முழுதாக அதிர்துடியனின் கட்டுப்பாட்டில் இருந்த யாழி கண்களை இறுக மூடி இருந்தாலும் அவளோடு ஒட்டி உறவாடிய புதிதான அவன் ஸ்பரிசம் அவளை இம்சிக்க ஒருவித இனிய அவஸ்த்தையில் தத்தளித்து கொண்டிருந்தவளை நித்திராதேவியும் தழுவ தயாராக இல்லை.
‘என்ன இது..?? அன்னையிடம் இருந்து தப்பிக்கும் வேகமும் தன் சேனலை வளர்க்கும் ஆர்வத்தோடும் திருமணம் வரை வந்தவள் இப்படி எதுவும் எதிர்பார்க்கவில்லை.., ஆனால் இப்போது அவனை விட்டு விலகவும் தோன்றவில்லை அவனணைப்பில் இயல்பாக ஒன்றவும் முடியவில்லை திரிசங்கு சொர்க்க நிலையாகி போனது பெண்ணவள் பாடு..!!
ஒரு மணி நேரத்திற்கு பின் தைரியம் வரபெற்று அவன் மார்பு சூட்டின் கதகதப்பில் புதைந்திருந்த முகத்தை நிமிர்த்தி மெல்ல விழி உயர்த்தி பார்க்க அவனோ சீரான மூச்சுக்களுடன் தன் கரம் சேர்ந்திருப்பவளை அணைத்து கொண்டு நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தான்.
விழி மூடாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தவள் நள்ளிரவிற்கு பிறகு அவளையும் அறியாமல் உறங்கி போனாள்.
யாழியை காலை நான்கு மணிக்கெல்லாம் எழுப்பிய அதி அவள் கையில் புத்தகத்தை கொடுத்து வெளியில் செல்ல அவனுக்காக சில நிமிடங்கள் அதை வெறித்து கொண்டு இருந்தவள் பின் சாமியாடியவாறே புத்தகத்தில் தலை வைத்து விட்ட தூக்கத்தை தொடர்ந்திருந்தாள்.
திரும்ப அறைக்குள் வந்த அதி மடியில் தலை சாய்த்து உறங்கி கொண்டிருப்பவளை கண்டு புத்தகத்தை எடுத்து வைத்து அவளை கைகளில் அள்ளிக்கொண்டவன் குளியலறைக்குள் சென்று நிறுத்தினான்.
‘யாழி ஓபன் யுவர் ஐஸ்’ என்று அவள் கன்னம் தட்ட,
அவன் மீது சாய்ந்திருந்த யாழியோ பாரமாகி போன இமைகளை திறந்து சொக்கும் விழிகளால் அவனை பார்க்க,
‘நான் கிளம்ப இன்னும் ட்வென்டி மினிட்ஸ் தான் இருக்கு சீக்கிரம் குளிச்சிட்டு வா’ என்றான்.
‘ஹான்’ என்றவளுக்கு அவன் வார்த்தைகள் எங்கோ தூர தேசத்தில் இருந்து கேட்பது போலிருக்க,
‘எர்லி மார்னிங் படிக்கிறப்போ நம்ம மைண்ட், மனசு எல்லாம் அவ்ளோ ரிலாக்சா ப்ரெஷா இருக்கும் அப்போ படிக்கிறது மனசுல ஆழமா பதியும் சீக்கிரம் குளிச்சிட்டு வா’,
படிப்பு என்ற போதே யாழிக்கு தூக்கம் பறந்து போக மருளும் விழிகளால் அவனை பார்த்தவள் ‘டா.. டைம் என்ன..??’ என்று கேட்க,
‘பைவ் ஆகுது’
‘என்னது நள்ளிரவு ஐந்து மணியா..??’ என்று திகைத்த யாழி இந்த நேரத்தில் அவள் கனவில் கூட விழித்ததில்லையே எப்போதும் உச்சிவேளை சூரியன் வந்து முத்தமிட்டு அவளை எழுப்புவது தானே வழக்கம் ஆனால் இப்படி நள்ளிரவில் அவளை விழிக்க வைத்து, குளிக்க அழைத்து வந்து, படிக்க சொல்லி.. என்று என்னவெல்லாமோ நிகழ்வதை காணவும் இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசனை தான் ஆனால் அதை தடை செய்யும் விதமாக,
ஷவரை திறந்த துடியன், ‘நீயே குளிச்சிப்பியா இல்ல நான் குளிச்சி விடணுமா..??’ என்றிட,
‘ஹான்’ என்று தூக்கி வாரி போட அதியை பார்த்தவளின் விழிகளில் இருந்த மிச்ச சொச்ச தூக்கமும் அகல அதனூடே தப்பிக்கும் அவள் சிந்தனைகளும் சிதறி போனது.
