மருதனை ஏற்றுக்கொள்ள சொல்ல வேண்டுமென்று அவள் எப்போதும் நினைத்ததில்லை. தனக்கு அவன் மீதிருக்கும் கோபம் தானே அவனுக்கு மருதன் மீது என்கிற தெளிவு அவளிடம். அதனால் இத்தனை வருடத்தில் எல்லோரும் அவனிடம் மருதனிடம் பேசு என்று சொல்லியதைப்போல் எப்போதும் அவள் சொல்லியதே கிடையாது. இன்றும் அந்த எண்ணம் அவளுக்கு இல்லை.
வீரன் கை பிடித்து சுற்றித் திரிந்த காலங்களில் அவனின் அதீத அன்பும் அக்கறையையும் அவளளவிற்கு யாரும் பெற்றிருக்கமாட்டார்கள்.
அவளிடத்தில் வீரன் எப்போதும் போல் தான் இருக்கின்றான். ஆனால் அவள் தான், அவன் மீது காதலை உணர்ந்த நாளே அதனை நெஞ்சின் அடி ஆழம் புதைத்து மறைத்துக்கொண்டாள்.
அவனது அன்றைய வார்த்தைகளே அதற்கு காரணம்.
அவனுக்கும் தன்மீது காதலிருக்குமென்று அவள் ஒருபோதும் நினைத்தது இல்லை. அவள் நன்கு பேசிய நாட்களில் கூட வீரன் ஒரு பார்வை ஒரு வார்த்தை நேசம் கொண்டவன் போல் வெளிக்காட்டியதில்லை.
கோபமாகவே இருந்தாலும் ஒரு நாளும் அவனோ அவளோ ஒருவரையொருவர் தவிர்த்தது கிடையாது. எட்ட நின்றுகொண்டனர். அவ்வளவு தான். அதிலும் அவள் மட்டுமே!
எப்போதும் அதட்டலோடு வலம் வரும் அவன் மனதில், தான் இருப்போமென்று அவள் எண்ணியதில்லை. அதனாலேயே தன்னுடைய காதலை எளிதாக மறைத்து வைத்துக் கொண்டாள்.
வீரனின் வாலட்டில் அவளது புகைப்படத்தை பார்க்காவிட்டால் இன்னமும் அவனது காதல் அவளுக்கு தெரிந்திருக்காது.
அவள் தெரிந்து கொண்டதாலேயே வெளிப்படையாகக் காட்டிடத் துவங்கியிருந்தான். அதனை அவளும் புரிந்து கொண்டாள்.
வீரனது பேச்சு, பார்வை, செயல் என அனைத்திலும் அவன் காதலை காட்டிட, அவள் தான் தவிக்கின்றாள். வேண்டுமென்கிற சமயம் வேண்டாமென்றும் மருகுகிறாள்.
மீனாள் அளவில் இருபக்கமும் அல்லாடும் வேதனை. அவளால் நிலைகொள்ள முடியவில்லை.
வீரன் தள்ளி சென்றால் போதுமென்று இருந்தது அவளுக்கு. அதற்காக மொத்தமாக அவனை அவளால் இழந்திட முடியாது. தன் மனம் அவனை எவ்வித கசப்புமின்றி ஏற்றுக்கொள்ளும் வரை விலகியிருந்தால் போதுமென நினைத்தே அவ்வாறு பேசினாள்.
“ஏன் மாமா. எதுக்கு பக்கம் வர. முடியல மாமா. எட்டவே நில்லு. அதுதான் எனக்கு நல்லது.”
அவளுக்கு நல்லது என்று சொல்லிய பின்னரும் அவளை அவன் நெருங்கிடுவானா? அவனுக்கே உரித்தானது.
தன்னை… தன் மனதை புரிய வைக்கவே, மருதனோடு ஒப்பிட்டு அவரின் வலியை கூறியிருந்தாள்.
வீரன் பல முறை முயன்றும் மருதனிடம் அவனால் இயல்பாக முடியாததை பிறர் அறிந்திருந்தனரோ இல்லையோ, அவள் அறிந்திருந்தாள். அதனாலேயே அவனால் முடியாததைக் கூறி அவனை எட்ட நிற்க வைக்க நினைத்தாள்.
ஆனால் வீரன் அவளுக்காக தன்னால் மனதால் முடியாததையும் முடித்து காட்டுவானென்று அவளே எதிர்பார்க்கவில்லை.
மருதனிடம் அனைத்தையும் மறந்து பேசிவிட்டான். அவளுக்காக பேசிவிட்டான்.
இனி அவளால் அவனை தள்ளி நிறுத்திட முடியுமா?
வாக்குவாதத்திற்கு காரணமானவர்களே இணைந்த பின்னர் அவளால் தான் தள்ளி நின்றிட முடியுமா?
அவன் வீசிய வார்த்தைகளை கடந்திடுவாளா?
