அத்தியாயம் 2
சைரன் ஒலி காதை கிழிக்க, மருத்துவமனை உள்ளே நுழைந்து போட்டிக்கோ வாசலில் வந்து நின்றது சுதர்ஷனின் காவல்துறை வாகனம். முன்பக்கம் அமர்ந்திருந்தவன், திரும்பி பின் இருக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவளைப் பார்த்தான். பிறகு கதவை திறந்துகொண்டு பின் இருக்கைக்கு வந்தவன், அவளைத் தூக்க முயற்சிக்க,
இங்கே மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே குழுவாக அமர்ந்து, சுதர்ஷனுக்காகக் காத்திருந்த பத்திரிகையாளர்கள், சைரன் சத்தம் கேட்டு அவனை நோக்கி ஓடி வர ஆரம்பித்தனர்.
பத்திரிகையாளர்களைப் பார்த்துவிட்ட கார் ஓட்டுனர், சுதர்ஷனிடம், “சர்! பிரஸ் வராங்க. அந்தப் பொண்ணோட முகத்தை மூடுங்க.” என்று கூறினார். ஏனெனில், தண்டனை நிருபிக்கப்படாத விசாரணை கைதிகள், மனநலம் குன்றியவர்கள், பலவந்தம் செய்யப்பட்ட பெண்கள், உள்ளிட்டவர்களின் அடையாளங்களை தார்மீக அடிப்படையில் மறைக்க வேண்டும் என்பது காவல்துறையின் ஒரு வழக்கமாகும்.
ஓட்டுனர் சொல்ல நிலைமையைப் புரிந்து கொண்டவன், அவரிடம் இருந்து ஓர் கர்சீப்பை வாங்கி, படுத்திருக்கும் அவளின் மூக்கு மற்றும் வாயை சேர்த்து மறைக்குமாறு கட்டினான். தலையிலும் துணி மறைத்திருப்பதால், அவளின் கண்கள் மட்டுமே இப்பொழுது தெரிந்தது.
பின் அவளைத் தூக்கிக்கொண்டு அவன் திரும்ப, அதற்குள் அவனை நெருங்கியிருந்த பத்திரிகையாளர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.
“சர்! இந்த இன்சிடென்ட் எதனால நடந்துச்சு?”
“இந்தச் சம்பவம் நடக்க, மருத்துவமனை அலட்சியம் காரணமா? இல்லை ஏதாவது சதியா?”
“போலீஸ் சார்பா, யார் மேலையாவது FIR பதிவு செஞ்சு இருக்கீங்களா?”
“இவங்க யார் சர்? எதுக்காக நீங்க உங்க கார்ல அழைச்சிட்டு வரீங்க? உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?”
“முகத்தை மூடு இருக்கீங்களே, ஒரு வேளை இவங்களுக்கு அந்தத் தீ விபத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?”
ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கிக் கொண்டிருக்கும் அவர்களின் கேள்விகளைக் கேட்டவனுக்கு, ஒரு பக்கம் கோபமென்றால், மறுபக்கம் ‘அடப்பாவீங்களா!’ என்றானது. நொந்து போனான்!
அவர்கள் இஷ்டத்துக்குக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,
“உங்க கேள்விக்கு எல்லாம் வந்து பதில் சொல்றேன். இப்போ தயவு செஞ்சு வழிய விடுங்க. ஷி இஸ் இன் க்ரிட்டிகல் கண்டிஷன்.” கிட்டத்தட்ட அவன் கெஞ்ச,
ஆனால் அவர்களோ வழியை விடாமல், இருவரையும் சேர்த்துப் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர்.
இதைப் பார்த்துவிட்டு உடனே, காரில் இருந்து இறங்கி சுதர்ஷன் அருகில் வந்த ஓட்டுனர், கூட்டத்தை அப்புறப்படுத்த முயற்சித்தான். ஆனால் யாரும் நகர்வதாக இல்லை.
அவர்களுக்குத் தேவை ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயம். அவர்களுக்கு அவர்களின் கவலை!
