“நல்லான் நல்லாயிருந்தாக்கா நான் ஏன் ஒரண்ட இழுக்கப்போறேன். என் மாமனை மதிக்காமல் ஏவுன்னா, நான் என்னவும் செய்வேந்தான். யாருன்னுலாம் பார்க்கமாட்டேனாக்கும்” என்றான்.
“இம்புட்டு பாசமிருக்கே! பொறவு ஏன் மாமா இன்னும் தள்ளியே வச்சிருக்க. அவருக்கு நீதான் உசுரு மாமா!”
கலங்கிவிட்ட கண்ணீரை பிரேமுக்கு காட்டாது சட்டென்று திரும்பி நின்றுகொண்டான் வீரன்.
“அன்னைக்கு பிரச்சனையே என்னால் தான். அதுக்கு காரணமான எங்களையே சேர்த்து வைக்க முடிவாகிப்போச்சு. பொறவு இன்னமும் என்னமாட்டிக்கு ஐயா மேல உங்களுக்கு கோவம்?”
வீரன் இடையில் கைகளை குற்றி இருளில் தலையை உயர்த்தி தென்னை மரத்தின் உச்சியை பார்த்து, கண்ணீர் கீழே வழிந்திடாது முயன்று தேக்கினான்.
“இன்னுமாட்டிக்கு என்ன கண்ணு… மாமா நீயி ஒத்த வார்த்தை பேசிடமாட்டியான்னு நெதம் நெக்குறுகி வெதும்புராறு கண்ணா.” நாச்சி தோட்டத்து கதவு திறந்து உள் செல்லும் ஓசையில் என்னவென்று பார்க்க வந்த பாண்டியன், கட்டுத்தறி அருகில் இவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்டபடி நெருங்கினார்.
மகனின் வருத்தம் புரிந்தபோதும், பிரேமின் கேள்விக்கு எவ்வித பதிலும் சொல்லாது மௌனமாக நிற்பவனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள தானும் கேட்டார்.
“அன்னைக்கு ஒரு அப்பாவா பிரேம் பக்கம் நின்னது நியாயம் தான். அதே அளவுக்கு நாச்சியையும் அவர் மகளா நினைச்சிருக்கணுமே! எப்பவும் எங்களில் வேற்றுமை காட்டதவர் தானே? அன்னைக்கு மட்டும் என்னவாம்?” என்ற வீரன், “இங்கு அவர் என்னை அடிச்சாரு, வஞ்சிட்டாருங்கிறது விசயமில்லை” என்று நிறுத்தி… “அவருக்கு என்னை புரியும்” என்று வேகமாக சென்றுவிட்டான்.
“அவீங்களா ஒன்னு கூடுனாத்தான் ஆச்சு மாமா” என்ற பிரேம், “உங்களுக்கு எம்மேல வருத்தமில்லையா மாமா?” எனக் கேட்டிருந்தான்.
மௌனமாக சிரித்த பாண்டியன்,
“அன்னைக்கு உம்மேல அம்புட்டு கோபமா இருந்த அமிழ்தன்… அடுத்தநா(ள்)வே, உன்னை காலேசுக்கு பஸ் ஏத்திவிட மதுரைக்கை கூட்டிட்டு போனான். அம்புட்டு கோவமிருந்தும் உன்னோட ஒட்டுதலா இருக்காங்கிற போது, நான் மட்டும் விலக்கி வச்சு என்னாவப்போவுது. ஏதோ அறியாத வயசு புரியாம பண்ணிப்போட்ட, எங்களுக்கு நீங்க ஆறு பேரும் ஒண்ணுத்தான்” என்றவர் பிரேமின் தோளில் தட்டிச் சென்றார்.
வீரன் படுக்கையில் விழுந்த கணம் அவனது அலைப்பேசி அசைந்தது.
தங்கப்பொண்ணு என்று ஒளிர்வதை நம்ப முடியாது பார்த்தவன், அழைப்பை ஏற்றான்.
“போன போட்டு பேசாம இருந்தாக்க என்ன அர்த்தம்?”
இவன் இரண்டு முறை அழைத்தும் மீனாள் பிரதிபலிப்பின்றி இருக்க வழக்கம்போல் அதட்டி கேட்டிருந்தான்.
வீரனின் இயல்பே அதுதான். அதட்டலும், அன்பும்.
“மா…ம… மாத்திரை போட மறந்துடாதீங்க. களிம்பு தடவிட்டு படுங்க” என்றவள் உடனே அலைப்பேசியை வைத்தும் இருந்தாள். வீரனிடம் இதமான மெல்லிய புன்னகை.
அன்றைய தினம் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஆரம்பித்துவிட்டது மீனாட்சியின் குடும்பத்தாருக்கு.
அபிராமி பம்பரமாக சுழன்று பொங்கல் வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்.
