மனம் அத்தனை அழுத்தமாக இருந்த போதிலும், சீரான வேகத்திலேயே வண்டியை செலுத்தினான் வீரன்.
வண்டியின் பக்க கம்பியை பிடித்திருந்த மீனாள், வண்டி வேகத்தடையில் ஏறியிறங்கிட அனிச்சையாக வீரனின் இடை பற்றினாள்.
குனிந்து அழுத்தமாக தன்னில் பதிந்த அவளின் மென் விரல்களை பார்த்தவன் ஏதும் சொல்லாது சாலையில் கவனாமகினான்.
‘என்னாச்சு இந்த மாமாக்கு. நான் பக்கட்டு இருந்தாலே துடுக்கா என்னத்தையும் பேசிட்டு இருக்கும். இன்னைக்கு காலையிலிருந்து உம்முன்னு இருக்கு’ என்று சிந்தித்த மீனாளுக்கு, தன்னுடைய வார்த்தைகளே அவனின் தூரத்திற்கும் அமைதிக்கும் காரணமென்று தெரியவில்லை.
“நீயி நல்லாதானே மாமா இருக்க?”
கண்ணாடி வழி அவளை கூர்ந்து நோக்கியவன்,
“பார்த்தாக்கா எப்புடி தெரியுதாக்கும்?” என்றான். இன்னமும் சிடுசிடுப்பைக்காட்டி.
“உனக்கு என்னாச்சு மாமா? ஏன் கோவமா வஞ்சிக்கிட்டே இருக்க?” அழவில்லை என்றாலும் அவளின் குரல் கலங்கித்தான் ஒலித்தது.
“திட்டு, நாலு அடி கூட குடு மாமா. ஆனால் கோவமா மட்டும் பேசாத. நெஞ்சை அடைக்குற கணக்கா இருக்குது!” என்றாள்.
பட்டென்று வண்டியை நிறுத்தி அவளை பார்த்தவன், அவளின் வருந்தும் முகம் காண பிடிக்காது திரும்பி கொண்டான்.
“வேறென்ன என்னைய பண்ண சொல்லுற?” என்ற வீரன்,
“இப்படி இருக்கிறதுதேன் ரெண்டேருக்கும் நல்லது” என்று சொல்லி, வண்டியை அதீத சீற்றத்துடன் இயக்கினான்.
அவனது வார்த்தையில் விக்கித்துப்போனாள் மீனாள்.
அவள் சொல்லியபோது தோன்றாத ரணம் அவன் சொல்லி காட்டியதில் உண்டானது.
இவளுக்காகவே கடை வாயிலில் கடையின் உரிமையாளர் காத்திருந்தார். அவனுக்கு ஏற்கனவே வீரனை நன்கு தெரிந்திருந்தது.
உடன் வீரன் வந்ததும்…
“சாரிண்ணே… இந்நேரம் அழைக்க வேண்டியதா போச்சு. உறவுமுறையில திடீர் துக்கம். இல்லைன்னா நானே கொண்டாந்து குடுத்திருப்பேன். அங்கன கெளம்புற அவசரம். பாப்பா நாளைக்கு கண்டிப்பா வேணுன்னு நேத்தும் போன் போட்டு சொன்னதுல ரொம்ப முக்கியமின்னு நெனச்சுதேன் நெனப்பு வந்ததும் நேரத்தை பொருட்படுத்தாமல் கூப்பிடுப்புட்டேன்” என்று அத்தனை விளக்கம் கொடுத்தான் அவன்.
அவனுக்குத்தான் வீரனைப்பற்றி நன்கு தெரியுமே! வீட்டு பெண்பிள்ளையை இந்நேரம் எதற்கு அழைத்தாயெனக் கேட்டு பட்டென்று கை நீட்டினாலும் நீட்டிடுவான். சொல்வதற்கில்லை. அதனாலே மூச்சுவிடாது சொல்லி முடித்தான்.
