நாச்சிக்கு பின்னால் மீனாள் இருக்க, அங்கை எதில் யாருடன் செல்வதென்று பார்க்க…
“வா சின்னகுட்டி” என்று அழைத்திருந்தான் பிரேம்.
அவளும் லிங்கத்திற்கு பின்னால் அமரலாமென்று உற்சாகமாக நகர,
“பாவாடை கட்டிட்டு எப்படிடி அந்த வண்டியில ரெண்டு பக்கம் காலிட்டு உட்காருவ?” என்ற நாச்சி, “நீ போ மீனு” என்றதோடு, “என் பின்னுக்கு வந்து உட்காரு” என்றாள் அங்கையை.
அங்கை நாச்சியை முறைத்திட…
“என்ன அங்கை. உன்னால் ஒரு பக்கட்டு பெரிய வண்டியில, அதுவும் கடைசியா உட்கார முடியாதுன்னு தான் மதினி சொல்றாங்க. போ” என்ற மீனாள், அங்கையின் புதிதான நடவடிக்கைகளை அவதானித்தவளாக லிங்கத்தின் வண்டியில் சென்று அவன் பின்னால் அமர, அவளுக்கு பின்னால் பிரேம் அமர்ந்தான்.
வீரன் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.
இன்று புதிதாய், லிங்கத்தின் தோளில் உரிமையாய் கரம் பதிக்கும் மீனாளின் மீது அங்கைக்கு பொறாமை துளிர்வதை.
மீனாளுக்கும் அங்கையின் பார்வையில் வித்தியாசம் தெரிந்திட…
“படம் தொடங்கிடும் அங்கை. டைம் ஆவுது. ஏறு.” நாச்சி சற்று அதட்டலாகவே கூறிட, வேண்டா வெறுப்பாக முகத்தை சுருக்கிக்கொண்டு ஏறினாள்.
“ஏன் அங்கை ஒரு மாதிரி இருக்கிற? தாவணி உனக்கு அம்சமாதான் இருக்குது.”
அங்கை உம்மென்று வரவே நாச்சி பேச்சுக்கொடுத்தாள்.
“நீங்க அண்ணேவை லவ் பண்றீங்கன்னு எப்படி மதினி தெரிஞ்சிக்கிட்டிங்க. அதுக்கு சிம்டம்ஸ் இருக்கா?”
அங்கை கேட்ட கேள்வியில் டக்கென்று சாலையில் இரு பக்கமும் கால் ஊன்றி வண்டியை நிறுத்தியிருந்தாள் நாச்சி.
“என்ன மதினி?”
ஒன்றும் அறியாதவள் போல் முகம் வைத்து அங்கை வினவினாள்.
“இந்த வயசுல நெனப்புல பலது வந்து போவுமாட்டி அங்கை. அதெல்லாம் வெத்து கனா மாறிதேன். சூதானமா இருந்துக்க. பேச்சுல அடங்கியிரு” என்று எச்சரிக்கை செய்து வண்டியை கிளப்பினாள்.
புதிதாக மனதில் முளைத்திருக்கும் உணர்வில் இருந்த அங்கைக்கு நாச்சியின் பேச்செல்லாம் காதில் ஏறவில்லை.
“சும்மா கேட்டேன் மதினி” என்று முடித்துக்கொண்டாள்.
நாச்சிக்குத்தான் அங்கையை நம்புவதா வேண்டாமா என்று குழப்பமானது.
“போங்க மதினி. அவீங்க முந்தி போறாய்ங்க!”
அங்கையையே பார்வையால் அளவீடு செய்து கொண்டிருந்த நாச்சி, அவளின் உலுக்களில் வண்டியை கிளப்பியிருந்தாள்.
சிரியவள் அவளுக்கு தன் உணர்வுகளை மறைத்து வைக்கத் தெரியவில்லை. அனைவரின் கண்ணிலும் மாட்டிக்கொள்கிறாள்.
லிங்கத்திற்கு தெரிய வரும்போது அவனின் நிலை என்னவாக இருக்குமோ?
லிங்கத்துடன் வண்டியில் செல்ல முடியாத மற்றும் திரையரங்கில் அவனுடன் உட்கார முடியாத கோபத்தில் அங்கை சிடுசிடுவென்று தான் நேரத்தை கழித்தாள்.
லிங்கம் அங்கையை தூக்கிக்கொண்டு சுற்றியிருக்கிறான். அவளுடன் தொட்டு விளையாடியிருக்கின்றான். ஆனால் அவள் வயதாக தன்னைப்போல் இடைவெளியில் நின்றுகொண்டாலும், எப்போதும் போல் தான் நடந்துகொள்கின்றான்.
இருப்பினும் அங்கைக்கு லிங்கத்திடம் நெருங்கிட பேராவல். சிறு பெண் தானே! இதுக்கே துவண்டு போனாள்.
“ஏன் அங்கை உம்முன்னே இருக்க?”