அழுத்தமாக நின்று கொண்டிருந்தவனிடம், ‘நா.. நா.. குளிச்சிப்பேன்’ என்றவள் அவன் வெளியே செல்லவும் கதவை சாற்றிவிட்டு அடுத்த பத்து நிமிடத்தில் குளித்து உடை மாற்றி வெளியில் வந்தாள்.
கையில் இருவருக்குமான காபியோடு யாழியை எதிர்கொண்டவன் அவளிடம் கொடுத்து,
‘உனக்கான டைம் டேபிள் போட்டு வச்சிட்டேன் இன்னைக்கு இந்த போர்ஷன் படிக்கணும்’ என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் குறிப்பிட்ட தலைப்புகளை கொடுத்தவன்,
‘இன்னைக்கு நைட் இதுல இருந்து கேள்வி கேட்பேன் ரெடியா இரு இப்போ நான் வெளியே போயிட்டு வரேன்’ என்று கிளம்பி சென்றான்.
‘என்ன இது நாம் ஒன்று நினைத்தால் அது வேறு மாதிரி முடிகிறதே’ என்ற கலக்கத்தோடு காபியை குடித்து விட்டு அமர்ந்தவள் புத்தகத்தை புரட்ட புரட்ட மீண்டும் உறக்கம் அவளை தழுவ பார்த்தது.
எங்கே உறங்கினால் மீண்டும் தூக்கி சென்று குளிக்க வைப்பேன் என்று கூறுவானோ என்ற பயத்தில் புத்தகத்தோடு கீழிறங்கி வந்தாள்.
சுந்தரலிங்கம் ஹாலில் பேப்பர் வாசித்து கொண்டிருக்க அவருக்கு காபி கொண்டு வந்த மரகதம் யாழியை பார்த்ததும் ‘வாம்மா’ என்று அழைத்து பூஜையறைக்கு அழைத்து செல்ல அங்கு ஏற்கனவே சாருவும் ஆராதனாவும் ஸ்லோகம் படித்து கொண்டு இருந்தனர்.
யாழி விசித்திரமாக அவர்களை பார்த்து கொண்டு நிற்க ‘சாமி கும்பிட்டுட்டு வாம்மா’ என்றார்.
அவர் சொன்னது போல செய்தவளுக்கு சுகமதி கூறிய புத்திமதி நினைவில் எழ, ‘நான் என்ன செய்யணும் அத்தை’ என்றாள்.
அவரோ “எதுவும் வேண்டாம்மா, நீயும் கலெக்டர்க்கு படிச்சிட்டு இருக்கியாமே கூடிய சீக்கிரம் எக்ஸாம் பாஸ் பண்ணிடுவியாம் அதுவரை உன்னை டிஸ்டர்ப் பண்ண கூடாது எந்த வேலையும் கொடுக்க கூடாதுன்னு அதி சொல்லி இருக்கான்’ என்றிட
‘இல்லை’ என்று தலையசைக்க சென்றவள் பின் ‘அப்படியா..??’ என்று விழிகள் விரிய பார்க்க அவள் மனமோ வீட்டு வேலைகளில் இருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சியை குதுகலமாக கொண்டாடி கொண்டிருந்தது.
“ஆமாம்மா உங்க வீட்ல எப்படி எந்த தொந்தரவும் இல்லாம படிப்பியோ அதே போல இங்கயும் படிக்கலாம்.. கல்யாணம் ஆகிடுச்சி கட்டாயம் பொறுப்பு எடுத்துக்கணும்ன்னு அவசியம் இல்லை நாளைக்கு ஒரு மாவட்டத்தையே நிர்வகிக்க போற உனக்கு வீட்டை நிர்வகிக்கிறதா கஷ்டமா இருக்க போகுது..?? அதனால் அதெல்லாம் மெதுவா பார்த்துக்கலாம் இப்போதைக்கு படிப்புல மட்டும் கவனம் இருந்தா போதும்.. எங்களுக்கு நீயும் ஆராதனாவும் ஒண்ணு தான்” என்றிட சுந்தரலிங்கமும் அதை ஆதரித்தார்.