[the_ad id=”6605″]
அந்த நேரம் உணவை முடித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்த, மிதுன், சஞ்சனா, மற்றும் அவர்கள் இருவரின் குழுவும், சுதர்ஷன் இருக்கும் நிலைமையைப் பார்த்துவிட்டு, அவன் அருகில் விரைந்தவர்கள், “எல்லாரும் நகருங்க. அவர் கையில பேஷண்ட்டை வச்சிருக்கார். மொதல்ல அவங்களை ஹாஸ்பிட்டல் உள்ள கூட்டிட்டு போகட்டும். அதுக்கு அப்புறம் உங்க கேள்விகளைக் கேளுங்க.” “தயவு செஞ்சு நகருங்க!” “ப்ளீஸ் மூவ்!” என்று கிட்டத்தட்ட தள்ளாத குறையாக அனைவரையும் அப்புறப்படுத்தி சுதர்ஷனுக்கு வழி அமைத்துக் கொடுத்தனர்.
மிதுனை பார்த்து சுதர்ஷன், “தேங்க்ஸ்!” என்று சொல்ல, “பரவால சர். நீங்க போங்க!” என்று பதிலுக்குக் கூறியவன், அவன் பத்திரமாக மருத்துவமனை உள்ளே செல்லும்வரை, கூடவே பாதுகாப்புக்கு வந்தான்.
சுதர்ஷன் சென்றதும், சக பத்திரிகையாளர்களிடம் திரும்பியவன், “கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா உங்களுக்கு எல்லாம்?! கையில அடிபட்ட ஒருத்தரை வச்சிருக்கார். எமர்ஜென்சிக்கு வழி விடாம, இப்படிப் பண்றீங்களே! நாம எல்லாம் பத்திரிக்கைகாரங்க, கொஞ்சமாவது பொறுப்போட நடந்துக்கணும்.” என்று சத்தம் போட,
“மிதுன், ரொம்பக் கோபப்படாதீங்க. எல்லாரும் செய்றதை தானே நாங்க செய்றோம். கேள்வி கேக்குறது தானே நம்ம வேலை?”
“தாராளாமா கேளுங்க சர். ஆனா அதுக்கு ஒரு வரைமுறை இருக்கு. எந்த இடத்தில, எந்த நேரத்தில கேள்வி கேக்கணும், கேக்கக் கூடாதுன்னு இருக்கு. இதோ இந்த மாதிரியா கேப்பீங்க? அந்தப் பேஷண்ட்டுக்கு ஏதாவது ஆச்சுனா, நீங்களா அவங்க குடும்பத்துக்குப் பதில் சொல்லுவீங்க?”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது சர். நீங்க எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க?”
அப்பொழுது, சட்டென்று மிதுனுக்கு முன்னால் வந்து நின்ற சஞ்சனா, அந்தப் பத்திரிகையாளரிடம்,
“சர் எனக்கு உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கணும். அதை இப்போவே கேட்கட்டுமா, இல்லை உங்களைக் கத்தியால குத்திட்டு, நீங்க ரத்தம் சொட்ட சொட்ட நிப்பீங்களே அப்போ உங்களை வழி மறிச்சு கேட்கட்டுமா?” என்று நக்கலாகக் கேட்க, பதிலுக்குக் கோபமாக முறைத்தார் அவர்.
“குத்துவீங்களா?! அடுத்தவன் உயிர் என்ன அவ்ளோ ஈசியா போச்சா உங்களுக்கு?” கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் கோபமாகக் கேட்கவும்,
“உங்களுக்கு அந்தப் பொண்ணோட உயிர் ஈசியா இருக்கலாம், எனக்கு உங்க உயிர் ஈசியா இருக்கக் கூடாதா?” என்றாள் பதிலுக்கு.
“என்னம்மா இப்படிப் பேசுற?!”
“பின்ன எப்படிப் பேசணும் சர்?! நாம பத்திரிக்கைகாரங்க தான், ஆனாலும் நாமளும் மனுஷங்க தான். கொஞ்சமாச்சும் மனுஷ தன்மையோட நடந்துக்கணும். நம்ம பிசினஸ் தான் முக்கியம்ன்னு செல்ஃபிஷா நடந்துக்கக் கூடாது.”