“நாச்சி… ஏத்தா நாச்சி.” மீனாட்சி அழைத்திட குளித்து முடித்து புத்தாடை அணிந்து வந்த பேத்தியின் கன்னம் வழித்த அப்பத்தா,
“ஆத்தாவுக்கு கூடமாட ஒத்தாசை செய்யுத்தா” என்றார்.
“அம்மா நான் எப்படியிருக்கேன்?”
தாயிடம் புடவை அணிந்து வந்ததை தன்னை ஒரு சுற்று சுற்றி துள்ளளோடு வினவினாள் அங்கை.
“என் ராசாத்தி… அம்புட்டு அழகா இருக்கத்தா” என்றவர், “மதனிக்கு போனை போட்டு கெளம்பிட்டாகளா கேளு” என்றார்.
நேற்று சாமி கும்பிட்ட இடத்தில் தான் இன்றும் இரு குடும்பமும் ஒரு குடும்பமாக இணைந்து பொங்கல் வைப்பர். சூரியன் உதிக்கும் தருணம் படையல் வைத்திருப்பர்.
“ம்மா அத்தை வர சொன்னாய்ங்க” என்ற நாச்சி, அனைத்துப் பொருள்களையும் கூடையில் எடுத்து வைக்க அபிராமிக்கு உதவினாள்.
“இந்தாம்மா பொங்க வைக்க புது பாலு. இப்போதான் கரந்தது” என்று பெரும் பித்தளை சொம்பு நிறைய பாலினை கொண்டு வந்து கொடுத்தான் லிங்கம்.
“பெரிய மாட்டு பாலு தான?” அப்பத்தா கேட்டபடி வர,
“ஆமாம் அப்பத்தா அம்சா பால் தான்” என்று லிங்கம் நகர்ந்திட்டான்.
கட்டுத்தறியில் கட்டியிருக்கும் இருபது மாடுகளுக்கு மூத்தது அந்த அம்சா பசு தான். சொல்லப்போனால் அங்கிருக்கும் அனைத்து மாடுகளுக்கும் அந்த பசு தான் அன்னை. பல மாடுகள் விற்கப்பட்டாலும், அந்த பசுவை மட்டும் விற்காது அக்கூட்டத்திற்கு தாயாக வைத்திருக்கின்றனர். கரியன் கூட அம்மாட்டின் கன்று தான்.
மேய்ச்சலுக்கு செல்லும்போது கூட அம்சாவை பின்பற்றி தான் மற்றவை செல்லும்.
மீனாட்சி குடும்பத்தில் அவைகளும் ஒரு அங்கத்தினர் தான். சொல்லப்போனால் அவை யாவும் அவர்களுக்கு தெய்வம் போல். விவசாயிகளுக்கு மட்டுமே கால்நடைகளின் மகத்துவம் தெரியும்.
“எங்கடே அமிழ்தனை காண்கல?”
“அண்ணா காப்பு வளைக்க போயிட்டாங்க அப்பத்தா. நம்ம பண்ணைக்கே காப்பு வளைக்கணுமின்னா ரெண்டு மணி நேரமாவுமே. நாம செண்டு பொங்க வச்சி முடிய அண்ணே வேலையை முடிச்சிப்புடும்” என்ற நாச்சி, அபிராமி கூடையை தூக்கிட கை கொடுத்தாள்.
காப்பு வளைத்தல்… ஆவாரம்பூ, சிறுபீளை, வேப்பிலை, தும்பை, பிரண்டை, மாவிலை வைத்து சிறு சிறு கொத்தாக கட்டி வயல்களின் வரப்புகளில் நான்கு மூலைக்கும் வைப்பர். வீடுகளிலும் வாயிலில் முன் தோரணமாகக் கட்டுவர்.
“என்னத்தா போவமாட்டிக்கு!”
“போவலாம் பாண்டியா” என்ற அப்பத்தா முன் செல்ல மற்றவர்கள் அவர்களை பின் தொடர்ந்தனர்.
“இருட்டுல கண்ணு தெரியுதா அப்பத்தா. வரப்புல பாம்பு மேயப்போவுது. மிதிச்சிப்புடாதா” என்ற நாச்சியின் தோளில் இடித்த மீனாட்சி, “நான் சுத்தி திரிஞ்ச இடமட்டி. எங்க என்னயிருக்கும் தெரியாதாக்கும்” என்றார்.
“இவளை மின்ன மகா வூட்டுக்கு பத்தி விடணும் பாண்டியா. என்னாப்பேச்சு பேசுதா” என்ற மீனாட்சிக்கு தன்னுடைய பேரன், பேத்திகள் ஆறு பேரின் திருமணத்தையும் கண்ணாரா பார்த்துவிட வேண்டுமென்கிற ஆசை.
“எங்க மதனி மாமாக்கள் ரெண்டேரையும் காண்கல?” நாச்சியிடம் கேள்வி கேட்டாலும் அங்கையின் விழிகள் லிங்கம் தென்படுகிறானா என்று தான் அலைபாய்ந்தது.
