லிங்கம் நடைபெறும் நிகழ்வை ஏற்க முடியாது வீரனின் அருகில் கடுப்புடன் அமர்ந்திருந்தான்.
மனதில் தன்னுடைய உடன்பிறப்பை நிந்தித்துக் கொண்டிருந்தான்.
‘சாகுற நேரம் தெரிஞ்சாக்கூட இப்படி சிரிச்சிகிட்டே இருப்பாங்கப்போல’ என நினைத்தவன், தனக்கு மற்றைய பக்கம் உட்கார்ந்திருந்த கௌதமின் தொடையில் வலிக்க கிள்ளியிருந்தான்.
கௌதம் திடீரென ஏற்பட்ட வலியில் ஆவென்று கத்திட… அனைவரும் அவனை என்னவென்று ஏறிட்டனர்.
“என்னாச்சுடே?” என்று நல்லான் கேட்க…
“சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் பெரிப்பா” என்று பற்களை கடித்தபடி உதட்டை இழுத்து வைத்து கௌதமின் தொடையில் அடித்தவனாக லிங்கம் கூறிட… அவர்களுக்குள் ஏதோ விளையாடிக் கொள்கிறார்களென்று அனைவரும் வேலையை கவனித்தனர்.
“எதுக்குடே இப்படி படுத்துற?” தொடையை தேய்த்துக்கொண்டே கௌதம் கேட்க,
“நீயி மீனாளை கட்டிக்கிட சம்மதிச்சு நிச்சயம் பண்ண உட்கார்ந்திருக்கன்னு சுபாவுக்கு தெரியுமா?” என வினவிய லிங்கத்தின் பார்வையில் அத்தனை சூடு.
“ம்ப்ச்” என்ற கௌதம், ‘ஏற்கனவே தானிருக்கும் கடுப்பு தெரியாது இவன் வேற’ என நினைத்தவனாக “உனக்கு எப்படி தோணுதோ அப்படியே வச்சிக்கடே. செத்த என்ன நிம்மதியா வுடு” என்றான்.
லிங்கத்திற்கு அவனை தூக்கிப்போட்டு மிதிக்க வேண்டும் போலிருக்க…
“செத்த வாப்பெட்டியை சாத்திக்கிட்டு கம்மின்னு இருடே” என்ற வீரனின் அதட்டலில் கப்சிப் ஆகியவன், கௌதமை முறைத்துக்கொண்டே எழுந்து சென்று கௌசிக்கின் அருகில் அமர்ந்து கொண்டான்.
அங்கை எழுந்து செல்வதை கவனித்த பின்னரே, கௌசிக்கும் அங்கைக்கும் நடுவில் வந்து அமர்ந்தோமென்பதே லிங்கத்துக்கு உணர்ந்தது.
“ம்க்கும் ரொம்பத்தேன். எம் பக்கட்டு உட்கார மாட்டாங்களோ?” என்று அங்கயை முறைத்தவனுக்கு சில மணி நேரங்களுக்கு முன் அவளிடம் தான் நடந்துகொண்ட செயல் நினைவுக்குவர, ‘கோவமா இருக்கா போல’ என நினைத்துக்கொண்டான்.
“தேதி குறிச்சுட்டு சரியான நேரத்துக்கு வரேன் சொன்ன ஐயரை இன்னும் காணுமேட்டு அமிழ்தா. செத்த என்னான்னு போனை போட்டு கேளு அப்பு” என்று மருதன் சொல்லிட, வீரன் அலைப்பேசியில் ஐயருக்கு அழைப்பு விடுத்தவனாக எழுந்து வெளியில் சென்றான்.
அவர் வந்து கொண்டிருப்பதாக சொல்லிட, அலைப்பேசியை அணைத்து சட்டை பையில் போட்டவனாக வீரன் திரும்பிட பாண்டியன் நின்றிருந்தார்.
“ஐயா!”
பாண்டியனின் முகம் சுருங்கியிருந்தது.