எந்த விதத்திலும் அவளுக்கு தொந்தரவு இல்லை எனும் சந்தோஷத்துடன் தன் அறைக்கு திரும்பியவளின் பார்வையில் கைபேசி பட உடனே யாழியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி துணி கொண்டு துடைத்தார் போல தொலைந்து போனது.
*****************************************
‘ப்ச் புது போன் இப்படி நானே உடைச்சிட்டேனே’ என்று அதை பார்த்தவளின் கண்களில் அத்தனை வலி.. பின்னே அவளது ஒவ்வொரு நாளும் தொடங்குவதும் முடிவதும் கைபேசியில் தானே எழுந்ததும் சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பதிவேற்ற செய்வதில் தொடங்கி அப்படியே படுத்தவாக்கில் மேலும் ஒரு மணி நேரம் தோழிகளுடன் அரட்டை, கன்டென்ட், கமெண்ட்ஸ் என்று செல்லுமே.., ஆனால் இப்போது முதலுக்கே மோசம் என்றான பின் அவளும் என்ன செய்ய..?? திரும்ப அவர் கிட்டே கேட்போமா, கேட்டா என்ன சொல்வார்..??’ என்ற யோசனையுடன் பால்கனியில் நடந்து கொண்டிருந்தவளின் கவனத்தை ப்ரித்வியின் குழந்தை ஈர்க்க உடனே கீழே இறங்கி வெளிதோட்டத்தில் இருந்த சாருவிடம் சென்றாள்.
‘குட் மார்னிங் யாழி’ என்று புன்னகை முகமாக அவள் வரவேற்க,
‘குட் மார்னிங்க்கா’ என்றாள் யாழியும் புன்னகையோடு.
சாரு யாழியை விட நான்கு வயது மூத்தவள் நிச்சயத்தின் போதே அவளை அறிமுகபடுத்திய மரகதம் கூறியதில் தெரிந்து கொண்டது. இப்போது இருவருக்கும் பெரிதாக நெருக்கம் இல்லையென்றாலும் சிநேகப்புன்னகையுடன் குழந்தையை வாங்கிக்கொண்டாள் யாழி.
இயல்பிலேயே குழந்தைகள் என்றால் யாழிக்கு கொள்ளை பிரியம் என்பதால் குழந்தையுடன் எளிதாக ஒட்டி கொண்டவள் அதனோடு விளையாட தொடங்க சாரு அவனுக்கு விளையாட்டினூடே கஞ்சியை புகட்டி இருந்தாள்.
அப்போது தயாராகி வெளியில் வந்த ப்ரித்வி யாழியிடம் ‘குட் மார்னிங் அண்ணி’ என்றிட அவளோ விஷ்ணுவை காப்பாற்றியவன் என்பதால் ஏற்பட்ட அன்பினாலும் மரியாதையாலும் புன்னகையுடன் ‘குட் மார்னிங் மாமா’ என்றவள் குழந்தையை அவனிடம் கொடுத்தாள்.
குழந்தையை வாங்கி கொஞ்சி கொண்டிருந்த ப்ரித்வியின் பார்வை அவ்வப்போது மனைவியை தொட்டு மீள அவளோ தனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அங்கிருந்த ரோஜா செடிகளை பார்வையிட்டு கொண்டிருந்தாள்.
கடைசியில் வழக்கம் போல சிறு ஏமாற்றத்துடன் குழந்தையிடம், ‘அப்பாக்கு பை சொல்லு ராஜா’ எனவும்,
குழந்தையும் அழகாக சிரித்து கை அசைத்து தந்தைக்கு விடை கொடுத்தது..,
ப்ரித்வி காரில் ஏறி அமரவும் இப்போது பூக்கள் மீதிருந்த சாருவின் பார்வை மெல்ல கணவன் புறம் திரும்பி அவன் செல்லும் வழியை பார்த்து நின்றவள் பின் யாழியிடம் இருந்த குழந்தையை வாங்கி கொள்ள யாழியோ இருவரையும் விசித்திரமாக பார்த்து நின்றாள்.
