சந்தனமும் தாழம் பூ குங்கும நெடியும் மிதமாக வீச வணங்காமுடி சாதாரண வேட்டியும் உள் பனியனுமாக இருக்க. வழமை போல் மெல்லிய பருத்தி சேலை அணிந்து அவரை ஒட்டியவாறு பானுமதி.
ஒருவரது அணைப்பில் ஒருவர்… மூக்குத்தி கொண்டு அவர் கன்னம் தீண்டிய பேரிளம் பெண்ணின் கண்ணில் இருந்து வற்றாத ஜீவநதி சுரக்க முதுமகன் கண்ணிலும் அதன் சாரல்.
இரு ஜீவன்களும் பிரிவை எண்ணியது போலும் தாங்க முடியாத நிலையில் கண்ணீர் விட்டுத் தங்களை நிலை படுத்த போராடி கொண்டிருந்தனர்.
பானுமதி வணங்காமுடியை இறுக்கி கொண்டார், கைகள் நொடிக்கு ஓர் முறை அவரது முகத்தை வருடிய வண்ணமே இருந்தது.
வணங்காமுடியோ.. அவருக்குத் துணை செய்யும் பொருட்டு உச்சந் தலையில் சிறு சிறு முத்தங்கள் வைத்தார் அதுவும் நொடிக்கு ஓர் முறை.
கட்டி தழுவியும், காற்றுக்குத் தடை போட்டு இறுக்கி கொண்டும், முதுகை வருடியும், முகத்தைத் தீண்டியும்.
என்னென்னமோ.. செய்து தங்களது தவிப்பை அடக்க எண்ணி பார்த்தும் முடியாமல் போக ஒரு கட்டத்தில் பெண் வெடித்து அழுக.
அவரைத் தனது நெஞ்சில் பொதித்துக் கொண்டு மௌனமாகக் கண்ணீர் விட்டார் வணங்காமுடி.
ஒவ்வொரு மனிதனும் மறுக்க முடியாமல் கடந்தே ஆக வேண்டிய இரு பாதைகள் உண்டு ஒன்று பிறப்பு மற்றொன்று இறப்பு.
இதற்கிடையில் நாம் வாழும் வாழ்க்கை தான் நமது நாட்கள்.அது சிலருக்கு வரம் சிலருக்குச் சாபம்.வரமாக இருந்தாலும் வாழத்தான் வேண்டும். சாபமாக இருந்தாலும் வாழத்தான் வேண்டும்.
என்ன தான் அனுபவம் பேசி நின்றாலும். முதுமை கொடுக்கும் பயத்தில் முதிர்வு கொண்ட சிந்தனை மழுங்கி விடுகிறது. நாளை நாமும் அது போல் ஓர் கட்டத்தைச் சந்திக்கத் தானே வேண்டும்.
********
வெகு நேர போராட்டத்திற்குப் பின்னும் பானு கண்ணீர் விட அம்மாடி!… கண்ணம்மா!… பானும்மா!… என்று கொஞ்சி அழைக்க எந்தவிதமான அழைப்புக்கும் அசந்து கொடுக்க வில்லை அவர்.
“ப்ச்.. டைப்பிஸ்ட்டம்மா” என்றதும் அழுகை சற்று மட்டுப்பட மெல்ல தலை உயர்த்திப் பார்த்தார் பானுமதி. பார்த்தவர் கண்ணில் மீண்டும் முத்தம் வைத்தவர்.
“என்னங்க அழுகை”
“நீங்க எதுக்கு அழுதீங்களோ அதுக்குத் தான்” வேகமாக பதில் கொடுத்தவர் மீண்டும் அழுகைக்குப் போக.
“ப்ச்.. அழுகாதீங்க டைப்பிஸ்ட்டம்மா!… எல்லாரும் ஓர் நாள் கடந்தே ஆக வேண்டிய இடம் அது” தன்னைத் தேற்றிக் கொண்டு பேசினார் வணங்காமுடி.
“முடியல தண்டல் காரரே!… நீங்க இல்லாத வாழ்க்கைய எண்ணி பார்க்கவே முடியல”அந்த இடத்தைக் கடக்க முடியாது கதறி விட்டார்.
“எனக்கும் அது முடியாத காரியம் தான், ஆனா ஒரு எண்ணம் உண்டுங்க நான் முன்ன போனாலோ… இல்ல நீங்க முன்ன போனாலோ….
அடுத்த வினாடி நம்ப உசுரு போயிடனும். இல்லையா ஒரு நாளோ, ஒரு வாரமோ, ஒரு மாசமோ,
எங்க அப்பார் போன மாச கணக்குல எங்க அம்மா போன மாதிரி போயிடனும்.நோவு கண்டு படுக்காம யாருக்கும் எந்தச் சிரமும் கொடுக்காம”
வணங்காமுடி சொல்ல பானுமதியும் அதை ஆமோதித்தார்.இருவரும் சிறு நிமிடங்கள் மௌனம் கொண்டனர்.
