விஷ்ணுவிடம் பேசி முடித்துவிட்டு தன் அறையில் அமர்ந்து நிச்சயத்தை நேரலையில் பார்த்து கொண்டிருந்தான் அதிர்துடியன்.
மரகதத்திடம் அவன் எடுத்து வந்த புடவையை யாழிக்கு கொடுக்க சொல்லியிருக்க அதில் தங்கமென மிளிர்ந்தவளை ரசித்து கொண்டிருந்தவனின் முகத்தில் அழையா விருந்தாளியாக மென்னகை படர்ந்திருந்தது.
அவ்வப்போது நெஞ்சை நீவிக்கொண்டவனின் பார்வை முதல் முறையாக புடவையில் அதிலும் நிச்சயத்திர்க்கான பிரத்யேக ஒப்பனையில் அன்றைய நாளுக்கான பூரிப்புடன் கன்னத்தில் அதீதமாகிய சந்தனத்தை துடைத்தவாறே தவிப்பும் தேடலுமாக அவள் விழிகள் ஒவ்வொருமுறையும் கூட்டத்தில் படிந்து மீண்டு என்று அவனை அடியோடு வீழ்த்த இதழ்கடையோர மீசையை கடித்திழுத்தவாறு யாழியை பார்த்திருந்தவனுக்கு இப்போதே சென்று அவளுக்கு நலங்கிட்டு விடும் வேகம்..!!
ஆனால் அவள் எழில் கோலத்தில் தடுமாறும் மனதை இறுக்கி பிடித்து ‘கன்ட்ரோல் அதி.., அவசரப்பட்டு நீயே காரியத்தை கெடுத்துடாதே’ என்று சொல்லிக்கொண்டவனின் பார்வை யாழியின் மடியில் இருந்த கைபேசி மீது படிந்தது.
ஆம் இன்று காலை மகேஷ் அவளிடம் கைபேசியை அளித்து ‘மாப்பிள்ளை உனக்கு கூப்பிடுறேன் சொல்லி இருக்கார்’ என்று கூறியதில் இருந்தே அவன் அழைப்பிற்காக காத்திருக்கிறாள்.
நிச்சயதார்த்த பத்திரிக்கை வாசித்து மரகதம் நலங்கு வைக்க தொடங்கும் வரையிலும் யாரும் அறியாமல் நொடிக்கொரு முறை அவன் அழைப்பை எதிர்பார்த்து அலைபேசியை பார்த்திருந்தாள்.
ஆனால் நிச்சயம் முடிந்து அவன் குடும்பம் கிளம்பும் வரையிலுமே அழைப்பு வராமல் போக யாழிக்கு மனம் சுணங்கி போனது.
மாலை விஷ்ணு கிளம்பிய பின் கன்னங்களில் சந்தனமும் தலையில் அட்சதையும் மீதமிருக்க கட்டியிருந்த புடவையை மாற்றாமல் கலங்கிய விழிகளுடன் கடந்த பல மணி நேரமாகவே கையில் இருந்த போனை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் யாழி..
ஆம் நிச்சயத்திற்கு வராமல் போனதோடு இந்த நிமிடம் வரை அதிர்துடியன் அவளுக்கு அழைத்து பேசாது அவளை தவிக்க செய்திருந்தான்..,
யூடியூபில் மற்றவர்களின் நிச்சியத்தின் போது நடந்த கொண்டாட்டங்களை கண்டு தனக்கும் அப்படி அமையும் என்று எதிர்பார்த்திருந்த பேதை நெஞ்சம் அதியின் புறக்கணிப்பில் அத்தனை மருகி கொண்டிருந்தது…
குறைந்த பட்சம் அவளுக்கு வீடியோ காலிலாவது பேசுவான் என்று எதிர்பார்த்தே இன்னும் ஒப்பனையை கலைக்காமல் அவனுக்காக காத்திருக்கிறாள்.
ஒரு கட்டத்தில் அவளையும் அறியாமல் கண்களில் நீர் கோர்த்து விட்டது..,
‘யாழி சாப்பிடவா’ என்று சுகமதி அழைக்க எதற்கும் பதிலளிக்கும் நிலையில் அவள் இல்லை..,
அதே நேரம் அவளது நிச்சயத்திற்கு வந்த தோழிகள் அவளுக்கு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்டில் இருந்து டெஸ்டினேஷன் வெட்டிங் வரை அனைத்திற்குமான லிங்க்கை அடுத்தடுத்து அனுப்பிய போதும் எதையும் திறந்து பார்க்க தோன்றாமல் அவன் அழைப்பிற்கு காத்திருந்தாள்.
