கண்கள் குளம் கட்டி நிற்க, உணர்வுகளின் அழுத்தத்தில் மீனாளின் செவ்விதழ்கள் துடித்தன.
யாருக்கும் காட்டாது வேறு பக்கம் திரும்பியவள், அவர்கள் அமர்ந்திருக்கும் பக்கத்தில் தூணின் மறைவில் நின்று கொண்டாள்.
பார்த்துக்கொண்டிருந்த லிங்கம்…
“என்னண்ணே?” என்க,
“அவளுக்கு இதுத்தேன் நல்லதுடே” என்ற வீரன், “பாதி வேலையில விட்டுபோட்டு வந்தேன். பார்த்துக்க” என்று சொல்லி சென்றுவிட்டான்.
“இன்னைக்கு கூட அப்படியென்ன ஆவலாதி அப்பு உன் உடன்பிறந்தவனுக்கு?” என லிங்கத்திடம் வினவினார் வசந்தி.
“ஹோட்டலு இப்போ ரெண்டு இல்லைங்க அத்தை. ஏழாகிப்போச்சு. அண்ணே போவலன்னா நாந்தேன் போவனுமாட்டிக்கு. சீசன் நேரமுங்க. டூரிஸ்ட் வரத்து அதிகம். நானு குடும்பத்தோட இருக்கணுமின்னுதேன் எனக்கு பதிலா அண்ணே அலையுது” என்ற லிங்கத்தின் பதிலில் வசந்தியின் முகம் சிறுத்தது.
“விவசாயம், ரெசிடன்சியல் ஹோட்டல் எல்லாம் ஒரு தொழிலா?” என்று தானே வசந்தி அன்று பாண்டியனை மறுத்திருந்தார். இன்று அதற்கு தக்க பதிலடி கொடுத்த திருப்தி லிங்கத்திடம்.
லிங்கம் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
“காலம் போன காலத்துல இதை சொல்லிக் காட்டணுமாடே!” அப்பத்தா சொல்லிட, பாண்டியன் மகனை முறைத்தார்.
வசந்திக்கு எப்போதும் இவர்களின் ஒற்றுமை உறுத்தல் தான். அதுவும் உடன் பிறந்த தங்கை தான் வந்து போகுமளவில் கூட இல்லாமல் இருக்க, இவர்கள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே என்ற பொறாமையே அவரின் குணத்தை மாற்றியிருந்தது.
அதுவும் வசந்தி போன் செய்யும் போதெல்லாம், குடும்பமென்று அவர் பாண்டியன் வீட்டு புகழை பாடுவதில் அண்ணன் மீதே அவருக்கு கோபம். இங்கு வந்து பார்த்த பின்னர் இரு குடும்பத்தின் இருப்பிடம் மட்டுமே வேறு, மனதளவில் ஒன்றாக இருக்கின்றனரென்று அத்தனை எரிச்சல் அவருக்கு. அதனைத்தான் ஒவ்வொரு சிறு பேச்சிலும் காட்டிக்கொண்டிருக்கிறார்.
அதனை உணர்ந்தே லிங்கம் காட்டமாக பதில் கொடுத்தான்.
“என்னண்ணா அம்மாவும் அப்பா மாதிரியே பேசுது. இங்க வந்து மாறிட்டாங்களோ? அம்மா இப்படிலாம் பேச மாட்டாங்களே?” கௌசிக் கௌதமிடம் கேட்க,
“நல்லானின் மனைவின்னு ப்ரூவ் பன்றாங்க. கண்டுக்காத” என்ற கௌதம் வசந்தியை பார்க்க, அவரோ முகம் திருப்பிக்கொண்டார்.
“அப்பா கூட வந்ததிலிருந்து அமைதியாத்தான் இருக்கிறார்” என்ற கௌசிக் அங்கை கூப்பிட்டாளென்று அவளுடன் சென்றுவிட, கௌதமின் பார்வை தன்னைப்போல் சுபாவின் மீது படிந்தது.
“கடைத்தெருவுல எதாவது வாங்கணுமின்னா வாங்கிட்டு வாங்க பசங்களா! கெளம்புவோம்.” மகா சொல்லிட சிறியவர்கள் எழுந்து சென்றனர்.
பெரியவர்கள் பேச்சில் ஆழ்ந்திட…
லிங்கம் மீனாளின் அருகில் சென்று அமர்ந்தான்.
“என்னாச்சு மீனாகுட்டிக்கு?”
அவளின் தலையை தன் தோள் மீது சாய்த்தவனாக வினவினான்.