இவர்கள் இருவரும் கணவன் மனைவி தானே ஏன் இப்படி இருதுருவங்களாக இருக்கிறார்கள்.
ஒரு கைபேசி அழைப்பிற்கு கூட தன்னிடம் அனுமதி கோரிய பின்பே ஏற்கும் அதி வெளியில் செல்லும் போதும் அவளிடம் சொல்லி விட்டு செல்ல இங்கு இவர்கள் ஏன் இப்படி..?? என்ற கேள்வி எழாமல் இல்லை.
சாரு செல்லவும் மீண்டும் சில நிமிடங்களுக்கு புத்தகத்தை எடுத்து பிரித்தவளுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்.
பின்னே அவள் வைத்து உறங்கும் தலையணை அளவிலான அத்தனை பெரிய புத்தகத்தை பார்க்கும் போதே வயிறு கலங்கி போக அவளும் எப்படி அதை படிக்க..??
கடவுளே எப்படியாவது இதுல இருந்து என்னை காப்பாத்து என்று வேண்டிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தவளுக்கு திடீரென யோசனை தோன்றவும், ‘அத்தை நான் டிபன் செய்யட்டுமா..??’ என்று கேட்டு மரகதம் முன் நின்றாள்.
‘நீயா..?? உனக்கு சமைக்க தெரியுமா..??’
‘தெரியும் அத்தை’
‘நிஜமாவா’
‘ஆமா ஏன் இப்படி கேட்குறீங்க..??’
‘இல்ல ஒண்ணுமில்ல.. ஆனா எப்படி..??’
‘எப்படி என்றால்..??’ சிறுவயதில் இருந்தே யாழிக்கு சமையலில் ஆர்வம் அதோடு யூடியூபில் எல்லோரும் சமைத்து ஷார்ட்ஸ் போடுவதை பார்த்தவளுக்கு தானும் செய்யலாம் என்ற ஆர்வம் தோன்ற உருப்படியாக அவள் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் உண்டென்றால் அது சமைப்பது தான்… ஆனால் அக்காவும் தம்பியும் சமைக்கிறோம் வீடியோ எடுக்கிறோம் என்று மகேஷ் வீட்டில் இல்லாத நாட்களில் வீட்டையே அல்லோலகல்லோல படுத்துவதால் பெரும்பாலும் சுகமதி அவர்களை சமையலறைக்குள் அனுமதிப்பதில்லை.
“எனக்கு சமைக்க பிடிக்கும் அத்தை ஆனா அம்மா விடமாட்டாங்க.., இப்போ செய்யட்டா..?” என்று ஆசையும் ஆவலுமாக கேட்க அவருக்கு சங்கடமான நிலை, சில நொடி யோசனைக்கு பின்,
“நீ செய்யலாம் ஆனா இப்போ வேண்டாம் புது பொண்ணு அடுத்த வாரத்துல இருந்து செய்” என்று கூற அடுத்த வாரமா இப்போ எப்படி தப்பிப்பது என்ற யோசனையுடன் வந்த யாழிக்கு அங்கிருந்த டிவி கண்ணில பட பல நாட்களுக்கு பின் ஷின்ஷானும் டோரிமானும் பார்க்கலாமே என்று நினைத்து ரிமோட்டை தேட அதற்குள் சுந்தரலிங்கம் நியூஸ் வைத்தவர் யாழியை அருகே அமர வைத்து,
‘தினமும் கரென்ட் நியூஸ் அப்டேட்டடா இருக்கணும் யாழி நோட்ஸ் எடுத்துக்கோ’ என்று கூற, அவளோ வேறு வழி இல்லாமல் நோட்டை திறந்து கருமமே கண்ணாக செய்தியை பார்ப்பதும் பின் நோட்டில் எதையோ கிறுக்குவதாகவும் இருந்தாள்.
***********************
அவர்களை மறுவீட்டிற்க்கு அழைத்து செல்ல மகேஷும் சுகமதியும் மதியம் வந்துவிட, அதி சொன்னது போல அங்கு சென்று படிப்பதற்கு புத்தகத்தை எடுத்து வைத்தவள் கண்ணில் உடைந்த கைபேசி பட விஷ்ணுவிடம் கொடுத்து எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என்று அதையும் எடுத்து வைத்து கொண்டு கீழிறங்கி வந்தாள்.
