வீரன் தன்னுடைய அறை கட்டிலில் விட்டத்தை பார்த்தவாறு படுத்திருந்தான்.
அவனது சிந்தை முழுக்க இரவு உணவிற்கு பின்னான மருதனின் பேச்சிலேயே உழன்று கொண்டிருந்தது.
இரவு வரையிலுமே வசந்திக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது மருதன் பாண்டியனின் வீட்டிலேயே தான் இருந்தார்.
பிள்ளைகள் அங்கு சென்றுவிட்டனரே என்று மகா மட்டும் தன்வீடு சென்றிருந்தார். வசந்தி தனியாக இருக்கும் மீனாளிடம் ஏதும் கேட்டு வைப்பாரோ என்று மாலை போலவே சென்றுவிட்டார்.
பாண்டியன் நேரமாகிவிட்டது இங்கேயே உறங்க சொல்லியும், வீட்டின் பக்கவாட்டாய் ஓடும் வாய்க்கால் நீரினை வெறித்தவராக மருதன் திண்ணையிலேயே அமர்ந்துவிட்டார்.
பாண்டியனுக்கு நேரமாக தூக்கத்திற்கு கண்கள் சூழல, கயிற்று கட்டிலை கொண்டு வந்து வீட்டின் முன்னிருக்கும் கள பகுதியில் போட்டு மருதனுக்கு துணையாக படுத்துவிட்டார்.
“நீயி எழுந்து உள்ள போயி படுடே!” என்று மருதன் எவ்வளவு சொல்லியும் பாண்டியன் கேட்காது அங்கே படுத்திருந்தவர் நேரம் செல்ல உறங்கியும் விட்டார்.
பின்னால் கால்நடைகளுக்கு தீனி போட தொழுவத்திற்கு சென்ற வீரன், வீட்டின் முன் கதவு அடைத்திருக்கிறதா என்று பார்க்க வர, கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்த மருதனை கண்டுவிட்டு அவரின் அருகில் அமர்ந்தான்.
“என்ன மாமா உறக்கம் வரலையாட்டுக்கு” என்ற வீரன், ” என்னத்த ஆத்தமாட்டாம மனசுக்குள்ள போட்டு உ ழப்பிக்கிற? ” என்று அவரின் முகம் பார்த்து வினவினான்.
” அதெல்லாம் ஒன்னுமில்லை அமிழ்தா” என்ற மருதனின் முகமே ஏதோ உள்ளது என்பதை வீரனுக்கு காட்டிக்கொடுத்தது.
” சொல்ல விருப்பமில்லையாட்டுக்கு” என்ற வீரன் “பொறவு என்னத்துக்கு இங்கன இப்படி உட்கார்ந்து இருக்கீரு” என்று கேட்டான்.
அதற்கு மேல் மருதனால் வீரனிடம் சொல்லாமல் விட முடியவில்லை.
கோவிலில் வசந்தி பேசியது, வீட்டில் தாங்கள் கலந்து பேசியது என அனைத்தையும் ஒன்றுவிடாது சொல்லிவிட்டார். தாங்கள் எடுத்த முடிவில் மகா, அபியின் விருப்பமின்மையையும் மறைக்கவில்லை.
சில நிமிடங்கள் வீரனிடம் ஆழ்ந்த அமைதி. ஆனால் அவனின் உள்ளம் எரிமலை நெருப்பு கங்குகளாக வெடித்து சிதறிக்கொண்டிருந்தது. அத்தனை தகிப்பு. தனலாய் சுருண்டான்.
“என்ன மாப்பிள்ளை அமைதியாகிப்புட்ட?”
“இதில் நான் சொல்ல என்னயிருக்கு மாமா? எது சரிவருமின்னு உங்களுக்குலாம் தெரியாதா?” என்றான். அடைத்த தொண்டையை வெகு சிரமப்பட்டு மறைத்தான்.
“வசந்திக்காக எல்லாரோட விருப்பத்தையும் கொல்லனுமான்னு இருக்குய்யா” என்ற மருதன், “மொத பிரேம் நாச்சி கல்யாணத்தை முடிக்கலாம் பார்த்தாக்கா… இந்த வசந்தி இப்படியொன்னை ஆரம்பிச்சு மனசை குழப்பிவிட்டுபுட்டா(ள்)” என்று தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தார்.