“நான் காலேஜுக்கு போன நாளிலிருந்தே எல்லாத்துக்கும் உன் கடை தானே ரமேசு. அன்னைக்கு கடையில புது பையன் இருந்ததால, அவென் கராரா காசு கேட்டதுக்கும் அமைதியா போயிட்டேன். அம்புட்டென்னா நம்பிக்கையில்லாத்தனம்” என்ற வீரன், “உன் அண்ணே இருந்திருந்தாக்கா, எம் வூட்டு புள்ளைன்னு எனக்குத்தேன் போன் போட்டிருப்பான். இனிமேலாட்டாவது நேரங்காலம் செண்டு இழுத்தடிக்காத. தவிர்க்க முடியாத சூழலுன்னு அமைதியா போறேன்” என்றான்.
“மாப்பு கேட்டுகிறேங்க. அண்ணே கிட்ட சொல்லாதீங்க. வைய்யும்” என்ற ரமேஷ், மீனாளிடம் பைண்ட் செய்யப்பட்ட குறிப்பேட்டை நீட்டிட நன்றி சொல்லி பெற்றுக்கொண்டாள்.
வீரன் ரமேஷிடம் பணம் கொடுக்க, அவனும் பெற்றுக்கொண்டான்.
“நானு அன்னைக்கே முழுசா குடுத்துபுட்டேன்.” திரும்பி வருகையில் மீனாள் சொல்லிட, “இந்த காசு எந்நேரமானாலும் பரவாயில்லைன்னு அவென் உன் புரொஜெக்ட்டை பைண்ட் பண்ணி குடுத்ததுக்கு” என்றான் வீரன்.
“அது வேற இது வேற” என்ற வீரன், “அவென் நேரத்தை பார்த்து விட்டிருந்தியான். நாளைக்கு வைவா மார்க் உனக்கு பூஜ்ஜியம் தான்” என்றதும் தான் வீரனின் கோணம் அவளுக்கு புரிந்தது.
அதன் பின்னர் இருவரிடமும் காற்றின் ஓசை மட்டுமே! அந்த அமைதி மீனாளுக்கே என்னவோ போலிருந்தது. எப்போதும் ஒதுங்க நினைப்பவளுக்கு அவனின் ஒதுக்கம் நெருங்கத் தூண்டியது.
பேச வேண்டுமென எண்ணியவள், மாலை கௌதம் உடனான பேச்சினை முழுவதுமாக சொல்லிட… வீரனிடம் கேட்டுக்கொண்டேன் என்பதற்கான ம் மட்டுமே பிரதிபலிப்பாக.
“இது நடக்காது. கௌதம் நல்லான் பெரியப்பா விருப்பப்படியே நடந்துக்கட்டும். வூடால நீயி என்னத்தையும் அதிகப்பிரசிங்கித்தனமா பண்ணி வைக்காதே” என்ற வீரன், “பெரியவங்க போக்கு வேறையா இருக்கு. சுபாவுக்கு அதீத வலி கொடுத்துப்புட வேணாம்” என்று முகத்தில் அடித்தார் போல் பட்டேன்று கூறினான்.
வீரனின் பேச்சு அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.
“கௌதம் தெளிவா இருந்திருக்கியான்” என்ற வீரன், ‘இது நடந்தாக்கா நல்லாத்தேன் இருக்கும். என் தங்கம் எனக்கு கிடைப்பாளே!’ என்று மனதிற்குள் மட்டுமே சொல்லிக்கொண்டான்.
மருதனோ, பாண்டியனோ பேசிடும் போது, மீனாள் தனக்கில்லையா என்கிற அதிர்வில் சுபா, கௌதம் காதலை மறந்திருந்தான். அந்நேர தாக்கத்தில் அவனுக்கு அது நினைவிலும் வரவில்லை.
இப்போது மீனாள் மூலம் நினைவு வந்தும் மகிழ்வுகொள்ள முடியா நிலையில் வீரன்.
பெரியவர்களின் பேச்சும் முடிவுமே செயல் வடிவம் பெற அதீத சாத்தியக்கூறுகள் இருப்பதாக வீரனுக்குப் பட்டது. அதனாலேயே மேற்படி மீனாளிடம் கூறினான்.
