வீட்டிலிருந்து புறப்பட்டு வீரன் நேராகச் சென்றது தன்னுடைய அரிசி ஆலைக்குத்தான்.
வீரன் மதுரை மாவட்டத்தில் அவனது ஆலையை வைத்தே மிகவும் பிரபலம். அதிலும் லிங்கத்திற்கு முன்பு அவன் பொறுப்பில் ஹோட்டல்கள் இருந்ததால், தொழில் சங்கம், அரசியல் பிரமுகர்கள் முதல் கொண்டு வீரன் அறியப்படுவான். மற்றவர்கள் புகழின் அடிப்படையில் தங்களுடன் இணைத்துக்கொள்ள விரும்பி தங்களுடன் இழுக்க முயற்சிக்க, தொழிலை மட்டுமே வளர்ச்சியாகக் கொண்டு அனைத்திலிருந்தும் தன்னை ஒதுக்கியே வைத்துக்கொண்டான்.
அவன் தன் தொழில் பலத்தையோ, செல்வ செழிப்பையோ எங்கும் காட்டியது இல்லை. காட்ட முனைந்ததுமில்லை.
அவனின் வளர்ச்சியில் பலர் வஞ்சம் கொண்டு அழிக்க முயன்ற போதும், தன்னுடைய நேர்மையால் மட்டுமே அவர்களை அடக்கி வைத்திருக்கிறான்.
வீரனென்றால் அமைதி மட்டுமல்ல அதிரடியும் வேகமும் உண்டென்று அவனிடம் மோதி தோற்றவர்களுக்கு மட்டுமே தெரியும். அது அவனது குடும்பமே அறிந்திடாத அவனின் மறுபக்கம்.
லிங்கம் ஹோட்டல்களின் பொறுப்பை கையிலெடுத்த பின்னர், பல தடைகள் ஏற்பட…
“என்னண்ணே கீழ இழுத்துவிட இம்புட்டு பயலுவ காத்துக்கிடானுவ. எப்படி சமாளிக்க?” என்று கேட்க,
“நீ உன் சோலியை மட்டும் பாரு லிங்கு. எதாவதுன்னு மறைக்காமல் சொல்லிபுடு. உன்னால முடியுமின்னாக்கா நான் வழிக்காட்டுறேன். இல்லையா நானே பார்த்துக்கிறேன்” என்று அவனின் தம்பிக்கு பின்னே தளபதியாக இன்றளவும் உறுதுணையாக நின்று கொண்டிருக்கிறான் வீர அமிழ்திறைவன்.
வீரனின் இப்பக்கம் அறிந்திருந்த லிங்கத்திற்கு, தன்னுடைய உடன் பிறப்பின் கோபத்திற்கு பின்னே வலுவான காரணமிருக்குமென்று எண்ணம்.
ஓட்டலில் பிரச்சினை செய்பவன் யாரென்று அடித்தது வரை மீனாளிடம் அவன் நடந்துகொண்ட முறைக்காக இருக்கலாம்…
ஆனால் எடுத்ததும் கை வைக்கும் ரகமில்லை வீரன். அதனை லிங்கம் நன்கு அறிவான். அதனால் தான் இன்னமும் என்னவோ உள்ளது என்று கேட்க வீரன், மீனாள் கூறியதோடு தான் ஆலைக்கு சென்ற பின்னர் நடந்ததைக் கூறினான்.
வீரன் ஆலைக்கு சென்றதுமே நேரடியாக தொழில் சங்க தலைவருக்கே அழைத்து குருமூர்த்தியைப் பற்றி அவரின் குணம் பற்றி தெரிந்துகொண்டான். உடன் அவரின் அலைப்பேசியின் எண்ணையும்.
சில நிமிடங்கள் தன்னை நிதானித்து குருமூர்த்திக்கு அழைத்தான்.
எடுத்ததும் அவர்,
“நாளைக்கு எப்போ என்ன ஏதுன்னு விசாரிக்க அழைச்சிங்களாக்கும்?” என்று அவர் வினவ, விடயம் அவர் வரை தெரியுமென்று அறிந்துகொண்டான் வீரன்.
“பொண்ணு வூட்டுல எல்லாம் சொல்லுச்சா? சொல்லியிருக்கும். எம் பையனை வேணாமின்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டு அவர் சிரிக்க…
“இது ஒத்துவராதுங்க. நீங்க நாளைக்கு இங்கட்டு வந்து அவமானப்பட்டு போவவேணாமின்னு நினைச்சு, வரவேணா சொல்லத்தாங்க கூப்பிட்டேன்” என்று எவ்வித பூசலுமின்றி வீரன் கூறினான்.
