பிரேம் அன்று தான் பெங்களூரிலிருந்து வருகிறான். நாச்சிக்கு நலங்கு முடியும் நேரம், பெரியவர் ஒருவர் பேசிய விளையாட்டுப் பேச்சுக்கு வசந்தி தன் முகத்தை காட்டிச் சென்றிருக்க… அந்த சூழலில் யார் யாருக்கென பார்ப்பதென்று தெரியாது ஒருவர் முகம் ஒருவர் பார்த்தபடி இருக்க…
“மதுரை வந்துவிட்டதாக” பிரேமிடமிருந்து வீரனுக்கு அழைப்பு வர, லிங்கத்தை அழுத்தமாக பார்த்துவிட்டு வீரன் மதுரை கிளம்பிவிட்டான்.
“நாச்சியை உள்ளார கூட்டிட்டுப்போ மீனாள்.” அபிராமி சொல்லிட அழுத விழிகளை துடைத்தபடி நாச்சியை மீனாள் அழைத்துச் சென்றிட, என்ன செய்வதென்று தெரியாது செல்லும் மீனாளையே பார்த்தவாறு நின்றிருந்த லிங்கத்தின் தோளில் இடித்த அங்கை…
அவனின் தோள் மீது கையை வைத்து நின்றவளாக, மற்றொரு கையால் பொடி கற்கண்டை வாயில் போட்டவாறு,
“மாமாக்கும் அக்காக்கும் வூடால ஏதும் சம்த்திங் சம்த்திங் இருக்குமாட்டியே மாமா!” என்றாள்.
தன்னை இடித்தவாறு கற்கண்டில் கண்ணாக நிற்பவளை மேலும் கீழும் பார்த்தவன், தன்னுடைய உயரத்தை சற்றே குறைத்து நகர, அவனின் தோள் மீது கை வைத்திருந்தவள் தடுமாறி நிலைபெற்றாள்.
“சும்மா சின்னபுள்ளைன்னு சொல்லாத மாமா… எல்லாம் உன்னை கட்டிக்கிடுற வயசு தான்” என்றிட, அடிக்க கையை ஓங்கியிருந்தான். அவள் மிரண்டு பார்க்க, தன் நெற்றியில் தட்டியவனாக சுற்றி யார் இருக்கிறார்கள் என்று பார்வையை சுழற்றினான். இடமே காலியாக இருந்தது. உறவினர்கள் அனைவரும் சென்றிருக்க, அபிராமியும் மீனாட்சியும் கூட மகாவுடன் மீனாளின் நிச்சய வேலையை கவனிப்பதற்காக மருதனின் இல்லம் அப்பவே சென்றிருந்தனர்.
எப்போதும் சின்னக்குட்டி என்று அவனது கைக்குள்ளே வைத்துக்கொண்டு சுற்றுபவன் இன்று அடிக்க வந்ததை அங்கையால் ஏற்கமுடியவில்லை என்பதைவிட நம்ப முடியவில்லை.
லிங்கம் கை ஓங்கியதிலேயே மரித்து உறைந்திருந்தாள்.
“அவனுக்கு டைம் கொடு சின்னக்குட்டி! நீயும் படிப்பை மட்டும் பாரு” வீரன் சொல்லியது காதில் ஒலித்தது.
‘மாமா சொன்னமாறி அவசரப்படாம ஸ்பேஸ் கொடுத்திருக்கணுமாட்டி’ என்று நினைத்தவளுக்கு, எப்போது சீண்டினாலும் பொறுமையாக எடுத்து சொல்பவன், இன்று அடிக்கவே கை நீட்டியிருக்கிறான் என்றால் அவனால் எப்போதும் தன்னுடைய நேசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதானே உண்மை என தனக்குத்தானே நினைத்து மருகியவள், நாச்சியும் மீனாளும் இணைந்துவர முகத்தை சீர் செய்து அவர்களுடன் சென்றாள்.
சிறு பிள்ளை என்பது அவளின் தவறான கணிப்பே எடுத்துக்காட்டுகிறது. இதனை நாம் சொன்னால் ஏற்கும் ஆளா அங்கை.
‘மீனாள் மற்றும் வீரனின் காதலில் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே! தன் கண் முன்னே தன்னுடைய உடன் பிறந்தவனின் சந்தோஷம் காணமல் போகவிருக்கிறதே!’ என்று முதல் நாள் இரவிலிருந்து ஒருநிலையில்லாது உழன்று கொண்டிருந்த லிங்கத்திற்கு, அன்றைய நிகழ்வின் முடிவில் நடைபெற்ற பேச்சினை ஏற்றுக்கொள்ள முடியாது, இருவரையும் சேர்த்திட ஏதும் வழிகிடைக்காதா என மண்டையை உருட்டிக்கொண்டிருந்தவனிடம் வந்து அவனின் மனம் அறியாது அங்கை விளையாடியிருக்க… தன்னுடைய ஆற்றாமையை அவளிடம் காட்டிவிட்டிருந்தான் லிங்கம்.
