பிரேமின் வார்த்தையில் அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த நேசமெல்லாம் பீறிட்டுக்கொண்டு வெளியேறத் துடித்திட, நாச்சியின் கண்கள் மழையென பொழிந்தன.
அவளின் கண்ணீரே மற்றவர்களுக்கு அவள் மனமும் பிரேமை விரும்புகிறது என்பதை காட்டிக்கொடுத்திட்டது.
வீரன் பாண்டியனை பார்க்க…
மகனின் பார்வையில் பொருள் புரிந்த பாண்டியன் மருதனின் கையினை பற்றிக்கொண்டார்.
இந்நிகழ்வு அன்றைய தினத்தை அனைவருக்கும் நினைவூட்டியிருந்தது. கனத்த கணம். கடக்கவே முயன்றனர்.
“உனக்கு உரிமையிருக்கு அப்பு. நீயி கேக்குற. அவளுக்கும், பெத்தவங்களுக்கும் விருப்பம் இருக்கணுமே” என்ற மீனாட்சி வீரனை பார்க்க, அவனோ சிறு தலையசைப்பில் தன்னுடைய சம்மதத்தை தெரிவித்தான்.
அடுத்து பாண்டியனிடம் கேட்க,
“என் மாமனுக்கு அவர் மகனை மருமகனா கொடுக்க விருப்பமின்னாக்கா. எனக்கு சம்மதம் தான்” என்றார்.
மருதனுக்கும் அந்த ஆசை உள்ளதே! நாச்சி பிரேம் திருமணம் மட்டுமா. அவரின் ஆசை வீரன், அவருக்கு மருமகனாக வர வேண்டுமென்கிற ஆசையும் அடியில் புதைத்து வைத்திருக்கிறாரே.
நடந்த நிகழ்வு ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்க… பிரேம், நாச்சி அவற்றை எளிதாக கடந்ததைப்போல் மீனாள் கடக்காது மருகி தவிக்கிறாள் என்பது அறிந்தே வீரனுக்குத்தான் மீனாள் எனும் எண்ணத்தை ஆசையை மறைத்து வைத்திருக்கிறார்.
மருதனுக்கு பிள்ளைகளின் ஆசையை தவிர்த்து வேறென்ன இருந்திடப்போகிறது.
“நாச்சிக்கு சம்மதமின்னா நாள் பார்க்கலாம்” என்றார் மருதன்.
“அபிராமி, மகா நீங்க ரெண்டேரும் என்ன சொல்றீங்க?” என்ற அப்பத்தா வீரனுக்கு நாச்சியை கண்காட்டினார்.
பெண்கள் இருவரும் முகம் மலர சம்மதம் தெரிவிக்க, வீரன் எழுந்து நாச்சியின் முன் அமர்ந்தான்.
“உம் மனசு இன்னைக்கு இல்லை, அன்னைக்கே எனக்கு தெரியும். அதனால் தானோ என்னவோ பிரேமிடம் இயல்பாட்டு என்னால இருக்க முடிந்தது. பழசு நிகழ்கால சந்தோஷத்துல மறந்துபோவும். மறக்க வைக்க பிரேமுடைய உன் மீதான அன்பு போதுமின்னு நினைக்கிறேன். உனக்கு அவன் மேலயும் அவன் அன்பு மேலயும் நம்பிக்கை இருந்தால் மட்டும் சரின்னு சொல்லு. கொஞ்சமே கொஞ்சம் பழைய வருத்தம் இருந்தாலும், இந்த கல்யாணம் வேண்டாம். பின்னாடி என்னைக்காவது நீயோ, அவனோ சொல்லிகாட்டிட்டீங்கன்னா… அங்க உங்க காதல் சொல்லாமலே செத்துப்போகும்” என்றான்.
வீரன் என்னவோ பேசியது அனைத்தும் அவனின் தங்கைக்காகத்தான். ஆனால், அவை யாவற்றையும் தனக்கும் பொருந்தும் வகையில் உள்வாங்கிக்கொண்டாள் மீனாள்.
வீரன் சொல்லுவது உண்மை வாக்கு. நாச்சியின் நிலையில் தானே மீனாளும் இருக்கின்றாள்.
