வீட்டில் சாமி கும்பிட்டு அனைவரும் ஒன்றாக நீண்ட வரிசையில் அமர்ந்து உணவு உண்டனர்.
அனைத்து வகையான அசைவ பதார்த்தங்களும் உணவில் இடம் பெற்றிருந்தன.
வீரனும், லிங்கமும் அருகருகே அமர்ந்திருக்க…
வீரனின் அடுத்த பக்கம் அங்கையும், லிங்கத்திற்கு இந்த பக்கம் மீனாளும் அமர்ந்திருந்தனர்.
மீனாள் அருகில் தற்செயலாக கௌதம் அமர, வீரனுக்கு உள்ளுக்குள் காந்தியது.
இதில் இருவரும் சிரித்து பேசியபடி உண்ண, வீரனிடம் புகைச்சல். லிங்கம் நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தான்.
“அத்தை கருவாட்டு வறுவல் வையுங்க!” அங்கை உணவு பரிமாறியபடி இருந்த அபியிடம் கேட்க…
“செஞ்ச மொத்தமும் மூக்குமுட்ட முங்கிட்டு திரும்ப கேட்கிறவ?” என்ற மகா, “கருவாட்டு கிண்ணம் காலியாகிப்போச்சு. வேற வெஞ்சனம் வச்சி உண்கு” என்றார்.
“ஏம்த்தா கொஞ்சமா செஞ்ச…” என்ற அங்கை யாருடைய இலையிலிருந்து எடுக்கலாமென்று நோட்டவிட, வீரனே தன் இலையில் இருந்ததை அவளது இலையில் வைத்தான்.
“மாமான்னா மாமா தான்” என்றவள் அவனின் கன்னம் கிள்ளி கருவாட்டில் கவனம் வைத்து, ரசித்து உண்ண… லிங்கம் தன்னுடையதையும் அவளுக்கு வைத்தான்.
அவளின் ரசிப்பான உணவு உண்ணும் முகம் அவனுக்கு அவன் உண்ணாமலே உணவின் சுவையை உணர வைப்பது போலிருந்தது.
“ம்க்கும்…” வீரனின் செருமலில் மீண்ட லிங்கம்,
“மெதுவா உண்கு சின்னகுட்டி” என்று இலையில் தலை கவிழ்த்திட…
“என்னடே மனசு ஆட்டம் காங்குதோ?” வீரனின் கேள்வியில் லிங்கமிடம் அதிர்வு.
“அப்படிலாம் இல்லண்ணே! எப்பவும் ஒரே முடிவுத்தேன்” என்றான். அழுத்தமாக. வீரன் சிரித்துக்கொண்டான். உள்ளுக்குள்.
லிங்கம் தானாக தெளிந்து உணர வேண்டுமென வீரன் நினைத்துக்கொண்டான்.
மூத்த ஆண்கள் ஒரு புறம் தனியாக அமர்ந்து உண்டு கொண்டிருக்க… நல்லான் இலையில் காலியாகும் உணவை அவர் கேட்பதற்கு முன்பே பார்த்து பார்த்து வைத்தனர் மகாவும், அபியும்.
“வயிறு நிறைஞ்சு போச்சுத்தா. அம்புட்டும் கொள்ள ருசி” என்று நல்லான் வாய்விட்டு பாராட்டியதை வசந்தியே நம்ப முடியாது ஆச்சரியமாக பார்த்தார்.
லிங்கம் முதலில் எழுந்துகொண்டான்.
வீரனின் பார்வை மீனாளின் இலையில் பதிந்தது.
அவள் இலையில் வைக்கப்பட்ட மீன் யாவும் அப்படியே இருந்தது… அவள் உணரும் முன்பு எட்டி எடுத்தவன், நிமிடத்தில் முள் பிரித்து தனித்தனி துண்டுகளாக அவளது கை பக்கம் நிரப்பிவிட்டான்.