“மாமா என்னைய வெறுத்துட்டாரு நினைக்குறேன்” என்றவளின் கண்ணில் மலுக்கென நீர் நிறைந்தது.
“அண்ணே உன்னைய வெறுக்கிறதா?” என்ற லிங்கம், “நீயி அண்ணே வேணாமின்னு தானே இருக்க? பொறவு அவரு உன்னைய வெறுத்தா என்ன? பேசலன்னா என்ன? என்னத்துக்கு வெசனம்?” என்றான்.
“தெரியலையே?” என்றவள், “கஷ்டப்படுத்துறேனா மாமா?” எனக் கேட்டாள்.
“அண்ணே தான் சொல்லணும்” என்ற லிங்கம், “மொத படிப்பை முடிக்கிறதை பாரு. அண்ணே தான் உனக்குன்னா அதை நீயே நினைச்சாலும் மாத்த முடியாது” என்றவன் அவளை எழுப்பி கடைகள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
பெரியவர்கள் அனைவரும் கோவிலில் கூடியிருப்பதால் பிரேம் நாச்சியின் நிச்சயத்துக்கு நாள் பார்க்கலாமென்று பேசிக்கொண்டிருக்க…
வசந்தி கேட்டதில் நல்லானைத் தவிர்த்து அனைவரும் அதிர்ச்சியை உள்வாங்கினர்.
வசந்தி இப்படி கேட்பாரென்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
அவர்களின் எண்ணமே வேறாயிற்றே! அதுவும் மருதனுக்கு அவரின் ஆசை மருமகன் மாப்பிள்ளையாக வேண்டுமென்று பேராசையாயிற்றே! மருதன் தான் வசந்தி கேட்டதில் அதீத அதிர்வு கொண்டார்.
மீனாட்சிக்கு என்ன தான் அண்ணன் பிள்ளைகளாக இருந்தாலும், அவ்விருவரையும் தன்னுடைய மக்கள் போல் பார்த்துக்கொண்டாலும், உரிமை பேச்சில் தலையிடக்கூடாதென்று ஒதுங்கி இருந்தார்.
“எனக்கும் மீனாளை கேட்கணும் விருப்பம் மருதா. அத்துக்குத்தேன் வந்ததே!” என்றார் நல்லான்.
நல்லானுக்கு மருதனை பிடிக்காது என்பது அவரின் பேச்சிலே தெரியும். அப்படிப்பட்டவர் தன் மகளை கேட்பதை மருதனால் நம்பவே முடியவில்லை.
நல்லானுக்கும் சரி, வசந்திக்கும் சரி வீரனென்றால் ஆகாது. இச்சமயத்தில் தன்னுடைய விருப்பம் தெரிந்தால் என்ன பிரளயத்தை உண்டு பண்ணுவார்களோ என்று மருதன் மௌனம் காக்க… தனக்கு இப்போதே ஒரு முடிவு தெரிந்தாக வேண்டுமென வசந்தி பிடிவாதமாக இருந்தார்.
“மீனா கண்ணு படிச்சிட்டு இருக்குதே ஆத்தா. எப்படி கண்ணாலம் கட்டி குடுக்கிறது?”
மருதனின் கேள்வி நல்லானுக்கு நியாயமாகப்பட்ட அதே கணம்,
“கௌதமுக்கும் இருபத்தி நாலு தானேண்ணே ஆவுது. இப்போ பரிசம் மட்டும் போட்டு உறுதி பண்ணி வச்சிப்போம். மீனாள் படிப்பை முடிச்சதும், கௌதமுக்கும் இருபத்தி ஏழு வந்துபுடும். பொறவு ஜாம் ஜாமுன்னு கண்ணாலம் பண்ணிப்புடலாமே” என்றார் வசந்தி.
வசந்தி சொல்வதில் அத்தனை பேரும் அயர்ந்து போய் பார்த்தனர் அவரை.
“இவ(ள்) ஒரு முடிவோடு வந்திருக்காப்போல மகா!” மீனாட்சி தன் மகளிடம் முணுமுணுக்க…
அபிராமிக்கு அண்ணன் மகள் சுபா இருந்தாலுமே, அத்தையென்று சிறு வயது முதல் தன் கையிலே வளர்ந்த மீனாள் மருமகளாக வருவதில் கொள்ளை விருப்பம்.
“அவள் மேல படிக்கணுமின்னு விருப்பப்படுறா மதினி.” மகா நாசூக்காகக் கூறினார்.