“எல்லாம் நாம நெனச்சா ஆவுமா? காலமும் நேரமும் என்ன நெனச்சு சுழலுதோ அதுபடித்தேன் விதி அமையும். ரொம்ப ரோசிக்காதீரு. இப்போ முடிவு பண்ணியிருக்கமாறி பேசி பாரும்” என்று முடித்துக்கொண்டான்.
‘தங்கப்பொண்ணை எனக்கு கொடுத்துப்புடேன் மாமா?’ மனம் உந்தி தள்ளி வாய் வரை வந்துவிட்ட வார்த்தையை ரணப்பட்டு தொண்டைக்குள் விழுங்கி வைத்தான்.
“நீயி என் அப்பன் அப்பு. உன்னைய அப்படித்தேன் பாக்குறேன். மீனாளை கட்டிக்கொடுத்து என் கைக்குள்ளே வச்சிக்க ஆசைப்பட்டுப்போட்டேன். மாத்திக்க முடியல. மனசு முண்டுது. என்ன செய்ய, நீயி சொல்லுறமாறி நம்ம ஆசைப்பட்டா போதுமா?” என்றவர், “கொஞ்ச நாளைக்கு செத்த ஆறபோடுவோம். வசந்திகிட்ட பக்குவமா பேசணும்” என்றதோடு அங்கேயே திண்ணையில் போடப்பட்டிருந்த பாயில் படுத்துக்கொண்டார்.
“உள்ள வந்து படு மாமா!”
“இருக்கட்டும் அமிழ்தா” என்றவர், “நல்லவேளை கூடவே ஒன்னுமண்ணா வளர்ந்ததால உங்களுக்குள்ள ஆசைன்னு ஒன்னு மொளைக்காம போச்சுதே! அதுவரை சந்தோஷமாட்டிக்கு. இல்லைன்னா உங்க மனசை உடைச்சிருப்போமே” என்று பேசியவரின் பேச்சை அதற்கு மேல் கேட்டிட முடியாது வேகமாக தன்னுடைய அறை வந்து சேர்ந்திருந்தான்.
தன்னை தள்ளி நிறுத்த அவள் கூறிய வார்த்தைகள் யாவும் நெருஞ்சி முள்ளாய் அவனின் இதயத்தை பதம் பார்த்தது.
என்ன தான் விருப்பமிருந்தாலும் தன்னுடன் பழையதை மறந்து இயல்பாய் வாழ முடியாது என்று சொல்பவளை கட்டுப்படுத்தி கட்டாயப்படுத்தி கை பிடித்திட துளியும் எண்ணமில்லை வீரனுக்கு.
தன்னுடன் சாதாரணமான பேச்சுக்கே ஓடப்பார்ப்பவளுக்கு, பெரியவர்களின் முடிவின்படி கௌதமுடனான வாழ்வு நன்றாக இருக்கட்டுமென்றே அக்கணம் வலியோடு நினைத்தான்.
“எய்யா அமிழ்தா!”
கதவு தட்டும் ஓசையுடன் பாண்டியனின் குரல் கேட்டிட… மெல்ல எழுந்து முகத்தை துடைத்து சீர் செய்தவன் கதவை திறந்தான்.
“என்னங்க ஐயா. உறங்கிட்டு இருந்தீங்களே! ஏதும் மேலுக்கு ஆவலையா?” திடீரென இந்நேரத்தில் தன்னை தேடி வந்திருக்கும் தந்தையின் உடலை ஆராய்ந்தவாறு சிறு பதட்டத்துடன் வினவினான்.
“அதெல்லாம் ஒன்னுமில்லையப்பு” என்ற பாண்டியன்…
“உன் மனசை கண்டுக்காம இருந்துபுட்டேனா எய்யா” என்றார். கலங்கிவிட்ட குரலுடன்.
“மாமாவுக்கு சொந்தமின்னு இருக்க தொப்புள்கொடி உறவு வசந்தி மட்டுந்தேன். அத்தோடு மாமாக்கு வசந்தின்னா அம்புட்டு பாசம். ஏற்கனவே மனசுல விழுந்த விதையை முளைக்க விடாமல் வசந்தி மீனாளை கேட்டு நிக்குறாளேன்னு உக்கிப்போய் இருக்காரு. இடையில இது தெரிஞ்சா, உன் விருப்பத்தை நிறைவேத்த முடியலையேன்னு வெம்பி போவாரு. நாம கொஞ்சம் ஒதுங்கிக்கலாம் அப்பு. நம்மனால மாமாக்கு தங்கச்சி உறவு இல்லைன்னு ஆகிடக்கூடாது” என்றார்.
“நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க ஐயா!”