இரவு எட்டரை மணியாவில் அதியிடம் இருந்து அழைப்பிற்கு பதில் மெசேஜ் வந்தது உடனே அதை திறந்து பார்க்க,
‘வில் மீட் டுமாரோ.. குட் நைட்..’ என்றிருந்தது.
‘அவ்ளோதானா…???’
மற்றவர்கள் எல்லாம் நிச்சியத்தின் போது வருங்கால மனைவிக்கு எத்தனை சர்ப்ரைஸ் அளிக்கிறார்கள் அழகை வர்ணித்து கவிதையே சொல்வதை கண்டிருக்கிறாளே ஆனால் இவன் என்ன இப்படி அவள் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கிறான் என்று அவள் அயர்ந்து போக அதே நேரம் மீண்டும் அதியிடம் இருந்து மெசேஜ்,
‘உன் போட்டோ அனுப்பு’
“போட்டோவா..??? அதற்கு அவள் எங்கு போக..?? எப்போதும் செல்பியாக எடுத்து குவிப்பவளின் சிந்தை முழுக்க இன்று அவன் வசம் சுழன்றிருக்க மற்றவைக்கு இடமேது..?? விஷ்ணுவும் அதி அவனை கலங்கடித்ததில் மொத்தமும் மறந்திருந்தான்”
போட்டோவிற்கு எங்கே செல்வது..?? என்று தவித்தவளுக்கு அப்போது தான் தோழிகள் அனுப்பிய மெசேஜ் கண்ணில் பட உடனே ஒருத்திக்கு அழைத்து அவள் எடுத்திருந்த போட்டோவை அனுப்ப சொல்லி உடனே அதிக்கு அனுப்பிய பின்பே ஆசுவாச மூச்செடுத்து இரவு உணவுக்காக சென்றாள்.
********************************************
இரவு வழக்கம் போல மோட்டிவேஷனல் ஸ்பீச் கேட்டுகொண்டிருந்த யாழி அருகே வந்து அமர்ந்த சுகமதி திருமணமாக போகும் மகளுக்கு வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்த முயன்று கொண்டிருந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் யாழி செல்போனை வைத்து விட்டு சுகமதியிடம், , ‘இட்ஸ் மை டே தாயே உனக்கு அது புரியலையா…??’ என்றாள்.
“தப்பு யாழி அது உன்னோட நாள் மட்டும் இல்ல மாப்பிள்ளையோட நாளும் தான்..!! உனக்கு எந்த அளவு ஆசை, கனவு, உரிமை இருக்கோ அதே அளவு அவருக்கும் இருக்கு புரியுதா..?? உனக்கு ஒரு கற்பனை இருக்க மாதிரி அவருக்கும் இருக்கும் உன்னோடதை அவர் மதிக்கணும் ஏத்துக்கனும்ன்னு நீ எதிர்பார்க்கிற மாதிரி அவரோட உணர்வுக்கும், ஆசைக்கும் மரியாதை கொடுக்கணும்..”
அதை கேட்ட யாழியோ இருகரங்களையும் தலைக்கு மேல் குவித்து , “ஹப்பாஆஆஅ போதும் தாயே நிப்பாட்டு எப்பபாரு இதையே சொல்லிக்கிட்டு இருக்க கேட்டு கேட்டு எனக்கு காதே புளிச்சு போச்சு… இப்போ நீ என்ன சொல்ல வர கடைசி வரைக்கும் எனக்கான வாழ்க்கையை நான் வாழக்கூடாது அப்படி தானே மாப்பிள்ளைக்கு பிடிச்ச மாதிரி தான் நான் இருக்கனுமா..??”
‘பின்னே ..?? வேற யாருக்கு பிடிச்ச மாதிரி இருக்க போற..??’
‘இது என்னம்மா அர்த்தம் இல்லாத கேள்வி..??’
‘அர்த்தத்தோட தான் கேட்கறேன் யாழி உனக்கு எதிர்பார்ப்பு இருக்க மாதிரி அவருக்கு இருக்க கூடாதா உனக்கு தகுந்த மாதிரி அவர் இருக்கார்ன்னு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட நீ அவருக்கு தகுந்த மாதிரி நீ இருக்கியான்னு யோசிச்சி பார்த்தியா…??’