“உனக்கு ஒன்னும் வெசனம் இல்லையே சாமி?” என்று மகனின் கரம் பற்றி வினவினார். பிள்ளையின் ஆசை தெரிந்தும், தானே வேண்டாமென்று சொல்லிவிட்டோமே என்கிற வருத்தம் அவரிடம். அதோடு அவன் முதன் முதலில் விருப்பமென்று நினைத்தது மீனாளாகத்தான் இருக்கும். அதற்கு தடையாக தானே நின்றுவிட்டோமே என்கிற வாட்டம். எங்கே மகன் உள்ளுக்குள் மருகிக் கொண்டிருக்கின்றானோ என்கிற அலைப்புறுதல் வீரனிடம் அவ்வாறு கேட்க வைத்தது.
மனதில் வலி பரவிக் கொண்டிருந்தாலும், லிங்கத்திடம் சொல்லியது போல் வீரனிடம் இந்நிகழ்வு நடைபெறாது எனும் ஏதோவொரு நம்பிக்கை. அந்த திடத்தில் அவனால் இயல்பாகவே இருந்திட முடிந்தது.
“ஐயா நான் நல்லாதேன் இருக்கேன். நான் வெசனப்படுறனோன்னு நீங்க வருந்திக்காதீங்க” என்றவன், “எனக்குன்னா என் கைக்கு தானா வருமாட்டி” என்றான்.
இறுதியில் வீரன் சொல்லியது அவருக்கு புரியாதபோதும், மகன் எப்போதும்போல சாதரணமாக இருக்கின்றான். அதுவே போதுமென்று நினைத்த பாண்டியன்…
“உனக்கு ஒரு குறையும் வராது அப்பு” என்று வீரனின் தாடையை வருடியவராக பாண்டியன் உள்ளே செல்ல, லிங்கம் வீரனின் அருகில் வந்தான்.
“அதேன் செத்த முன்னுக்க அவருக்கிட்ட சொல்ல பார்த்தியாக்கும். வசந்தி பெரிம்மா என்ன நெனச்சு காய் நகர்த்துறாய்ங்க தெரியாது. ஆனால் மாமாவுக்கு என்னால ஒரு சங்கட்டம் வந்துடக்கூடாது” என்ற வீரன் வேகமாக உள்ளே சென்றுவிட்டான்.
லிங்கம் தனக்கு பக்கவாட்டில் இருந்த மர தூணினை அழுத்தமாக பார்த்தான்.
‘முட்டிக்கணும் தோணுதா?’ அவனின் மனம் கேட்டிட, முட்டுவதற்கு முன்பே நெற்றியை தேய்த்தவனாக…
நாச்சி அவன் பக்கம் கூட திரும்பாது மகா மற்றும் அபிக்கு உதவியவளாக சுற்றிக் கொண்டிருந்தவள் வேலையெல்லாம் முடிந்ததும் மீனாட்சியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பே விடுமுறை எடுத்து வரசொல்லி நாச்சி கேட்டிருக்க… அவனோ நான்கு நாட்களுக்கு முன்பு வந்தது அவளுக்கு அவன்மீது சடைப்பை உண்டு செய்திருந்தது.
“காதலிக்க சமயமே கிடைக்கல கல்யாணத்துக்கு முன்னுக்கவாவது கொஞ்சம் லவ் பண்ணிப்போமே. சீக்கிரம் வாப்பா ப்ளீஸ்” என்று நாச்சி கேட்டபோதெல்லாம் பிரேம் தன் வேலையை காரணமாகக் காட்டிட, அவளுக்கு உள்ளுக்குள் குமைந்தது. நாள் நெருங்க நெருங்க பிரேம் வரமாலிருக்க அவனுடன் போனில் பேசுவதை நிறுத்தியிருந்தாள். நாச்சிக்கு பிரேமின் சூழல் புரிந்தாலும், காதல் கொண்ட மனதால் அதனை ஏற்கத்தான் முடியவில்லை. அவன் வந்து அவனை கண்டதும் கோபம் மறைந்திருந்தாலும் தன் பின்னேயே அவன் சுற்றுவது அவளுக்கு உள்ளுக்குள் ஒருவித குளிர்வை உண்டாக்க அதனை நீட்டித்துக் கொண்டிருக்கிறாள்.
