அதிகாலை நான்கு மணியளவில் மருதனும், நல்லானும் ஆற்றங்கரையோரம் வரிசையாக இருக்கும் பனைமரங்களின் இடம் வர, அங்கு அவர்களுக்கு முன்பே வீரனும், லிங்கமும் நின்றிருந்தனர்.
“இவனுவ இங்கென்ன செய்யுறானுவ?”
நல்லானுக்கு வீரனென்றால் அலர்ஜி தான். அதனால் தள்ளி நின்றபடி மருதனிடம் வினவினார்.
“இங்கன நிக்குற மரம் முழுக்க பாண்டியனுக்கு சொந்தமானதுதேன் மாமா. நொங்கு சீசனுக்கு முன்னுக்கு, கள்ளு இறக்க குத்தகைக்கு விட்டுடுவான்” என்றார் மருதன்.
“ம்” என்ற நல்லான், “நான் அங்கட்டு அவன் பக்கட்டு வரல, இங்கனவே உட்காருறேன். நீயி கொண்டு வா” என்றவர் கரையில் அமர்ந்துவிட்டார்.
“வா மாமோவ். என்னத்துக்கு பனியில உலாத்திட்டு வர?” என்ற வீரன், “அவருக்கு வேணுமின்னாக்கா, அவுக வர வேண்டியதுதானே!” என்றான்.
“வீரா கம்மின்னு இருடே! இன்னமும் அந்த மனுசன் உன்னைய கண்டாக்கா அஞ்சதான் செய்யுறாரு” என்ற மருதன், “எப்போலயிருந்து இந்த பழக்கம்?” எனக் கேட்டார். இருவரையும் பார்த்து.
“நம்ம ஹோட்டல்ல வந்து தங்கியிருக்க டூரிஸ்ட் கேட்டாங்கன்னு மேனேஜர் சொன்னாரு. அதான் கொண்டு போய் கொடுக்கலாமுன்னு வாங்க வந்தோம். இந்நேரம் தானே இறக்கினதும் சுத்தமானதா கிடைக்கும்” என்று பதில் கொடுத்தான் லிங்கம்.
“சரிடே! இறக்குனதும் ஒத்த கள்ளா அவருக்கு கொடுங்க” என்ற மருதன், “நான் கொஞ்சம் சரிச்சிக்கவா?” என வீரனிடம் கேட்டார்.
கள்ளு உடலுக்கு நல்லது என்றாலும் அதுவும் ஒரு போதை தானே! அதுக்கு மருதன் அடிமை என்றே சொல்லலாம். அதனை வீரன் தான் அவரை விடவைத்தான். யார் சொல்லியும் கேட்காதவர் வீரனுக்காக மட்டுமே அதனை விட்டும் இருந்தார்.
எங்கு ஆசையாக ருசி பார்க்க தூண்டிவிடுமோ என்று இந்தப்பக்கம் வருவதைக்கூட தவிர்த்திருந்தார்.
இன்று நல்லானுக்காக வந்திருக்க, நாவின் சுவை நரம்புகளை கட்டுப்படுத்த முடியாது கேட்டிருந்தார்.
“இந்தா இப்பவே உம் மாமனை சென்னைக்கு பொட்டிக்கட்ட வைக்குறேன் இரும்” என்று வீரன் வேட்டியை மடித்துகட்ட,
“அடேய் வேணாம்டே! நான் கேட்டது தப்புத்தேன்” என்று வீரனின் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவர், “அழிச்சாட்டியம் செய்யுற அமிழ்தா” என்றார்.
“இருக்கட்டும்” என்ற வீரனிடம், மரத்திலிருந்து இறங்கிய நபர், குளிர்ச்சியான கள்ளை சிறு குடுவையில் ஊற்றி கொடுக்க…
“இந்தா மாமா சுண்ணாம்பு கலக்காதது. கொண்டு போய் கொடு” என்று மருதனிடம் நீட்டினான்.
அவர் தன் கையில் வாங்கியதை ஏக்கமாக பார்க்க…
“இது ஆவுறதுக்கில்லை” என்ற வீரன், “நீயி வாளியில வாங்கிட்டு கிளம்புடே லிங்கம். வூட்டுல பிரிட்ஜில் வைய்யீ. நான் ஹோட்டடலுக்கு கொண்டு போயி கொடுத்துக்கிறேன்” என்று மருதனின் கையிலிருந்த குடுவையை வெடுக்கென பிடுங்கிக்கொண்டு நல்லானை நோக்கி வேகமாகச் சென்றான்.