“நீயென்ன சொல்லுவியோன்னு பய ரொம்ப நேரமாட்டு தவிக்கிறான். நீயி வாப்பெட்டி தொறந்து வார்த்தையா சொல்லிபுட்டின்னா, எல்லாருக்கும் திருப்தி. அது வேணான்னாலும் சரிதான்” என்ற வீரன் தங்கையின் இரு கைகளையும் தன் கரங்களுக்குள் பொத்திக்கொண்டான்.
நாச்சியின் கரங்கள் அத்தனை சில்லிட்டிருந்தது.
நாச்சிக்கு அன்றைய நிகழ்வு வரை பிரேமின் மீது நேசமென்பதில்லை. ஆனால் அவன் சொல்லிய தருணம், புரிய வைக்கத் தெரியாது சொதப்பி வீரனிடம் நன்கு வாங்கிகட்டிய நொடி, தன்னைப்போல் பிரேமின் தடத்தை காதலாக நெஞ்சில் பதித்தாள்.
பிரேமின் அன்றைய செயல் நினைக்கும் கணமெல்லாம் நடுக்கத்தையே கொடுக்க…
இன்று இந்நொடி நினைக்கையில், அவனை கணவனாக தன்னருகில் நிறுத்தி எண்ணிப்பார்க்கையில் அன்றைய கத்தலும், முகத் திருப்பலும் சிறுப்பிள்ளைத் தனமாக தோன்றியதோடு தித்திப்பாய் துளி சுவை அகம் நிரப்பியது.
வீரனின் முகத்திலிருந்து தனது விழிகளை அகற்றி தன்னையே தவிப்போடு படபடப்பாய் பார்த்திருக்கும் பிரேமின் மீது அழுத்தமாக நிலைக்கவிட்டவள்,
“சம்மதம்” என்று சொல்லிட, சிறுவர்கள் கத்தி அதகளம் செய்தனர்.
தன்னவளின் ஒளி கூடிய முகத்தை மிக அருகில் கண்ட வீரன், மூச்சு முட்டிட பட்டென்று பின்னந்தலையை கோதியவனாக எழுந்து லிங்கம் அருகில் சென்றிருந்தான்.
மருதனின் கண்கள் பனித்துப்போயின.
சிறியவர்களின் மனங்களில் வடுவாய் தங்கிவிட்ட நிகழ்வு, அவர்களின் நல்வாழ்விற்கு தடையாய் அமைந்திடுமோ என்று மருதன் கவலை கொண்ட நாட்கள் பல. இன்று அந்த கவலைகெல்லாம் விடுதலை கிடைத்தது போலிருந்தது.
‘இதேபோல் என் வீரனை மீனாளுக்கு முடிச்சு கொடுத்துப்புடு தாயே.’ மருதன் மனதார அந்த மதுரை மீனாட்சிக்கு வேண்டுதல் விடுக்க, வீரன் இருக்கும்போதே சந்தோஷத்தில் தன்னுடைய மாமனை ஆரத் தழுவியிருந்தார் பாண்டியன்.
“இப்போ இருக்க மாறியே கண்டுக்காம இருந்திடு மாமா” என்றாள் அங்கை.
“சின்னகுட்டி சொல்றதும் வாஸ்தவம்” என்ற லிங்கம், “இந்த மாமா மீனாளுக்கு அடுத்து ரொம்ப கேப் விடாமல் எனக்கொரு பொண்ணு பெத்திருக்கலாம். இவங்களுக்கு அடுத்து நீயும் மீனாகுட்டியும் ஜோடி ஆகிடுவீங்க. நான் மட்டும் சிங்கிலா எனக்கென பிறந்த தேவதை எங்கிருக்காளோன்னு ஊர் ஊரா தேடணும்” என்றான். சோகமாக.
“இப்போ மட்டும் என்னவாம். என்னைய கட்டிகிடு மாம்ஸ். நான் உன்னைய கண் கலங்காம வச்சி பார்த்துக்கிறேன்” என்று அங்கை கேலியாய் சொல்லிட, அவளின் தலையிலேயே கொட்டியிருந்தான் லிங்கம்.