“கட்டிக்கப்போறவன் பின்னுக்கு சுத்தி சுத்தியே வாரதுல சுகம் இருக்கத்தேன் செய்யும். அதுக்குன்னு ரொம்ப சுத்த வுட்டுடக் கூடாதுத்தா” என்று மீனாட்சி நாச்சியை பாராது கூறிட, நாணமாக அவர் தோளிலேயே சாய்ந்தவள், “அப்பத்தா” என்று சிணுங்கிட…
“எம் பார்வையில் எல்லாம் அம்புட்டுக்கும்” என்று பேத்தியின் கன்னம் தட்டினார்.
நாச்சி அவரையே பார்த்திருக்க…
“என்னட்டி பார்வை?” என்று வினவினார்.
“எல்லாமே அம்புட்டுக்குமின்னா… வீராண்ணே மீனாளை நேசிக்குதுங்கிறதும் அம்புட்டிருக்கும்ல அப்பத்தா?” என்று கேட்டிட அவருக்கு நெஞ்சுக்குள் அத்தனை அதிர்வாக இருந்தது.
“நாச்சியா…” ‘தன்னுடைய அனுமானம் உண்மையா இருந்து தனது பேரனுக்கு வலியை கொடுத்திடாதே’ என்று காலையில் தான் வீட்டிலிருக்கும் ஆளுயர மீனாட்சி அம்மனின் புகைப்படம் முன்னின்று அத்தனை வேண்டியிருந்தார். ஆனால் நடக்க வேண்டியது நடந்துதானே ஆகும்.
‘மகா இரவு சொல்லியதை கேட்டிருக்க வேண்டுமோ? வீரன் சம்மதம் சொல்லித்தான் இது நடக்குதுன்னு மெத்தனமா இருந்தது தவறோ?’ என்று இப்போது வருந்துவது பலனில்லை எனத் தெரிந்தும் வருந்தினார்.
“இப்போ எப்படிட்டி? ராத்திரி மருதன் வசந்திக்கு அழைக்கும்போது நீயும் இங்கனத்தானே படுத்திருந்த. அப்போவே சொல்லியிருக்கலாமே? மருதன் மறுத்திருக்க மாட்டியான். அப்போவே எதாவது ரோசிச்சிருக்கலாம். இப்போ வசந்தி ஆடாத ஆட்டம் ஆடிப்புடுவாளே!” என்று நெஞ்சில் கை வைத்தார்.
“நான் முழிச்சிருந்தாக்கா கண்டிப்பா சொல்லியிருப்பேன்” என்றவள், “காலத்துக்கும் உம் பேரன் உக்கி நிக்குறதை பாரு” என்று கோபமாக சொல்லிவிட்டு உம்மென்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.
மீனாட்சி ஒன்றும் செய்ய முடியாது தன்னுடைய மூத்த செல்ல பேரனின் முகத்தையே நொடிக்கு ஒருமுறை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
சில நிமிடங்களில் ஐயர் வந்துவிட, அடுத்தடுத்து நடக்க வேண்டியவை நடந்து கொண்டிருக்க…
“மாப்பிள்ளையை சபையில கூப்பிட்டு உட்கார வையுங்கோ” என்றார்.
“பிரேம் கௌதமை கூட்டியாந்து இங்கன உட்கார வைய்யீ” என்று அனைவருக்கும் முந்தி வசந்தி சொல்லிட…
“ம்க்கும்… ரெண்டடி இடத்துல நீயா போயி உட்கார முடியாதாடே. உன்னைய ஒரு ஆளு கூட்டிட்டு போவனுமாட்டிக்கு” என்று லிங்கம் முணங்கிட…
“சுபாவை என்னைக்கும் நான் ஏமாத்திடமாட்டேன். சும்மா என்கிட்ட மூஞ்சியை காட்டிட்டு இருக்காதடே” என்று லிங்கத்திற்கு மட்டும் கேட்கும் விதமாக சொல்லிவிட்டு கௌதம் ஐயருக்கு முன்பு அவர் காட்டிய இடத்தில் அமர்ந்தான்.
“உங்க வழக்கத்துல நிச்சயத்துல பொண்ணு பையன் மாலை மாத்திப்பாய்ங்களா?” என்று ஐயர் கேட்டிட, மீனாட்சி அதெல்லாம் இல்லையென்று சொல்லவர, ஆமாமென்று வேகமாகவும் சத்தமாகவும் சொல்லியிருந்தார் வசந்தி.