“அதோ வராங்களே!” நாச்சி கை காட்டிட, துள்ளிக்கொண்டு லிங்கத்தின் முன் சென்று நின்றாள் அங்கை.
“ஹேய் சின்னகுட்டி என்னாதிது. தாவணிலாம் கட்டி பெரியப்பொண்ணு மாதிரி இருக்க?” என்று வியப்பாய் கேட்டான் லிங்கம்.
“எப்பவும் தாவணி கட்டமாட்டேன்னு அழிச்சாட்டியம் செய்றவ… இந்த முறை எடுத்த பட்டு பாவாடை சட்டை வேணாமின்னுக்கு, மீனாளுக்கு எடுத்தி தைத்த தாவணியை வம்படியா நின்னு கட்டிக்கிட்டாள்” என்றார் மகா. காலையில் அதற்கு ஒரு ஆர்பாட்டமே நடத்தியிருந்தாளே அங்கை. அந்த நினைப்பில் மலைப்பாக சொல்லியிருந்தார் மகா.
“உன் கண்ணுக்கு நான் பெரியப்பொண்ணா தெரியறேனா மாமா?” என்றவள், அவன் பதில் சொல்லும் முன்பே… “அதுதான் வேணுமாட்டிக்கு” என்றதோடு அவனின் சட்டை பையிலிருந்து அலைப்பேசியை எடுத்து அவனருகில் இணைந்து நின்று சுயமி எடுத்து, “நல்லாயிருக்கு மாமா” என்று மீண்டும் அவனது பையில் வைத்து நகர்ந்தாள்.
லிங்கத்துக்குத்தான் அவளது பேச்சு, நடவடிக்கை ஒன்றும் புரியவில்லை.
மற்றவர்களும் எப்போதும்போல் அவனிடம் உரிமையாய் விளையாடுகிறாள் என்று நினைத்தனர்.
மீனாள் லிங்கத்தின் அருகில் அவனமர்ந்திருந்த கயிற்று கட்டிலில் சென்று அமர,
“என்ன மீனாகுட்டி சோர்ந்து தெரியுற?” என்ற லிங்கம் அவளின் நெற்றியில் கை வைத்து பார்க்க, “தூக்கமா வருது மாமா” என்று அவனின் தோளில் மீனாள் சாய்ந்த நொடி, வேகமாக ஓடி வந்து இருவருக்கும் நடுவில் பொத்தென்று அமர்ந்தாள் அங்கை.
“நீ எம்மடியில தலை வச்சிக்கோக்கா” என்ற அங்கை, லிங்கத்தை பார்த்து பற்கள் தெரிய சிரிக்க…
“உன் செயல் ஒன்னும் பிடிப்படமாட்டேங்குது” என்ற லிங்கம்,
“பிரேம் வாடா… அப்படி நடந்துட்டு வரலாம். பொங்க வச்சப்போறவுதானே இங்கட்டு நமக்கு வேலை” என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றான்.
“கொடுத்துக்கோ அப்பத்தா. அண்ணேனவிட வேறென்ன வேணுமாட்டிக்கு எங்களுக்கு” என்று லிங்கம் சொல்ல, “மாமா ஒத்த ஆளுக்கு ஈடாவுமா அம்மத்தா உன் சொத்துபத்து” என்றிருந்தான் பிரேம்.
பிள்ளைகளின் இந்த ஒற்றுமை தானே அந்த குடும்பத்தின் ஆணிவேர். மீனாட்சிக்கு மட்டுமல்ல அங்கிருந்த பெரியவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்துவிட்டது.
வேற்றுமையில்லா இவர்களின் அன்பு தானே அடுத்த தலைமுறையின் ஒற்றுமைக்கு வேர். அது என்றென்றும் நிலைத்திருக்கவே அனைவரும் விரும்பினர்.
இருள் பிரியத் தொடங்கியது.
“பானையை வைக்கலாமா அத்தை. பொங்குறதுக்கும் சூரியன் கதிரு வீசவும் நேரம் சரியா இருக்கும்” என்ற அபிராமியின் பேச்சை மீனாட்சி ஆமோதித்தார்.
“இந்த பொங்கலை நாச்சி கையால வைக்கட்டும் அபிராமி” என்று மீனாட்சி சொல்ல அபியும், மகாவும் நாச்சிக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டு அப்பாத்தவின் அருகில் அமர்ந்துவிட்டனர்.
“ஒண்ணுல சக்கரை பொங்கலு, இன்னொண்ணுல வெம்பொங்கலு வைக்கணும்த்தா” என்க, அங்கு பொங்கல் செய்ய செங்கலால் வைக்கப்பட்டு அரிசி மாவில் கோலமிடப்பட்டு தயார் செய்து வைத்திருந்த அடுப்புகளில் இரு பானைகளை வைத்து கற்பூரத்தால் தீ மூட்டி பொங்கல் வைக்க ஆர்மபித்தாள் அழகு நாச்சி.