சொல்லப்போனால் அவனின் மனமும் அங்கையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
அன்று தென்னந்தோப்பில் வைத்து லிங்கம் இது சரிவராது என்று சொல்லியபோது அவள் அழுகையோடு பேசிய வர்த்தைகளிலேயே அவன் அவள் பக்கம் சரிந்திருந்தான். ஆனால் ஏனோ இந்த காதல் என்ற வார்த்தையில் அவனிடம் ஈடுபாடில்லை.
அங்கையை நிரம்பவே பிடிக்கும். வீட்டில் அவள் தான் உனக்கானவள் என்று திருமணம் ஏற்பாடு செய்தால் மறுத்திடாது மணந்து கொள்வான். அவள் காதலென்று பிதற்றுவத்துதான் அவனுக்கு கடுப்பாக இருக்கிறது.
அன்று அங்கை பள்ளியில் வைத்து சொல்லிய வார்த்தையில் மொத்தமாக அவளிடம் தன்னை தொலைத்திட்டான். ஆனால், காதலென்ற வரையறைக்குள் அதனை நிறுத்திட மறுக்கிறான்.
அங்கை கௌசிக்குடன் இயல்பாய் பேசுவதும் அவனுள் உரிமை உணர்வைத் தோற்றுவிக்கிறது. காரணம் புரிகிறது. இருப்பினும் காதலென்று கூவிடும் மனதை தட்டி வைக்கிறான்.
அங்கையை அடிக்க சென்றதை நினைத்து வருந்தியபடி, அவள் பக்கம் இழுக்கப்படும் தன் இதயத்தில் அவளின் காதல் சுவடுகளை அலசியபடி தென்னந்தோப்பினை கடந்து மருதனின் வீட்டிற்கு வந்து சேர்ந்த லிங்கம்,
‘மனசுல கெடந்து சலம்பாம மொத படிச்சு முடிடி சின்னகுட்டி. பொறவு வந்து சொல்லு… சந்தோஷமா ஏத்துகிடுறேன்’ என்று மனதோடு அவளிடம் உரையாடிவன் தன் காதலை ஒதுக்கி வைத்துவிட்டு, தன்னுடைய அண்ணனின் நேசத்தை சேர்த்து வைப்பதற்காக மருதனை தேடினான்.
மீனாள், கௌதம் நிச்சயம் இரு வீட்டு ஆட்களுடன் என்று மட்டும் முடிவு செய்து… மருதனின் வீட்டில் அதற்குண்டான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்க… மருதனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்கு பின்பக்கம் சென்றான் லிங்கம்.
என்னவென்று கேட்டபடி அவனின் இழுப்பிற்கு சென்ற மருதன்,
“என்னன்னு அங்கனவே சொல்ல வேண்டியதுதாம்டே! பொறத்தால எதுக்கு இழுத்துகிட்டு வர?” எனக் கேட்டார்.
“இந்த நிச்சயத்தை மொத நிறுத்து மாமா!” அவனின் குரல் அதிகாரமாக ஒலித்ததோ?
“என்னடே உன் அயித்த சொல்லி கேக்கலன்னுட்டு உன்னைய பேச சொன்னாளாக்கும்?” என்றார் சிரிப்போடு.
“அச்சோ மாமா” என்ற லிங்கம், “அண்ணேக்கு” என்று ஆரம்பிக்க…
“மாமா” என்று சத்தமாக கூப்பிட்டபடி வீரன் அருகில் வந்திருந்தான்.
“பிரேம் வந்துட்டியான். போய் பாருங்க” என்று மருதனிடம் தன் தம்பியை முறைத்துக்கொண்டே வீரன் சொல்ல…
“அவனை அந்த வேலையும் வேணாம், ஒன்னும் வேணாமின்னு இங்கனவே வர சொல்லணும். அவென் கல்யாணடத்துக்குக்கூட நாலு நாள் முன்ன வரான் பாரு” என்று பிரேமை திட்டிக்கொண்டே லிங்கத்தை மறந்தவராக உள்ளே சென்றுவிட்டார்.
“என்ன பண்ண நெனக்கிற நீயி?” வீரன் காட்டமாகத்தான் வினவினான். என்றும் தன் தம்பியிடம் அதிர்ந்துகூட பேசிடாதவன் அத்தனை கோபமாகக் கேட்டிருந்தான்.
