மருதனின் அதிர்ந்த அதிரடியான அழைப்பில் வசந்தி நடுங்கித்தான் போனார். ஆனால் அதனை அசட்டை செய்தவராக நின்றிருந்தார். அவருக்கு அண்ணனின் உணர்வுகள் ஒரு பொருட்டென்றால் பாண்டியனின் விடயத்தில் அன்றே அண்ணன் பக்கம் நின்று இருப்பாரே! பாண்டியனை மறுத்திருக்க மாட்டாரே!
“யாரை கேள்வி கேட்குற நீயி?” என்று வசந்தியின் முன் மருதன் வர,
“நீயி என்னடே அவளை அதட்டுறது?” என்று வசந்தி அதற்கும் வீரனிடம் எகிறிட…
“என்னையவிடவே அவனுக்குத்தேன் உரிமை அதிகமாட்டிக்கு” என்ற மருதன், “அவன் சொன்னாக்கா எம் பொண்ணு மட்டுமில்லை… நானும் கேப்பேன்” என்றார்.
வசந்தியின் முகம் விழுந்துவிட்டது.
“நாளைக்கு உன் ஆசைப்படிக்கு கௌதமுக்கும் மீனாளுக்கும் கல்யாணமே ஆனாலும்,”
இந்த இடத்தில் கௌதமும், மீனாளும் ஒருங்கே அதிர்ந்தனர். நேற்றிரவு வீரன் பேசிய பேச்சுக்கெல்லாம் பொருள் இக்கணம் மீனாளுக்கு விளங்கிற்று.
“அவ(ள்) என் மருமவன் பேச்சை கேட்கத்தான் செய்வாள். அவளுக்கு அத்தை மாமன் முறைக்கு நீயி இதுவரைக்கும் என்னத்த செஞ்சிருக்க? அவள் பொறந்ததுலேர்ந்து பாண்டியன் செஞ்சான். ருதுவான நாலுலேர்ந்து அமிழ்தன் செய்யுறான். இனியும், அவள் காலத்துக்கும் செய்வியான்” என்றவர், “சரி இப்போ இந்தப் பேச்செதுக்கு… நீயி அமிழ்தனை பார்த்து கேட்ட கேள்விக்கெல்லாம் அவென்கிட்ட மாப்பு கேட்டுப்புடு” என்றார்.
கீழே நடக்கும் கலவரம் தெரியாது மாடியில் நின்று தன் நண்பனிடம் உரையாடிக் கொண்டிருந்த பிரேம், வீரனின் குரலுக்கு அடித்து பிடித்து கீழிறங்கி விரைந்து வந்தான்.
அதனை வசந்தி ஆச்சரியமாக பார்க்க,
“இது அமிழ்தன் மேலிருக்கும் பயமில்லை. அவென் காட்டும் எல்லையில்லா அன்புக்கான மருவாதி” என்றார் மருதன். தங்கையின் எண்ணம் என்னவாக இருக்குமென்று யூகித்தவராக.
“தங்கத்துக்கு நேரமாவுது. நீயி வெரசா கூட்டிட்டுபோயி விட்டுப்போட்டு வா” என்ற வீரன், “வைவா முடிஞ்சு போன் போடு. பஸ்சுக்கு காத்திருக்க வேணாம். லிங்கத்தை அனுப்புறேன். அவென் மருதையிலதேன் இருப்பான்” என்றான். இன்னமும் அதிர்விலிருந்து மீளாத மீனாளின் தலை சரியென அசைந்தது.
பிரேம் மீனாளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
“இதுதேன் வீரன். வெளிப்பார்வைக்கு இல்லை இது. அவென் குணமே அதுதேன். நாம சலம்பிக்கிட்டு இருக்க நேரங்கூட… புள்ளையோட பரீட்சையை மனசுல வச்சு நடந்துகிட்டான் பாரு. எனக்கு தோணுச்சா இது?” என்ற மருதன், “நம்ம காசுல அவென் மேல வரல. அவென் உழைப்புலத்தேன் நாம உயர்ந்து நிக்குதோம். உன் கணக்கு அம்புட்டும் உன் வீட்டுக்காரர் வங்கி கணக்குக்கு பட்டா பட்டம் சரியா அனுப்பி வச்சிட்டு இருக்கான். உனக்கு இது தெரியலங்கிறதுக்கு காரணம் நாங்கயில்லை. உன்கிட்ட சொல்ல வேண்டிய ஆளு சொல்லிருக்கணும். நீயி நியாயம் கேட்க வேண்டியது அமிழ்தன்கிட்ட இல்லை” என்றார். மிக மிக அடர்த்தியாக.