“உன் மொவம் பார்த்து கண்டுபிடிக்க தெரியாதாய்யா. மாமாகிட்ட நீயி பேசும்போதே முழிச்சிக்கிட்டேன். உன் குரல் பிசுறுக்கான காரணம் எனக்கு வெளங்காதாய்யா?” என்றவர், வீரனின் கன்னம் வழித்து… “கொடுத்துவைக்கலையே அப்பு” என்றார். தழுதழுப்பாக.
“நாமட்டும் நெனச்சா போதுங்களா? மீனாளுக்கு விருப்பமில்லைங்க. நான் எப்பவோ ஒதுங்கிட்டேங்கய்யா. இருந்தாலும் ஏதோ வலி, கொஞ்சம் தடுமாறிப்புட்டேன். இனி இதுக்காக வெசனப்பட்டு உட்காரமாட்டேங்க.நீங்க போங்க. உறங்குங்க” என்றான்.
மனம் என்னவோ நொடியில் வறண்ட பாலை நிலமாய் மாறியதை உணர்ந்தான்.
“என் சாமி” என்ற பாண்டியன் மேற்படி என்ன சொல்வதென்று தெரியாது, கீழே இறங்கிச் சென்றார்.
தந்தைக்காக வேணும் துக்கத்தை வெளிக்காட்டக்கூடாதென்று நினைத்து மனதை திடப்படுத்திக் கொண்டான்.
அறைக்குள் வந்தவனின் பார்வை வழக்கம்போல் சன்னல் பக்கம் சென்றது. தன்னையே கடிந்தவனாக திரும்பிட முயல, தென்னந்தோப்பு பாதையில் வண்டியின் ஒற்றை விளக்கு வெளிச்சம்.
யாரென்று பார்த்திட, பண்ணையை கடந்து சாலையில் வண்டி ஏறிய பின்னரே அது மீனாள் என்பது தெரிந்தது.
மணியை பார்க்க, பதினொன்றை கடந்திருந்தது.
‘இந்நேரம் எங்கு போறா(ள்)?’ என சிந்தித்தவனாக, அவளுக்கு அழைத்துவிட்டான்.
அழைப்பு முடியும் தருவாயில் ஏற்கப்பட்டது.
“இந்த ராத்திரியில தனியா எங்கட்டு போற?” எடுத்ததும் அதீத சினத்தோடு கேட்டிருந்தான்.
அவனின் புதிதான கோப குரல் உள்ளுக்குள் குளிர் பரப்பியது. தடுமாறியபடி அலைபேசியை இறுக்கி பிடித்தாள்.
“கேட்டுட்டே இருக்கேன். பதில் சொல்லாம இருந்தாக்கா என்ன அர்த்தம்?” சுள்ளென்று விழுந்தன அவனது வார்த்தைகள்.
அதற்குள் அவளிடம் பேசிக்கொண்டே வீரன் தங்கள் பண்ணையை கடந்து பாதைக்கு வந்திருந்தான்.
“வூட்டுல இத்தனை பேரு இருக்கோம். தனியா எங்க புறப்பாடு? அதுவும் இந்நேரம் செண்டு!” திடீரென முதுகுக்கு பின்னால் கேட்ட கேள்வியில் உடல் அதிர கையில் பிடித்திருந்த அலைபேசியை மீனாள் நழுவவிட,
சட்டென்று குனிந்து கையில் பிடித்திருந்தான் வீரன்.
“உன்னைத்தான் கேக்குறேன்” என்றவன் தனது அலைப்பேசியில் இணைப்பைத் துண்டிக்க, அவளின் அலைப்பேசி திரை ஒளிர்ந்து அணைந்தது.
திரையில் அவனது புகைப்படம். கடைசி வருட மஞ்சுவிரட்டில் காளையை அடக்கி, வாடிவாசல் பகுதியில் மீசையை முறுக்கியபடி அவன் நின்ற தோரணை உருவத்தின் நிழல் படம்.
வீரன் அதனை கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை.
அவளின் கையில் அலைப்பேசியை கொடுத்தவன்,
“என்ன சோலி?” என்றான் மீண்டும். அழுத்தமாக.
“நாளைக்கு புரொஜெக்ட் சப்மிஷன். புரொஜெக்ட் பைண்டிங் கொடுத்திருந்தேன். அவீங்க எங்கையோ திடீர் சோலியா இன்னும் ஒரு மணி நேரத்துல வெளியூர் கெளம்புராவுகளாம். நாளைக்கு கடை மூடி கிடக்கும், இப்போ வந்து வாங்கிக்க சொன்னாய்ங்க” என்று திணறி கூறினாள்.