மற்ற நால்வரும் உற்சாகமாக படம் பார்த்து கை தட்டுவது விசில் அடிப்பதென்று ஆரவாரம் செய்து கொண்டிருக்க… அவள் மட்டும் எதற்கு வந்த விருந்தோயென்று லிங்கத்தை அவ்விருட்டிலும் முறைத்துக்கொண்டு அமர்ந்திருக்க… மீனாள் வினவினாள்.
“தலை வலிக்குதுக்கா!” என்று சமாளித்தாள்.
“அதிகாலையில தலைக்கு தண்ணி ஊத்துனதா இருக்கும். ஏசி பக்கட்டு உட்காந்திருக்க. என் சீட்டுல மாறி உட்காரு” என்று எழ, அடுத்த நொடி அங்கை உற்சாகமாக மாற்றியிருந்தாள்.
அங்கை லிங்கத்தின் ஒரு பக்கம் அல்லவா அமர்ந்திருந்தாள்.
பெண்கள் மூவரையும் நடுவில் விட்டு ஆண்கள் இருவரும் இருபக்கம் அரணாக அமர்ந்திருந்தனர். பொங்கல் தினமென்பதால் திரையரங்கு அத்தனை கூட்டமாக இருந்தது. இளைஞர்கள் தான் அதிகம் இருந்தனர்.
“என்ன சின்னக்குட்டி படம் புடிக்கலையாட்டு?” அவள் தன்னருகே அமர்ந்ததும் லிங்கம் வினவினான்.
“இதுக்குமேல்பட்டு புடிக்கும் நினைக்குறேன்” என்றவள், திரையை விட லிங்கத்தை தான் பார்த்து வைத்தாள்.
திடீரென்று லிங்கம் கோபமாக எழுந்திருக்க… அவ்விருட்டிலும் அவனின் கண்கள் அத்தனை சிவப்பாய் ஒளிர்ந்தது.
லிங்கம் எழுந்ததும் பின்னிருக்கையிலிருந்த இளைஞர்கள் அமர சொல்லி கத்தி கூச்சலிட… அங்கை பயந்து அவனை பார்த்தாள்.
“மாமா என்னாச்சு?”
மீனாள் காரணம் விளங்காது கேட்க… மற்ற இருவரும் கூட என்னவென்று அவனை பார்த்தனர்.
“நான் போறேன். நீங்க பார்த்துப்போட்டு வாங்க” என்று சட்டையை அடியில் பிடித்து உதறிய லிங்கம், கத்திக்கொண்டிருந்த இளைங்கர்களிடம்,
“ஓவரா சலம்பாதிங்கடே!” என்று தன் எரிச்சலை காட்டிவிட்டு, பிரேம் கூப்பிட கூப்பிட வெளியில் சென்றுவிட்டான்.
“கோட்டித்தனமா ஏதும் பண்ணியா அங்கை?” நாச்சி அதட்டலாக வினவ, அவளின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.
அவளளவில் அவள் செய்தது அவளுக்குத் தவறாக தெரியவில்லை. வயதுக்கே உரிய வேகம் அனைத்திலும் அவசரம் காட்டியது.
“ம்ப்ச் விடு அழகு. அவள் பண்ற சேட்டைக்கு இப்படி ரியாக்ட் பண்ணமாட்டானே! வேறென்னவோ” என்ற பிரேம், “நாமும் போவோம். அவென் இல்லாம எங்கட்டு பாக்குறது!” என்க, மீனாள் அவன் சொல்லி முடிக்கும் முன்பே வெளியேறியிருந்தாள்.
மீனாள் லிங்கத்தை வாகனங்கள் தருப்பிக்கும் இடத்தில் பார்க்க, அவனோ கேட்டைத் தாண்டி வெளியில் சென்று கொண்டிருந்தான்.
அவனுடைய கோபம் வண்டியின் வேகத்தில் தெரிந்தது.
அழுதுகொண்டே வந்த அங்கையின் மீது தான் மீனாளுக்கு சந்தேகமாக இருந்தது.
“என்ன மீனு போயிட்டானா?”
“ஆமாண்ணே!”
“என்னாச்சு இவனுக்கு” என்ற பிரேம், வீரனுக்கு அழைத்திட்டான்.
முதல்முறை எடுக்காமல் விட்ட வீரன், மூன்றாவது அழைப்புக்குத்தான் ஏற்றிருந்தான்.
“என்னடே பிரேம்? சோலியா கிடக்கேன். என்ன அவசரம்?” என்றான் வீரன். எடுத்ததும்.
“என்னாச்சுன்னு தெரியல மாமா, லிங்கு பாதியில எழுந்து போயிட்டான். இந்நேரத்துக்கு நம்ம வூருக்கு பஸ் இல்லையே மாமா. எப்படி வாரது?” எனக் கேட்டான்.
“சரி அங்கன தியேட்டர் பக்கட்டு இருங்க. ஒரு பத்து நிமிசத்துல வந்துடுறேன்” என்ற வீரன் தன் வேலைகளை முடித்துக்கொண்டு கால் மணி நேரத்தில் அவர்கள் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்.
காரில் தான் வந்திருந்தான். உடன் சுபா.
“ஹாய் சுபா!” நாச்சி அவளை பார்த்ததும் அணைத்து விடுவிக்க, பிரேம் உறவு முறையில் தங்கையானவளை தோளோடு சேர்த்து விடுத்தான்.