“என்ன அலும்பு பண்ணுதியான் பாரு லிங்கு” என்ற மருதனிடம், “உனக்கு ஆவாது தானே மாமா. அதுக்குதேன் அண்ணே பயப்படுது” என்ற லிங்கம் கிளம்பிவிட்டான்.
“இந்தாருங்க பெரிப்பா. குடிங்க” என்று நல்லானிடம் நீட்டிய வீரன், அவர் அவனை மேலும் கீழும் பார்த்தவாறு வாங்கி மெதுவாக குடித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன்,
“நல்லாயிருந்துச்சா?” எனக் கேட்டான்.
நல்லான் ம் என்று தலையாட்டியதும்,
“அம்புட்டுதேன். இனி இந்த பக்கட்டு வரக்கூடாது. சொல்லிப்புட்டேன்” என்றான்.
“என்னை கண்ட்ரோல் பண்ணி, இங்கட்டு வரக்கூடாதுன்னு சொல்ல உனக்கு அதிகாரமில்லை” என்ற நல்லான் சிலிர்த்துக்கொண்டு எழுந்து நிற்க, மருதன் வேகமாக அருகில் ஓடி வந்து நின்றார்.
“உங்க மேல அக்கறைப்பட்டு சொல்லல. எம் மாமனுக்கு இது ஒத்துக்காது. அம்பாடு பட்டு அவரை விட்டொழிக்க வச்சிருக்கேன். உங்கக்கூட வந்ததுக்கே குடிச்சிக்கவான்னு கேட்காராறு. ஒரு வாய் ருசியில அடங்குற விசியமா இது. அவரு உடம்புக்கு இது ஆவாது. அத்துக்குத்தேன் சொன்னேன், நீங்களும் இங்கன வராதீங்க. மொத உங்களுக்காகன்னு வருவாய்ங்க. பொறவு, நீங்களே கூட குடிச்சிப்பாருன்னு சொல்லலாம். உங்க பேச்சை தட்டக்கூடாதுன்னு, அவரு திரும்பக் குடிக்கலாம். அந்த கதைக்கெல்லாம் இங்கன இடமே இல்லை” என்ற வீரன், “வூடு போவோம் வாங்க” என்று நல்லானை பேசவே விடாது நடக்க வைத்து வீட்டில் விட்ட பின்பு தான், அவன் வீடு சென்றான்.
“சுத்தமான ஒத்த மரத்து கள்ளு குடிச்சு பல வருசம் ஆச்சேன்னு, ஆசைக்கு உன்கிட்ட கேட்ட பாவத்துக்கு, நான் ஏதோ நித்தம் குடிக்குறவனாட்டம் எனக்கு கிளாஸ் எடுத்து கள்ளையே வெறுக்க வச்சிட்டாண்டே உன் மருமவன். இனி அந்தப்பக்கட்டு போகணும் நெனப்பே வராதுடே” என்ற நல்லான் மருதனிடம் புலம்பியபடி கூடத்தில் கிடந்த கட்டிலில் குப்புற கவிழ…
அவர் பேசியதைக்கேட்ட மீனாள்,
‘தேன்க்ஸ் மாமா’ என்று சந்தோஷமாக சொல்லிக்கொண்டாள்.
அவள் பயந்ததும் இதற்காகத்தானே! எங்கே மருதன் மரம் ஏறுவதோடு மீண்டும் இதனை குடித்துவிடுவாரோ என்று. அதனை வீரன் மொத்தமாக தடுத்திருந்ததில் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி.
உடனடியாக அலைப்பேசி வழியாக அவனுக்கு நன்றியும் தெரிவித்திருந்தாள். சில நிமிடங்களில் பார்த்துவிட்டான் என்று தெரிந்தவளுக்கு, அவன் ஒரு ஹ்ம்ம் கூட சொல்லாதது ஏமாற்றமாக இருந்தது.
“வெரசா போனாதேன், நெரிசலில் மாட்டாம அம்மனை பார்த்திட்டு வெரசா வந்துசேர முடியும்” என்று மகா சொல்ல அனைவரும் குளித்து கிளம்பி வீரனின் இல்லம் வந்து சேர்ந்தனர்.
மீனாட்சியிடம் ஆசீர்வாதம் பெற்று பணம் பெற்றுக்கொண்ட பிள்ளைகள், கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்க மீனாள் வீரனைத்தேடி வீட்டையே வலம் வந்திருந்தாள். அவன் இருப்பதற்கான அடையாளமே இல்லை என்றதும் அவளது முகம் சுருங்கிப்போனது.