அவர்கள் வீட்டிற்கு சென்றவர்களை ஆலம் சுற்று வரவேற்ற சுகமதி மகள் மருமகனுக்கு விருந்து பரிமாற உண்டு முடித்த அதி மகேஷ்வரனுடன் கிளம்பி செல்ல அதற்குள் அருகாமையில் இருக்கும் அவள் தோழிகள் எல்லாம் படை எடுத்து அவளை சூழ்ந்து கொண்டனர்.
‘காதல் திருமணம் செய்வது தான் ட்ரென்ட்’ என்ற போது நீ மட்டும் ஏன் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை ஏற்று கொண்டாய் என்பதில் தொடங்கி பேச்சுக்கள் நீண்டு கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் காதல் இல்லாத யாழியின் வாழ்க்கை குறித்த அலசல் தோழிகளிடம்..
யாழியோ அவள் கணவன் தனக்காக எல்லாம் செய்வதாக ஒப்புக்கொண்டதை கூற அதை நம்ப தான் அங்கு யாரும் தயாராக இல்லை.
“என்ன ஒரு போட்டோ கூட போடல, ஸ்டேடஸ் காணோம், செல்பி காணோம், மொத்தத்துல ட்ரெண்டிங்ல இருப்பன்னு நினைச்ச யாழியையே காணோம்” என்று ஒருத்தி நக்கலாக கேட்க,
மற்றவளோ, “நான் நானா தான் இருப்பேன்னு சொன்ன யாழியை யாராவது பாத்தீங்களா..?? என்ன அதுக்குள்ள ஆன்ட்டி ஆகிட்டியா..??” என்று கேலியாக கேட்க உடனே அங்கு சிரிப்பலை தோன்றியது.
‘நான் தான் சொன்னேனேடி கல்யாணம் ஆனா எல்லாமே முடிஞ்சது, அதுவும் லவ் இல்லாம லைப் எப்படி இருக்கும்..??’ என்று மற்றொருத்தி கூற,
‘நம்ம வாழ்க்கையே இன்னொருத்தங்க கையில நாம என்ன பண்ணனும்ன்னு இனி அவங்க தான் முடிவு பண்ணுவாங்க..’
‘மிங்கிள் ஆகி கஷ்டபடறதுக்கு சிங்கிளா இருக்கிறது தான் பெட்டர், கெத்தும் கூட.., யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை’ என்று கூற நேற்று முதல் அதி சொல்வதை மட்டுமே தான் செய்து கொண்டிருப்பதான பிம்பம் யாழிக்கும் தோன்றாமல் இல்லை.
‘நமக்கு சுதந்திரமே இருக்காது பாரு நிச்சயத்துல இருந்தே இவளோட ஒரு போட்டோ கூட சோஷியல் மீடியல இல்ல… அட்லீஸ்ட் பிரெண்ட்ஸ் நமக்கு அனுப்புவான்னு பார்த்தா இவ அவ ஹஸ்பண்டை நாம கொத்திட்டு போயிடுவோம்ன்னு பொத்தி பொத்தி வச்சிருக்கா…??’
‘இல்ல… அப்படி எல்லாம் இல்ல’ என்று யாழி தன் போன் உடைந்து போனதை கூறியும் யாரும் அதை ஏற்க தயாராக இல்லை..,
‘ஏன் அதியின் கைபேசியில் இருந்து லாக் இன் செய்து வாட்ஸ் அப், fb, இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்திருக்கலாமே அதை கூட செய்யாமல் போனதிலே அவள் உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டதாக தானே அர்த்தம்’ என்று மொத்த அரைவேக்காடுகளும் சேர்ந்து மந்திரம் ஓத யாழிக்கோ மனம் சுணங்கி போனது.