‘அதை ஏன்ம்மா நான் யோசிக்கணும் ..?? அது தெரியாமயா என்னை பொண்ணு பார்க்க வந்தாங்க’
‘விதண்டாவாதம் பேசாத யாழி கல்யாண வாழ்க்கையோட அடிப்படையே நம்பிக்கையும், காதலும், ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுகொடுத்து அனுசரிச்சி போறது தான் ஆனா உனக்காக மத்தவங்க செய்யணும்ன்னு எதிர்பார்க்கிற நீ மத்தவங்களுக்காக துரும்பை கூட அசைக்க மாட்டேன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்..?? அப்படி முடியாதுன்னு நினைக்கிறவ கல்யாணத்துக்கே ஒத்துட்டு இருந்து இருக்க கூடாது…”
“ம்மா சும்மா பேசிட்டே போகதம்மா நீ தான் கல்யாணத்தை இவ்ளோ பூதாகரமா பேசுற… ஆனா இன்ஸ்டால fbல போடுற ஸ்டோரீஸ் யூ டியூப் வீடியோஸ்ல எல்லாரும் அவங்க கல்யாண நாளை சொல்லும்போது எவ்ளோ அழகா சந்தோஷமா இருக்கு தெரியுமா..?? ஏன் அவங்களை மாதிரி எனக்கும் என்னோட கல்யாணத்தை பத்தின ட்ரீம் இருக்க கூடாதா அவங்களை யாரும் இப்படி செய்ய கூடாதுன்னு சொல்லலையே..”
தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டார் சுகமதி,
‘யாழி போன்ல நீ பார்க்கிறது மட்டுமே வாழ்க்கை கிடையாதுடா அதுக்கும் மேல எவ்வளவோ இருக்கு அப்படியே இருந்தாலும் அங்க ரெண்டு பேருக்குமான புரிதல் இருக்கும்.. நிதர்சனம் வேற ஏன் அதை புரிஞ்சிக்க மாட்டேங்கிற’ என்றவர் மகளுக்கு புரிய வைத்து விடும் வேகத்தோடு,
‘சரி சொல்லு அன்னைக்கு திருவண்ணாமலைக்கு போகும் முன்ன அந்த இடத்தை பத்தின எல்லா தகவலும் தெரிஞ்சிட்டு எங்க என்ன இருக்கு..?? என்ன ஸ்பெஷல்ன்னு எல்லா விவரமும் தெரிஞ்சிட்டு தானே போன..” என்று கேட்க,
‘ஆமா தாயே இதுல உனக்கு என்ன சந்தேகம்’
‘ஏன் அப்படி பண்ணின..??’
‘இது என்னம்மா கேள்வி..?? ஒரு இடத்துக்கு போகும் முன்ன அந்த இடத்தை பத்தி தெரிஞ்சிட்டு போறப்போ எந்த குழப்பமும், வீண் நேர விரையமும், அலைச்சலும் இல்லாம சீக்கிரம் வீடியோ எடுத்து அப்லோட் பண்ண முடியும் தெரியாம போனா சுத்தியே நேரம் போயிடாதா..??’
வெறுமையான பார்வையை வீசிய சுகமதி ‘ஏன்டா யாழி ஒரு பத்து நிமிஷ வீடியோக்கே இவ்ளோ மெனக்கெட்டு தெரிஞ்சிட்டு போறப்போ வாழ்க்கை முழுக்க நீ வாழ போற வீட்டை பத்தியும் அதுல உள்ள மனுஷங்களை பத்தியும் அவங்களோட பழக்க வழக்கம் பத்தியும் தெரிஞ்சிட்டு போனா நீ சொல்ற மாதிரி எந்த குழப்பமும் இல்லாம சந்தோஷமா வாழலாமே’ என்று மகளுக்கு புரிய வைக்க முயற்சிக்க,
‘ம்மா என்னம்மா நீ எப்பபாரு எங்களையே சொல்ற.., ஏன் இதையெல்லாம் போய் உன்னோட சம்பந்தி வீட்ல சொல்லேன் எனக்காக அவங்க எல்லாரும் மாறினா ஆகாதா..?? எப்பவும் பொண்ணுங்க தான் அனுசரிச்சி போகனுமா…??’
