“இந்த வெல்லத்தை இடிச்சு கொடு” என்று இரண்டு கிலோ மண்டை வெல்லத்தை அவளின் கையில் திணித்தார்.
“வூட்டுல ஒரு வேலையும் செய்யுறது இல்லை. எப்போபாரு ஆம்பள பையன் கணக்கா, தோப்பு தொறவுன்னு சுத்தி வர வேண்டியது. திண்கிறது, தூங்கிறது” என்று அவளின் தலையில் கொட்டும் வைத்தார்.
“ம்க்கும்… நான் ஏன் வெளியில போறேன்…” என்று தோள் பட்டையில் முகவாயினை இடித்த அங்கை, “பொங்க வைக்கிற வேலையை பாப்போம்” என்று தன் மொத்த கோபத்தையும் வெல்லத்திடம் காண்பித்தாள்.
“நாங்க செத்த வாழை தோப்பு வரை போயிட்டு வாறோம். இலை கிழிக்க ஆள் வந்துட்டா தெரியல” என்று பாண்டியனும், மருதனும் வாழை தோப்பு பக்கம் சென்றனர்.
“கால் மணி நேரத்துல வந்திடுங்க. வரும்போது படையலுக்கு இலை கொண்டாங்க” என்று அபிராமி சொல்லிட தலையசைத்து சென்றனர்.
கரும்பு காட்டு பக்கம் வந்துவிட்ட மீனாள்… வீரன் எங்கிருக்கிறானென்று சுற்றி ஆராய்ந்தாள்.
கரும்பின் சோலைகள் நீண்டு வளர்ந்து அடர்ந்திருக்க…
‘உள்ளுக்க இருந்தாக்கா ஆளே தெரியமாட்டாரே! எங்கனம் இதுல தேடுறது?’ நான்கு பக்கமும் கரும்புகள் சூழ்ந்திருக்க, மையத்திலிருந்த வரப்பின் மீது நகத்தை கடித்தபடி பார்வையால் சுழன்றவள்,
‘கூப்பிட்டு பாப்போம்’ என்று…
“மாமா” என அழைக்க உதடு பிரிந்த நொடி கண்கள் இரண்டும் அகண்டு விரிந்திட, மூச்சு விடவும் அஞ்சியவளாக உறைந்து சிலையானாள்.
அவளின் முன்பு கரு நாகம் ஒன்று தலையை உயர்த்தி சீறியபடி அவளை உற்று நோக்கியது.
பயத்தில் நா வறண்டு தொண்டைக்குழி ஏறி இறங்கிட, அணிந்திருந்த பாவாடையை அழுத்தி பிடித்தாள்.
ஒரு அடி… அவள் முன் வைத்தாலும், பாம்பு முன் ஊர்ந்தாலும் சேதாரம் அவளுக்குத்தான்.
பின்னால் அடி வைத்திட முடியாது, அவளிடம் கொஞ்சம் அசைவு தெரிந்தாலும் என் பிளவு பட்ட நாக்கின் விஷத்துக்கு சொந்தக்காரி ஆகிவிடுவாய் நீயென்பதைப்போல் நாகம் சீறிக்கொண்டு இருந்தது.
‘அய்யோ மாமா…’ அந்நொடி கூட அவளுக்கு வீரனின் நினைப்புத்தான் வந்தது.
‘எங்க மாமா இருக்க? நான் பாம்புகிட்ட கடிபட்டு செத்திடுவேன் போலவே!’ என்று உள்ளுக்குள் அரற்றியவள்,
‘வீரா மாமா நானில்லாமல் வாழ்ந்திடுவியா? உன் தங்கப்பொண்ணு சாவப்போறேன்.’ மீனாளின் கண்கள் கண்ணீரை சுரந்திட்டது.
நாகம் தன் தலையை மேலும் சில அடி உயர்த்தி அவளின் பாதத்தை தீண்டிட, பின்னோக்கி கொண்டு சென்று முன்னோக்கி குனிய இருந்த நொடி…
‘இன்னைக்கு எல்லாரையும் பார்த்துபுட்டேன். உன்னை மட்டும் பார்க்காமலே போவப்போறேனே! மொத்தமா உன்னைவிட்டு போறேன்’ என்று மீனாளும் தன் மனதை திடப்படுத்திட,
திடீரென தோளில் பதிந்த கரத்தின் தொடு உணர்விலேயே யாரென்று அறிந்து உயிர் மீட்டவள்…
“மாமா பாம்பு” என்று வேகமாக திரும்பி அவனது மார்பு சட்டையை இரு கையாலும் அழுத்தமாக இறுகப்பற்றி கண்கள் மூடி தலை முட்டினாள்.
