வீரன் லிங்குவுடன் நள்ளிரவு கடந்த பின்னரே வந்து சேர்ந்தான்.
வீடே ஒருவித அமைதியில் கட்டுண்டிருந்தது.
மகா கண்ணீரில் மூழ்கியிருக்க… அபிராமி தேற்றும் வழி அறியாது அவரின் கையை பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
‘மாலை தாங்கள் அறிந்து கொண்ட விசயம் உண்மையாட்டு இருந்துச்சுன்னா… இப்போ மருதன் எடுத்திருக்கும் முடிவு அமிழ்தனுக்கு எத்தனை வலியாட்டு இருக்கும்’ என்று நினைத்த மீனாட்சிக்கு மனம் அத்தனை கனத்து இருந்தது.
“மீனாளுக்கும் அமிழ்தனுக்கும் ஒருத்தருக்கொருத்தர் விருப்பம் இருக்குமாட்டி” என்று மகா சொல்ல வாய் திறக்க… மீனாட்சி பார்வையாலே அடக்கிவிட்டார்.
சற்று நேரத்திற்கு முன்பு தான் இரவு நேரம் என்பதைக்கூட கருத்தில் கொள்ளாது… மருதன் வசந்திக்கு அழைத்து,
நடந்ததை முழுவதும் சொல்லாது,
மேலோட்டமாக குருமூர்த்தி மற்றும் அவரின் பேச்சினைக் கூறியவர்,
“எம் புள்ளையா வூட்டுல இருக்கும் வரைக்கும் பதக்குன்னு இருக்கும். என்னவோ மனசு சஞ்சலமாவே கிடக்கு. மீனாள் கழுத்துல தாலி ஏறுனாத்தான் அமைதியாவுமாட்டிக்கு. நைட்டே கெளம்பி வந்துடுங்க. பிரேம், நாச்சியா கல்யாணத்தோட சேர்த்தே… கௌதம், மீனாள் கல்யாணத்தை முடிச்சிப்புடுவோம்” என்றார்.
வசந்திக்கு வேறென்ன வேண்டுமாம், அடுத்த அரை மணி நேரத்தில் புறப்பட்டுவிட்டதாக அழைத்து தெரிவித்தார்.
“பாண்டியா உனக்கொன்னும் சங்கடமில்லையே?”
மருதன் கேட்க பாண்டியன் இல்லையென்று தலையசைத்தார்.
அவருக்கு உள்ளுக்குள் ‘மகனின் ஆசை இத்தனை சீக்கிரம் முடிவுக்கு வந்திருக்க வேண்டாம்’ என்று வருத்தமாக இருந்தபோதும் அதைப்பற்றி மூச்சு விடவில்லை.
பாண்டியனுக்கு நன்கு தெரியுமே மருதன் வசந்தி மீது வைத்திருக்கும் அன்பும், வசந்தியின் குணமும்… ஆனால் அவரும் அறியாதது, மருதனுக்கு வீரன் என்றால் உயிர் என்று.
மகா வெளியில் சொல்ல முடியாது மருகிட…
“இதுதேன் நடக்கணும் விதியிருந்தாக்கா… அதை யாரால மாத்த முடியும் மதினி” என்று தேறுதலாக பேசினார் அபிராமி.
மீனாட்சி நடப்பதை அமைதியாக பார்த்திருந்தார். அப்படியே தங்கம் கணிப்பு உண்மையாக இருக்கும்பட்சத்தில், வீரன் மீனாளை எளிதில் விட்டுவிடமாட்டானென்று நம்பிக்கையாக இருந்தார்.
வீரன் மீனாளின் சொல்லுக்காக விலகி அமைதியாக நிற்கிறான் என்பது தெரிந்திருந்தால், ஏதேனும் முயற்சி எடுத்திருந்திருப்பாரோ?
அனைவரின் ரத்த அழுத்தத்தையும் உயர வைத்து தான் அவர்கள் சேர வேண்டுமென்றால், என்ன செய்திட முடியும்?
வீட்டிற்குள் வந்த வீரன் நேராக மீனாளின் அறைக்குத்தான் சென்றான்.
“புள்ள தூங்குது அமிழ்தா!” மருதன் சொல்லிட கேட்டுக்கொண்டவனாக தலையசைத்த போதும், அறைக்குள் சென்றிருந்தான்.
