மீனாட்சியின் குடும்பம் முற்றத்தில் கூடியிருந்தது. சிறியவர்கள் தவிர்த்து.
“எல்லாம் ஆச்சு அத்தை. சாப்பிட்டுபோட்டு பொறவு பேசுவோம்” என்று சேலை தலைப்பில் கையை துடைத்தவராக அபிராமி தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த மீனாட்சியின் அருகில் வர, அவரோ என்ன முடிவெடுப்பதென்று தெரியாது முகம் சுருங்கி மனம் சுணங்கி அமர்ந்திருந்த மருதனை பார்த்திருந்தார்.
“இப்போ என்னவாகிப்போச்சு மாமா? இப்படி சுணங்கி உட்காந்திருக்க? மீனாளை உன் தங்கச்சி மவனுக்கு கட்டிக்கொடுக்க நீ முடிவெடுத்தா நாங்க வருத்தமாகிப்போவோம் வெசனப்படாத மாமா! அவீங்கள மாதிரி உறவை முறிச்சிபோமின்னு பூச்சாண்டிலாம் காட்டமாட்டோம். உனக்கு என்ன தோணுதோ செய். எங்களுக்கு நீயி ரொம்ப முக்கியம். உன் நிம்மதியுந்தேன்” என்றார் பாண்டியன்.
“மனக்கசப்பு ஏதும் வேண்டாமப்பு. உரிமை இருக்கப்போயி கேட்டுப்புட்டாள். மொவத்துக்கு நேரா மறுப்பு சொல்ல நீயி தயங்குறன்னு வெளங்குது அப்பு. அதுக்குன்னு நீயி இப்படி இருந்தாக்கா ஆச்சா? சம்மந்தம் வச்சிக்கிட்டால் தான் நம்ம உறவு ஒன்னும் மண்ணா இருக்குமின்னு இல்லப்பு. வீரன் மருமகனா இருந்து செய்ய வேண்டியதெல்லாம், அவென் உம் மவனா இருந்து செய்வான் அப்பு. அவென் உனக்கு மவனா இருக்கணுமின்னு காலம் நினைக்குதோ என்னவோ? வேணுமின்னா லிங்குவை சின்னக்குட்டிக்கு கட்டிவச்சு உன் ஆசையை தீர்த்துக்க” என்று மீனாட்சி சொல்ல, அனைவருக்கும் இந்த யோசனையில் பிடித்தம் இருப்பதுபோல் பாவனை காட்டினர்.
“எனக்கு லிங்குவை சின்னதுக்கு கட்டிவைக்கிறதும் பிடித்தம் தான் அயித்த. ஆனால் என் அமிழ்த(ன்)த்தா அவென். மீனாளுக்கு அவந்தேன்னு கனா கண்டுட்டேனே! மனசை சுலுவா மாத்திக்க முடியல!” என்ற மருதனின் மனம் கனத்துக் கிடந்தது.
“பிள்ளைய்ங்க ஒன்னுமண்ணா இருக்கும்போது கண்டதை நெனச்சு உழப்பிக்காத மருதா! வசந்தி பேச்சைக் கேட்டாக்கா, அவள் ஒரு முடிவோடு இருக்கமாறி இருக்கு. நீ வேண்டான்னுபுட்டா ஆட்டம் ஆடிடுவாள் தோணுது. நம்ம விருப்பம், முடிவு தாண்டி பிள்ளைய்ங்க விருப்பமின்னு ஒன்னு இருக்குதே!” என்ற மீனாட்சி, “கௌதமுக்கு கட்டிக்கொடுக்க சம்மதிக்கிறேன். எம் வார்த்தையில நம்பிக்கை இருந்தாக்கா, ரெண்டு பேருக்கும் இன்னும் வயசாவுட்டும், மீனாளும் படிப்பை முடிக்கட்டும் பொறவு எல்லாம் வச்சிக்கலாம் சொல்லு” என்றார்.