“என்ன தம்பி நான் யாரு… என் செல்வாக்கு என்னன்னு தெரியாம பேசுறீய்ங்க. அவவன் எம் பையனுக்கு பொண்ணை கட்டிக்கொடுக்க லைனுல நிக்கிறானுவ” என்று அவர் கர்வமாக சொல்லிட…
“அந்த லைனுல நிக்குற ஒரு பெண்ணுக்கே உங்க பையனை முடிச்சு வையுங்க” என்றான் பட்டென்று.
“என்ன தம்பி பேச்சு தினுசா போவுது?”
“நான் தன்மையா பேசலாமின்னுதேன் போன் போட்டேன்… அதுவுமில்லாம, இந்த விசயத்தை போனில் பேசாம நேரில் பேசலாமின்னுதான் சந்திக்க நேரம் கேட்கலான்னு போன் பண்ணாக்கா, நீங்க ஒரண்டைய கூட்டுறாப்ல பேசுறீய்ங்க. அப்போ நானும் அதுக்கு தக்கதானே பேச முடியும்?” என்ற வீரனை சாதரணமாக எடைப்போட்ட மடமையை அப்போதுதான் உணர்ந்தார் குருமூர்த்தி.
வீரனை அடக்க வேண்டுமென்று நினைத்தவர்,
“இதுல நேரில் சந்திச்சு பேச என்னயிருக்கு தம்பி… நாளைக்குத்தேன் பொண்ணு பார்க்க வாறோமே அப்போ பேசிக்கலாம்” என்று பேச்சினை முடிக்க பேசினார்.
“முடிவு சொல்ல நீங்க யாரு தம்பி? நாளைக்கு உங்க மாமனை பார்த்து பேசி நாங்க முடிவு பண்ணிக்கிறோம். நீயி செத்த கம்மின்னு இரு. எதுக்கு வூடால வர?” என்றார்.
“வம்பு பண்ணது உம் பையன்னு தெரிஞ்சதுமே… நீங்க எதுக்கு அடி போடுறீய்ங்க கண்டுகிட்டேன். அது ஒருநாளும் நடக்காதுங்க. சுமூகமா பேச்சோட முடிச்சிக்கலாங்க” என்று அப்போதும் முடிந்தளவு வீரன் தன்மையாகவே பேசிட…
“என்ன தம்பி என்னைப்பத்தி தெரியாம பேசிக்கிட்டே போறீங்களே? நான் இம்புட்டு நேரலாம் பேசியதா வரலாறே இல்லை… நீ என்னைய கண்டுகிட்டங்கிறதால நானும் நேரடியாவே பாயின்ட்டுக்கு வரேன்” என்றவர்,
“மீனாட்சி ஹோட்டலை எம் பேருக்கு முடிச்சு குடுத்துப்புடு. உன் வூட்டு புள்ளையை நான் விட்டுடுறேன்” என்றார்.
வீரனுக்கு கோபம் சுள்ளென்று ஏறிட…
“முடியாதுங்க” என்று சட்டென்று கூறியிருந்தான்.
“அப்போ எப்படி என் கைக்கு கொண்டுவரணுமோ அப்படி கொண்டுவரேன். எதுக்குமே உங்க சம்மதம் எனக்கு வேணாமாட்டிக்கு தம்பி. பையன் ஆசைப்பட்டுட்டான்… முறைப்படி பண்ணுவோமின்னு தான்” என்றவர், “ஒரு நிமிசம் போதும் உங்க பொண்ணை தூக்க…” என்க இதற்கு மேல் இவரிடம் பேசி பலனில்லை. இவரை எப்படி அடிக்க வேண்டுமோ அப்படி அடிக்க வேண்டுமென மனதில் திட்டங்கள் வகுத்தவனாக, அந்நேரத்தில் ஹோட்டலுக்கு விரைந்து வந்தவன் குருமூர்த்தியின் மொத்த ஜாதகத்தையே தனக்கு உண்மையான ஆட்களை வைத்து தன் கைக்கு கொண்டு வந்திருந்தான்.
தங்கள் வீட்டு பெண்ணின் மூலம் தங்களின் தொழிலில் கை வைக்க நினைப்பவனை அவனின் தொழில் மூலமாகத்தான் அடிக்க வேண்டுமென்று காய் நகர்த்திய வீரனுக்கு கோகுலை கடத்தி அடைத்து வைக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் துளியும் இல்லை.