‘யாழி’ என்று அதட்டியவர், ‘யாருடி உனக்கு இப்படி எல்லாம் சொல்லி கொடுக்குறா..??’
“பேஸ்புக்ல ஒரு அக்கா டெயிலி ஒரு வீடியோ அப்லோட் பண்ணுவாங்க அவங்க தான் பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் பத்தி சொல்லுவாங்க…, ஆனா அந்த அக்கா சொன்னது எல்லாமே எவ்ளோ நிஜம்ன்னு அப்போ புரியலை இப்போ புரியுதும்மா..”,
‘அப்படி என்ன புடலங்காய் புரிஞ்சது..??’
“பொண்ணுக்கு பொண்ணு தான் எதிரின்னு அந்த அக்கா அடிக்கடி சொல்லுவாங்க நான் கூட அது மாமியார்ன்னு நெனச்சேன் ஆனா பொண்ணுக்கு அம்மாவே எதிரின்னு இப்பதான் புரியுது.. தள்ளும்மா இந்நேரத்துக்கு ரெண்டு வீடியோக்கு கன்டென்ட் ரெடி பண்ணி இருப்பேன் தேவை இல்லாம பேசி என் நேரத்தை வேஸ்ட் பண்ணி என்னை குழப்ப பார்க்கிற.., நான் தெளிவாதான் இருக்கேன் நீ போய் வேலையை பாரு” என்று தன் அறைக்குள் செல்லும் மகளை கலங்கிய விழிகளுடன் பார்த்தார் சுகமதி.
***********************************************
‘ம்மா எனக்கு இந்த பட்டு புடவை எல்லாம் வேண்டாம் அதெல்லாம் ஓல்ட் பேஷன் இங்க பாரு’ என்று கைபேசியில் சில புகைப்படங்களை காட்டியவள் நைட் நார்த் இந்தியன் முறைப்படி லேஹெங்கா மேக்அப் ஹேர்டூ இருக்கணும்…’,
‘காலையில லாங் கவுன் அதுவும் ஹால்ப் வைட் கலர்ல வித் ப்ரீ ஹேர் இந்த மாதிரி’ என்று கூற சுகமதியின் பிபி எகிறியது..,
யாழி இருக்க கோபத்துக்கு அறைஞ்சிடுவேன் ஒழுங்கு மரியாதையா வாயை மூட்டிட்டு எங்க கூட வர, முகூர்த்ததுக்கும் ரிசெப்ஷனுக்கும் புடவை எடுக்குற,
‘தாயே உன் தொல்லையில இருந்து தப்பிக்க தான் கல்யாணமே பண்றேன் ஆனா கல்யாணத்துலயும் தொல்லை பண்றியே..?? உனக்கு என்ன தெரியும் லேட்டஸ்ட் ட்ரென்ட் பத்தி..??’
‘ஏன்டி லேடஸ்ட் ட்ரென்ட் தான் வாழ்க்கையா..??’
‘இல்லையா பின்னே..?? என் பிரெண்ட்ஸ் அக்காங்க கல்யாணத்துல எல்லாம் பார்த்திருக்கேன்’ என்று அவள் இன்றைய நவநாகரீக திருமணங்கள் பற்றி கூற..,
‘நைட் ரிசெப்ஷன்க்கு லேஹெங்கா கூட பரவால்ல ஆனா கல்யாணத்துக்கு கவுன் போடுவேன்னு சொல்ற உன்னை என்ன பண்ணலாம்’ என்று பல்லை கடித்தவர் பின் மகளிடம்,
‘இல்லடி ஸ்விம்மிங் டிரஸ்..!! ஏன் அதை போட்டுட்டு கூட தாலி கட்டிக்கலாமே இன்னும் புதுமையா இருக்கும்.. நீ சொல்ற மாதிரி ட்ரென்டிங்கா இருக்கும்’ என்று அவர் நொடிக்க,
‘தாயே..’ என்று கோபத்தோடு பார்த்தாள் யாழி.
