“நீங்கதான் என்கிட்ட பேசுறதில்லை. ஆனால், என் மச்சானும், வீராண்ணா, லிங்கமெல்லாம் அப்பப்போ போனில் பேசிக்கிட்டு தான் இருக்காங்க. நாங்கலாம் டச்சில் தான் இருக்கோம்” என்றான்.
நல்லானின் பதிலில் மருதனின் முகம் சுருங்க, வசந்தி வாடிப்போனார். இந்த வாடுதலுக்கு பின்னால் பல திட்டங்கள் இருக்குமோ?
சகோதரியின் வாட்டம் கண்ட மருதன் நொடியில் தன்னை சீர் செய்துகொண்டார்.
“வீடான வீட்டில் நாங்க பொங்க வைக்க வேண்டாமா? அதான் நேத்து வர ஆவல!” என்றார் நல்லான்.
நல்லான் சென்னையில் செட்டிலாகிவிட்டதால். அவருக்கு ஊர், ஊர் பேச்சென்றால் எட்டிக்காய் தான். அப்படியிருந்தும் சில நேரங்களில் அவரறியாது அவரது பேச்சில் மண் வாசம் வீசும்.
“அதுக்கென்ன மாமா. இருக்கட்டும்” என்ற மருதன், அதன் பின் அவரை விழுந்து விழுந்து கவனிக்க, நல்லானைத் தவிர மற்றவர்களுக்கு கடுப்பாக இருந்தது.
“இந்த ஐயா ஏன் இப்படியிருக்காங்க கௌதம் அண்ணா?” கௌசிக் கேட்க,
“பதில் தெரிந்தா எனக்கும் சொல்லு” என்றான் கௌதம்.
“வுடு கௌசி. பழகிப்போன ஒன்னு தானே!” என்ற பிரேமிற்கு லிங்கத்திடமிருந்து அழைப்பு வர, அவன் அங்கு செல்ல கௌதம், கௌசிக்கும் உடன் சென்றனர்.
பாண்டியன் வீட்டில் இருவருக்கும் அத்தனை உபசரிப்பு. பார்த்து பார்த்து மதிய உணவை உண்ண வைத்தார் அபிராமி.
பாண்டியன் இளநீர் வெட்டி கொடுத்து தன் கவினிப்பை காட்டிட…
“ம்க்கும்… ரொம்பத்தான் பாசம் உருகுது. இந்த பாசம் அவீங்க ஆத்தா பக்கட்டு திரும்பாம இருந்தா சரித்தேன்” என்று நொடித்தார் அபிராமி.
“அடியேய் அபி…”
“இப்போ அபிக்கு என்ன? என்ன கொறச்சலு?” அபிராமி கேட்ட தோரணையில் அவ்விடமே சிரிப்பிற்கு பஞ்சமில்லாது நிறைந்து காணப்பட்டது.
“உனக்கு ஐயா மேலு உரிமை உணர்வு அதிகம் எம்மோ!” என்று லிங்கம் அவரை கேலி செய்ய, கௌதமும், கௌசிக்கும் அப்பேச்சினை இலகுவாகவே எடுத்துக் கொண்டனர்.
அனைவருக்குமே தெரியுமே பாண்டியன் வசந்தியை விரும்பியதும், இப்போது அவருடைய மொத்த விருப்பமும் அபிராமி மட்டுமே என்பதும். அதனால் கேலி கிண்டலாகவே அப்பேச்சுக்கள் ரசிக்கப்பட்டது.
“மாலை கட்டணும்டே. சோலியை பார்த்துக்கிட்டே வாவடிங்க” என்று வீரன் சொல்ல, ஆண் பிள்ளைகள் ஐவரும் வீட்டின் பின் பக்கம் சென்றனர்.
காலையில் பிரேமும், லிங்கமும் சென்று மாலை கட்டுவதற்கு கொண்டு வந்திருந்தவை வீரனால் அழகாக நறுக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்க… பிரேம் மற்றும் லிங்கம், கௌதம், கௌசிக்குடன் பேசிக்கொண்டே மாலைகளை கட்டத் துவங்கியிருந்தனர்.