மருதன் சொல்லிய உண்மையில் வசந்தியின் முகத்தில் ஈ ஆடவில்லை. நியாயமாக அவர் சண்டை போட வேண்டிய ஆளே அவரது கணவராயிற்றே. வீரனிடம் கேட்ட அனைத்து கேள்வியையும் நல்லானிடம் வசந்தி கேட்டிட முடியுமா?
“பண்ணையத்துல மட்டுந்தேன் குடும்பக்கூட்டு. உனக்கும் எனக்கும் பங்கிருக்கு. ஓட்டலு நானும் பாண்டியனும் ஆரம்பிச்சிருந்தாலும், அதோட வளர்ச்சி கிளை பரப்ப முழு காரணமும் அமிழ்தன். அவனுக்கடுத்து லிங்கம். அதுல நான் பக்கக்கூட்டு மட்டுந்தேன். அதுக்கு அவென் என் கணக்கை சரிவர கொடுக்கிறானா இல்லையான்னு எனக்கு தெரிஞ்சா போதும்” என்று மருதன் சொல்லியதில் வசந்தியின் முகம் கருத்து சிறுத்தது.
“அரிசி ஆலை அவனோட சொந்த முயற்சி. அப்படியிருந்தும், அதுல பிரேமை இணைச்சு சரிபாதி லாபம் கொடுத்திட்டு இருக்கியான். சர்க்கரை ஆலை கூட அவனோட ஆசை. இப்போதேன் நேரங்கூடி வந்திருக்கு. மொத்தமும் அவென் உழைப்பு இது. எல்லாம் ஒன்னாயிருக்க, இது எனக்கு மட்டும் என்னத்துக்குன்னு இதுலையும் என்னை சேர்க்கத்தான் கையெழுத்து. இது தொடங்கினாலும் நான் போயி சோலி பாக்கப்போறதில்லை. ஆனால் பங்கை சரி பாதியா எனக்கு கொடுத்துப்புடுவான். அதுதேன் என் அமிழ்தன். இந்த குடும்பத்தோட மொத்த சொத்தே அவெந்தேன். இதை நானில்லை… சின்னகுட்டியும் சொல்லுவாள்” என்றவரிடம் அப்படியொரு பெருமை.
“இனிமேட்டுக்கு கேள்வி கேட்க முன்ன ஆயிரத்தையும் அலசி தெரிஞ்சிக்கிட்டு கேளு” என்று இறுதியாக வார்த்தையால் வசந்திக்கு கொட்டு வைக்கவும் அவர் மறக்கவில்லை.
வீரனுக்கு மருதனின் பாசம் தெரியும். அவை அன்று அவர் மகன் என்று மட்டும் நடந்து கொண்டதில் ஏற்பட்டிருந்த வருத்தம் யாவும், இன்றைய மருதனின் பேச்சில் கரைந்து காற்றில் கலந்திருந்தது.
அவர் பெற்ற பிள்ளைகளைக் காட்டிலும் அவர் மனதில் தனக்கு எப்போதும் சிறப்பான இடம் தானென்று மகிழ்ந்து போனான். அன்றைய கவலை முழுதாய் அவன் மனதிலிருந்து நீங்கியிருந்தது.
“அமிழ்தன் பக்கட்டு பேசிப்புட்டேன்னு அதுக்கும் மோடி வச்சிக்காத. உடன் பொறந்தவங்கிற நெனைப்பு எப்பவும் நெஞ்சில இருக்கும். வேணாமின்னு நெனச்சாலும் வுட்டுப்போவாது. தொப்புள்கொடி உறவாச்சே! புடிக்கலன்னு விலகிக்க முடியுமா என்ன?” மருதனிடம் உன்னிடம் இதனை எதிர்பார்க்கவில்லை எனும் அதிருப்தி அப்பட்டமாக தெரிந்தது.