“அவள் எதுக்காக அவசரம் அவசரமா பரிசம் போட்டு உறுதி பண்ணி வச்சிக்கணும் நெனக்கிறா தெரியல மருதா” என்று மீனாட்சி பேசும் போதே…
“வேறென்னத்துக்கு நாச்சியாக்கும் பிரேமுக்கும் கல்யாணம் பண்ணி சம்மந்தி பந்தம் ஆகிப்புட்டோம். அடுத்து வீரனுக்கு மீனாளை கட்டி வைக்க பேசிபுடுவோமின்னு கணக்கு போட்டு காய் நவுத்துறா(ள்). பொறாமை பிடிச்சவ” என்ற அபிராமி, பாண்டியனின் பார்வையில் முகத்தை நொடித்தவராக… “அண்ணே மவ இருந்தும்… வீரனுக்கு மீனாளுதேன் பொருத்தமின்னு, அவளை மருமவளா வச்சு பார்த்து ரசிச்சிபுட்டேனே! அந்த மன வருத்தம் ஆத்தமாட்டமா முரண்டு பிடிக்குது” என்று சேலை தலைப்பை இழுத்து இடையில் சொருகியவராக உங்களது பேச்சும் முடிவும் எனக்கு பிடிக்கவில்லை என்பதை அதிருப்தியாகக் காட்டிக்கொண்டு அபிராமி அங்கிருந்து நகர்ந்திட, அவர் பின்னாலே மகாவும் சென்றுவிட்டார்.
“ஆத்தா சொன்ன மாதிரி வசந்திக்கிட்ட பேசு மாமா. ஒத்து வந்தா புள்ளைங்ககிட்ட கூட இதை சொல்ல வேண்டாம். பின்னாடி செய்யுறப்போ பேசிக்கலாம். வசந்தி கல்யாணத்துக்குன்னு சொல்றதை பார்த்தாக்கா, அதுக்கே கௌதமுக்கு ரெண்டு வருசம் செண்டு கல்யாணம் பண்ணத்தான் விருப்பமிருக்கமாட்டிக்கு இருக்கு. நீயி எங்க அமிழ்தனுக்கு பேசிப்புடுவியோன்னு தான், அது மொத முந்திக்கிச்சு. நீயும் வாய் வார்த்தையா மட்டும் பேசி வச்சிப்போமின்னு சொல்லி வெய்யி. அதது நடக்கும் போது புள்ளைங்க மனசுல என்ன இருக்கோ அப்போ பார்த்துகிடலாம்” என்று பாண்டியன் ஆற்று படுத்தினார்.
“எனக்கு பாண்டியன் சொல்றது சரின்னு படுதப்பு” என்ற மீனாட்சி, “மொத வந்து உண்குங்க. மத்ததை பின்னால பாப்போம்” என்று எழுந்து சென்றார்.
இப்போ தான் சென்றால் மீண்டும் திருமணம் குறித்து வசந்தி ஏதும் பேசுவாரென்று, தொழுவத்தில் வேலை செய்யும் வேலையாள் ஒருவரிடம் மகா உணவினை கொடுத்து அனுப்பிவிட்டாடர்.
மருதனுக்கு தன் வீடு செல்லவே இப்போது மனமில்லை. உண்டுவிட்டு அங்கேயே படுத்துக்கொண்டார்.
மாலை போல் மதுரையிலிருந்து இளைஞர் பட்டாளம் அனைவரும் வந்துவிட… சுபா தனதறைக்கு சென்று சுருண்டு படுத்துக்கொண்டாள்.
சுபா கடந்த இரண்டு மணி நேரமாகவே அப்படித்தான் சோகமே உருவாக அமர்ந்திருக்கிறாள்.
மற்றவர்களுக்கு காரணம் என்னவென்று தெரியாததால் அதனை ஆராயாமல் விட்டுவிட, காரணமறிந்த மீனாள் கௌதமிடம் பேச வேண்டுமென நினைத்துக்கொண்டாள்.
“அமிழ்தன் வரலையாடே?” அபிராமி கேட்டிட, “வாராய்ங்க. வழியில யாரையோ பார்த்து நின்னுட்டார்” என்று கௌசிக் பதில் சொல்ல…
“நாங்களெல்லாம் ஹோட்டலிலே உண்கியாச்சு” என்று மற்றவர்களும் அலுப்பு போக ஓய்வெடுப்பதாகக் கூறி சென்றுவிட்டனர்.