“இதெல்லாம் விளையாட்டுப் பேச்சில்லை சின்னகுட்டி” என்று அதட்டியும் இருந்தான்.
“ஏனாம்? என் மாமன்கிட்ட நான் விளையாடுறேன்” என்று அப்போதும் அங்கை லிங்கத்தை சீண்டிட, வீரனுக்கு இது அங்கையின் வழமையான விளையாட்டுப்போல் தெரியவில்லை. அவளின் உள்ளத்தை தான் இப்படி கிடைத்த வாய்ப்பில் வெளியிடுகிறாள் என்பதை புரிந்துகொண்டான்.
“அங்கை…”
வீரனின் கூர்மையான விளிப்பில்,
“என்ன மாமா? அப்படியே விளையாண்டா என்ன தப்பு?” என்று வீரனிடமும் கேள்வி கேட்டாள்.
“விளையாட்டா மட்டுமிருந்தால் சரித்தேன்” என்ற வீரனை லிங்கம் அதிர்ந்து பார்க்க…
“அப்பத்தா என்னமோ பேசுது. அங்கன கவனி” என்று லிங்கத்தை திசை திருப்பினான் வீரன்.
வீரன் உட்பொருள் வைத்து பேசியதிலேயே அவன் தன்னை கண்டுகொண்டான் என்பதில் அங்கைக்கு வருத்தமோ பயமோ ஏதுமில்லை. எல்லாவற்றிலும் தனக்கு துணை நிற்கும் தன்னுடைய மாமா இதில் முட்டுக்கட்டை போடுகிறாரே என்று முகம் சுருங்கிப்போனாள்.
“பொங்கல் செண்டு பத்து நா(ள்) கழிச்சு தாம்பூலம் மாத்தி கல்யாணத்துக்கு தேதி குறிப்போம்” என்ற அப்பத்தாவின் சொல்லுக்கு அனைவரும் சம்மதம் தெரிவிக்க…
பிரேம் ஓடி வந்து வீரனை கட்டிக்கொண்டான்.
“தேன்க்ஸ் மாமா. தேன்க்ஸ்” என்று தழுதழுப்பாக மொழிந்தான்.
அன்றைய தினம் பிரேமின் மீது அதிக கோபத்தில் கொதித்ததும் வீரன் தான், அடுத்த நாளே பிரேமின் மனதை புரிந்துகொண்டு இன்று வரை அவனுக்கு நம்பிக்கையாய் இருந்ததும் வீரன் தான். நாச்சியின் விருப்பமும் பிரேமென்று தெரிந்ததால் கூட இருக்கலாம்.
“பொறவு… கொள்ள ராத்திரி ஆகிப்போச்சுதே! வூட்டுக்கு பொறப்படுங்க. காலையில சூரியன் பொங்க வைக்க வெள்ளன எந்திரிக்கணுமே!” என்று அப்பத்தா கூறிட, ஒவ்வொருத்தராக தங்களின் வீடு நோக்கி செல்லத் துவங்கினர்.
“மாமா நாச்சிகிட்ட பேசணுமே?”
மீனாள், அங்கையை கூட்டிக்கொண்டு மருதனும் மகாவும் தங்கள் வீடு செல்ல,
அபிராமிக்கும் அப்பத்தாவுக்கும் பின்னால் பாண்டியனும் சென்றிட, அண்ணன்களுடன் செல்ல பின் தங்கிய நாச்சியை கவனித்து வீரனிடம் கேட்டிருந்தான் பிரேம்.
“எம் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கோ? மொத அவள் என் கைக்குள்ள வரட்டும். அதுக்கப்புறம் யாருட்டையும் கேட்டு பேசணும் அவசையமில்லை” என்று முறுக்கினான் பிரேம்.
தங்கைக்கு காவல் நிற்போம் என்ற தம்பியை அண்ணன் இழுத்துச் சென்றான்.
அன்றைய படபடப்போ, பயமோ நாச்சிக்கு இன்று பிரேமின் அருகில் இல்லை.
“அழகு…”
பிரேமின் ஒற்றை அழைப்பிற்கு அவன் விழிகளை நேருக்கு நேர் சந்தித்திருந்தாள்.