“எப்படிக்கா இருக்கீங்க?” என்று இன்முகமாகவே வரவேற்று கேட்டாள் மீனாள்.
“நல்லாயிருக்கேன் மீனுகுட்டி” என்ற சுபா, “வளர வளர ரொம்பவே அழகாகிட்டு போற மீனு” என்று அவளின் கன்னம் பிடித்து ஆட்டினாள்.
சுபா உரிமையாய் மீனாளின் கன்னம் கிள்ளியது உண்மையில் அவனுள் பற்றி எரிய வைத்தது. அவனால் அவளிடம் பேச்சு வார்த்தையால் கூட நெருங்கிட முடியாதிருக்க… மற்றவர்கள் அனைவரும் அதீத நெருக்கம் காட்டுவது அவனுள் புகைச்சலை உண்டு பண்ணியது.
அவளோ அவன் பார்வை உணர்ந்தபோதும் அவன் புறம் திரும்பவே இல்லை.
முன்னால் வீரனுக்கு அருகில் அமர்ந்த அங்கை, அவனது கையின் புஜத்தை இரு கரம் கோர்த்து பிடித்தவளாக அவனின் தோளில் தலை சாய்த்து கண்ணை மூடிக்கொண்டாள்.
“உடம்பு ஏதும் பண்ணுதாடா?”
மற்றவர்கள் பொருட்களை பின் வைப்பதிலும், அமர்வதிலும் முனைப்பாக இருக்க… இவர்களை கவனிக்கவில்லை.
வீரன் கேட்டிட இல்லையென்று தலையாட்டியவளின் முகம் மட்டும் அத்தனை வாடியிருந்தது.
“இப்போ நான் உன் கை பிடிச்சிருக்கேன். உன் மேல சாய்ஞ்சிருக்கேன். இது தப்பா மாமா?”
வேற்றுமை இன்றி அன்பு என்ற ஒன்றை மட்டுமே கொண்டு பிணைப்புடன் வளர்ந்த அவர்களுக்குள் இதெல்லாம் இயல்பானது. அப்படியிருக்கையில் இது தவறென்று ஏன் கேட்கிறாள் என சிந்தித்த கணம் வீரனுக்கு லிங்கத்தின் கோபத்திற்கான காரணம் விளங்கிற்று.
“வீட்டுக்கு போயி பேசுவோமாட்டிக்கு” என்றவன் அவளின் தலையில் அழுத்தம் கொடுத்து கோதினான்.
“போகலாம் மாமா” என்று அங்கையின் பக்கத்தில் வந்து சுபா அமர, மற்ற மூவரும் பின்னால் அமர்ந்தனர்.
பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்திருந்தனர்.
லிங்கத்தின் வண்டி வீட்டு வாசலிலேயே நிற்க, அவன் வந்துவிட்டான் என்பது தெரிந்தது.
பிரேமும் வீரனும் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் பின்பக்கம் கட்டுத்தறி அறையில் வைத்துவிட்டு வீட்டுக்குள் வர,
அங்கை மற்றும் சுபாவை தவிர்த்து மற்ற மூவரும் லிங்கத்திடம் காரணம் கேட்டுக்கொண்டிருந்தனர்.
பிள்ளைகளின் குரல் கேட்டு வந்த மீனாட்சி மற்றும் அபிராமி சுபாவை வரவேற்று நலம் விசாரித்த பின்,
“என்ன புள்ளைங்களா சினிமா பாக்கன்னு போயி சுருக்க வந்து சேர்ந்துபுட்டிங்க. படம் நல்லாயில்லையா?” எனக் கேட்டார் மீனாட்சி.
“எல்லாம் உன் பேரங்(ன்)கிட்ட கேளு அம்மத்தா! அவனால தான் வேஸ்டாப்போச்சு” என்றான் பிரேம்.
“என்ன கோட்டிலே ஆச்சு உனக்கு. புள்ளைங்களை ஆசைகாட்டி கூட்டிப்போயி, இப்படி பாதியில இழுத்தாந்திருக்க?” எனக் கேட்டார் அபிராமி.
அப்போதும் லிங்கத்திடம் பதிலில்லை.
ஆள் மாற்றி ஆள் அவனுக்கு என்னவானதென்று கேட்டு முட்டி மோத, அங்கை மற்றும் வீரன் மட்டும் பார்வையாளராக நின்றிருந்தனர்.
வீரன் எப்போதும் அமைதி மற்றும் அதிரடி. ஆனால் லிங்கம் அப்படியில்லை.கலகலத்து இருப்பான். எப்போதும் அவனிருக்கும் இடம் அத்தனை பேச்சாக இருக்கும். அவனது இந்த திடீர் அமைதி புதிது என்பதாலேயே எல்லோருக்கும் என்னவா இருக்குமென்ற கவலையை அளித்தது.
“அவனை செத்த சும்மா விடுங்க. கொஞ்ச நேரம் செண்டா சரியாவான்” என்று பாண்டியன் அதட்டிய பின்னரே அவனை விட்டனர்.