அவ்வவ்வபோது நாச்சி அவர்களுக்கு கொறிக்க, உண்பதற்கென்று பானங்களும், பலகாரங்களும் கொடுத்தபடி இருந்தாள்.
“ஆடுகளுக்கு ரெண்டு சுத்து கட்டுனா போதுமாட்டிக்கு லிங்கு. கண்ணுக்குட்டிவளுக்கும் அதே கணக்கு போதும்” என்ற வீரன், “கரியனுக்கு தும்பை செடி அதிகம் வச்சு கட்டு. அவனுக்கு புடிக்குமே” என்றான்.
“எத்தனை மாடுன்னே இருக்கு?” என்ற கௌசிக், விரல் நீட்டி எண்ணத் துவங்க…
“எண்ணக்கூடாதப்பு. திருஷ்டிப்பட்ட மாறி ஆகிப்போவும்” என்று வந்தார் மீனாட்சி.
“சரிங்க அப்பத்தா” என்ற கௌசிக்கின் புரிதல் நல்லானிடம் இருந்திருக்கலாம் என்றே தோன்றியது மீனாட்சிக்கு.
“அப்பு அமிழ்தா… மருதன் வூடு வரை போய் வாரேன். ராவுக்கு படையலுக்கு மருதன் வரணுமே! அவென் குடும்பமா இங்கன வந்துபுட்டா, நல்லான் மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்திருப்பியான். மருதன் கூப்பிட்டாலும், நாம கூப்பிடாம எங்குட்டு வரதுன்னு அழிச்சாட்டியம் பண்ணுவியான். வந்ததை விசாரிசிப்போட்டு, ராவுக்கு வர சொல்லி அழைச்சுப்போட்டு வாரேன்” என்று சென்றார்.
இரவு ஏழு மணி அளவில் மீனாட்சியின் மொத்த குடும்பமும் பாண்டியன் வீட்டு கட்டுத்தறியில் கூடியிருந்தனர்.
மருதன் தன் குடும்பத்தோடு முன்னவே வந்திருக்க… நல்லான் வசந்தியுடன் சரியாக விளக்கு ஏற்றும் நேரம் தான் வந்தார்.
பாண்டியனும், அபிராமியும் வரவேற்க விறைப்பாக ஒரு தலையசைப்பு நல்லானிடம். அதற்கு மேல் அவரிடம் நாம் எதிர்பார்ப்பதும் அதிகமே.
வசந்தி தான் பாண்டியனிடமும், அபியிடமும் சில வார்த்தைகள் பேசினார்.
வேட்டி, மற்றும் கையில்லா பணியனுடன் வீரன் நின்றிருக்க, அவனது முறுக்கேறியிருக்கும் தேகம் கண்டு நல்லானுக்கு அச்சமே உண்டானது.
‘அன்றே தன்னை ஓடவிட்டவனாயிற்றே!’ அவர் மனம் வீரனின் அந்தநாள் விளையாட்டை எண்ணி பார்க்க…
“வாங்க சென்னைக்கார மாமோவ். இப்போதேன் பாதை அம்புட்டுதாக்கும்” என்று ஆர்பாட்டமாய் குரல் கொடுத்தான் வீரன்.
“அண்ணே ஆரம்பிச்சிடுச்சுடே!” லிங்கம் சத்தம் காட்டாது பிரேமின் பின்னால் ஒளிந்து சிரிக்க… வீரனின் குரலில் தன் தந்தையின் முகம் போன போக்கை கண்டு கௌசிக் வெளிப்படையாகவே சத்தமிட்டு சிரித்தான்.
“அடேய்… அப்பா வீட்டுக்கு போனதும் அட்வைஸ் ஆரம்பிச்சிடுவார்டா. அடக்கி வாசி.” நல்லானின் முறைப்பில் கௌதம் தான் தன் தம்பியை அடக்கியிருந்தான்.