“காரமா இருக்குன்னு சாப்பிடமா ஒதுக்கி வச்சிருக்கேன்னு நினைச்சேன் மீனு” என்று வீரனின் செயலை கவனித்த கௌதம் சொல்லியதோடு, “எல்லாரையும் அக்கறையா உன்னால் மட்டும் தான் கவனிக்க முடியும் வீராண்ணா” என்றான்.
“எனக்கு காரம் ஆவாதுன்னு இம்புட்டு வருசம் செண்டும் உனக்கு நினைவு இருக்குமாட்டிடே?” என்று மீனாள் கௌதமிடம் ஆச்சரியமாகக் கேட்க,
“இங்க எதையும் மறக்க முடியாது மீனு” என்று எதார்த்தமாக அவன் பதில் சொல்ல, வீரனுக்கு மீனாள் தன்னை கடுப்பேற்றுவது புரிந்தது.
“அவென் அவென் காதலை என்னனென்னத்தலையோ காட்டுறான். என் அண்ணேங்க ரெண்டும் சோத்துல காட்டுதுங்க. வெளங்கினாப்புலத்தான்” என்று நாச்சி புலம்ப…
வரிசையின் இறுதியில் ஓரமாக அமர்ந்திருந்த பிரேம்,
“நீயி ஆசையா ஊட்டுவேன்னு உம் பக்கட்டு வந்து உட்கார்ந்தியாக்க, என்னவோ பொலம்பிட்டு இருக்கவ?” என்று அவள் ஊட்ட மறுத்த கடுப்பில் கடுகடுத்தான்.
“நான் முடிச்சிட்டேன். நீயி பைய்ய வந்து சேரும்” என்ற நாச்சி, சுபாவுடன் எழுந்து கையினை சுத்தம் செய்ய கொல்லைப்புறம் சென்றாள்.
“வாத்து குட்டையை எட்டி பார்த்துட்டு வா நாச்சியா… எல்லாம் தண்ணியில இறங்கிடுச்சுவளான்னு?” என்று அனுப்பி வைத்தான்.
சில நிமிடங்களில் வந்த நாச்சி,
“எல்லாம் உறங்கிடுச்சுண்ணே” என்றவள் அங்கேயே நின்றிருந்த சுபாவின் அருகில் செல்ல, லிங்கமும் தன் வேலையை முடித்துக்கொண்டு வந்தான்.
“கரியனுக்கு எதுவும் போடலையா?”
“அவென் அண்ணே போட்டாத்தேன் நிறைக்க உண்குவான்” என்ற லிங்கம், “பனி நனையுது உள்ளார வாங்க ரெண்டேறும்” என்றுவிட்டு உள் செல்ல, எதிரில் கௌதம் வருவதை கண்டு,
“நீ போ நாச்சியா. நான் இதோ வாரேன்” என்று சுபா பின் தங்கினாள்.
மீனாட்சியும் நாச்சியை அழைக்க அவள் உள்ளே ஓடிவிட்டாள்.
சுபாவை கவனிக்காத கௌதம் தொட்டியில் நீர் மோண்டு கை அலம்பி திரும்பிட அவனுக்கு முன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள் சுபா.
‘எனக்கு முன்னாடி வந்தவங்க ஏன் நிலைப்படியில் ஒளிஞ்சு நிக்குறாய்ங்க?’ என்று நினைத்து வந்த மீனாள் வீரனை தாண்டி செல்ல முற்பட, அவளை இடையோடு கையிட்டு தன்னருகில் இழுத்து மறைத்திருந்தான்.
“என்ன செய்றீய்ங்க? யாராச்சும் பார்த்தா என்னாகுமாட்டிக்கு?” என்று அவனுள் திமிறியவள், பின்னால் திரும்பி வீட்டுக்குள் பார்த்தாள்.
“இப்போதைக்கு இங்கட்டு யாரும் வரமாட்டாய்ங்க” என்றவனின் பார்வை அலையும் அவளது கரு விழிகளில் சடுகுடு ஆடியது.
அப்போதுதான் வீரன் உறுதியான விரல்கள் தன் வெற்றிடையில் அழுந்த படிந்திருப்பதை உணர்ந்த மீனாள்,
“கையெடு மாமா” என்று அவளுக்கே கேட்காத குரலில் முனகினாள்.