இப்போது சுபாவின் காதலுக்காக, அவளைப்பற்றி யோசித்து கௌதமிடம் பேசியிருக்கும் இதே மீனாள், மருதன் நேருக்குநேர் உனக்கும் கௌதமிற்கும் திருமணமென்று கூறினால், மறுக்காது ஏற்கவே செய்திடுவாள். மீனாள் மட்டுமில்லை, இப்போது அவனுமே பெரியவர்களின் பேச்சினை மீறி பழக்கமில்லை என்பதால் தானே தன்னுடைய ஆசையை வெளிக்காட்டிக்கூடக் கொள்ளாது குமைந்து கொண்டிருக்கின்றான். மீனாள் மட்டும் விதிவிலக்கா என்ன?
எத்தனை வயதாகினாலும், வீட்டின் பெரியவர்களின் ஒற்றை சொல்லை தட்டிட அங்கை வரை யாருக்கும் மனம் வந்திடாது. அது பெரியவர்களின் மீதான பயமில்லை. அவர்கள் இளையவர்களுக்கு கொடுக்கும் பாசம், கொடுத்திருக்கும் சுதந்திரத்திற்கான மதிப்பு.
“நீ அன்னைக்கு உண்மையை சொன்னியோ… இல்லை எனக்கு வலிக்க வைக்க சொன்னியோ! இப்போ அதுதான் நெசமாவப்போவுது. சுபாவுக்கு நல்லது செய்யுறேன்னு எதையும் இழுத்து வைக்காத. சுபா ஐயா சுந்தரேசன் மாமா, நல்லான் பெரிப்பா மாறி கிடையாது. அதிர்ந்துகூட பேச தெரியாதவர். அவருக்கு பிரச்சனைன்னு ஒன்னை நாம உருவாக்க வேண்டாம்.”
மீனாளை அவளது வீட்டு வாயிலில் இறக்கிவிட்டவன், முகம் பார்க்காது சொல்லிச் சென்றுவிட்டான்.
யோசனை என்னவென்று மனதில் தடதடத்தாலும், நாளைய தேர்வை நினைத்து மற்றதை ஒத்துக்கிவைத்தாள்.
காலையில் மீனாள் பரபரப்பாகக் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“என்ன அவசரம் மீனாள். பைய்ய கிளம்பு. லேட்டானா பிரேமை கொண்டுபோய் விட சொல்லுறேன்” என்ற மகா, மீனாளின் ஓட்டத்திற்கு இணையாக பின்னால் நடந்துகொண்டே அவளுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தார்.
“அத்தை…”
வீரன் குரல் கேட்கவும், அங்குமிங்குமாய் நடந்து தனக்கு தேவையானவற்றை எடுத்து பையில் வைத்துக் கொண்டிருந்த மீனாள் ஓரிடத்தில் நிலையாக அமர்ந்தாள்.
வீரனுக்கு எப்போதுமே உணவினை அதற்குரிய மரியாதை கொடுத்து உண்ண வேண்டும். விவசாயம் செய்வதாலோ என்னவோ, உணவின் மீது அதீத மரியாதை அவனுக்கு. ஒரு வாய் உணவினையும் வீணாக்கிடமாட்டான். தன்னால் முடியுமென்றால் மட்டுமே அளவினை கூட்டிக்கூட தன்னிலையில் வைத்துக்கொள்வான்.
உணவு என்பது இறைவனுக்கு சமம் என்ற எண்ணம் கொண்டவன்.
மீனாள் சட்டென்று அமர்ந்து மகாவின் கையிலிருந்த தட்டினை வாங்கி தானே உண்ண ஆரம்பித்ததற்கு காரணம், அவனின் கடிதலுக்கு பயந்தே!
“என்னய்யா காலையிலே அத்தை நெனைப்பு?”
அன்றைய சண்டைக்கு பின்னர் வீரனும் இன்றுதான் மருதனின் வீட்டிற்குள் வந்திருக்கிறான்.
அப்பாவிடம் பேச அரம்பித்துவிட்டதால், வீட்டிற்குள் வருகிறானென்று மீனாள் நினைத்துக்கொண்டாள். உண்மையும் அதுதானே!
“மாமா பார்த்து கையெழுத்து வாங்கணும் அத்தை. வெரசா பேங்க் போவனும். இலலைன்னா இழுத்து அடிச்சிப்புடுவான்” என்ற வீரன், “அம்மா கொடுத்தாய்ங்க” என்று தூக்குவாலி ஒன்றை கையில் கொடுத்தான்.
