தன்னுடைய தங்கப்பொண்ணு சொல்லிச்சென்ற வார்த்தையில் வலியை உணர்ந்த வீரனின் முகம் பட்டென்று வாட்டத்தைக் காட்டியது.
‘மெய்யாவே நான் உனக்கு வேணாமாடி?’ வாய்விட்டு கேட்டிட அஞ்சினான். அவள் ஆமென்று சிறு பார்வை பார்த்திட்டாலும் மரித்திடுவானே!
அவள் பல அடிகள் முன் சென்றிருக்க… எட்டி பிடிக்க பேராவல் முட்டி நின்ற போதும், பொறுமை காத்தான்.
அவனது தங்கம் அவளாக கை சேர வேண்டுமென்றே இந்த பொறுமை.
சட்டை பின்னால் சேறு படிந்திருப்பதாக லிங்கம் சொல்லியிருக்க, கழுட்டி பார்த்தான். அவ்வளவு இல்லை. புல்லின் ஈரம் தான் இருந்தது. ஆங்காங்கே திட்டாய் தெரிந்த சேற்றை வாய்க்கால் தண்ணீர் தொட்டு துடைத்து அணிந்தவன் பொங்கல் வைக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
நாச்சி பொங்கல் வைத்த பானைகளை அடுப்பிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தாள்.
“எல்லா இடமும் வச்சாச்சா அமிழ்தா?”
“ஆச்சு அப்பத்தா” என்ற வீரன், சூரியனை நோக்கி படையல் வைப்பதற்காக, விளக்கு ஏற்றி மஞ்சளால் பிள்ளையார் பிடித்துக் கொண்டிருந்த மீனாளை பார்த்தவாறு லிங்கத்திற்கும் பிரேமுக்கும் இடையில் வந்தமர்ந்தான்.
“என்னண்ணே மஞ்சள் வாசம் இங்கன வர வீசுது?” லிங்கம் பிரேமுக்கு கேட்டிடாது வீரனின் பக்கம் குனிந்து கிசுகிசுக்க…
“எட்டடியில இருக்க மஞ்சள் வாசனை இங்க வரதுல என்னடே அதிசயம்?” என்றான் வீரன்.
“நான் மீனாகுட்டி கையிலிருக்கும் மஞ்சளை சொல்லலை” என்ற லிங்கம் “அவளோட நெத்தியிலிருக்குமாட்டி” என்று வீரனின் மார்பு பகுதி சட்டையை காண்பித்தான்.
குனிந்து பார்த்த லிங்கம் அங்கு எப்படி மஞ்சளின் தடம் வந்தது என்பதை நினைத்து மந்தகாசமாகப் புன்னகைத்துக் கொண்டான்.
“இதையும் வீடியோ எடுடா பிரேம். எடிட் பண்ணி பேக்ரவுண்டில் பாட்டோட வீடியோ போட்டா லைக் பிச்சிக்கும்” என்றான் லிங்கம்.
“எதுக்குடா இந்த அலப்பறை?” வீரன் கேட்டிருந்தான்.
“ஆபிஸில் என் டீம் மெம்பர்ஸ் எல்லாரும் சிட்டி மாமா. வில்லேஜ் சைட் பொங்கல் எப்படியிருக்கும் தெரியாது வீடியோ எடுத்துட்டு வாங்கன்னு கேட்டிருந்தாய்ங்க. அதான் சும்மா எடுத்தேன். அதுக்குத்தான் லிங்கம் சொல்லிட்டு இருக்கியான்” என்று விளக்கம் கொடுத்தான் பிரேம். அவனின் விழிகளில் கள்ளத்தனம். வீரன் கண்டு கொண்டான்.
“இன்னைக்கு யாருடே பொங்க வச்சது?”
“பாப்பா தான் அண்ணே!” லிங்கம் சொல்லிட, வீரன் பிரேமை அர்த்தமாக ஏறிட… பிரேம் மெல்ல எழுந்து பாண்டியனின் அருகில் சென்று நின்று கொண்டான்.
“அவன் நாச்சியாவை வீடியோ எடுக்கணுன்னு உன் காதுல பூ சுத்தியிருக்கியான். நீயும் நம்பி அவனுக்கு ஐடியா கொடுத்திருக்க” என்ற வீரனின் கேலியில், லிங்கம் பிரேமை வெட்டவா குத்தவா எனும் ரீதியில் பார்த்து வைக்க…
“பொழச்சிப்போடே” என்ற லிங்கம், “இன்னும் பச்சை மண்ணாவே இருக்கிறேண்ணே நானு!” என்க, அவனை ஏறயிறங்க ஒரு மார்க்கமாக பார்த்தான் வீரன்.