அவளின் செயலை எதிர்பாராத வீரன் நிலை தடுமாறி பின்னோக்கி வரப்பில் நெடுஞ்சாணாக விழுந்திட, அவனோடு சேர்ந்து அவன்மீதே சரிந்திருந்தாள் அவனவள்.
“பாம்பு… பாம்பு… பாம்பு மாமா…” விடாது அரற்றினாள்.
தங்கள் இருக்கும் நிலையை அவ்வேளையிலும் ரசித்த வீரன், மெல்ல தன் தலை உயர்த்தி பார்க்க…
இவர்கள் விழுந்த சத்தத்தில் நாகம் பின்வாங்கி கரும்பு சருகிற்குள் மறைந்தது. அதனது நீண்ட வால் மட்டுமே வீரனால் காண முடிந்தது.
பயத்தில் மீனாள் பாம்பென்ற முனகளோடு இருக்க… திறந்திருந்த பொத்தான் வழியாக அவளின் இதழ்கள் அவனின் மார்பில் சூட்டினை கூட்டிக்கொண்டிருந்தது.
தன்மீது மொத்தமாக விழுந்திருப்பவளின் தேக உரசலில் இதம் அனுபவித்த அதே கணம் அவஸ்தையையும் உணர்ந்தான்.
அவளை அணைத்திட துடித்த கைகளை முயன்று அடக்கி, வரப்பில் அழுந்த பதித்தவன்…
மெல்ல அவளின் முகத்தில் தன் அதரங்கள் குவித்து ஊதினான்.
தேகம் சிலிர்க்க விழிகள் திறந்தவள், நூலிழை நெருக்கத்தில் தன் முகத்தருகே தென்பட்ட தன்னுடைய மாமனின் முகத்தில் இமைக்க மறந்து, சுற்றம் மறந்து உறைந்து போனாள்.
மை பூசிய கரு விழிகள் இரண்டும் அவனின் முகம் விட்டு அகலாது அவனின் மனதை சதிராட வைத்தது.
“தங்கப்பொண்ணு…”
“மாமா!” அக்கணம் மீனாள் தங்களுக்கு இடையேயான தடையாகிய காரணங்கள் யாவற்றையும் மறந்தாள்.
மீனாள் இடை தாண்டிய கூந்தலை இரு பக்கமும் சிறு முடி கற்றையால் கட்டி படர விட்டிருக்க… இருவரையும் கார்குழல் போர்வையாய் போர்த்தியிருந்தது.
அவளின் கருவிழிகள் அவனது முகத்தில் நிலைக்குத்தி இருக்க… அவனது கருமணிகளோ அவஸ்தையாய் அலைபாய்ந்தது.
நெற்றியில் சின்னதாய் குங்கும நிறத்தில் சிறு புள்ளி. அதற்கும் மேல் கீற்றாய் மஞ்சள் கோடு. அம்முகத்தை வாழ்நாள் முழுக்க உள்ளங்கையில் வைத்து தெவிட்டாது பார்த்திருக்க பேராசை அவனுள் கிளர்ந்தது.
மூச்சு முட்டிட தவியாய் தவித்தான்.
தன் மேல் கிடப்பவளின் கனமெல்லாம் அவனுக்கு பொருட்டாகவே தெரியவில்லை. சாகும்வரை இந்நிலை நீடித்தாலும் சொர்க்கமே எனும் நினைவில் கட்டுண்டு கிடந்தான்.
“தங்கம்…”
“மாமா!”
“மொத்தமா அள்ளிக்கணும் போல இருக்குடி. உசுரை கொலையா கொல்லுற!” என்றான்.
வீரனின் வார்த்தைகளில் தான் சுயம் மீண்டவள், பதறி வேகமாக அவனிலிருந்து பிரிந்து எழ முயல, பதட்டத்தில் தடுமாறி மீண்டும் அவன் மீதே விழுந்தாள்.
“சாரி… சாரி… பாம்… ப்பா… பாம்பு வந்துச்சு. அதான் பயந்து” என்று தினறியவள் எழ முடியாது மீண்டும் மீண்டும் தடுமாற்றம் கொள்ள,
“ஹேய்… ரிலாக்ஸ்டாம்மா” என்று அவளின் இருபக்க புஜத்தையும் அழுந்த பற்றினான்.
வீரனின் இறுக்கமான பிடியில்,
அவனின் கண்களை அவள் நேர்கொண்டு சந்திக்க…
“பாம்பு போயிடுச்சு” என்றான்.
…..
“பாம்பைவிட என்னை பார்த்தால் பயமா இருக்கா?”
இல்லையென ஆடியது அவளது தலை.