“இப்போவே மேப்படிப்புத்தானே மகா படிக்கிறா?” என்ற வசந்தி, “இதுக்கு மேற்பட்டு படிச்சு அரசாங்க உத்யோகத்துக்கா போவப்போறா? அதெல்லாம் வூட்டுல உட்கார்ந்து எம் மவனை கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு புள்ளைய பெத்து போட்டா ஆவாதா?” என்றார்.
அவரின் அப்பேச்சு அங்கு ஒருத்தருக்கும் பிடிக்கவில்லை.
“நல்லா படிச்ச… பெரிய ஆபீசர் வேலையில இருக்குற ஆளத்தான் கட்டிப்பேன்னு கட்டிக்கிட்ட நீங்களா மதினி இப்படி பேசுறீக?” என்ற மகா, “அவள் வேலைக்கு போறாளோ இல்லையோ… பொறந்த வூட்டுலத்தானே பொண்ணுங்க ஆசைப்பட்டதை செஞ்சிக்க முடியும். அதனால அவ விருப்பட்டவரைக்கும் படிக்க வச்சுதேன் அவளுக்கு கல்யாணம்” என்றார் மகா.
மகா என்றுமே இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பிடிவாதமாக பேசிடமாட்டார். மருதனுக்கே மகா இப்படி முறைப்பாக பேசுவதில் உடன்பாடில்லை என்றாலும், வசந்தியை இப்படி பேசவில்லை என்றாலும் சமாளிக்க முடியாது என்றே தோன்ற அமைதியாக இருந்தார்.
“என்னண்ணே உம் பொண்டாட்டியை பேசிவிட்டு நீயி மௌனமா உட்கார்ந்திருக்க?” வசந்தியே பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வரட்டுமென்று நல்லான் அமைதியாக இருந்தார்.
“இப்போவேவா கண்ணாலம் கட்டி வைக்க கேக்குறேன்? பரிசம் மட்டும் போடத்தானே?” என்றார் வசந்தி.
“என்ன மருதா நாங்களே பொண்ணு கேட்டமாட்டிக்கு பவுசு காட்டுறியோ?” முதல் முறையாக நல்லான் வாய் திறந்தார். அவர் விறைப்பாகக் கேட்ட தோரணையே சண்டைக்கு பாய்வது போலிருந்தது.
“அட கோவிலுக்கு சாமி கும்புடன்னு வந்துபோட்டு என்னத்துக்கு சலம்பல்?” என்ற மீனாட்சி, “பொம்பளை புள்ள விசயம், சுருக்குன்னு முடிவெடுத்துப்புட முடியாதே! பெத்தவக நாலும் ரோசிச்சுத்தானே முடிவெடுப்பாய்ங்க. கொஞ்சம் காலம் கொடு வசந்தி. மருதனும் என்ன ஏதுன்னு அலசி முடிவெடுக்கட்டும்” என்றார். சுமூகமாக முடித்துவிட எண்ணினார்.
“இதுல ராசிக்கு என்னயிருக்குமாட்டி அயித்த? நானு என்ன பிரத்தியா? அலசி முடிவு சொல்ல. உடன்பிறந்த தங்கச்சி மவனுக்கு கட்டிக்கொடுக்க கசக்குதாம்மா?” என்ற வசந்தி, “நாளைக்கு ஊருக்கு கெளம்புறோம் அதுக்குள்ள முடிவை சொல்ல சொல்லுங்க. பொறவு போக்குவரத்து நீடிக்குமா இல்லையான்னு நான் சொல்லுறேன்” என்றார்.
அவர் மறைமுகமாக உறவை முறித்துக்கொள்வேன் என்று சொல்வது எல்லோருக்கும் புரியவே செய்தது.
“நீயி லிங்கத்துக்கு போன போட்டு வண்டிக்கிட்ட வர சொல்லு பாண்டியா… வூடு போவோம் முன்ன” என்ற அப்பத்தா எழுந்திட, அவருடன் மகாவும் அபியும் சென்றுவிட்டனர்.
பாண்டியனும் மருதனும் கூட அவர்களின் பின்னே சென்றுவிட… வசந்தியும் நல்லானும் சற்றே பின் தேங்கினர்.
“இங்கன கெளம்பி வரும்போது கூட நீ கெளதம் கல்யாணத்தை பத்தி எதுவும் பேசலையே வசந்தி… பொறவு என்னத்துக்கு மீனாளை கட்டித்தர சொல்லிக் கேட்ட?” நல்லான் தன் மனைவி வசந்தியிடம் கேட்டார்.