“என்னண்ணே! அப்படி பாக்குறீங்க?”
“என்னை மட்டுமே ஆராயாமல் உன்னை சுத்தியும் பாருடே!” என்ற வீரனின் உட்பொருள் நிறைந்த பேச்சு அவனுக்குப் புரியவில்லை.
“என்னமோ சொல்லுற. ஒன்னும் விளங்கலண்ணே!” என்ற லிங்கம், “ஏதும் வில்லங்கமா நடக்குதோ?” எனக் கேட்டான்.
“அது உன் முடிவை பொறுத்து” என்ற வீரன்,
“எல்லோரும் வாங்கடே!” என்ற மீனாட்சியின் குரலில் சூரியனை வணங்கிட தயார் செய்யப்பட்ட இடத்திற்கு எழுந்து சென்றான்.
பிள்ளையார் முன்பு விளக்கு தீபம் சுடர்விட… அவர்களது பண்ணையில் விளையும் அனைத்து பொருள்களும், கரும்பு, தேங்காய், தென்னை பாலை, வாழை வகைகள், மாம்பூ, பால் வைத்திருக்கும் நெற்கதிர், மஞ்சள் கிழங்கு, கொய்யா, சப்போட்டா, மரவள்ளி, கருணை, பூசணி, பறங்கி, கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி இன்னும் பல காய்கறிகள் பழங்கள் என அனைத்தும் முன் வைக்கப்பட்டு, வாழை தலை இலையில் சக்கரை பொங்கலும், வெண் பொங்கலும் வைக்கப்பட்டிருந்து.
சூரியன் பொங்கல் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவது என்பதால், விவசாயத்திற்கு பெரிதும் உதவுவது இயற்கை காரணிகள் என்பதால் தங்களது விளைச்சல் பொருள்கள் யாவற்றையும் வைத்து சாமி கும்பிடுவது வழக்கம்.
“சூடம் ஏத்தி தேங்காய் உடைய்யா மருதா” என்று அப்பத்தா சொல்ல, மருதன் பாண்டியனை பார்த்தார்.
எப்போதும் இது வழமை தான். பாண்டியன் புன்னகையோடு தலையசைக்க, தேங்காய் உடைத்து சூரியனை பார்த்து தீபாராதனை காட்டிட, அங்கை மணி ஆட்டி ஓசை எழுப்பினாள்.
“எங்குலமும், காடும் இதேபோல் செழித்து வளரனுமப்பு. எம்பிள்ளைங்க ஒத்துமை குலையாம பார்த்துக்கப்பு” என்று தலைக்கு மேல் இரு கரம் உயர்த்தி கும்பிட்ட அப்பத்தா தரையில் விழுந்து வணங்கிட, அனைவரும் அவரை பின் பற்றினர்.
“எல்லாருக்கும் தின்னூறு பூசிவிடு அப்பு” என்ற மீனாட்சி மருதனுக்கு பூசிவிட்டு, தானும் இட்டுக்கொண்டார்.
மருதன் எல்லோருக்கும் தீபாராதனை காட்டி திருநீறு பூசிவிட, ஒவ்வொருவராக அப்பத்தாவின் காலில் விழுந்து வணங்கி பணமும், புத்தாடையும் பெற்றுக்கொண்டனர்.
இறுதியாக வீரனிடம் வந்த மருதன் எப்போதும் போல் தயங்கிட,
“பூசிவிடும் மாமா” என்றிருந்தான். முகம் முழுக்க புன்னகையாய்.
ஐந்து வருடங்கள் கடந்து மாமா என்று அவர் முகத்திற்கு நேரே அழைத்திருக்கிறான்.
மருதன், அப்பா என்று கேட்பதற்கு முன்பே மாமா என்ற சொல்லை அவன் சொல்ல கேட்டு அகம் மகிழ்ந்தவராயிற்றே!
கண்கள் கலங்கிவிட்டார்.
“அமிழ்தா…”
“இப்போ என்னவாம்?” என்ற வீரன், “வருத்தம் இருக்குதுதேன். அதுக்காக விலகி நின்னா ஆச்சா? எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா சேர்றதுதானே உறவுக்கு நல்லாயிருக்கும்” என்றவனை பாண்டியன் தோளில் தட்டி அணைத்துக்கொண்டார்.
மருதன் மார்போடு தன் மூத்த குழ்ந்தையை தழுவிக்கொண்டார். ஆத்மார்த்தமாக.
உண்மையான அன்புக்கு தண்டனை கொடுத்திட தெரியாதே. காலங்கள் கடந்தாலும், தன் தடத்தை அழுத்தமாக பதித்துவிடும்.