“சாரிடி… நானும் உன்னைய இழுக்குற அவசரத்துல கவனிக்கல” என்று உண்மையைக் கூறிய வீரன், வெகு நிதானமாக வருடியவாறு தன் விரல்களை எடுத்தான்.
சொருகிய விழிகள் பட்டென்று நிலைகொள்ள, அதில் பரவிய ஏமாற்றத்தை கண்டுகொண்ட வீரன் கள்ளத்தனமாக புன்னகைத்து விலகி நின்றான்.
“என்ன பேசிக்கிறாய்ங்க? ஒண்ணும் பிடிபடலை!”
“லவர்ஸ்க்குள்ள ஆயிரம் இருக்குமாட்டி. அதென்னத்துக்கு நமக்கு. நாம நம்ம லவ்ஸ் பத்தி பேசுவோமா?” என்று வீரன் கேட்க,
“எத்தனவாட்டி சொன்னாலும் உன் புத்தியில அம்புடாதா மாமா” என்று கோபமாகக் கூறிய மீனாள், “நான் கையே கழுவுல” என்றவளாக உள்ளே சென்று சமையலறை சன்னல் வழியாக கையினை சுத்தம் செய்து அப்பாத்தவின் அருகில் சென்றுவிட்டாள்.
“பஞ்சாயத்து முடிஞ்சுதுன்னா நான் வரட்டுமாடே?” வீரனின் குரலில் சுபா வேகமாக வீட்டிற்குள் செல்ல…
“சாரி வீராண்ணா!” என்றிருந்தான் கௌதம்.
“என்னடே சடவு?” என்ற வீரன், “யாரு கெஞ்சுறது, யாரு மிஞ்சுறது?” எனக் கேட்டான். கையில் நீரினை ஊற்றியபடி.
“எனக்கு விருப்பமில்லன்னு சொல்லியும் பின்னாடியே சுத்தி படுத்தி வைக்கிறாள். இப்போக்கூட நான் இங்க வரேன்னு தெரிஞ்சு வச்சிக்கிட்டுத்தான் வந்திருக்காள். சொல்லி புரிய வையுங்கண்ணா!” என்று சொல்லி செல்லும் கௌதமிடம்,
“வேணாங்கிறவன் என்னத்துக்குடே அந்த புள்ள கொடுத்ததை வாங்கிட்டு நின்ன? தள்ளிவிட்டு செவுலிலே ஒன்னு கொடுத்திருந்தியான்னா நான் போயி பேசியிருப்பேன்” என்று வீரன் சொல்ல கௌதமின் நடை நின்றது.
“அண்ணா?”
“என்னத்துக்கு மறுக்குற? மொத காரணத்த சொல்லு?”
“ஒத்துவராதுண்ணா. அவ்வளவு தான். அவளை இங்கிருந்து போக சொல்லுங்க!” கௌதமின் குரலில் பிடிவாதம்.
“நீயி உன் மாமன் வூட்டுக்கு வந்திருக்காப்போல, சுபா அவ(ள்) அயித்த வூட்டுக்கு வந்திருக்கா(ள்). எங்கிட்டு இருந்து போவ சொல்லுறது?” என்ற வீரனிடம் என்ன பேசுவதென்று தெரியாது கௌதம் வேகமாக உள்ளே சென்றிட,
“என் லவ்வுல மட்டுந்தேன், நான் சுத்தல்ல இருக்கேன் போல. மத்ததுலலாம், இவனுவதேன் கெத்து காட்டி முறுக்கிட்டு திறியிரானுவ?” என்று முனகளோடு வீரன் உள் வந்தான்.
அடுத்த நாள் காணும் பொங்கல். பொங்கல் நிறைவு நாள்.
குடும்பத்தோடு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதாக முடிவெடுக்கப்பட்டு மருதன், நல்லான் குடும்பம் கிளம்பிட, பாண்டியன் வீட்டினர் தத்தம் அறைக்குள் புகுந்தனர்.