லிங்கம் வீரனின் அதிரடியை சொல்லிட… அனைவரும் வியப்பாகக் கேட்டிருந்தனர்.
“அப்போ அவனை போலீஸ் புடிச்சிக்கிட்டு போயிடுச்சா லிங்கு?” மகா வேகமாகக் கேட்டார்.
“ஆமாம் அத்தை… அரசுக்கு புறம்பாக அம்புட்டு செய்திருக்கான். இப்போதேன் கைது பண்ணி விசாரணைக்கு கூட்டிட்டு போயிருக்காங்க” என்ற லிங்கு,
“அந்த கோகுலை விட்டாச்சு மாமா” என்றான்.
“அவனால ஒண்ணும் ஆவாதே?” பாண்டியன் தான் பதறி வினவினார்.
“சிமெண்ட் தொழிற்சாலை அவென் பேருல இருக்குது. எப்படியும் அவனையும் கைது பண்ணுவாங்கன்னு… அண்ணே விட்டுருச்சு. இனி நம்மளை நெருங்கவே யோசிப்பானுவ” என்றான் லிங்கம்.
அவருக்கு எப்படியாவது மீனாளுக்கு வீரனை கட்டி வைத்திட வேண்டும். அதற்கு கௌதமுடனானா திருமணத்தை நிறுத்திட புது புது காரணங்களை தேடி மருதனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
“முடிவெடுத்ததை மாத்தி தடங்கல் பண்ண வேண்டாமட்டி மகா. குருமூர்த்தி லேசுப்பட்ட ஆளில்லை. எல்லாத்தையும் சரிகட்டி நாளைக்கே வெளி வந்துபுடுவியான். ஒண்ணுக்கெடக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா… அப்புறம் அய்யோ அம்மான்னாலும் வராது” என்று துண்டை உதறி தோளில் போட்டவர், “பாண்டியன் படுக்க அந்த கயித்து கட்டில எடுத்துப்போடு… நான் வெளி கட்டிலுல சாய்ஞ்சிக்கிறேன்” என்றவர் முடிவெடுத்தது எடுத்துதான் என்று எழுந்து சென்றுவிட்டார்.
“நீயி எங்கடே படுக்குற?” பாண்டியனுக்கு கட்டிலை இழுத்துப்போட்ட மகா லிங்கத்திடம் கேட்க, அவனோ யாருடைய திருமணத்தைப்பற்றி பேசுகிறார்கள் என்பது புரியாது குழம்பியபடி மகாவின் கேள்வி காதில் விழுகாதவனாக அமர்ந்திருந்தான்.
“ஆங்… ம்ம்மா” என்ற லிங்கம், “யாரு கல்யாணத்தை நிறுத்தனும்?” எனக் கேட்டான்.
மகா திரண்டுவிட்ட கண்ணீரை சேலை தலைப்பில் துடைத்திட…
“இவேன் ஒருத்தன்… கூறுக்கெட்டத்தனமா கேட்டுகிட்டு. மதினியே ஆத்தமாட்டமா வெசனத்துல இருக்காங்க. நீயி வேற ஏம்டே” என்ற அபி, “மீனாளுக்கும் கௌதமுக்குந்தேன்” என்றார்.
“எப்போ?” என்றான் அதிர்வாக.
“அவளுக்கு கல்யாணமின்னா நீயி ஏண்டே இந்த பதறு பதறுற?” மீனாட்சி ஆராய்வாக வினவினார்.
“எனக்கென்ன… எனக்கொன்னும் இல்லையே?” என்று உதட்டினை இழுத்து வைத்துக் கூறிய லிங்கம், “மீனாகிட்ட சொல்லிட்டீங்களா? சரின்னுட்டாளா?” என்று அடுத்தடுத்து வினவினான்.
“நாளைக்குத்தேன் விடிஞ்சதும் கேட்கணும்” என்ற மகா, “அவள் ஒத்துக்கக்கூடாது மீனாட்சி” என்று வான் நோக்கி வணங்கினார்.
“அச்சோ மதினி… என்னதிது. பொம்பளை புள்ளைக்கு நடக்கிற விசயம். இப்படி அச்சாணியமா என்னத்துக்கு நெனக்கிற” என்று அதட்டிய அபிராமி, “யாரை கட்டிக்கிட்டாலும் நம்ம புள்ள சந்தோஷமா இருக்கணும் நெனை” என்றார்.