மீனாளுக்கு மற்றவர்களைவிட அதீத சந்தோஷம்.
வீரனும், மருதனும் பாசம் கொண்டு கடந்திட்ட நாட்களுக்கு ரசிகை அவள். மாமன் மருமகன் என்று சொல்ல முடியாதளவிற்கு இருக்கும் அவர்களின் அன்பும், அக்கறையும். மகளாக பொறாமை கொள்வதற்கு பதிலாக, அவர்களை அவர்களது அன்பை கண்டு ஆச்சரியம் கொண்டதுதான் அதிகம்.
அன்று பிரேம் செய்ததினால் மனவருத்தம் மட்டுமே! தன்னை பேசியதால் தான் இருவருக்கும் பிளவு வந்துவிட்டதோ? என்று மீனாள் வருந்தாத நாளில்லை. இக்கணம் அந்த வருத்தங்கள் யாவும் சூரியனிட்ட பனியாய் கரைந்திருந்தது.
மருதனின் அணைப்பிலிருந்தாலும், வீரனின் பார்வை அவனவள் மீதுதான்.
நீர்த்ததும்பும் விழிகளில் தேங்கி நிற்கும் அவளின் மகிழ்விற்காக என்னவும் செய்திடலாமென்று தோன்றியது அவனுக்கு.
சற்று நேரத்துக்கு முன்பு மஞ்சள் செடியை அவளின் கைகளில் அவன் கொடுக்கும்போது அவள் பேசியவை அவனது மனதில் வந்து போனது.
“நீ பேசுனது மறந்து நான் உன்னை கட்டிக்கணும். ஆனால் மகனுக்காக பேசிய ஐயாகிட்ட இன்னமும் விலகி நின்னு உன் கோவத்தை காட்டுவியா மாமா? யாருமேல சரி தப்புங்கிற பஞ்சாயத்துக்கு நான் வரல. ஆனால், ஒரு அப்பாவா அந்த இடத்தில் யார் பக்கம் நிக்க முடியுமோ அங்கட்டு நின்னாரு. நீ மதினிக்கு துணை நின்ன மாறிதானே! ஒருவேளை ஐயாக்கு எந்த சூழ்நிலையிலும் நீயி அவரை சரியா புரிஞ்சிப்பங்கிற எண்ணத்தில் கூட அண்ணேக்கு சப்போர்ட் பண்ணியிருக்கலாம்ல. ஐயா ராத்திரியில நிம்மதியா உறங்கி பல வருசமாச்சு மாமா. உன்னைய பெத்த பிள்ளைகளுக்கு மேல நினைக்கிறாரு. ஒரு சின்ன பேச்சுல உன் பாசத்தை விட்டுக்கொடுத்துபுட்டியே மாமா” என்றிருந்தாள்.
அத்தோடு ‘நீ எட்ட நிற்பது தான் எனக்கு நல்லது’ என்று அவள் சொல்லியது அவனின் உயிரையே வதைத்தது.
ஆசைதீர தன் மருமகனின் முகம் தடவிய மருதன்,
“மனசு நிறைஞ்சு கிடக்குடே. மாமன் தப்பே பண்ணியிருந்தாலும் இம்புட்டு வீம்பு வேணாமடே. நீயி என் ஆணிவேர்டே” என்றவர் வீரனின் நெற்றியில் திருநீறு வைக்க சிரிப்போடு முகம் கவிழ்ந்து வாங்கிக்கொண்டான்.
வீரனுக்கு இன்னமும் மருதனின் மீது கோபம் இருக்கிறதா என்றால் சிறிதுமில்லை. ஆனால் வருத்தம்? நிறையவே இருக்கிறது. அவனாக பலமுறை முயன்றும் அந்த வருத்தத்தால் மருதனை அவனால் நெருங்கிட முடியவில்லை.
இன்று அந்த வருத்தத்தை மறந்தால், தன்னவளுக்கு எத்தனை மகிழ்வை அது கொடுக்கும்… அவளுக்கு மட்டுமா? தனது குடும்பமே எதிர்பார்க்கும் ஒன்றல்லவா! ஆதலால் மருதனிடம் பேசிவிட்டான்.
அனைவரின் முகத்தில் தென்படும் மகிழ்வு… அவனது வருத்தத்தைக்கூட பின்னுக்குத் தள்ளியிருந்தது.
“மனசு நிறைஞ்சு போச்சுய்யா” என்ற அபிராமி, “அப்பத்தாகிட்ட ஆசீ வாங்கிக்கய்யா” என்றார்.