“லிங்கம் நீயி ஒரு எட்டு ஊருக்குள்ள போயி… நம்ம வூட்டுல லைட்டை மட்டும் போட்டுட்டு வந்துடுய்யா. கண்ணாயிரம் மவ(கள்) வீட்டுக்கு போயிட்டான். ஆளில்லை” என்ற மீனாட்சியின் பேச்சை தட்ட முடியாது லிங்கம் கிளம்பிட, வீரனின் இருசக்கர வாகனம் நின்றிருந்தது.
“ரெண்டு மூணு நாளாவே வண்டியை எடுக்கலையே! ஏதும் பழுதா இருக்குமோ?” என்று சிந்தித்த லிங்கம், “நாச்சியா… அண்ணே வண்டி சாவி கொண்டாத்தா!” என்று வீட்டிற்குள் குரல் கொடுத்தான்.
சில நொடிகளில் வெளியில் வந்த நாச்சி,
“அங்கன எப்பையும் மாட்டுற இடத்துல சாவி இல்லண்ணே” என்று சொல்ல, லிங்கமும் தன் வண்டியை நோக்கி நகர, சரியாக வீரன் வந்து சேர்ந்தான்.
“வண்டி இங்குட்டே நிக்குது. பழுதாகிடுச்சோ?” என்று லிங்கம் வினவியதும், நாச்சிக்கு பின்னால் வந்து நின்ற மீனாளின் மீது நொடிக்கும் குறைவாக பார்வை பதித்த வீரன் விழிகளை விலக்கிக் கொண்டான்.
“சுபா நாளைக்கு போயிடுவா? சாவியை கொடுத்துப்போடு. இந்த நாவே முடிஞ்சுதே! இனிமேட்டுக்கா அவளை உட்கார வச்சு சுத்தப்போவுது?” என்ற நாச்சியின் பேச்சில் மீனாள் மீன் விழிகளை உருட்டினாள்.
“அச்சோ அப்படிலாம் இல்லை மதினி. நானெடுக்கல” என்று வேகமாக மீனாள் மறுத்திட…
“தேவையில்லாம எதையும் நெனச்சு குழப்பிக்காதீங்க மதினி. நீங்க நெனக்கிற மாறிலாம் ஒன்னுமில்லை” என்ற மீனாள் படபடப்போடு தன் வீடு நோக்கிச் சென்றாள்.
“எம்புட்டு நாளுக்கு மறைச்சு ஓடுறன்னு பாக்குதேன்” என்ற நாச்சியின் குரல் தன் செவி தீண்டிட… மீனாள் நடையை எட்டிப்போட்டாள்.
“மதினிக்கு எப்புடித் தெரிஞ்சுது? இன்னும் யாருக்கெல்லாம் தெரியும்? எல்லாரும் கவனிக்கிறாய்ங்களோ?” என்று புலம்பியபடி மீனாள் தென்னந்தோப்பிற்குள் வர, அங்கு கௌதம் நின்றிருந்தான்.
“என்ன மீனு தனியா பேசிக்கிட்டுவர?”
கௌதமின் குரலில் பதறி சீரானாள்.
“ஹேய் என்னாச்சு?”
“ஒன்னுமில்லை” என்றவளை கௌதம் நம்பாத பார்வை பார்க்க…
“ஏன் சுபா அக்காக்கு நோ சொல்ற?” என திசை திருப்பக் கேட்டாள். ஆனால் ஏற்கனவே இதைப்பற்றி அவனிடம் பேசவேண்டுமென நினைத்து தானிருந்தாள். இப்போது அவன் தன்னை கேள்வி கேட்காமலிருக்க, அவனை கேட்டு வைத்தாள்.
கௌதம் மௌனமாக நிற்க…
“உங்களுக்கும் சுபா அக்காவை ரொம்ப புடிக்கும் தெரியுது. பொறவு ஏன் அவீங்களை கஷ்டப்படுத்துற? உன்னை அக்காவுக்கு அம்புட்டு புடிக்குமின்னு பாக்குற எனக்கே தெரியுது. உனக்கு தெரியலையா? தெரியும்… அவீங்களை புடிக்கும்… இல்லைன்னா நேத்து ராத்திரி…” என்று இழுத்தவள் ஒற்றை கண்ணடித்து, “மாமா வூட்டு தொட்டிகிட்ட… செம சீனு. நானும் வீரா மாமாவும் பார்த்துப்புட்டோம். ஆனால், நான் கண்ணை மூடிக்கிட்டேன்ப்பா” என்று சிரித்தாள்.