“இந்த சுபா புள்ள கௌதமை ஒரு மாறி பாக்குதுண்ணே. பார்வைக்கு அர்த்தம் வெளங்குல!” அனைவரும் சென்றுவிட்டதை உறுதி செய்துகொண்டு லிங்கம், தான் கவனித்ததை வீரனிடம் கூறினான்.
“நீயி பச்சமண்ணுடே. வெளங்காது” என்று வீரன் தம்பியின் முதுகில் தட்ட…
“அப்படிலாம் இல்லை. நீங்க என்ன சங்கதின்னு சொல்லும். நான் மண்டையில ஏத்திக்கிறேன்” என்றான் லிங்கம்.
“அதுங்கதேன் சொல்லணும்” என்ற வீரன், “நாளைக்கு நான் கோவில் வர முடியாதுடே! அம்புட்டு பே(ர்)த்தையும் பார்த்து சூதானமா பைய்ய கூட்டிட்டுப்போயி வந்து சேரு” என்றான்.
லிங்கம் ஏனென்று கேட்டதற்கு,
“சோலி கெடக்கு” என முடித்துக்கொண்டான் வீரன்.
“இந்த பொங்கலுக்கு லான்ஞ் பண்ண புது டிஷ் ரீச் எப்படியிருக்கு?” அதன் பிறகு அண்ணன் தம்பி இருவரும் தொழில் சம்மந்தமாக பேசி, கணக்கு பார்த்து முடித்து அறைக்கு செல்ல மேலும் ஒன்றரை மணி கடந்திருந்தது.
வீரன் வழக்கம்போல் சன்னல் வழியாக தன்னவளின் அறையை நோட்டமிட, விளக்கின்றி இருளாக இருக்க உறங்கிவிட்டாள் என்பதை யூகித்து தானும் மெத்தையில் விழுந்து கண் மூடிட… அடுத்த நொடி அவனது அலைப்பேசி ஒலித்தது.
“தங்கம்?”
“மாமா நானு அங்கை!”
“என்ன இந்நேரத்துல?” அவனது தங்கபொண்ணு என நினைத்து உற்சாகமாக எடுத்தவனிடம் சடுதியில் ஏமாற்றம்.
“கௌதம் அப்பாவுக்கு கள்ளு வேணுமாம். ஐயாவை நாலு மணிக்கு கூட்டிட்டுப்போவ சொல்லியிருக்காரு” என்றவள், “ஐயா தான் மரமேறி கள்ளை பதனியாக்கிக் கொடுக்கணுமாம். ரெண்டேறும் வூட்டு முன்னாடி வாய்க்காலில் ரகசியம் பேசிட்டு நின்னாய்ங்க. அக்கா தான் கேட்டுட்டு வந்து உங்ககிட்ட சொல்ல சொன்னாள்” என்று அங்கை சொல்லி முடிக்க, மீனாள் நெற்றியில் தட்டிக்கொண்டாள்.
“ஏன் அவீங்க என்கிட்ட சொல்லமாட்டாங்களாமா?” என்ற வீரன் மீனாளிடம் போனை கொடுக்க சொல்ல, வாங்க மறுத்தவளின் கையில் போனை திணித்துவிட்டு அங்கை இழுத்து போர்த்தி படுத்துக்கொண்டாள்.
“ஹலோ…”
“என்கிட்ட பேசுறதுல கூட உனக்கு அம்புட்டு கஷ்டமா தங்கம்?” கேட்ட வீரனது குரல் உடைந்திருந்ததோ?
“அப்படி… அப்படியில்லை” என்றவளின் குரல் அடங்கியே ஒலித்தது.
“ஐயா மரம் ஏறுறது இல்லையே! ஏழு வருசத்துக்கு முன்ன ஏறி விழுந்து கால் உடைஞ்சு கிடந்தாரே! அப்படி எதுவும் ஆகிடுமோன்னு தான் சொல்ல சொன்னேன். அவரு மாமா கேட்டாக்கா போதும். ரோசிக்கவே மாட்டாரே!” என்றாள்.