“என்னக்கா உண்காம அங்கனவே பார்த்துக்கிட்டு இருக்க. சீக்கிரம் சாப்பிடு. படத்துக்கு போறோம்” என்ற அங்கையின் பேச்சிலே தன் பார்வையை அகற்றினாள் மீனாள்.
“அப்படி என்னண்ணே நடந்துச்சு. மீனாகுட்டி உன்னையவே வச்ச கண்ணு எடுக்காம பாக்குது” என்று மீண்டும் ஆரம்பித்த லிங்கத்தின் வாயிலேயே பொங்கலை அடைத்து வாய் மூடச் செய்தான் வீரன்.
“தேன்க்ஸ் மாமா!”
“யாருப்பா அது?”
வீரனுக்கு அடுத்தபக்கமிருந்த பிரேம் நன்றி சொல்லிட எதுக்கு எனும் விதமாக வீரன் பார்த்திட, லிங்கம் குரல் கொடுத்தான்.
“எனக்காக, ராத்திரி நான் சொன்னேன்னு ஐயாகிட்ட பேசினதுக்கு” என்ற பிரேமிடம் அப்படியிருக்காது எனும் சிரிப்பு.
“உனக்காக இருக்காதுன்னு உனக்கே தெரியுதுல. பொறவு என்னவாம்… நன்றி நவிழ்ற?”
“செத்த நேரம் செண்டு போவோம் அமிழ்தா” என்று அப்பத்தா சொல்ல…
“ஹோட்டலுக்கு போறியாடே?” என லிங்கத்தைக் கேட்டார் அபிராமி.
“இல்லம்மா. படத்துக்கு போறோம்” என்றான்.
“நீயுமா வீரா?” அபி.
“இல்லம்மா!”
“படம் எப்போடே முடியும்?”
“பதினோரு மணி தொடக்கம். ரெண்டு ரெண்டரை ஆகிப்போவும்மா!” என்ற லிங்கம் “என்னத்துக்கு விசாரிக்குற?” எனக் கேட்டான்.
“சுபா வராடே! எட்டு மணிக்கு பஸ் ஏறுறா(ள்). பன்னெண்டு மணிக்கு மருத வந்திடுவாளே! அந்நேரம் செண்டு கூட்டியாரனும்” என்றார்.
“ஏன் மருதயல இருந்து பஸ் பிடிச்சு வர தெரியாதாக்கும்?” என்ற லிங்கம், “உன் அண்ணாரு காரில் அனுப்பலையோ?” எனக் கேட்டான்.
சுபாவதி, அபிராமியின் அண்ணன் மகள். சேலத்தில் இருந்து வருகிறாள்.
“அவள் மட்டுந்தேன் வராடே! ட்ரைவர் கொண்டு போய் விடுவாருன்னதுக்கு பஸ்லே போயிக்கிறேன் சொல்லிட்டாளாம்!” என்ற அபிராமி, “நீயி போயி கூட்டியார முடியுமா அமிழ்தா?” என்றார்.
“பன்னெண்டு மணிக்குத்தானே! நான் கூட்டியாந்துடுறேன்” என்ற வீரன், மீனாளின் கண்களில் முறைப்பு தெரிந்ததோ என்று எண்ணினான்.
அபிராமி கேட்டதற்கு வீரன் சரியென்றதுமே அவனை முறைத்தவள் தான், அவன் பார்த்ததும் பார்வையை மாற்றிக் கொண்டிருந்தாளே!
விலக வேண்டுமென நினைப்பவள் காரணமே தெரியாது அவனை நெருங்கவும் நினைக்கிறாள்.
“வருசா வருசம் கோடை லீவுக்கு தானே வருவாள்?” மீனாட்சி கேள்வியாய் இழுக்க,
“வேலையில அழுத்தமாம். மன மாறுதலுக்காக அனுப்பி வைக்கிறேன்னு அண்ணே சொன்னாக அத்தை” என்றார் அபிராமி.
“நான் ஆலைக்கு போவுறேன். அப்பத்தாவா கூட்டிகிட்டு வந்து சேரும் ஐயா” என்றதோடு, “வறீயா மாமா?” என மருதனிடம் கேட்டிருந்தான்.
அவர் சிறுவனாக துள்ளி குதித்து அவனது வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்து, அவனின் தோளினை பற்றிக்கொண்டார்.
“இந்த அலப்பறை தான் இல்லாம இருந்துச்சு. இனி ஆலைக்கும், வீட்டுக்குமா ரோடு தேயும்” என்று சடைத்துக் கொள்வது போல் அப்பத்தா அவர்களின் முன் பழக்கம் மீண்டும் தொடர்வதை எண்ணி மகிழ்வாகவே கூறினார்.
இருவரும் சிரித்துக்கொண்டே வண்டியை கிளப்பிக்கொண்டு செல்ல…
மீனாளுக்கு அவர்கள் இருவரும் வண்டியில் சுற்றிய நிகழ்வுகள் ஊர்வலம் வந்து கண்களை கரிக்கச் செய்தது.