கோகுலாக வந்து மாட்டிக்கொள்ள… மற்றொரு திட்டம் வகுத்தவனாக தன் பாதுகாப்பில் நிறுத்திக் கொண்டான்.
“என்கிட்டவே வந்து பொண்ணை தூக்குவேன் சொல்லுறியான்?” என்று சொல்லி முடித்த வீரன் லிங்கத்திடம் ஆதங்கம் கொள்ள…
“அவனுக்கும் நமக்கும் இதுக்கு முன்னவே சலம்பலாண்ணே?” என்று கேட்டிருந்தான் லிங்கம்.
மருதனும், பாண்டியனும் ஓட்டல் தொடங்கியபோது… அது மூன்று நட்சத்திர அளவில் தான் இருந்தது. அப்போதே குருமூர்த்தி ஐந்து நட்சத்திர ஓட்டல் வைத்திருந்தார். குறுகிய காலத்தில் மீனாட்சி ஓட்டல் பிரசித்து பெற்று வளர்ச்சி பெற ஐந்து நட்சத்திரமாக அதன் தரத்தை உயர்த்திட… குருமூர்த்தியும் தன்னுடைய சிமெண்ட் தொழிற்சாலையில் கவனம் செலுத்திட, குருமூர்த்தியின் ஓட்டல் அதன் வளர்ச்சியை கனிசமாக இழந்தது. அத்தோடு சுற்றுலா பயணிகளிடமும், உள்ளூர் மக்களிடையேயும் மீனாட்சி ஓட்டல் பிரசித்துப்பெற்றது. அதன் பின்னர் குருமூர்த்தி எவ்வளவோ போராடியும், அவரால் ஓட்டலை முன்னேற்ற முடியவில்லை. இன்றளவு இருப்பினும், அதற்கும் தனி வாடிக்கையாளர்கள் இருந்தபோதும்… குருமூர்த்திக்கு மீனாட்சி ஓட்டலின் மீது ஒரு கண்.
அப்போதுதான் வீரன் ஓட்டல் பொறுப்பிற்கு வந்த சமயம்.
சிறியவன் எளிதாக ஏமாற்றிவிடலாமென்று குருமூர்த்தி தப்பு கணக்குப் போட… தொழிலில் அவரையே தூக்கி சாப்பிட்டான் வீரன்.
மருதன் மற்றும் பாண்டியனைக் கூட ஓரளவுக்கு எளிதாக அவரால் நெருங்கிட முடிந்தது. ஆனால் வீரனின் நிழலைக்கூட அவரால் எட்டிட முடியாது போனது.
வீரன் அவரின் தாக்குதலை எல்லாம் கண்டுகொள்ளாது, தொழில் கவனம் செலுத்தி ஒன்று என்றிருந்த ஓட்டலில் எண்ணிக்கையை ஏழாக அதிகரித்து மேலும் பல படிகள் முன்னேறியிருக்க…
குருமூர்த்தி நேரடியாக எத்தனையோ முறை ஓட்டலை விட்டுத்தரும்படி கேட்டும் வீரன் மறுத்துவிட்டான்.
ஒருகட்டத்தில் குருமூர்த்தி அமைதியாகிவிட… வீரனும் தொல்லைவிட்டது என்கிற எண்ணத்தில் அவரை சுத்தமாக மறந்தே இருந்தான்.
மீனாள் சிமெண்ட் பேக்டரி வைத்திருக்கிறார் என்று சொல்லிய பின்னரே அவரின் இரண்டாவது ஆட்டம் இதென்று கண்டுகொண்டான்.
பலமுறை மோதி பார்த்தும் குருமூர்த்தி வீரனிடம் தோல்வியையே தழுவியிருக்க… சில காலம் விட்டு பிடிப்போம் என்று மட்டுமே நினைத்து பதுங்கியிருந்தார்.
லிங்கம் வந்த பின்னர் அவனை வைத்து காய் நகர்த்தலாம் என்று எண்ணிட… அவன் பின்னால் வீரன் மறைமுகமாக நிற்கிறான் என்பது அறிந்து மேலும் பொறுமையாக இருக்க, அவரின் மகன் கோகுலின் மூலம் வாய்ப்பு வர, அதனை வைத்து ஓட்டலை தன் வசப்படுத்திக்கொள்ள வேண்டுமென நினைத்து மகனின் விருப்பத்திற்கு ஒப்புக்கொண்டு வீரனிடம் மீண்டும் ஒருமுறை மோதி பார்க்க முயன்றுவிட்டார்.