‘வேற என்ன சொல்ல சொல்ற.., இங்க பாரு யாழி இந்த வீட்ல உனக்கு எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் இல்ல உனக்கு பிடிச்ச ட்ரெஸ் போட நாங்க யாரும் மறுக்கலை அதுக்காக உன்னோட விருப்பத்தை மட்டும் பார்க்கிறியே தவிர சம்பிரதாயங்களையும், சடங்குகளையும், கலாச்சாரத்தையும் திருமணத்தின் தாத்பரியத்தையும் அதில் இருக்கும் அழகியலையும், மதிக்காம போறது கொஞ்சமும் சரி இல்லை’
‘ம்மா காலம் மாறுது அதுக்கு ஏத்த மாதிரி நம்மளை அப்டேட் பண்ணிக்கணும் யாரோ நாலு பேருக்காக எல்லாம் வாழ முடியாது’
‘வேண்டாம் யாழி ஏதாவது சொல்லிட போறேன்.., ஏன்டி நீ சொல்ற கவுன் வெளிநாட்டுக்காரன் கலாச்சாரம் அவங்க யாரும் அவங்களோட கல்யாணத்துல புதுமை பண்றேன்னு காலம்காலமா அவங்க முறைகளை மாத்தல கல்யாணத்துக்கு உண்டான மரியாதையை கொடுக்குறாங்க…’
‘ஆனா நீங்க புடவைன்னா அசிங்கம்.., பெண்ணை புடவைக்குள்ள அடக்க பார்க்கிறோம்ன்னு பேசி உங்களை நீங்களே தாழ்த்திக்குறீங்க.. ஒரு நாள் நம்ம சம்பிரதாயப்படி புடவை கட்டுறதால நீங்க அடிமை ஆகிடுவீங்களா..?? எந்த முட்டாள் உங்களுக்கு இப்படி சொல்லி கொடுக்குறது யார் எதை சொன்னாலும் அப்படியே எடுத்துப்பீங்களா..??’
“நான் தெரியாம தான் கேட்கிறேன் ஒரு ஸ்கூல்க்கு போகணும்ன்னா அங்க உள்ள விதிகளுக்கு உட்பட்டு யூனிபார்ம் போட்டுட்டு போக தெரியுது உங்களுக்கு, காலேஜ்ல இது தான் ட்ரெஸ் கோட்ன்னு சொன்னா அதுக்கு கட்டுப்பட்டு இருக்க தெரியுது.., ஆனா கல்யாணம்ன்னு வரும்போது ஒவ்வொரு கலாச்சாரத்துக்குமான தனித்துவத்துக்கும் அதன் சம்பிரதாயத்துக்கும் உங்களால கட்டுப்பட முடியலை.., அப்படி தானே..??” என்று கண்களில் வலியோடு மகளை பார்த்தவர் தொடர்ந்து,
‘நீ சொல்றியே காலம் மாறிடுச்சின்னு உன் வழிக்கே வரேன்’ என்றவர் அவள் கைபேசியை வாங்கி சில புகைப்படங்களை காண்பித்து,
‘இவங்க எல்லாருமே நடிகைங்க தமிழ்ன்னு இல்லை மலையாளம், தெலுங்கு ஹிந்தின்னு எல்லா மொழிலயும் நடிக்கிறவங்க ஆனா அவங்க யாருமே கல்யாணம்ன்னு வரப்போ அவங்க கலாச்சாரத்தை விட்டு கொடுக்கலை அவங்க முறைப்படி திருமண நாளுக்கான மரியாதையை கொடுக்குறாங்க ஆனா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..??’ என்று கேள்வியாக நிறுத்த தடுமாறி போனாள் யாழி.
ஒரு வேகத்தில் பார்வர்ட் மெசேஜையும், தோழிகள் அனுப்பிய ரெபரென்ஸ் போட்டோக்களையும், சில வீடியோக்களையும் பார்த்து பேசிவிட்ட யாழிக்கு அவரது நியாயமான கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
பின்னே இன்ஸ்ட்டாவில் அவள் தொடரும் பல நடிகைகளின் திருமண புகைப்படத்தை அவளும் பார்த்திருக்கிறாளே என்னதான் மாடர்ன் உடைகளில் அவர்கள் கலக்கினாலும் திருமணம் என்று வரும்போது எப்போதும் அவர்களின் கலாச்சாரத்தை விட்டு கொடுத்ததே இல்லை..
அதனால் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் பார்க்க,
“இதோ பார் என்னை கேட்டா உங்களை மாதிரி புதுமை, நவநாகரீகம், ட்ரென்ட், வைரல்ன்னு பேசுற அரைவேக்காடுங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறது நல்லதுன்னு சொல்லுவேன் ஆனா என்ன பண்ண உன்னை பெத்துட்டேனே உன்னோட வாழ்க்கை பத்தின அக்கறை உனக்கு இல்லாம இருக்கலாம் ஆனா எனக்கு இருக்கு” என்றவரின் மனதில் அத்தனை ரணம்.