‘ஏன் யாழி உன் ஹஸ்பன்ட் ஆகிட்டதாலேயே அவரை சைட் அடிக்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன..??’ என்று ஒருத்தி கேட்கவும்..,
“என்னது அதியை மற்றவர் பார்த்து ரசிப்பதா…?? இதென்ன புதிதாக…?? படிக்கும் காலத்தில் அவர்கள் வயது ஆண்களை சைட் அடிப்பதை கேள்விபட்டிருக்கிறாள் ஆனால் இப்போது அவள் கணவனை மற்றவர் பார்ப்பதா இதென்ன அநியாயம்..??” என்று அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே,
“பாரு யாழி கூட பழைய பஞ்சாங்கமா இருக்கா, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்…??” என்று ஒருத்தி கூற,
‘ஏன்டி கல்யாணம் ஆகிட்டா உன் புருஷனை சைட் அடிக்க கூடாதுன்னு ஏதாவது இருக்கா..??’
‘அழகு எங்க இருந்தாலும் ரசிக்கணும் யாழி அது உன் புருஷனா இருந்தா கூடாதா என்ன..?? அதெல்லாம் முடியாது உன் ஆளு எவ்ளோ ஹாண்ட்சம் தெரியுமா..?? மண்டபத்துல அவர் நுழைந்ததுல இருந்தே என் பார்வை வேற எங்கயும் போகல நேத்து நைட் எனக்கு சுத்தமா தூக்கமே இல்லை’ என்று ஒருத்தி கூற யாழிக்கு அப்படியே அவளை கன்னம் கன்னமாக அறையும் அளவு கோபம் ஆனால் ப்ரென்ட்டாக இருப்பதால் அவர்கள் வட்டத்தில் அவளும் ஒருத்தி என்பதால் பல்லை கடித்து கொண்டு அவர்களை பார்த்தவள் இதற்கு மேலும் முடியாது என்பது போல,
‘போதும் நிறுத்துங்கடி இப்போ என்ன பண்ணனும்ன்னு சொல்ல வரீங்க..??’
‘நீயும் உன் ஹஸ்பண்டும் ஒரு செல்பி அதுவும் அவருக்கு உன் மேல எக்கச்செக்க லவ்ன்னு சொன்னியே அது எங்களுக்கு தெரியனும் அப்படி ஒரு செல்பி எடுத்து எங்களுக்கு சேர் பண்ணு இன்ஸ்டால போஸ்ட் பண்ணு அப்போ ஒத்துக்குறோம் உங்களோடது தெய்வீக காதல்ன்னு..?? நீ பழைய பஞ்சாங்கம் இல்லன்னு…!! உனக்கு ப்ரீடம் இருக்குன்னு…!!’ என்று அவளை ஏற்றி விட,
யாழிக்கோ எப்படியாவது தானும் புதுமை விரும்பி, தனக்கும் சுதந்திரம் உண்டு, இருவரின் காதலும் பெரிது என்று தோழிகளுக்கு உணர்த்தி விடும் வேகம் பிறந்தது.
அதே வேகத்தோடு மாலை வீட்டிற்கு வந்த அதி முன் சென்று நின்றவள்,
‘செல்பி எடுக்கணும்’
சுகமதி அப்போது தான் அதிக்கு காபியும் பலகாரமும் கொண்டு வந்து வைத்தார்.
யாழியோ ‘வாங்க செல்பி எடுக்கணும் ‘ என்று அழைத்தாள்.
*********************************
‘இப்பவா..??’
‘ஆமா’
‘சாப்ட்டுட்டு எடுக்கலாமே’
‘இல்ல இப்பவே’ என்றாள் தவிப்புடன்,
‘ஆர் யூ சூர்’
“நீங்க என்னை லவ் பண்றீங்களா இல்லையா..??” என்று அவனையே திருப்பி கேட்க அதியின் பார்வை யாழி மீது இன்னும் கூர்மையாக படிந்தது. .
சில நொடிகளிலேயே அவள் தவிப்பின் காரணம் புரிந்து கொண்டான்.
ஆம் அலுவலகத்திற்கு சென்றவன் யாழியிடம் பேச வேண்டி சுகமதிக்கு அழைக்க அவரோ அவள் தோழிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்பதை தெரிவித்தவர் கொடுக்கட்டுமா..?? என்று கேட்க.., இல்ல நேர்லயே வந்து பேசிக்கிறேன் என்று அழைப்பை துண்டித்திருந்தான்.