” பட்டிக்காட்டுல பொறந்து வளர்ந்து இருக்கா(ள்)… நம்ம கௌதமுக்கு செட்டாவமாட்டான்னு நெனச்சேன். இங்குட்டு வந்து பார்த்தாக்கா அம்புட்டு அம்சமா இருக்கா(ள்). என் அண்ணன் கூட சொல்லுச்சு பெரிய படிப்புலாம் படிக்கிறா அப்படி இப்படின்னு. நாந்தேன் என்னயிருந்தாலும் நம்ம கௌதமுக்கு பொருந்தமாட்டான்னு கம்மின்னு இருந்துப்புட்டேன். அவள் ருதுவானதுக்கு கூட நாம வரலையே! பாண்டியன் மவனுக்கு பேசிகீசி வச்சிருக்காவுகளான்னு அம்புட்டுக்கத்தான் கல்யாணப்பேச்சை ஆரம்பிச்சேன். பார்த்தாக்கா எங்கண்ணே இம்புட்டு ரோசிக்குது. ஏற்கனவே சொத்து எல்லாம் ஒட்டுக்காதான் ஆளுராய்ங்க. இதுல சம்பந்தியும் ஆகிப்புட்டால் நம்ம கைக்கு என்ன வந்து சேரும்?” என்ற வசந்தியிடம் நல்லான் இவ்வளவு சூட்சுமத்தை எதிர்பார்க்கவில்லை.
“சரி வருமா வசந்தி?”
“அதெல்லாம் உறவு வேணுன்னுதேன் அண்ணே நினைக்கும். நான் வச்சிருக்க பொடி அப்படி” என்ற வசந்தியும் நல்லானுடன் பேசிக்கொண்டே வண்டி நிற்குமிடம் வந்து சேர தன் வாயினை கப்பென்று மூடிக்கொண்டார்.
“எங்கடே பசங்களை காண்கல?” பாண்டியன் வினவ,
“எல்லாம் நம்ம ஹோட்டலுக்கு போயிட்டாவுக ஐயா. நீங்க ஏறுங்க.உங்களை வூட்டுல வுட்டுப்போட்டு திரும்ப வந்து கூட்டிக்கிறேன்” என்று பதில் சொல்லிய லிங்கம் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் மதுரை சென்றுவிட்டான்.
“இன்னைக்கு சாப்பாடு இங்கனத்தேன் வசந்தி? ஓய்வெடுக்கிறதுன்னா அந்தா இருக்க ரூமுல படு” என்று மீனாட்சி சொல்ல…
“என்ன மதினி நான் என் பொறந்த வூட்டுக்கு வக்கணையா ஆக்கி திங்கிலாமுன்னு வந்தாக்கா… நீங்க, என்னை அடுத்த வூட்டுல சீராட வைக்கிறீங்க?” என்று பட்டென்று மகாவிடம் கேட்டிருந்தார் வசந்தி.
மகா அதிர்ந்து மருதனை ஏறிட, அவருக்கும் அப்பேச்சு அத்தனை உவப்பனதாக இல்லை. தங்கையை நோக்கி பார்த்த பார்வையில் கண்டிப்பபைக் காட்டினார்.
“என்ன வசந்தி பேச்சொன்னும் சரியில்லையே! இது அடுத்த வூடாக்கும். உன் கை மணம் யாருக்கும் வராது அயித்த இன்னும் செத்த கொழும்பு ஊத்துன்னு கேட்டு வாங்கி திண்ணதுலாம் மறந்துப்போச்சாக்கும்” என்று பேச்சிலே கொட்டு வைத்தார் மீனாட்சி.
“என் அண்ணே நான் கேட்டதை அம்புட்டு ரோசிக்கும் போது… நான் அவுக மாமியார் வூட்டுல உட்கார்ந்து உண்குறது அம்புட்டு ரசிக்குமா? அதேன் வெசனத்துல கேட்டுப்புட்டேன்” என்ற வசந்தி, “அவீங்களுக்கு இங்கன செட்டாவது அயித்த. நான் அங்கன கூட்டிட்டுப் போறேன். நீயி ஆக்கி அறிச்சி, கொடுத்தனுப்பு” என்று நல்லானை அழைத்துக்கொண்டு வசந்தி மருதனின் வீடு நோக்கி சென்றுவிட…
அவ்விடமே மழை அடித்து ஓய்ந்தது போல அத்தனை அமைதியைக் காட்டியது.