“அதனால இத்தோட எல்லாமே நிறுத்திக்கணும் கல்யாணத்துல உன் விருப்பம் மட்டும் இல்ல எங்களோட கௌரவமும் அடங்கி இருக்கு உன்னை பெத்து இத்தனை வருஷம் எந்த குறையும் இல்லாம வளர்த்த எங்களுக்கு எதாவது நல்லது செய்யணும்ன்னு நெனச்சா உன்னோட கன்றாவி கொள்கைகளை தூக்கிட்டு வந்து எங்களை நோகடிக்காம இதை மட்டும் செய் போதும்” என்று கலங்கிய கண்களை துடைத்தவர்..,
‘ஆனா ட்ரென்ட்டிங்ன்னு சொல்லி மணமேடையில கூத்தடிக்கிறது, டான்ஸ் ஆடிட்டு வருவேன்னு சொல்லி ஏதாவது ஆரம்பிச்ச நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்… என்ன ஆனாலும் சரின்னு நானே கல்யாணத்தை நிறுத்துவேன் மாப்பிள்ளை வாழ்க்கையை தெரிஞ்சே நாசம் பண்ண மாட்டேன்’ என்று கடுமையாக எச்சரித்து விட்டே சென்றார்.
சுகமதி சென்ற திசையை பார்த்தவாறு அமர்ந்திருந்த யாழிக்கோ இத்தனை நேரம் சமூக வலைதள கருத்துக்களுக்கும் தாயின் பேச்சிற்க்கும் இடையில் குழம்பி தவித்தாலும் அவரது இறுதி வார்த்தைகள் நெஞ்சில் குளிர் பரவ செய்தது என்றால் மிகையல்ல..!!
***************************************
ஆனால் அவள் பேச்சுக்கள் அத்தனையும் அதிர்துடியனை காணும் வரையில் தான்..!!
புடவை எடுக்க வேண்டி இருகுடும்பத்தாரும் கடையில் குழுமி இருக்க மரகதமும் சுகமதியும் யாழியின் நிறத்திற்கு ஏற்ப புடவைகளை பார்த்து கொண்டிருக்க அதிர்துடியன் வராததால் யாழியோ எதிலும் ஒன்ற முடியாமல் தவித்து கிடந்தாள்.
அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் அடுத்த அரை மணி நேரத்தில் காற்றில் அலைபாய்ந்த கேசத்தை கோதியவாறே வேகமாக படியேறியவன் முழுக்கை சட்டையை மடித்து விட்டுக்கொண்டு எதிரே வந்த பணியாளுக்கு பதிலளித்து அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அவன் கம்பீரத்தில், ஆளுமையில், பேரெழிலிலும் தன்னை மறந்து சுற்றம் மறந்ததில் அவளிமைகளும் ஒன்றோடொன்று ஊடல் கொண்டு தழுவ மறந்திருந்தது.
வேகமாக வந்து அங்கிருந்தவர்களிடம், ‘லேட் பண்ணிட்டேனா..?? எல்லாரும் சாப்ட்டாச்சா..??’ என்று கேட்டவன் புன்னகையுடன் அவளருகே வர யாழிக்கோ படபடத்து போனது சட்டென இமைகளை இறுக மூடி கையில் இருந்த புடவையை பார்ப்பது போல குனிந்து கொண்டாள்.
அதியோ அவளை நெருங்கி அவள் அணிந்திருந்த புடவையை பார்வையால் வருடியவாறே, ‘வாட் எ சர்ப்ரைஸ்..!! நேத்தே மிஸ் பண்ணிட்டேன், யு ஆர் ரியலி ஸ்டன்னிங் இன் சேரி’ (you are really stunning in saree) என்றிட ஓரவிழியால் அவனை பார்த்தவளின் முகமெங்கும் வெட்க பூக்களின் சிதறல்..!!
நேற்று முதல் அவன் புறக்கணிப்பில் கொண்டிருந்த சஞ்சலங்கள் யாவும் அவன் வார்த்தைகளில் சிதைந்திட பெண்ணவள் மனமெங்கும் தேன்மழை சாரல்..!!