நேற்று மீனாளை கௌதமுக்கு கொடுக்கவில்லை என்றால் உறவை முறித்துக்கொள்ள தயங்கமாட்டேனென்று சொல்லிய வசந்திக்கு, மருதன் சொல்லிய பிடிக்காத உறவு என்பதில் விலக்கி வைத்துவிடுவாரோ என்று பயம் வந்துவிட்டது.
“மன்னிச்சிக்கிடு அமிழ்தா!” உடனடியாக பச்சோந்தியாக மாறியிருந்தார் வசந்தி. மருதனை மலையிறக்க மட்டுமே அந்த பொய்யான மன்னிப்பு.
வீரன் அவரின் மன்னிப்பை ஏற்றதாக சிறு குறிப்பும் காட்டவில்லை.
வெளியில் நல்லான் வரும் அரவம் தெரிய…
“உன் ஆசைப்படி கௌதமுக்கே மீனாளை கட்டிக் குடுக்குறேன். ரெண்டேறுக்கும் விருப்பம் இருந்தாக்கா” என்ற மருதனின் பேச்சில் தான் கௌதமின் அதிர்வே நீங்கியது.
கௌதம், மீனாளின் பேச்சினை அரைகுறையாக கேட்டிருந்த வசந்தியும், இதுவே போதும் பின்னாளில் அவர்களின் விருப்பம் வைத்து ஆட்டி வைத்திடலாமென மனக்கணக்கு இட்டவராக சரியென்றார்.
“இப்போ பரிசம் போட்டுக்கிட முடியாது. படிக்கிற புள்ள மனசை கலைச்சிட்ட மாறியிருக்கும்” என்ற மருதன், “கல்யாண நேரம் வரட்டும், அப்போவே எல்லாம் வச்சிக்கலாம்” என்றார். அழுத்தமாக. இதுதான் என் முடிவு. உன் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்க முடியாதென தெளிவாகவேக் கூறிவிட்டார்.
மருதன் உண்மையில் திருமணம் பற்றி தன்மையாக பேசிட வேண்டுமென்றுதான் வார்த்தைகளை மனதில் உருப்போட்டபடி இருந்தார். வீரனை வசந்தி கேள்வி கேட்டதில், கோபம் வர பெற்றவர் அனைத்தையும் கட்டளையான அறிவிப்பு போலவே சொல்லிவிட்டார்.
“பண விடயம் அது உனக்கும் மாமாவுக்கும் நடுவுல. நீயி அவரை கேக்குற, கேக்காம விடுறியோ! அது உம்பாடு” என்றவர், “நல்ல நாள் பார்த்து சொல்லியனுப்புறேன். உம் பங்கை பிரிச்சு விட்டுடுறேன். அமிழ்தன்கிட்டையே இம்புட்டு கேக்குற நீயி நாளைக்கு என்னைய கேக்க எம்புட்டு நேரமாவும்? பண்ணையம் மட்டுந்தேன் நம்ம ஐயாவும், மீனாட்சி அயித்தையும் ஒன்னா பார்த்துகிட்டாய்ங்க. அயித்த ஒரு நாளும், என்னுத கொடுன்னு நம்ம அய்யன்கிட்ட கேட்டதில்லை. அது அப்படியே நம்ம தலைமுறை வரைக்கும் தொடர்ந்துப்போச்சு. இனி ஒட்டுக்கா இருந்தாக்கா உனக்கும் எனக்கும் சலம்பலாகிப்போவும். பிரிச்சு எழுதி கொடுத்திடுப்புடுறேன். நீயி ஆளு வச்சு பார்த்துக்குவியோ இல்லை இங்கன வந்து நீயி பண்ணையம் செய்வியோ அது உம்பாடு” என்று நல்லானுக்கு கேட்டுவிடக் கூடாதென்று ஒரே மூச்சில் வேகமாக சொல்லி முடித்தவர்,
“எப்போ கெளம்புற?” என்று கேட்டபடி வசந்தி பதில் சொல்வதையும் பொருட்படுத்தாது, வீரனை கூட்டிக்கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.
‘இந்த சேத்துல நான் பண்ணையம் பாக்கணுமா?’ வசந்தி அதிர்ந்துபோனார்.
கௌதம் இது தேவையா என்று வசந்தியை ஏறிட… உனக்கெல்லாம் இதுவே கம்மி எனும் எண்ணத்தோடு மகா சென்றுவிட்டார்.