அதற்குள் இடைமறித்த மிதுன், “சஞ்சு, போதும் விடு. நாம போவோம்.” என்று சொல்லி அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றான்.
இங்கே மருத்துவமனைக்குள் அவளைத் தூக்கிக்கொண்டு நுழைந்த சுதர்ஷன், வேகமாக உள்ளே செல்ல, அவனைப் பார்த்துவிட்ட செவிலி ஒருவர், வார்ட்பாயிடம் சொல்லி ஸ்ட்ரெட்சரை இழுத்துவர, அதில் படுக்க வைக்கப்பட்டாள்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் அவசர சிகிச்சைக்குள் அனுமதிக்கப்பட்டாள் அவள். அவளைப் பரிசோதித்து விட்டு வெளியே வந்த மருத்துவர், “இரும்பு ராட் மாதிரி ஏதோ பொருளை வச்சு அவங்க பின் மண்டையில அடிச்சு இருக்காங்க. அதனால ப்ளட் லாஸ் கொஞ்சம் அதிகம். ஆனா உயிருக்கு ஆபத்து இல்லை. ஒரு சின்ன ஆப்பரேஷன் செய்யணும். போலிஸ் டிபார்ட்மெண்ட் தரப்பில இருந்து பெர்மிஷன் வந்ததும் செய்துடலாம். அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கணும்.” என்று சொல்ல,
“ஓகே டாக்டர். அவங்களைக் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க. நான் கமிஷனர் கிட்ட சொல்லிட்டு, உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன். ஐ வில் பீ பேக் சூன்!”
“சியூர் சர்!”
அதன் பின் நேராகக் கமிஷனர் அலுவகத்திற்குச் சென்றான் சுதர்ஷன்.
[the_ad id=”6605″]
கம்பீரமாகச் சல்யுட் வைத்தவனை வரவேற்ற கமிஷனர் பரத்வாஜ், இருக்கையில் அமரும்படி சொல்லிவிட்டு பேசலானார். “வாங்க சுதர்ஷன்! என்ன விஷயம்? அவசரமா மீட் பண்ணனும்னு சொல்லி இருக்கீங்க?!”
“ஆமாம் சர். ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட சொல்லணும்.”
“சொல்லுங்க சுதர்ஷன்.”
“சர், மெண்டல் ஹாஸ்பிட்டல் ஃபயர் கேஸ்ல, இருபது பேர் டெட். பத்து பேர் இஞ்சியுர்ட். அப்புறம் நாலு பேர் லேசான அடின்னு உங்ககிட்ட காலையில சொல்லி இருந்தேனே.”
“ஆமா! அதுக்கென்ன இப்போ?!”
“ஆனா நாம நினைச்ச மாதிரி, மொத்தம் முப்பத்திநாலு இல்லை சர். முப்பத்தஞ்சு பேர்.” என்றவன், சற்று முன்பு நடந்தவற்றை முழுவதும் கூறினான்.
“இஸ் இட்?!” அதிர்ச்சி அடைந்தார் கமிஷ்னர்.
“எஸ் சர்! அங்க நடந்திருக்கிற ஃபயர்க்கு, நினைச்ச அளவுக்கு அந்தப் பொண்ணுக்கு அதிகமான தீ காயம் எதுவும் உடம்பில இல்லை. ஆனா பின் மண்டையில இரும்பு ராட் வச்சு யாரோ அடிச்சு இருக்காங்க. அதோட, நான் ரெஸ்கியு பண்ணும்போது, ட்ரெஸ் லேசா கிழிஞ்சி, அங்க இங்க விலகி இருந்துச்சு. இதைப் பார்த்தா, அந்தப் பொண்ணுக்கு ஏதாவது நடந்து இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. வித் யூர் பெர்மிஷன், அவங்களுக்கு ரேப் அட்டெம்ப்ட் நடந்து இருக்கான்னு மெடிக்கல் டெஸ்ட் பண்ணனும். டாக்டர் வேற அவங்களுக்கு ஹெட் இன்ஜியுரிக்கு ஆபரேஷன் செய்யணும்ன்னு சொல்லி இருக்கார்.”