“என்னது அப்பு?” என்று கேட்டுக்கொண்டே திறந்த மகா, “ஆட்டுக்காலாக்கும்” என்றதோடு, “என்னயிருந்தாலும், நம்ம ஓட்டலுல வைக்கிற பாயா ருசி வராதுய்யா” என்றவராக சமையலறை பக்கம் சென்றார்.
“அம்மா எனக்கு ஆட்டுக்கால் குழம்பு வெச்சு வைய்யீ. காலேஜ் போயிட்டு வந்து சாப்புட்டுக்கிறேன். மொத்தத்தையும் பாயா வைக்காத” என்று வீரனை மறந்து உரக்கக் கூறியவள், அவனது செருமலில் தட்டை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.
வீரன் அமைதியாக இருந்தார். இன்னும் இவர் என்னவெல்லாம் பேசுவாரென்று.
அவரின் பேச்சில் அடுக்கலைக்குள்ளிருந்து மீனாளும், மகாவும் வேகமாக கூடத்திற்கு வர, அப்போது தான் மாடியிறங்கி வந்த கௌதம்…
“அம்மா என்ன பேச்சிது?” என்று அதட்டினான்.
“என்னடே சத்தம் அதிகமா வருது? உன் அய்யன் இருக்கும்போது குரலை உசத்தித்தேன் பாரேன்!” என்று கௌதமை அடக்கினார்.
“எம்புட்டு நாளைக்குத்தேன் கணக்கு வழக்குலாம் ஒன்னுன்னு சொல்லி லாபத்தை சுருட்டுவீங்க?” என்று வசந்தி தன் விஷத்தை கொட்ட, மகா “மதினி” என்று முன் வந்தார்.
“நானென்ன இல்லாததை சொல்லிப்புட்டேன். எனக்கும் இங்கன பங்கு இருக்குதானே! ஆனால் ஒரு பட்டமும் என் கணக்கு வந்து சேரலையே?” என்றார்.
“நான் பொறவு வரேன் அத்தை” என்று வீரன் மகாவிடம் விடைபெற…
“உண்மைய கேட்டதும் நழுவுறான் பாரு” என்று நக்கல் பேசினார் வசந்தி.
வீரன் விறைத்தபடி நிமிர்ந்து நின்று… “இப்போ உங்களுக்கு என்ன தெரியனுமாட்டிக்கு?” என்று அழுத்தமாகக் கூர் பார்வையோடு வினவினான்.
அவனது அத்தகையத் தோற்றம் வசந்திக்குத் திமிராகத்தான் தெரிந்தது.
மீனாள் அதனை ரசனையோடு ஏறிட்டாள். சூழல் மறந்து. வீரனும் அவளது பார்வையை உள்வாங்கியபோதும் வசந்தியையே நேர்கொண்டு பார்த்தான்.
“அண்ணே விடுங்க. அவங்க ஏதோ தெரியுமா பேசுறாங்க” என்று கௌதம், வீரனிடம் தழைந்து செல்ல முனைய…
“இதெல்லாம் நல்லாயில்லை மதினி” என்றார் மகா.
“உன் அண்ணே குடும்பத்துக்குத்தானே நீயி அல்லு கட்டுவ!” என்று மகாவை ஒதுக்கிய வசந்தி,
“இப்போ கட்டுற சக்கரை ஆலைக்கும் எங்க பணந்தேனா?” என்று எள்ளலாகக் கேட்க…
“வசந்தி” என்று வீடே அதிர விளித்திருந்தார் மருதன்.
அன்று காலை உணவிற்கு பின்னர் நல்லான் குடும்பம் கிளம்புவதாக இருக்க, ஊருக்கு கொண்டு செல்ல நல்லான் இளநீர் கேட்டாரென்று அதனை கொண்டுவர சென்ற மருதன், வசந்தி கௌதமை அடக்கியபோதுதான் வீட்டிற்குள் நுழைந்தார்.
வீரனின் அமைதி… அவர்களின் ஏமாற்றும் செயலை தான் கண்டுகொண்டதால் என்று தவறாக நினைத்து வசந்தி யாரையும் பொருட்படுத்தாது பேசிக்கொண்டேப்போக… தங்கையின் உண்மையான குணத்தையே அன்று தான் மருதன் கண்டுகொண்டார்.