“பியர் க்ரூப் ப்ரெஷர்” (peer group pressure) என்பதை புரிந்து கொண்டவன் , “சரி எடுக்கலாம் ஆனா செல்பி எடுக்கிறப்போ என் கண்ணை பார்க்கணும் சிரிச்ச முகமா இருக்கணும்” என்றிட
‘ஹ்ம்ம்’ என்றவளுக்கு நேற்று போல் அணைக்க தானே செய்வான் தூங்கும் போது அவனணைப்பில் அவனை பார்க்க முடிந்ததே அதே போல இப்போது அவன் விழிக்கும் போதும் நிச்சயம் பார்க்க முடியும்” என்ற உறுதி வரப்பெற ,
‘கண்டிப்பா’
‘நேத்து மாதிரி பாதில வேண்டாம் சொல்ல கூடாது’
‘இல்லை சொல்லமாட்டேன்’ என்று ஜோராக தலை அசைத்தவளுக்கு எப்படியாவது ஒரு செல்பி எடுத்து தோழிகள் மத்தியில் அவள் மதிப்பை காப்பாற்றி கொள்ளும் வேகம் அதை விட fb, ட்விட்டரிலும் போட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாளே இல்லையெனில் அவள் சோஷியல் ஸ்டேடஸ் என்னாவது…?? அதனால் எதையும் யோசிக்காமல் ‘சரி’ என்று தலை அசைத்தாள்.
‘சரி வா’ என்று அவன் அறைக்குள் செல்ல பார்க்க, யாழிக்கோ ஒரு நொடி நேற்றைய காட்சி கண்முன் விரிய,
“இல்ல நா.. நாம தொட்ட.. தோட்டத்துல எடுக்கலாமா..?? நல்லா இருக்கும்” என்று திணறியவளுக்கு எங்கே அவன் வேண்டாம் என்று மறுத்துவிடுவானோ என்ற பயம்.
‘சரி’ என்று அவளை அழைத்து கொண்டு செல்ல யாழியோ எப்படியாவது இந்த ஒரு செல்பிக்கு கண்களை திறந்திருக்க வேண்டும் என்று மனதில் ஆயிரம் வேண்டுதல் வைத்தவாறு அவனை பின்தொடர்ந்தாள்.
அதிக்கு அழைப்பு வர ஏற்று பேசியவன் ‘இன்னும் அரை மணி நேரத்துல வரேன்’ என்று அழைப்பை துண்டித்து அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தான்.
‘ஏன் உட்காந்துட்டீங்..’ என்று யாழி தன் கேள்வியை முடிக்கும் முன் அவள் கை பிடித்திழுத்து தன்னருகே அமர்த்தி இருந்தான் அதிர்துடியன்.
‘செல்பி’ என்று அவனை பார்க்க அதியோ மடியில் இருந்த அவள் கரங்களை பிரித்தவன் உடனே அவள் மடியில் தலை வைத்து நிமிர்ந்து அவளை பார்த்தான்.
இதை எதிர்பாராத யாழி ‘என்…ன…? இப்…’ என்று எழ முற்ப்பட,
‘நீ தானே செல்பி கேட்ட..??’
‘ஆம்’ என்று அவள் தலையசைக்க,
‘என் பொண்டாட்டி கூட எடுக்க போற செல்பி வித்யாசமா, வேற லெவல்ல இருக்கணும் இல்ல, நீ அசையாம உட்கார்’ என்றிட
“செல்பி அதுவும் இப்படியா..??” என்ற கேள்வி எழுந்தாலும் தோழிகளின் கேலி கண் முன் வலம் வர உடனே ‘ஹ்ம்ம்’ என்று தலை அசைத்தாள்.
உடனே அதி அவள் புறமாக திரும்பி படுக்கவும் யாழி முகத்தில் அவளையும் அறியாமல் நாணசிவப்பும் இனம் புரியா தவிப்பும் போட்டி போட்டது..
அவள் சிவப்பில் நழுவ துடித்த மனதை அதட்டி உருட்டி கட்டி போட்டவன், ‘தட்ஸ் குட், டோன்ட் க்ளோஸ் யுவர் ஐஸ்‘ என்றவாறு தன் கரம் கொண்டு அவள் கழுத்தை வளைத்து தன்னை நோக்கி இழுக்க யாழிக்கு பதறி போனது.