“அப்போ கொஞ்ச நேரம் இப்படியே இரு. எனக்கு பிடிச்சிருக்கு. நீ என் பொண்டாட்டியா என் கைக்குள்ள வந்திட்ட கணக்கா இருக்காட்டிக்கு” என்றான். அத்தனை காதலை அவனது முகம் அவளிடம் பிரதிபலித்தது. அவனது குரலில் அத்தனை ரசிப்பு.
“ம்ம்ம்… வழுக்கிடுச்சு” என்ற வீரன் நொடியில் நாலைந்து கரும்புகளை வேறொடு பிடுங்கி அதன் சோலையாலே கட்டி லிங்கத்தின் கையில் கொடுத்தான்.
விழுந்துவிட்டேனென்று வீரன் சொல்லியதை நம்பாத லிங்கம் மீனாளின் படபடக்கும் விழிகளை கண்டு கொண்டான்.
‘என்னவோ நடந்திருக்கு.’ நினைத்தவன் முன்னே நடக்க,
“நில்லு மாமா மஞ்சளும் வேணுமாட்டி” என்றாள் மீனாள்.
“அண்ணே வூடே வாங்கிட்டு வா! நான் முன்னுக்குப் போறேன்” என்று திரும்பியும் பாராது லிங்கம் சென்றே விட்டான்.
வீரன் எதுவும் சொல்லாது வழிவிட்டு விலகி நிற்க… மீனாள் அவனைத் தாண்டி முன் சென்றாள்.
“பம்புசெட் வயலுக்கு போ. அங்கட்டு தான் மஞ்சள் இலை விரிஞ்சிருக்கு” என்றான்.
‘ம்’ கொட்டினாள்.
முதுகினை மறைத்து விரிந்திருந்த கூந்தலில் சூடியிருந்த மல்லிகைச்சரம் வீரனை சுண்டி இழுத்தது.
பட்டு பாவாடை சட்டையில் அவனது கண்களுக்கு குட்டி தேவதையாய் காட்சியளித்தாள்.
“ரொம்ப குட்டியா தெரியுற!”
“ஆங்.” அவனைத் திரும்பி பார்த்து முன் அடி வைத்தாள்.
“தாவணி உடுத்தலையா?”
….
“கொலுசு எங்க?”
‘என்கிட்ட இதெல்லாம் கவனிக்கிறாங்களா?’
முன்பெல்லாம் வீரன் இப்படி அவளிடம் பேசியது இல்லை. இரண்டு நாளாகத்தான். தன்னுடைய காதல் அவளுக்கு தெரிந்துவிட்டது என்றதற்கு பின் தான், இந்த சீண்டல் எல்லாம். வெளிப்படையாய்.
முன்பெல்லாம் பேச வேண்டிய தருணம் பேசுவான். அதுவும் அவளின் எட்ட நிற்பதலில் சுருக்கமாக இருக்கும் அவனது பேச்சு.
‘இந்த மாமா முன்ன மாறியே இருக்கலாம். பதில் சொல்லாமலும் இருக்க முடியல. பாதி புரியவு(ம்)மாட்டேங்குது.’ புலம்பியவளாக சென்றவளிடம்,
“கேட்டாக்கா பதில் சொல்லணும் தங்கம்” என்றான் அழுத்தமாக.
“ஹாங்… கொலுசு அறந்துப்போச்சு” என்றவள், காலை அங்கை செய்த கலாட்டாவால் இருவரும் ஆடை மாற்றிக்கொண்டதையும் கூறினாள்.
“அங்கை உன் அளவுக்கு வளந்துட்டாளா? இல்லை நீ அவள் அளவுக்கு குட்டியாவே இருக்கியா?” இப்போது வீரன் கேட்டது மீனாளுக்கு சுத்தமாகவே புரியவில்லை.
அங்கைக்கும், மீனாளுக்கும் நான்கு வருட இடைவெளி தானே! அதனால் இருவரும் அதீத வேற்றுமையின்றி காணப்படுவர். அத்தோடு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் மூத்தவளை காட்டிலும் இளையவள் சட்டென்று அவளுக்கு இணையாக வளர்ந்துவிடுவாள். அது தான் நியதியோ!?
வீரன் தன்னை உயரமில்லை என்று கேலி செய்வதாக நினைத்தவள் சட்டென்று நடையை நிறுத்தி, அவனருகில் பின் வந்து இணைந்து நின்றாள்.
வீரன் என்ன என்பதைப்போல் பார்க்க…
“நான் பொண்ணுங்க சராசரி உயரத்தை விடவும் கூடுதல் உயரம். வேணுன்னா பாருங்க, என் தலை உங்க நெஞ்சை தொடுது. நீங்க பனை மரம் கணக்கா ஆறடிக்கு மேல ஒசரமா வளர்ந்துட்டா, என்னைய மட்டம் சொல்லுவீங்களோ” என்றாள். அவனை பார்த்து அவலம் காட்டி.