மருதனுக்கு வீரனின் விளையாட்டில் சிரிப்பு வந்தபோதும் அமைதியாக நின்று கொண்டார்.
நாச்சியின் குரலில் திரும்பிய கௌதம், சுபாவை நொடிக்கும் குறைவாக ஏறிட்டான். மீண்டும் திரும்பி கொண்டான்.
“உங்க அண்ணே பொண்ணு சுபா தானே அபி அது?”
“ஆமாங்கக்கா!”
வசந்தி கேட்டிட அபி பதில் வழங்கினார்.
“பொறவு பேசிக்கலாம். ஆரம்பி அப்பு.” மீனாட்சி.
மாட்டுப்பொங்கல் அன்று அவர்களது கால்நடைகளுக்கு படையல் வைத்து வெகு விமர்சையாக கொண்டாடுவர்.
கட்டுத்தறியின் மையத்தில், அன்றைய தினம் அதிகாலையிலேயே மீனாட்சியும், அபிராமியும் சுத்தம் செய்து சாணத்தால் தொட்டி கட்டி, அவை விரும்பி உண்ணும் தவிடு, புண்ணாக்கு, கஞ்சி, ஆகியவற்றை அவற்றில் நிரப்பி மூடி வைத்திருக்க… இப்போது அதன் முன்பு விளக்கேற்றி… மாடுகளுக்கு அணிவிக்க, பிரேமும், லிங்கமும் சேர்ந்து கட்டிய வேப்பிலை, ஆவாரம்பூ, தும்பை, துளசி மாலைகள், வெறும் பொங்கல், என வைத்து கற்பூரம் ஏற்றி வணங்கினர்.
எல்லோருக்கும் தீபாராதனை காட்டி வணங்கியதும்,
மாலைகள் அடங்கிய தட்டினை லிங்கம் தூக்கிக்கொள்ள, வீரன் அம்சாவில் தொடங்கி அனைத்திற்கும் அம்மாலைகளை அணிவித்து முடிக்க, படையலில் வைத்த பொங்கலை முன்பு போலவே லிங்கம் கையில் வைத்துக்கொள்ள வீரன் ஒவ்வொன்றிக்கா ஊட்டிக்கொண்டு வந்தான்.
நினைவிருந்த போதும், காலை வீரன் சொல்லிய வார்த்தையின் காரணமாக மீனாள் அசையாது நின்றிருந்தாள்.
“தங்கம்.” அழைத்துவிட்டான். அனைவரின் முன்பும் மறுக்க முடியாது அவனை முறைத்துக்கொண்டே அருகில் சென்றாள்.
“மீனா பயப்படுவாளே அமிழ்தா?” அபிராமி சொல்லிட,
“அதெல்லாம் காலையில அவனை கழுவியதே மீனாள் தான்” என்றாள் நாச்சி.
“சாப்பாட்டை அள்ளி உருண்டையா உருட்டி அவென் வாயில் வைய்யி” என்றான் வீரன்.
“பயமாயிருக்கே லிங்கு மாமா!”
“கழுவியே விட்டுட்டியாம். சோறு வூட்ட பயப்படுற?” லிங்கம் சொல்ல அவளின் விழிகள் வீரனின் விழிகளை தொட்டு மீண்டது.
‘அண்ணே ஏதோ சேட்டை பண்ணியிருக்கு.’ நினைத்தாலும் கண்டுகொள்ளாது நின்றிருந்தான் லிங்கம்.
“நேரமாவுது. வூட்டு சாமி கும்பிட்டு எப்போ நாம உண்குறது?” லிங்கம் கேட்டிட தட்டினை தன் கையில் வாங்கிக்கொண்ட வீரன்,
“உள்ள படையல போடுத்தா” என்று அபிராமியிடம் கூறினான்.