கோகுல் தனக்கு ஒரு பெண்ணை பிடித்திருப்பதாக தெரிவிக்க முதலில் வேண்டாமென்று மறுத்து குதிக்கவே செய்தார் குருமூர்த்தி. கோகுல் மீனாட்சி ஓட்டலின் பெண் என்று சொன்னதும் அத்தனையும் அலசி ஆராய்ந்துவிட்டார்.
ஓட்டல் இன்னமும் மருதன் மற்றும் பாண்டியன் பெயரில் இருந்தாலும், அவர்களது குடும்பத்தின் ஒற்றுமை அறிந்து, மீனாளுக்கு என்றால் மொத்தமாகவே கொடுத்துவிடுவார்களென்று கணக்கிட்டு மகனின் விருப்பத்திற்கு சரியென்றிருந்தார்.
நிச்சயம் அவர்கள் இந்த கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிந்தும்… தன் செல்வாக்கின் மூலம் நடத்தி முடிக்க நினைத்து வீரனிடமும் வீராப்பாக பேசிவிட்டார்.
“ரொம்ப பெரிய ஆளோ அவென்?”
“பெரிய ஆளு தான்…. ஆனால் குணம் சரியில்லையே” என்ற வீரன், “ரொம்ப நா செண்டு ஆடிபாக்க நேரம் வந்திருக்கு” என்று தம்பியை பார்த்து கண்ணடித்தான்.
“சிங்கம் களம் இறங்கிடுச்சுன்னு சொல்லணுமோ?” என்று சிரித்த லிங்கம், “இன்னொன்னு கேக்கட்டுமா?” என்றான்.
“கேளுடே…” என்ற வீரன் மேசையில் குதித்து அமர்ந்தான்.
“வசந்தி அத்தை கௌதமுக்கு மீனாக்குட்டியை கேட்டத… அம்மா அப்பத்தாகிட்ட புலம்பும் போது கேட்டேன். நீயும் மாமா கேட்டதுக்கு சரின்னு சொல்லிபுட்டியாம்! ஆனால் இங்கன அவென்கிட்ட பொண்டாட்டின்னு சொல்லுற… அவகிட்ட விலகி நிக்குற… எனக்கு ஒன்னுமே வெளங்கல. உன் முடிவுத்தேன் என்ன?” என்று கேட்டான்.
“வேணாமிங்கிறதும்… விலகி நிக்குறதும் எம் முடிவு இல்லை. புடிச்சிருக்கு ஆனால் வேணாமின்னு சொல்றவளை வற்புறுத்த சொல்றியா நீயி? எம் மனசால தங்கம் மட்டுந்தேன் என் பொண்டாட்டி. அவ வேணாமின்னு சொல்றதுக்காகலாம் அதை மாத்திக்க முடியாது. அவளுக்கு நான் வேணாங்கிறது அவளோட” என்ற வீரன், “பத்து வருசமா பொண்டாட்டியாவே நெஞ்சுல சுமந்துட்டடேன்… டக்குன்னு மாத்திக்க வரமாட்டேங்குது” என்றான்.
“இப்படியிருக்க நீயி எப்படி அவளை கௌதமுக்கு விட்டுக்கொடுப்ப?” என்றான் லிங்கம்.
“எனக்கு உன் மீனாக்குட்டி மேல நம்பிகக்கை இல்லத்தேன்… ஆனால் என் தங்கப்பொண்ணு மேல அம்புட்டு நம்பிக்கை இருக்கு. அதுவுமில்லாம கௌதமுக்கு சுபா மேல விருப்பம். அவளுக்குந்தேன். ரெண்டும் விரும்புதுங்க. அன்னைக்கு சுந்தரேசன் மாமா போன் போட்டப்போ இதைத்தேன் பேசினேன். அவருக்கு கௌதம் ஓகேதான். ஆனால் வசந்தி பெரிம்மாவை நெனச்சு வெசனப்படுறார். அதைத்தான் நிச்சியத்து அன்னைக்கு பேசினார்” என்ற வீரன், “அவருக்கு சுபாவோட விருப்பம்தான் முக்கியமாட்டிக்கு. அது மாதிரி நல்லான் பெரிப்பாவும் இருந்துட்டா அவீங்க லவ் சக்ஸஸ்” என்றான்.
“அப்போ உன் லவ்?”
“உன் மீனாக்குட்டி மனசு வைக்கிறதுல இருக்கு” என்ற வீரனுக்கு இன்று அவள் அவனை கட்டிக்கொண்டு இருந்த இறுக்கம் காலத்துக்கும் வேண்டுமென்று போலிருந்தது.
வீரன் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மீனாள் மனசு வைப்பாளா?