“ஓஹ்! ஓகே சுதர்ஷன், கேரி ஆன். அதுக்கான ஆர்டர் நான் கொடுக்கிறேன்.”
“தேங்க் யு சர்!”
“அப்போ இந்த ஃபயர் ஆக்சிடென்ட், முன்னாடியே திட்டமிடப்பட்டதுன்னு நினைக்குறீங்களா சுதர்ஷன்?”
“அப்படியும் இருக்கலாம் சர். ஆனா இப்போ இருக்கிற சூழ்நிலையைப் பார்க்கும்போது, நேத்து நைட் எதுவோ நடந்து இருக்கு, அதோட விளைவா இந்த ஃபயர் ஆக்சிடென்ட் நடந்து இருக்கலாம்ன்றது என்னோட கணிப்பு சர். மேற்கொண்டு விசாரணை நடத்தின பிறகு தான், ஒரு முடிவுக்கு வர முடியும். ஆனா அந்தப் பொண்ணுக்கும் இந்த ஆக்சிடென்ட்க்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு என் மைன்ட் சொல்லுது சர்.”
“போலீஸ் மூளை தப்பாகாது. அதுலையும் உங்க மூளை…” என்று சொல்லி சிரித்தவர், “நீங்க ஒரு கேசை எடுத்தீங்கன்னா, முடிக்காம விட மாட்டீங்கன்னு டிபார்ட்மெண்டே சொல்லுதே!” என்று பாராட்டினார்.
அவரின் புகழ்ச்சியில் புன்னகைத்த சுதர்ஷன், “எல்லாம் உங்க ட்ரைனிங் சர்!” என்றான் பணிவாக. பதிலுக்கு அவரும் சிரித்தார்.
“சர், ப்ரெஸ்ல இருந்து மறுபடியும் மறுபடியும் கால் வந்துட்டே இருக்கு. இன்னைக்கு ஈவ்னிங் ஒரு சின்ன மீட்டிங் வச்சு சொல்லிடலாமா?”
சுதா இப்படிச் சொன்னதும், சற்றே யோசித்தவர், பின், “ஓகே சுதர்ஷன். ப்ரெஸ் மீட் வச்சுடுங்க. ஆனா இப்போதைக்கு அந்தப் பொண்ணைப் பத்தின விஷயம் எதுவும் லீக் ஆக வேண்டாம். ஒரு வேளை அந்தப் பொண்ணுக்காகவும் கூட இந்த ஆக்சிடென்ட் நடத்தப்பட்டிருக்கலாம்.”
கமிஷனர் இப்படிச் சொன்னதும் எதற்காக என்று புரிந்து கொண்டவன், “ஷ்யூர் சர். அந்தப் பொண்ணைப் பத்தின எந்த டீடைல்ஸும் வெளிய வராது.”
“அடுத்து என்ன செய்யப் போறீங்க சுதர்ஷன்?”
“மொதல்ல ஹாஸ்பிட்டல்ல இருந்து அந்த முப்பத்தஞ்சு பேரோட டீடைல்ஸ் வாங்கணும் சர். அப்புறம் ஒவ்வொருத்தரோட குடும்ப உறுப்பினர்களை வச்சு, இறந்தவங்களை ஐடெண்டிஃபை பண்ணனும். முடியாத பட்சத்தில் டி.என்.ஏ டெஸ்ட் மூலமா கண்டுபிடிக்கணும். கண்டுபிடிக்க முடிஞ்சவங்க போக, மீதி உள்ளவங்களை, ஒவ்வொருத்தரா விசாரிச்சு அந்தப் பொண்ணோட விவரம் எதுவும் கிடைக்குதான்னு பார்க்கணும் சர்.”
“அப்படியே செய்ங்க சுதர்ஷன்.”
சம்மதமாகத் தலை அசைத்தவன், அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, அங்கிருந்து கிளம்பினான்.