“எனக்கும் புடிக்கும் மீனு” என்ற கௌதம், “அவ என்னை விரும்புறதுக்கு முன்னவே, எனக்கு அவளை அவ்ளோ பிடிக்கும். ஆனால், என் காதலை சொல்ற தைரியம் எனக்கில்லை. என் அப்பா எப்படின்னு உனக்கே தெரியும். ஏற்கனவே பாண்டியன் மாமான்னா ஆகாது. இதுல அபிராமி சித்தியோட அண்ணன் பொண்ணுன்னா சொல்லவே வேண்டாம். அம்மா அப்பாவுக்கு மேல. ஏதோ ஒட்டி உறவாடலனாலும், முகம் கொடுத்து பேசுற அளவுக்கவாது அப்பா இருக்கிறார். அதுவும் மருதன் மாமாக்காக. என்னயிருந்தாலும் அம்மாவுக்கு அண்ண உறவும் வேணுமே” என்றதோடு, “என் காதல் தெரிஞ்சுது அம்புட்டுதேன். பன்னெண்டு இல்லை பலாயிரம் வருசமானாலும் இங்கன நாங்க எட்டிப்பார்க்க முடியாது” என்றான்.
“மாமா மறுக்கத்தேன் செய்வாருன்னு நீயே மனசை குழம்பிக்கிட்டு, சுபா அக்காவையும் வேதனை படுத்தாத. இன்னும் உனக்கு கல்யாண வயசாகலயே! கொஞ்சம் வெயிட் பண்ணு. சுபா அக்காகிட்ட இப்போ என்கிட்ட சொன்னதலாம் பொறுமையா சொல்லு. கண்டிப்பா புரிஞ்சிக்கும். உனக்காக காத்திருக்கும். அதுக்குள்ள நீயி பொறுமையா அத்தைகிட்ட எடுத்து சொல்லி புரிய வச்சு மாமவையும் சம்மதிக்க வச்சிப்புடு. மனசுல ஆசையிருக்கும்போது, சேர என்ன வழின்னு ரோசிக்கமா… எட்ட நின்னு நீயும் வெசனப்பட்டு சுபா அக்காவையும் அழ வச்சிக்கிட்டு… நல்லாவாயிருக்கு?” என்றாள்.
“அப்போ லவ் பண்ணலாமுங்கிறியா?” கௌதம் கண்கள் மின்ன கேட்டான்.
இந்த இடத்தில் தான் வசந்தியால் அவர்களின் பேச்சினைக் கேட்க நேர்ந்தது.
“ஆமாங்கிறேன்!”
“நிஜமா பண்ணலாமா?”
“பண்ணலாமே!” மீனாள் உற்சாகமாகக் கூறினாள். முகம் முழுக்க சுபாவின் மகிழ்வை நினைத்து மகிழ்ந்தவளாக.
தன்னை மறைத்து நின்று பார்த்துக்கொண்டிருந்த வசந்திக்கும் அத்தனை மகிழ்வை கொடுத்தது.
“ஹ்ம்ம்… லவ் பண்ணலாமுங்கிற?”
“ஆமாண்டா” என்ற மீனாள், அவனை நெருங்கி “நைட்டே சொல்லிபுடு. சுபா அக்கா கொடுத்ததை நீயும் திருப்பிக் கொடுத்துடு” என்று குறும்பாக முணுமுணுக்க… கௌதமும் சிரிப்போடு அவளின் காதை திருகி, “சரியான வாலு. கொஞ்ச நேரத்துல என்னையவே கவுத்துட்டியே” என்க வசந்தி அதீத புன்னகையோடு அங்கிருந்து திரும்பிச் சென்றார்.
வசந்தி, தான் பார்த்தது, கேட்டது வைத்து என்ன தெரிந்து புரிந்துகொண்டாரோ?
இதனால், அவரால்… பெரும் பிரச்சனை மட்டும் உருவாக இருக்கிறது. அது யாருக்கு பாதகமாக அமைந்திடுமோ!