வீரனும், மருதனும் வீட்டு வாயிலை அடைய, நல்லான் உள்ளே அடி வைத்தார்.
“காருல ஏத்த வேண்டியதெல்லாம் ஏத்திப்புட்டேன் மாமா. எப்போ கெளம்புறீங்கன்னா, தோப்புக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துபுடுவேன்” என்றார்.
மருதன் அவ்வாறு கேட்டதும் நல்லானும், “காலை உணவை முடிச்சிக்கிட்டு கெளம்பினாதேன் சாயங்காலகுள்ள வூடு போவ முடியும்” என்றார்.
மருதன் தலையசைத்தவராக திண்ணையில் அமர, உடன் வீரன்.
“மாமா.” வீரன் ரொம்பவும் நெகிழ்ந்திருந்தான்.
“எனக்காக நீயி அமைதியா போனதுக்கு நன்றியப்பு” என்ற மருதன், “நீயி பேசியிருந்தால் கதை வேறமாறியாகியிருக்கும்” என்றார்.
“இந்த சம்பவத்தால மீனாள் விடயத்தை எப்படி சொல்றதுன்னு மருகாம, இதுதான்னு திடமா சொல்ல முடிஞ்சுது. அது போதும்” என்றவருக்கு சர்க்கரை ஆலையின் பங்குதாரர் உரிமம் பற்றி விளக்கம் விவரித்தான். அவர் கேட்கிறாரோ இல்லையோ!
“இதெல்லாம் என்னத்துக்கு சொல்லிட்டு இருக்குற, எங்கனக்குள்ள கையெழுத்துப்போடனும்” என்று கேட்டு போட்டார்.
வீரன் வங்கி சென்ற ஒரு மணி நேரத்தில் வசந்தி தன்னுடைய குடும்பத்தோடு புறப்பட்டுவிட்டார்.
கௌதம் மருதனிடம் தனியாக தனது அன்னையின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தான்.
“உனக்கு அம்மா ஆகும் முன்னவே, எனக்கு அவ தங்கச்சிடே” என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
வசந்தி செல்லும் முன்னர்,
“எதையும் மனசுல வச்சிக்காதண்ணே! மீனாளை கௌதமுக்கு கொடுக்க ஒத்துக்கிட்டது சந்தோஷம். உன் வார்த்தையை நம்புறேன்” என்று கூறிட,
‘எப்பவும் இவளோட எண்ணந்தேன் பெருசு’ என்று மருதன் மனதிற்குள் பொருமினார்.
“வரட்டா அங்கை!” வசந்தி சொல்லிட,
உதட்டை இழுத்து தலையாட்டி வைத்தாளே தவிர ஒரு வார்த்தை அவரிடம் அவள் பேசவில்லை. அவளின் வீரா மாமாவை அவர் பேசிவிட்ட கோபம் அவளுக்கு.
அந்நேரம் பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தவள், விடயமறிந்து… “நானிருந்திருக்கணும் எம் மாமாவை பேசுன சில்லு வாவை உடைச்சிருப்பேன்” என்று மகாவிடம் வெளிப்படையாகவே புலம்பியிருந்தாள்.
கௌசிக்கிற்கு தான் அந்த இயற்கை சூழல், பாசம் மட்டுமே காட்டும் உறவுகளை விட்டு செல்ல விருப்பமே இல்லாமல், அதுவும் தன்னுடைய புதிய தோழியான அங்கையை பிரிந்து செல்ல மனமே இன்றி…
“அடுத்த வருசம் உன் காலேஜில் சேர்ந்துடுறேன். ரெண்டேறும் ஒன்னா இருக்கலாம்” என்று அங்கை சொல்லி சமாதானம் செய்த பின்னரே சென்றான்.
கௌதம் மட்டுமே ஒருவித யோசனையுடனும், குழப்பத்துடனும் சென்றான்.
“இப்போதான் வூடு பழையபடிக்கு இயல்பா இருக்குது” என்று மகா சற்று ஓய்வாக தூணில் சாய்ந்து அமர்ந்தார்.
அங்கையின் பள்ளி பேருந்து சென்றுவிட்டதால், மருதன் அவளை பள்ளியில்விட செல்ல, மகா தன் பிறந்த வீட்டிற்கு சென்று இங்கு நடந்த அனைத்தையும் ஒரு வார்த்தை விடாது சொல்லி…