“இப்போ பயம் ஏதுமில்லையே? போற உன் அண்ணேங்களை கத்தி கூப்பிட்டிட மாட்டியே?” என்றான் பிரேம். கிண்டலாகத்தான். பேச வேண்டுமென நினைத்தவனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.
அந்த நிகழ்வுக்கு பின் ஓரிரு மாதங்கள் மீனாள் வீரனின் முகம் கூட காணாது, அவனின் முன் வராது இருந்தாள். அதன் பின்னர் அப்படியிருக்க வீரன் விடவில்லை. உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் நீ என் முகம் பார்க்க வேண்டும். என்னிடம் பேசிட வேண்டுமென்று செயலால் வலியுறுத்தி, தன்னிடம் அவளை முன்னிறுத்தி விலகல் இல்லாமல் பார்த்துக்கொண்டான்.
ஆனால் நாச்சி பிரேமை மொத்தமாக தவிர்த்திருந்தாள். ஐந்தாண்டிற்கு பின் இன்று தான் அவன் முன் நிற்கின்றாள். அதனாலே பிரேம் அவ்வாறு வினவினான்.
நாச்சி இல்லையென்று தலையசைத்திட…
“ஜிவ்வுன்னு ஏறுது. இப்படி நீயி பக்கட்டு நிக்குறது. கொஞ்சம் முன்னுக்க என் கண்ணை பார்த்து சொன்ன சம்மதத்தை இப்போ சொல்லேன். கேட்கணுமாட்டி இருக்கு” என்றான்.
“பழசை எப்பவுமே பேசிடக்கூடாது. யார் மேல தப்போ சரியோ. அது இப்போ தேவையில்லை. உங்களை ரொம்ப பிடிக்கும். அந்த பிடித்தம் எல்லாத்தையும் சரி செய்திடுங்கிற நம்பிக்கை இருக்கு” என்றாள்.
நாச்சியே இவ்வளவு தெளிவா பேசும் போது பிரேமுக்கு வேறென்ன குழப்பம் இருந்திடப்போகிறது.
‘குடும்பத்திற்காக சரியென்கிறாளா?’ என்ற அவனின் உள்ளத்து கேள்விக்கு அவசியமில்லாமல் போயிருந்தது.
“நிஜமாவே பிடிக்குமா? அப்புறம் அன்னைக்கு ஏன் கத்துன?”
“இப்போ தான் அதை பத்தி பேச வேண்டாம் சொன்னேன்.” நாச்சியின் முகம் வாட,
“சரி சரி… இனி பேசமாட்டேன்” என்ற பிரேம், “ஒருமுறை கட்டிக்கவா? ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றான்.
“அண்ணேங்களை கூப்பிடணுமாட்டிக்கு!” நாச்சி மிரட்டிட பிரேம் தலைக்கு மேல் இரு கரம் கூப்பியிருந்தான்.
“அந்த மருத வீரய்ங்க மட்டும் வேண்டாம்த்தா. நான் கல்யாணத்துக்கு பொறவே எல்லாம் பண்ணிக்கிறேன்” என்று இப்போவே தன்னை அவளிடம் ஒப்புவித்தான்.
“சரி நான் போறேன்.” நாச்சி நகர, சட்டென்று கையை பிடித்திருந்தான்.
பட்டென்று பழைய பயம் உள்ளுக்குள் பிரவாகம் எடுக்க…
“அவீங்க உன் புருஷனாவ போறவைய்ங்க நாச்சி. உனக்கு அவிங்களை ரொம்ப பிடிக்கும்” என கண்களை மூடிக்கொண்டு மனதுக்குள் உருப்போட்டு அவனின் தொடுகைக்கு அசையாது விறைத்து நின்றவள், நொடியில் இயல்பாய் அவனது கரங்களில் பொருந்தியிருந்தாள்.
“இப்போ மொத்த பயமும் போயாச்சா?”
“அண்ணே பேச மட்டுந்தான் சொன்னாங்க!”
“அப்போ விட்றவா?”
“இன்னும் ஒரு நிமிசம்” என்று சொல்லியவள் பல நிமிடங்கள் சென்ற பின்னரே அவனிலிருந்து விலகினாள்