“இங்கன முடிஞ்சுதே! வாங்க உள்ளார போவோம். அவென் தொட்டியை மிதிக்க வச்சிட்டு வருவான்” என்ற மீனாட்சி அனைவரையும் வீட்டிற்குள் அழைத்துச்செல்ல,
“பார்த்துண்ணே” என்று வீரனுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லி, அங்கு தனியாக நின்று கொண்டிருந்த சுபாவை அழைத்துக்கொண்டு, ஆடுகளுக்கு உணவு ஊட்டும் நாச்சி மற்றும் அங்கையின் அருகில் சென்றான் லிங்கம்.
“என்ன காலையிலிருந்து அமைதியாவே கெடக்குற?”
“ஒண்ணுமில்ல.”
சுபா வீட்டிற்குள் செல்லும் கௌதமை தான் லிங்கத்தின் கேள்வியில் ஏறிட்டு திரும்பிக் கொண்டாள்.
“மொத்தமும் நீயிதேன் கொடுக்கணும். எல்லாம் சாப்பிட்டுச்சுவ. மீதியிருக்கிறது இவனுக்குத்தேன்” என்ற வீரனை ஒண்ணும் சொல்ல முடியாது மீண்டும் பொங்கலை எடுத்து கரியனுக்கு கொடுத்தாள்.
“ரொம்ப படுத்துறனா?”
வீரன் கேட்ட குரலில் ஆழ்ந்து அமிழ்ந்தவள் அவனை பரிதவிப்பாய் ஏறிட…
“பழகிக்கோடி என் தங்கப்பொண்ணு” என்று கண் சிமிட்டினான் வீரன். குறும்பு புன்னகையுடன்.
காதலாக நெருங்கி வருபவனை தள்ளி வைத்து வருத்துகிறோமே என்று வீரனின் குரலில் வருந்தியவள் அவனது சேட்டையில் சூடாகியிருந்தாள்.
“வெத்து கனா காங்காத மாமா. கௌதமுக்கு என்னைய பேசி முடிக்கத்தான் அவிங்கலாம் வந்திருக்கிறதே!” என்று வீரனின் இதயத்தில் ஈட்டியை இறக்கியவள், “பொங்க காலியாகிப்போச்சு” என்று அவன் அதிர்ந்து நிற்பதை பொருட்டாகக் கொள்ளாது வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
லிங்கத்துடன் இருந்த மூன்று பெண்களுமே வேலையை முடித்துக்கொண்டு உள் சென்றிட, வீரனிடம் வந்த லிங்கம்…
“என்னண்ணே அப்படியே செல கணக்கா நின்னுட்டு இருக்க?” என்று தொட்டு வினவினான்.
“நானு வெசனப்படுறதுல உன் மீனாகுட்டிக்கு அம்புட்டு சந்தோஷமாட்டிக்குடே” என்ற வீரன் தட்டினை கீழே வைத்துவிட்டு, “இவனை கூட்டியா” என்று தொழுவத்திற்குள் சென்றான்.
“ஏதோ வீம்புல நிக்குறா(ள்)ண்ணே! நீங்கயில்லைன்னா உக்கியே செத்துபோவா(ள்)” என்ற லிங்கம் “என்னவாம்?” எனக் கேட்டான்.
அம்சாவின் கயிற்றை அவிழ்த்து, தொட்டி கட்டி வைத்திருந்த இடத்திற்கு அழைத்து வந்த வீரன், அதனை அம்சாவால் மிதிக்க விட, லிங்கம் கரியனையும் மிதிக்க விட்டு கூட்டிச்சென்று கட்டிப்போட்டு வீரனருகில் வந்தான்.
“என்னண்ணே?”
“ஏதோ அந்தநா(ள்) கோவத்துல தள்ளி எட்ட நிக்குறா நெனச்சேன். ஆனால்” என்ற வீரன், தன் மார்பில் இடது பக்கம் வலது கை விரல்களால் அழுந்த தேய்த்து…