‘என்னதான் மீனாள் உனக்கு வேணும்?’ தனக்கு தெரியாத பதில் வேண்டி தன்னையே கேட்டுக்கொண்டவளுக்கு கோவில் செல்ல வேண்டுமென்கிற மனநிலையே மாறியிருந்தது.
“லிங்கு மாமா பால் பொங்குச்சா?”
லிங்கத்தை கண்டதும் அங்கை ஆர்ப்பாட்டமாகக் கேட்க,
“அப்பத்தா, ஐயாகிட்ட வாங்குனது போதலையாக்கும்” என்ற லிங்கம் சட்டை பையிலிருந்து ரூபாய் எடுத்து அவளுக்கு கொடுக்க,
“இன்னைக்கு இப்படி கேட்டாக்கா பணம் கிடைக்குமோ” என்ற கௌசிக்கும் கேட்க,
லிங்கம் அங்கையை முறைத்துக்கொண்டே கௌசிக்கும் கொடுக்க அவன் பின்னால் கௌதம், பிரேம், மீனாள், நாச்சி, சுபா என்று ஒரு வரிசையே நின்றது.
“நீங்க ரெண்டேறும் தான் சம்பாரிக்குறீங்களேடே! பொறவு என்னத்துக்கு என்கிட்ட புடுங்குறீங்க?” என்று கேட்டாலும் அனைவருக்கும் மகிழ்வாகவே கொடுத்தான்.
அடுத்து அபிராமி வர…
பிள்ளைகள் அனைவரும் அவரை சூழ்ந்திட…
“இங்காருங்க பிள்ளைங்களா என்கிட்ட ஆயிரம் தான் இருக்கு. அடிச்சிக்காம பங்கு போட்டுக்கோங்க” என்று அவர் முடித்துக்கொண்டார்.
மகாவும் அதையே செய்ய,
மருதன் தன்னிடம் வீரன் பேசிவிட்ட மகிழ்வைக் கொண்டாடும் விதமாக, கணக்கில்லாமல் கொடுத்தார்.
அனைவரும் கொடுக்கவும் நல்லானும் விறைப்பாக நின்று பணம் கொடுத்தார்.
“எங்கப்பா பத்து ரூபாய் கொடுக்க அம்புட்டு ரோசிப்பாரு. இன்னைக்கு கேட்காமலே ஐந்நூறு கொடுத்திருக்காரு. அதுக்குத்தான் சொன்னேன்” என்ற கௌசிக்கிடம், “அப்போ என் காசும் நீயே வச்சுக்கடே” என்று கொடுத்தவள், அவன் மறுக்க மறுக்க அவனின் சட்டை பையில் தானே வைத்துவிட்டாள்.
“உனக்கு வேணாமா?”
“நான் இம்புட்டு காசு வச்சு என்னடே பண்ணப்போவுதேன். நீயி தான் காலேஜுக்கு போற, எதாவது செலவு இருக்கும்” என்றவள், “நான் வேணுன்னாக்கா ரெண்டு மாமாகிட்டயும் வாங்கிப்பேன்” என்று கூறினாள்.
என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியாவிட்டாலும், இருவரும் சிரித்து பேசுவதை பார்த்திருந்த லிங்கத்துக்கு அவர்களின் நெருக்கம் குடைச்சலை உண்டாக்கியது. காரணம் தான் புரியவில்லை அவனுக்கு.
‘அவன் தான் மேல சாயுறான்னா… இவளும் கை போடுறா(ள்). லிங்கு மாமான்னு வரட்டும், அந்த பன்னு கன்னம் ரெண்டையும் கடிச்சு வைக்குறேன்’ என்று உள்ளுக்குள் புலம்பினான்.
“என்ன மாமா சிடுசிடுன்னு இருக்காப்ல இருக்கு?” என்று கேட்டபடி சுபா அவனருகில் வர, முகத்தை சீராக வைத்துக்கொண்டான்.
“கெளம்பியாச்சுன்னா வேனுல ஏறுங்க. புறப்படுவோம்.” லிங்கம் சொல்ல அனைவரும் வண்டியில் ஏறி அமர்ந்தனர்.
“அதை கண்டுக்காத அங்கை” என்று முடித்துக்கொண்டான் கௌதம்.
கௌதமின் பாராமுகம் அத்தனை வலி கொடுக்க, இருக்கையில் சாய்ந்து கணகளை மூடிக்கொண்ட சுபாவின் கண்ணீர் கன்னம் தாண்டியது.