மெல்ல தலை உயர்த்தி அவனை பார்த்தவளின் மருளும் விழிகள் அவனை அடியோடு வீழ்த்த ‘நிஜமாவே அசத்துறடி ..??’ என்றான் இன்னுமே குனிந்து அவளை ஸ்பரிசித்தவாறு..
ஏற்கனவே அவன் அருகாமையில் சூரியன் கண்ட பனி போல மெல்ல கரைந்து கொண்டிருந்தவள் இப்போது அவன் வார்த்தைகளில் மொத்தமாக உருகிய நிலை தான்..,
அதியோ இனியும் அவளருகே இருப்பது ஆபத்து என்பது புரிய உடனே அவளிடம் இருந்து விலகி புடவைகளை பார்வையிட தொடங்கினான்.
சில நிமிடங்களுக்கு பின் ஒரு பட்டு சேலையை தெரிவு செய்து அவளிடம்,
‘பிடிச்சிருக்கா..??’ என்றிட,
அமைதியாக அவனருகே நின்றிருந்தவள் ‘ஹ்ம்ம்’ என்று தலையை அனைத்து புறமும் உருட்டினாள்.
பின்னே அவன் அருகாமையில் அவள் பெண்ணிய சிந்தனைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள், வேதாதங்கள் எல்லாம் புறமுதுகிட்டு ஓடிட மனமோ அவனை மட்டுமே பிரதானபடுத்தி அவன் விருப்பத்தை மட்டுமே முன்னிருத்துகிறதே அவளும் என்ன செய்ய..??
புடவையை மரகதத்திடம் கொடுத்தவன் அங்கிருந்து நகர முயன்ற யாழியிடம் ‘நீ எனக்கு ட்ரெஸ் எடுக்க மாட்டியா..?’ என்றான்.
‘நானா..?? அ..து.. நான் எப்படி..??’
‘எப்படின்னா..?? இதோ.. இப்போ.. இப்படி.. நான் எடுத்த மாதிரி’
‘இல்ல நீங்க போட போற ட்ரெஸ் நான் எப்படி சூஸ் பண்ண..???’
‘ஏன் பண்ணாம..?? நீ தான் பண்ணனும்’ என்றான் அழுத்தமாக
‘ஏன்..??’
‘அப்போதானே உனக்கு பிடிச்ச ட்ரெஸ்ல என்னை இன்னும் அதிகமா ரசிக்க முடியும்’ என்று அவன் கண்சிமிட்ட,
அதை எதிர்பாராது ‘அச்சச்சோ… இல்.. இல்லா நான்’ என்று அவள் பதற,
“ஒஹ் கம் ஆன் யாழி எப்படி நீ ட்ரெஸ் பண்றது நான் பார்த்து ரசிக்கவோ அப்படி தானே இதுவும்” என்றவன்,
“இப்போ நிச்சய புடவையை நீ கட்டிட்டு வந்தது நான் பார்க்கனும்ன்னு தானே..??’ என்று ரகசிய குரலில் கேட்க,
‘ஆம்’ என்று பட்டவர்த்தனமாக ஒத்துக்கொள்ளும் தைரியமில்லாமல் தயக்கத்தோடு எச்சில் கூட்டி அவனை பார்த்தாள்.
அதிரனோ, ‘ஏன் எனக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ண மாட்டியா..??’ என்று கேட்க,
‘சரி’ என்று அன்னிச்சியாக அவள் தலை அசைந்தது.
இதுவரை ட்ரெண்டிற்கு ஏற்ப, அல்லது தோழிகள், சோஷியல் மீடியாவில் பதிவிட வேண்டி அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆடை அணிந்து தான் அவளுக்கு பழக்கம், அது அவளுக்கு பிடிக்குமா..?? இல்லையா..?? என்று கூட ஒருமுறையும் யோசித்தது இல்லை.
ஆனால் இப்போது ‘ஏன்..??’ என்று புரியா விட்டாலும் அவனுக்கு பிடித்தது போல உடை உடுத்தினால் அவளை ரசிப்பான் என்பது வரை புரிந்திட உடனே சரி என்று தலை அசைத்துவிட்டாள்.
நேற்று சுகமதி முட்டி மோதி பல மணி நேரம் எடுத்து கூறியும் அசைந்து கொடுக்க மறுத்தவளை இரண்டே நிமிடங்களில் அசைத்திருந்தான் அவளவன்.