மருதன் ஏதோ சொல்லவர, நல்லான் அவரின் கையை பிடித்து தடுத்துவிட்டார்.
“அவளுக்கு மாலை மாத்திக்கிறதை பார்க்க ஆசையாட்டுக்கு. இப்போ இதெல்லாம் சகஜம் தானே! மறுக்க வேண்டாம் வுடு மருதா” என்று நல்லான் சொல்ல, அவரை எதிர்க்கும் துணிவு மருதனுக்கு என்றும் இருந்தது இல்லையே! மௌனமாகிவிட்டார்.
“அப்போ பொண்ணையும் கூட்டியாந்து பையன் பக்கட்டு உட்கார வையுங்கோ” என்று ஐயர் சொல்லியதும், “நானே போயி எம் மருமவள கூட்டியாறேன்” என்று திரும்பிய வசந்தி மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிர்வை வெளிப்படுத்தினர்.
அந்த அதிர்வு வீரனுக்கு மட்டுமில்லை போலும். எதிர்பார்த்தேன் என்பதைப்போல் முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாது பார்த்தான்.
லிங்கத்தின் மகிழ்வுக்கு அளவே இல்லை. அத்தனை பிரகாசமாக, யாரும் பார்க்கும் முன் தன் நீண்ட இதழ் விரிப்பை மறைத்துக்கொண்டான்.
எவ்வித அலங்காரமும் செய்து கொள்ளாது. காலை நாச்சி நலங்கிற்காக கட்டிச்சென்ற சாதாரண தாவணி பாவடையிலேயே படியிறங்கி வந்து நின்றாள் மீனாள்.
“என்னத்தா இப்படி வந்து நிக்குற? அதுவும் நீயா வந்துபுட்ட? நான் குடுத்த சீலையை உடுத்தலையா நீயி?” என்று வசந்தி அவசரமாகக் கேட்டிட…
“நான் கொஞ்சம் பேசணும் அத்தை” என்றாள் மீனாள். அனைவரையும் பார்த்து.
“என்ன பேசணும் நீயி?” என்ற வசந்தி மீனாளின் புஜத்தை அழுத்தமாக பிடித்து ஆத்திரமாக வினவினார்.
மீனாள் வந்து நின்ற தோற்றமே மகளுக்கு இதில் விருப்பமில்லை என்பதை உணர்த்திட, மகா அபிராமியின் கையை பற்றி…
“மீனாளு வாயிலிருந்து வேண்டாமின்னு மட்டும் வரட்டும். இதையே சாக்கா வச்சு அந்த வசந்தியை ஆஞ்சிப்புடுறேன்” என்ற மகாவின் பேச்சில் வந்த சிரிப்பை அபி கட்டுப்படுத்திக்கொண்டார்.
“அவுச்… அத்தை கையை விடுங்க” என்று மீனாள் முகம் சுருக்க…
“வசந்தி” என்று மருதன் முன்வர,
“சின்னப்புள்ளை… பார்த்து பதுவிசா நடந்துக்குங்க மதினி” என்றிருந்தார் மகா.
“கல்யாணம் கட்டிக்கொடுக்க ரெடியாகியாச்சு. இவள் சின்னப் புள்ளையா?” என்ற வசந்தி,
“மொத நிச்சயம் நடக்கட்டும் பொறவு நீயி பேச வேண்டியதைப் பேசு” என்று மீனாளை இழுத்து கௌதமின் அருகில் உட்கார வைக்க முயன்றார்.
வசந்தியின் முன்பு மருதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒன்றென்றால் வசந்தி நூறாக திரித்திடுவாரே. உறவே வேண்டாமென்று சென்றிடுவாள் என்கிற பயம் அவருக்கு.
“அய்யோ அத்தை வுடுங்க” என்று வசந்தியின் கையை வேகமாக உதறி…
“எனக்கு வீரா மாமாவைத்தேன் கட்டிக்கிடணும்” என்று வீடே அதிர கத்தியிருந்தாள் மீனாள்.