அருகில் அமர்ந்திருந்த மீனாளுக்கு பதட்டமாகிட…
“சுபாக்கா” என்று தன்னுடைய தாவணியால் யாரும் பார்க்கும் முன் அவளின் முகம் துடைத்துவிட்டாள்.
“நாம உயிரா நேசிக்கிறவங்க, நம்மளோட அன்பை புரிஞ்சிக்கலன்னாலும் பரவாயில்லை. அதை உதாசீனம் செய்யுறது எவ்வளவு வலிக்கும் தெரியுமா மீனு?” எனக்கேட்ட சுபாவின் வார்த்தையிலிருந்த வலியை மீனாளால் உணர முடிந்தது.
அந்த வலியை தானே… தெரிந்தே அவளவனுக்கு அவள் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.
“கௌதம் பக்கம் ஏதும் காரணமிருக்குமே சுபாக்கா. அவங்க உங்களை புரிஞ்சிக்கலன்னா, நீங்க அவரை புரிஞ்சிக்கலாமே?” என்றாள் மீனாள்.
நாச்சியும் பிரேமும் சிரித்து பேசியபடி ஒன்றாக ஒரே இருக்கையில் அமர்ந்திருக்க, அவர்களை ஏக்கமாக ஏறிட்ட சுபாவின் பாவனை மீனாளை என்னவோ செய்தது.
‘மாமா என்னை கஷ்டப்படுத்துறார்ன்னா… நானும் தானே அவரை கஷ்டப்படுத்துறேன்.’ என நினைத்த மீனாளுக்கு பழையதை கடந்திட முடியுமென்று மட்டும் நம்பிக்கை இல்லை.
‘உன்னை இழந்திடுவேனா மாமா?’ இதயம் முழுக்க சொல்ல முடியாத வலி உண்டாவதை உணர்ந்தாள்.
“கோவில் வந்துருச்சு இறங்குங்க.”
லிங்கம் சொல்ல அனைவரும் ஒன்றாக கோவில் உள் நுழைந்தனர்.
“அமிழ்தன் வந்திருந்தியான்னா நிறைஞ்சிருக்கும்” என்ற அப்பத்தா இரு கரம் உயர்த்தி அம்மனை வழிபட, ஒவ்வொருவரும் விழிகள் மூடி தங்களின் வேண்டுதலை அம்மன் முன் வைத்தனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் கொடுக்கப்படும் தாழம்பூ குங்குமத்தை பெற்றுக்கொண்டு அனைவரும் குளத்தின் பக்கம் வந்து அதன் படிக்கட்டுகளில் அமர்ந்தனர்.
அந்நேரம் சரியாக வந்து சேர்ந்தான் வீரன்.
“அண்ணே வந்திடுச்சே” என்று லிங்கம் சொல்ல…
“பால் பொங்கிடுச்சா அண்ணே” என்றான் கௌசிக்.
“இவனுக்கு இம்புட்டு வாங்கியும் பத்தலை போலிருக்குடா” என்று லிங்கம் அவனின் முதுகில் வலிக்காது அடி வைக்க… அனைவரின் முகத்திலும் சிரிப்பு நிறைந்தது.
மீனாள் மட்டும் வீரனையே பார்த்திருந்தாள்.
எப்போதும் தான் அருகிலிருந்தால் தன்னையே வட்டமிடும் வீரனின் விழிகள் இன்று மற்றவர்களின் மேலிருப்பதை கவனித்தவள் தன் பார்வையை விலக்கிக்கொள்ளவில்லை.
“சாமி கும்பிட்டியா அமிழ்தா?”
“ஆச்சுத்தா!”
“நெத்தியில குங்குமத்தை காணும்” என்ற அபி சற்று நேரத்திற்கு முன் பையில் வைக்கப்பட்ட குங்கமத்தை தேட…
தன் கையில் மூடியிருந்த குங்குமத்தை வீரனின் முன் விரல் பிரித்து நீட்டியிருந்தாள் வீர அமிழ்திறைவனின் தங்கமீனாள்.
ஒரு கணம் அழுத்தமாக அவளின் உள்ளங்கையை பார்த்த வீரன்,
அபி நீட்டிய குங்குமத்தை எட்டி எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான்.
வரும் போது சுபா சொல்லிய உதாசீனத்தின் வலியை உணர்வுப்பூர்வமா அக்கணம் மீனாள் உணர்ந்தாள். கண்கள் கலங்கிவிட்டது.