“பத்து மணி பக்கம் வீட்டுக்கு வந்திடு மீனாக்குட்டி. தியேட்டருக்கு போவ சரியா இருக்கும்” என்று லிங்கம் சொல்ல வெறுமென தலையாட்டி வைத்தாள்.
“எம் மேல கோவம் போயிடுச்சா அப்பு?”
மருதன் இவ்வாறு கேட்பாரென்று வீரன் எதிர்பார்த்தானோ?
“நடந்ததையே மறக்க முயற்சி செய்யுறேன் மாமா” என்றான்.
மறந்துவிட்டேன் என்று பொய் கூறாது, முயற்சிக்கிறேன் என்று உண்மையை சொல்லியதே மருதனுக்கு போதுமானதாக தெரிந்தது.
“வூட்டுக்கு போயிட்டு போவோம் மாமா” என்ற வீரன் வீட்டிற்கு முன் வண்டியை நிறுத்தி உள் செல்ல… மருதன் வழக்கம்போல் திண்ணையில் அமர்ந்தார்.
நின்று திரும்பியவன்,
“பழி வாங்குறியா மாமா?” எனக் கேட்டது தான், அவனை இடித்துக்கொண்டு வேகமாக உள் வந்தவர் முற்றம் இருக்கையில் கால் மேல் காலிட்டு தோரணையாக அமர்ந்தார்.
“அது” என்ற வீரன் தனதறைக்கு சென்று இரண்டு நிமிடத்தில் கீழ் வந்தான். சட்டையை மாற்றியிருந்தான்.
“அந்த சட்டையே நல்லாயிருந்துச்சே அமிழ்தா!”
“ஆஹான்” என்றவன் சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை.
அடுத்த மூன்று மணி நேரம் இறக்கை கட்டி பறந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இவர்கள் ஆலைக்கு சென்று சேர்ந்த பத்து நிமிடங்களில் பாண்டியன் மீனாட்சியை அழைத்து வர, அங்கு வேலை செய்யும் அனைத்து ஆட்களுக்கும் பணம், புதிய ஆடைகளென கொடுத்து இல்லம் வர பத்துக்கு மேலாகியது.
“இல்லைடே… நாளைக்கு கட்ட மாடுகளுக்கு புது கயிறு, பெயிண்ட்டெல்லாம் வாங்கணும்” என்று வீரன் மறுத்தான்.
“படம் முடிஞ்சு வரும் போது வாங்கிக்கலாம் மாமா!”
“அண்ணே அவிங்களுக்கு முக்கியமான ஆளை கூட்டியாற சோலி கெடக்கு நீயியேன் வம்படியா கூட்டிட்டு இருக்க?” என்று மீனாள் சொல்லியதும்,
பிரேம் “மறந்துட்டேன் மீனு” என்க, வீரனோ அவளை அர்த்தமாக பார்த்தான்.
“இவீங்க இன்னும் என்ன பண்ணுறாய்ங்க தெரியல. நான் பார்த்துட்டு வாறேன்” என்று பிரேம் எழுந்து செல்ல… வீரன் தன் பார்வையை நேர்கொண்டு வைத்தான். வாய்க்காலில் ஓடும் நீரன் தடதடப்பு போல் தான் அவனின் ஆழ் மனமும் தடதடத்தது.
‘நான் கிட்ட வந்தாக்க வலி சொன்ன நீயி இப்போ பாக்குற பார்வை, பேச்சுக்கு அர்த்தம் விளங்க மாட்டேங்குதுடி. என்ன தான் என்கிட்ட எதிர்பார்க்குற?’ மனதோடு வினவியவனுக்கு பதில் தான் கிட்டவில்லை.
இவள் அமைதியான அவனது தங்கப்பொண்ணு இல்லையென்று புரிந்த கணம் அவளது உள்ளுக்குள் உண்டான உரிமை உணர்வு போராட்டமும் வீரனுக்கு புரிந்தது.
போனமுறை சுபா வந்திருந்த போது அவளை இருசக்கர வாகனத்தின் பின்னால் கூட்டிச்சென்ற அடுத்த நாள் வண்டி திடீரென ஓட்டவே முடியாதளவுக்கு பழுதாகியதன் காரணம் இப்போது பிடிபட்டது.
மௌனமாக சிரித்துக்கொண்டான்.
‘நான் வேணாமாம். நானா விலகிப் போவனுமாம். ஆனா இந்த பொஸஸிவ்னெஸ்க்கு குறைச்சலில்லை’ என நினைத்தவன் எந்தவொரு பதிலும் சொல்லவில்லை.
“இப்படி வாப்பெட்டியை திறக்கலன்னா என்ன அர்த்தம்? என்னைய மட்டும் காலையில பதில் சொல்லுன்னு அதட்டுனீங்க?” என்றாள்.
“உனக்கு வலியாகுமே!” என்றானேத் தவிர, அவளுக்கான பதிலை அவன் கொடுக்கவில்லை.
வீரன் சொல்லியதில் அவள் தான் தன் மனமே தனக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து நெஞ்சம் துடிக்கத் தன்னவனை பார்த்திருந்தாள்.