“என்ன பண்ண சொல்றண்ணே! உனக்காக நீயும் எதுவும் கேட்டுக்கமாட்ட… மீனாளும் மனசு முழுக்க உன்னைய வச்சிக்கிட்டு அழ செய்றாளே தவிர எதுவும் பண்ணுவும்… வெரசா ஒரு முடிவெடுப்போன்னு எடுக்குறாளா? கண்ணுல அருவியை மட்டும் திறந்து விட்டுக்கிறா” என்று பொரிந்த லிங்கம், “அவ தான் ஏதோ வருத்தத்துல கம்மின்னு இருக்காள். நீயி ஏண்ணே இப்படி மௌனமா இருக்குற? நாளைக்கு உக்கி உக்கார போறது நீங்க ரெண்டேறும் தான்” என்றான்.
“எனக்காகன்னு என்னைய பேச சொல்றியே! நான் பேசி உன் மீனாக்குட்டி என்கிட்ட சொன்ன மாதிரி வேணாமின்னு சொல்லிட்டாக்கா? ரெண்டு குடும்பத்துக்கும் மனவலியாகிப்போவுமே!” என்றான் வீரன்.
“அதுக்கு?”
“எனக்கு வேணுமின்னு நான் அழுத்தமா சொல்லிப்புட்டேன். அவளுக்கு நான் வேணுமின்னா அவ தான் பேசணும்” என்றான் எங்கோ பார்த்தபடி.
“அண்ணே! வீம்பு புடிக்க இதுவா நேரம்?”
“எனக்கு என் தங்கப்பொண்ணு எம்மேல வச்சிருக்க அன்புல நம்பிக்கை இருக்கு லிங்கு. என்னையத்தவிர வேற யாரையும் அவ பக்கட்டுக்கூட நிக்க விடமாட்டாள். அவளுக்கு நான் என்னைக்கோ ஆத்திரத்தில் சொன்ன வார்த்தை தான் பெருசுன்னாக்கா அவ விருப்பப்படி என்னவும் பண்ணிக்கட்டும். நான் இல்லாட்டியும் அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குமாட்டில… அதை நான் கெடுக்க நெனக்கல, அதைவிட நான் முக்கியமின்னா என்னைய அவ ஏமாத்திப்புடமாட்டாள்” என்றான். வீரனிடம் அத்தனை எதிர்பார்ப்பு. கடைசி நொடியிலாவது நடப்பதையெல்லாம் நிறுத்திவிடுவாளென்று.
வீரனின் நினைப்பை மீனாள் உண்மையாக்கிடுவாளா?
“எனக்கு நம்பிகையே இல்லை. ஆக மொத்தத்துல ரெண்டேறும் சந்தோஷமா இருக்காம… குடும்பத்தையும் பதற வைக்கப்போறீய்ங்க” என்றபடி லிங்கம் சென்றிட…
நேற்று மாலை இயல்பாய் தன்னிடம் ஆறுதலையும் அரவணைப்பபையும் தேடிய மீனாளின் நெருக்கம் அகவிழித் தோன்றி வீரனின் நம்பிக்கையை அதிகரித்தது.
மகா வேண்டா வெறுப்பாக அனைத்தையும் செய்து கொண்டிருக்க, வசந்தி படு உற்சாகமாக நிச்சயத்துக்கு வேண்டியவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.
கௌதம் இதற்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லையென்று தேமேவென நல்லானின் அருகில் அமர்ந்திருந்தான்.
வந்ததும் மருதனிடம் பேசுவதற்கு அவன் பார்க்க… அவரோ நாச்சியின் நலங்கிற்கு சென்றுவிட்டார். அங்கு சென்று என்ன செய்வதென்று கௌசிக்குடன் இங்கேயே இருந்த கௌதமிற்கு இந்நொடி வரை மருதனிடம் பேசிட வாய்ப்புக்கிட்டவில்லை.
மீனாளுக்கு தன் காதல் தெரிந்திருக்க அவளேதும் செய்துவிடுவாள் என்கிற கடைசி நம்பிக்கையுடன் நடப்பதை எதிர்கொள்ளும் துணிவுடன் இருக்கிறான்.
தன்னைமீறி ஏதும் இன்றைய நிகழ்வு நடந்துவிட்டாலும், மருதனிடம் இன்றே பேசிட வேண்டுமென்ற முடிவில் உறுதியாக இருக்கிறான். கௌதமால் அவனுடைய தாய், தந்தையாரிடம் தானே பேசிடமுடியாது. மருதன் புரிந்துகொள்வார் என்கிற எண்ணம்.
லிங்கம் மீனாளின் அறையில் கண்ணாடி முன்பு அமர்ந்திருந்த அவளை முறைத்துக்கொண்டிருந்தான்.
“என்ன முடிவு பண்ணியிருக்க நீயி?”
“மாமா!” மலுக்கென கீழே சொட்டிய விழி நீருடன் அவனை ஏறிட்டாள்.