“நீயி ஏன் இன்னமும் இங்கனவே இருக்க? வூட்டுக்கு போ. கதவு பூட்டிடாமத்தான் கொண்டியை மாட்டிவிட்டிருக்கு. மாட்டுக்குலாம் வைக்க போடல. போட்டுடு. கரியன் இந்நேரத்துக்கு என்ன ரகளையை கூட்டியிருக்கானோ?” என்றவராக லிங்கத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
வயல்கள் கடந்து சென்று கொண்டிருந்த லிங்கத்திற்கு என்னடா காதலென்று இருந்தது.
‘காதல் அப்படின்னாலே வலித்தேன் போலிருக்கே!’ என்று நினைத்தவன், இன்னமும் தானே உணராத தன்னுடைய காதலை ஆராய்கையில் அங்கையின் முகம் மின்னி மறைய தலையை உலுக்கிக் கொண்டவன், அவ்வெண்ணத்தையே விரட்டியவனாக நடையை எட்டிப்போட்டான்.
கதவு திறந்தே இருக்க…
மீனாளின் அறைக்குள் சென்ற வீரன், அவள் முதுகுக்காட்டி படுத்திருக்க… அவளின் காலருகே இடைவெளிவிட்டு மெத்தையில் அமர்ந்தான்.
வீரனின் இருப்பை அவள் மனம் காட்டியதோ…
“மாமா” என்று வேகமாக எழுந்திருந்தாள்.
“தூங்கலையா?” எனக் கேட்டவன் அழுது சிவந்து வீங்கியிருந்த அவளின் முகத்தை துடைத்து,
“எல்லாம் முடிஞ்சுது. இனிமேட்டு அவென் உம் பக்கம் திரும்பக்கூட மாட்டியான். நிம்மதியா இரு” என்றதோடு, “சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.
அவனையே இமைக்காது பார்த்திருந்தவள், அவன் என்னவென்று கேட்டதும் ஏதும் சொல்லாது அவனின் தோளில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
“தோசை கொண்டாரட்டுமா?”
“ம்ஹூம்… வேணாம். பசியில்லை மாமா” என்றவள், “அந்த போட்டோ” என்று விசும்ப…
வீரன் சிரித்தானே தவிர அவளிடம் ஒன்றும் சொல்லவில்லை.
“என்னன்னு சொல்லத் தெரியல மாமா. உள்ள ஒரே சலம்பலா இருக்கு” என்றவள் வீரனின் விரல்களோடு தன் கரத்தினைக் கோர்த்துப் பிடித்தாள்.
அப்போதுதான் கவனித்தான் மீனாளின் கரத்தில், போகி அன்று அவன் கட்டிவிட்ட மஞ்சள் கயிறு இன்னமும் இருந்தது.
காணும் பொங்கல் அன்று கிணற்றில் அவிழ்த்து போடுவது அவர்கள் வழக்கம். மாதங்கள் சென்றும் அவள் கழட்டாது கட்டியிருக்கிறாள். வீரனுக்கு இதிலிருந்து, தான் என்ன புரிந்துகொள்ள வேண்டுமென்றே தெரியவில்லை.
அந்த கயிறுக்கு தினமும் மஞ்சள் தேய்ப்பாள் போலும்… வண்ணம் மங்காது பளிச்செனவே இருந்தது.
தான் வேணாமென்று அத்தனை அடமாக இருப்பவள், இப்போது காட்டும் நெருக்கம், உரிமையெல்லாம் வீரனுக்கு விளங்காத பாடம் தான்.
வீரனுக்கு மீனாளின் இந்த இலகு நிலையை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை.
இது அவளிடம் பயத்தினால் உண்டான தவிப்பிற்கான மன அமைதிக்காக ஏற்பட்ட நிலை என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், மேற்கொண்டு எதையும் ஆராயாது அவளை தன் தோள் தாங்கியவாறு அமர்ந்திருந்தான்.
“உன்னைய நிறைய கஷ்டப்படுத்துறேன்ல மாமா?”
இப்போது எதற்காக இந்த கேள்வியென்று மனதில் நினைத்தானேத் தவிர அவளிடம் கேட்கவில்லை.