“உச்சியில நங்குன்னு கொட்டுனேன்னு வைய்யீ… மண்டை பொலந்துக்கும் பார்த்துக்க. ஊரு உலகம் தெரியுமா தெரியாதா?” என்றவன் அவளின் மருண்ட பார்வையில், “கீழ இறங்கு” என்றான். தன்னை நிதானித்து.
மீனாள் வண்டியிலிருந்து இறங்கியதும், லிங்கத்திற்கு அழைத்து அவனின் வண்டியை எடுத்துவரக்கூறி வைத்தான்.
“அங்கனதேன் கௌதம் இருந்தானே கூட்டிட்டு போக வேண்டியதுதானே! எதுக்கு ஒத்தையில கிளம்புன?”
“உறங்கிட்டு இருந்தாய்ங்க. அத்தை வந்தேல இருந்து அம்மாக்கு ஓய்வே இல்லை. எதையாவது செய்ய சொல்லிட்டே இருக்காங்க. அதேன் அம்மா உறங்கட்டுன்னு எழுப்பல?” என்றாள். அவனை முறைத்துக்கொண்டே!
மீனாளிடம் வீரன் அதட்டலாக பேசுவானே தவிர, இப்படி கோபமாகவெல்லாம் ஒருநாளும் கடிந்து கொள்வதைப்போல் பேசியது இல்லை.
தன்னுடைய தங்கப்பொண்ணு தனக்கில்லை என்கிற அழுத்தம், இவள் தன்னை விலக்கி வைப்பதால் தானே இன்றைய பெரியவர்களின் முடிவில் திடமாக தன்னுடைய ஆசையை சொல்ல முடியவில்லை என்கிற ஆதங்கம், அழுத்தம்… இரண்டும் அவனை அவளிடம் கோபம் கொள்ள வைத்தது.
வீரனின் மனம் புரியாத மீனாளுக்கு, கோபம் கொண்டு கடியும் வீரன் புதிதாக தெரிந்தான்.
“இங்கன லிங்கத்தை கூப்பிட்டிருக்க வேண்டியதுதானே? எல்லாம் குருட்டு தைரியம்” என்று நிந்தித்தான்.
அவளின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது.
அரை தூக்கத்தில் லிங்கம் வந்து சேர்ந்தான்.
“எங்கனையோ போவணுமாம். கூட்டிட்டுபோயிட்டு வா” என்று லிங்கத்திடம் சொல்லிய வீரன் மீனாளின் ஸ்கூட்டியில் அமர, மீனாள் லிங்கத்தின் பின்னால் ஏறினாள்.
வண்டியை முறுக்கி நகர்த்திய ஒரு அடியிலேயே லிங்கத்தின் கையில் வண்டி ஆட்டம் காண…
“அடேய்!” என்று பதறி அருகில் சென்றான் வீரன்.
“என்னடே!”
“செம தூக்கம்ண்ணே! கண்ணு சொக்குது” என்றான் லிங்கம். இரு கைகளாலும் முகத்தை தேய்த்தவனாக.
“இப்படி உறங்கிட்டு எப்படிடே போவ” என்ற வீரன், கௌதமுக்கு அழைக்கப்போக…
முன்பிருந்த வீரனாக இருந்திருந்தால், இரவு நேரம் தன்னவளுடன் கரிய தார் சாலையில் குளிர் காற்றில் மேனி உரசிட இதமான வாகன பயணமென்று துள்ளி குதித்து கிளம்பியிருப்பான்.
ஆனால் இப்போது… வீட்டாரின் எண்ணமும் முடிவும் வேறென்றாகிய நிலையில் மீண்டும் மீண்டும் அவளில் மூழ்கும் மனதை எட்ட நிற்க வைத்திடவே முயல்கிறான்.
“நேரமாச்சுது… நாளைக்கு காலேஜில் வைவா வேற இருக்குது” என்றாள் மீனாள்.
அதன் பின்னர் வீரன் தலும்பும் மனதை தட்டி வைத்தவனாக லிங்கத்திடம் ஸ்கூட்டியை கொடுத்து அனுப்பிவிட்டு, லிங்கத்தின் வண்டியில் மீனாளை ஏற்றிக்கொண்டு சில்லென்ற வாடை காற்றை கிழித்து சாலையில் கண்ணாக பறந்தான்.