மேல ட்ரிங்க்ஸ் இல்லைன்னு கொடுக்கமாட்டேன்னுட்டானுவ. என்ன ஹோட்டல் நடத்துறீங்க?” என்று கேட்டு முடிக்கும் முன் அவன் மூக்கிலே ஓங்கி குத்தியிருந்தான் வீரன்.
ரத்தம் கொட்டியது.
“அய்யோ ரத்தம்!” அவென் பயந்து அலற,
“நானே உன்னைய தூக்கலான்னு பிளான் போட்டாக்கா… நீயே தொக்கா வந்து மாட்டிக்கிட்டியே பங்கு” என்ற வீரன், அவனின் கையை பிடித்து முறுக்க…
“அண்ணே என்ன பண்றீய்ங்க?” என்று வீரனை தடுக்கப்பார்த்தான் லிங்கம்.
“பொம்பளை புள்ள கழுத்தை புடிச்சு எத்துவியோ நீயி?” என்று லிங்கத்தின் மறுப்பை கண்டு கொள்ளாது, அவனை சுவற்றில் சாய்த்து மேலே தூக்கியிருந்தான் லிங்கம்.
அவன் விழிகள் பிதுங்கி இறும்பிட…
“அண்ணே விடுண்ணே. அவென் கண்ணு சொருகுது” என்று பதறினான் லிங்கம்.
லிங்கத்தின் பதட்டத்தில் அவனை கீழேவிட்ட வீரன்,
“இந்த கையைத்தானே புடிக்க சொல்லி சொன்ன” என்று அவனது வலது கை விரல்களை பின்னோக்கி வளைத்தான்.
அவன் வலியில் துடிக்க…
“அவ… எம் பொண்டாட்டிடே, இப்போ இல்ல, அவ பொறந்ததும் முடிவானது. அது தெரியாம இந்த வாயி என்னவெல்லாம் சொல்லிருக்கு” என்று அவனது வாயிலேயே சரமாரியாக நாலைந்து குத்து விட்டான் வீரன்.
வீரன் சொல்லியதில் அதிர்ந்த லிங்கம்,
“மீனா கிட்ட என்ன வம்பு பண்ணியான் இவன்?” என்று கோபமாகக் கேட்க,
“சாரு நாளைக்கு பொண்ணு பார்க்க வறாராம். நாம ஒத்துகிடனுமாம்” என்று வீரன் மேலோட்டமாக அனைத்தையும் கூற, லிங்கத்திடம் நாலு வாங்கிக்கொண்டான் கோகுல்.
ஆம் அவன் கோகுல். நண்பர்களுக்கு கல்லூரி படிப்பை முடித்ததற்காக பார்ட்டி என்று அங்கு அழைத்து வந்திருந்தான். வசமாக வீரனிடம் தானாக மாட்டியும் கொண்டான்.
அந்த ஹாலில் மேனேஜருடன் சேர்த்து அவர்கள் நால்வரை தவிர்த்து யாரும் இல்லாது போக,
“இவனை இங்கனவே கட்டி போடுங்க பிரசாத் சார். நான் சொல்லும்போது விடுங்க. இப்போ இந்த ஹாலுக்கு பூட்டை போடுங்க. யாரையும் உள்ளே விடாதீங்க. இவனை வச்சு ஆட்டம் ஒன்னு இருக்கு” என்றான்.
அந்த ஹாலில் சர்வீஸ்க்கு இருந்த அனைத்து ஊழியர்களையும், வீரன் அங்கு வந்ததுமே பார்வையால் வெளியேற்றியிருந்தான்.
மேனேஜர் பிரசாத் வீரன் சொல்லியதை செய்திட, லிங்கத்தைக் கூட்டிக்கொண்டு அலுவலக அறைக்கு வந்த வீரனிடம்…
“இன்னும் வேறென்னவோ நடந்திருக்குமாட்டிருக்கேண்ணே?” என்று சந்தேகமாக கேட்டான் லிங்கம்.
வீரன் இந்த கேள்விக்கு தன் தம்பியை ஆழ்ந்து நோக்கினான். அவனது கண்களில் ஜூவாலையின் தகிப்பு.