“எனக்கே புரியுது. என்ன பண்ணட்டும் தெரியல” என்றவள், “நீயி சாப்பிட்டியா மாமா?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் நல்லா நெறையவே உண்குனேன்” என்றவன், “இப்போ இது சரியான நேரமா தெரியல. மதியானமே வாங்கிப்புட்டேன். வூட்டுக்கு நீயி வந்ததும் கொடுக்கணும் இருந்தேன். அதுக்குள்ள என்னென்னவோ நடந்துப்போச்சு” என்று தன்னுடைய சட்டை பையில் கை விட்டான்.
“கொலுசு அறந்துப்போச்சு சொன்னியே! மயில் கொலுசு கம்ப்யூட்டர் டிசைனாம்… எப்போவாவது சிங்கிள் பீஸ்’தேன் வரும். அதான் நானே கஸ்டமைஸ் பண்ணி செஞ்சுத்தாரா சொல்லியிருந்தேன். இன்னைக்குத்தேன் கொடுத்தாய்ங்க” என்றவன் கொலிசினை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
மீனாளுக்கு சிறு வயதிலிருந்தே மயில் வடிவம் கொண்ட கொலுசின் மீது தான் விருப்பம். அந்த வடிவம் தவிர்த்து வேறெதையும் போட மாட்டாள். இப்போதும் கொலுசு அறந்து போயிருக்க, நாச்சிக்கு நகை செய்திட கடைக்கு சென்ற போது, மகா நான்கைந்து கடைகள் ஏறியிறங்கி விட்டார். கிடைக்கவில்லை. அதனால் இன்னமும் கொலுசு போடாமல் தான் இருந்தாள்.
மெல்லிய நெளிவு கம்பியான வடிவத்தில் கொக்கி சேருமிடத்தில் நீண்ட தோகை கொண்ட இரு மயில்களின் அலகுகள் ஒன்றோடொன்று தொட்டுக்கொண்டு இருப்பதைப்போலிருந்த கொலுசின் நடுவில் வட்ட வடிவில் ஒற்றை கெம்புக்கல் பதித்து அதனில் மூன்று மணி முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன… மயில்கள் அளவான அளவில் அத்தனை அழகாக இருந்தது.
பொங்கல் அன்று தற்செயலாக சொல்லியது. வேண்டுமென்றுகூட கேட்கவில்லை. தனக்கு பிடித்தது கிடைக்கவில்லையென்றாலும் தனக்காக மெனக்கெடல் செய்து வாங்கி வந்ததில் தெரிந்த அவனின் அன்பு அவளை எப்போதும்போல் நெஞ்சம் நிறைய வைத்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவள்.
எங்கே அவளின் பாதத்தை இழுத்து தன் மடியில் வைத்து கொலுசினை தானே போட்டுவிட்டு விடுவோமோ என்கிற மனதின் ஆசை அவனை நிலைக்கொள்ளச் செய்திட… உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவன் திரும்பி நின்றவனாக,
“செத்த நேரம் கண்டதையும் நெனைக்காம படுத்து எந்திரி. நான் வாரேன்” என்று வெளியேறிவிட்டான்.
திடீரென வீரனின் குரலில் ஏற்பட்ட மாறுபாட்டை உணர்ந்த மீனாள் என்னவென்று ஆராயும் முன்பு மருதன் வந்தார்.
வெளியில் திண்ணையில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் உறக்கம் வராது பலவற்றை யோசித்தபடி படுத்திருந்த மருதன், வீரன் வேகமாக அவன் வீட்டை நோக்கி செல்வதை கண்டு எழுந்து வந்திருந்தார்.
“ஆத்தா மீனாள்…”
“ஐயா!”
“ரொம்ப அஞ்சிட்டியோ?” என்று அவளின் தலையை பரிவாய் வருடியவராகக் கேட்டார்.
மீனாளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீரன் தான் அவளின் மொத்த திடமுமென்று நடந்த நிகழ்வில் உணர்ந்திருந்தாளே! திடம் மட்டுமா? அவனிடத்தில் மட்டுமே தான் தானாக இருக்க முடியுமென்பதையும், இத்தனை நாள் அவனை விலக்கி வைத்திட அவள் சொல்லிய காரணம் ஒன்றுமேயில்லை என்பதையும் அறிந்திருந்தாளே!
மீனாள் மௌனமாக தனக்குள் தான் உணரும் மாற்றங்களை எண்ணியவாறு இருந்திட…
மெல்ல தன் சொல்லால் அவளின் தலையில் இடியையும், இதயத்தில் ஈட்டியையும் இறக்கியிருந்தார் மருதன்.