இப்பொழுது பானுமதி அவரது நெஞ்சில் படுத்துக் கொண்டார். அதில் தனது யோசனை கலைந்தவர் “என்னங்க புள்ள பூச்சி கணக்கா முண்டிக்கிட்டே இருக்கீங்க”
அவரது மௌனத்தைக் கலைக்கவும், அவரது மனநிலையை மாற்றவும் எண்ணிய வணங்காமுடி வழமை போல் தனது குறும்பை தொடங்கினார்.
“டைப்பிஸ்ட்டம்மா!… இன்னைக்கு என்ன நாள்? நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றதும் தன்னை மீட்டு கொண்டவர் வேகமாக அவரைப் பார்க்க மீசையோரம் ஒழித்துக் கொண்ட சிரிப்பு பானுவை உசுப்ப அவரும்.
“என்ன நாளாம்?” தெரியாத பாவனையில்
“என்னங்க இது கோடி இரவுகளில் ஓர் இன்ப இரவுங்க” வணங்காமுடி..
“என்ன தண்டல் காரரே கவிதை கரை புரண்டு ஓடுது”
“உங்களைப் பார்த்தா தாங்க இந்த வியாதி எனக்கு” என்றதும் கையில் கிள்ளி வைத்தவர்.
“குசும்பு பிடிச்ச கிழட்டு காளை” என்று மீசையை இழுக்க வலி எடுத்தது அவருக்கு.
“டைப்பிஸ்ட்டம்மா!… தயவு செஞ்சு உங்க பேத்தி மாதிரி சேட்டை செய்யாதீங்க” என்றவர் கையைத் தடுத்துப் பிடித்துக் கொண்டார்.
“அப்படி தான் பண்ணுவேன்” என்றவர் இப்போது கன்னத்தைத் தீண்ட சிறு அலறல் அவரிடம்.
“என்னங்க இது?”
“உங்களுக்கு நன்றி சொல்றேன் தண்டல் காரரே!..”
“இது என்னங்க புதுவித நன்றி நவிலுதல்… அது சரி எதுக்குங்க நன்றி?”
“அதுவா? என்னை நல்ல பார்த்துக்கிட்டதுக்கு, வேலை செய்ய அனுமதி கொடுத்ததுக்கு, எந்தத் தடங்கல் வந்தாலும் தன்மையா கடந்ததுக்கு, என்னைக் கொண்டு என் பெத்தவங்களை அவங்க கடைசிக் காலம் வரை பார்த்து கிட்டத்துக்கு.
நல்ல குடும்பத்தைக் கொடுத்ததுக்கு, நல்ல பிள்ளைகளைக் கொடுத்ததுக்கு இப்படி சொல்லிகிட்டே போகலாம்”..
“அப்போ நானும் சொல்லனுமே” என்றவர் பானுமதி செய்த செயலை அவர் பாணியில் செய்ய. அவரது கைக்கு அணை போட்டுக் கொண்டே “தண்டல் காரரே!… வேணாம்”
“அய்யயோ நன்றி சொல்லாம விடுறது நன்றி கெட்ட தனமாகி போகுமுங்க” என்றவர் பானுமதி போலவே
“நீங்க என் வாழ்க்கையில வந்ததுக்கு, நான் சொன்ன வார்த்தையை இன்ன வரை கடை பிடிச்சதுக்கு,
இனியும் கடை பிடிக்கப் போறதுக்கு. இப்படி சொல்லிகிட்டே போலாம் என்றவர்,போலியாக அலறி இதை விட்டுட்டேன் பாருங்களேன் முக்கியமா மூனு வில்லனுகளைப் பெத்ததுக்கு” என்றவர் முத்தி எடுக்க அவரது கடைசி வார்த்தையில் அவரை தள்ளியவர்.
“என்ன? பிள்ளைங்களை வில்லன் சொல்றீங்க?”
“பின்ன என்னங்க நமக்கு இடையில அடிக்கடி வந்தா அப்போ வில்லனுங்க தானே”மகன்கள் மீது அதீத பாசம் வணங்காமுடிக்கு உண்டு அதே போல் சில வருத்தமும் உண்டு.
“தண்டல் காரரே!… முன்னுக்கு அவங்க இப்போ தேவலாம் தானே அதை யோசிங்க”
“அதை நீங்க யோசிங்க டைப்பிஸ்ட்டம்மா… இனி அவனுக யோசனையை விடுங்க. வழி இது தான்னு காட்டியாச்சு.
இனி பாதையைப் பிடிச்சு போகட்டும். நீங்க கை பிடிச்சுப் போகப் பார்க்காதீங்க. உங்க பாதை வேற அது என் கால் தடாம இருக்கனும்” சிறு கண்டிப்பாக.
மனைவியின் முகம் சுருங்க பொறுமையாக விளக்கினார்,“இங்கன பாருங்க டைப்பிஸ்ட்டம்மா!…. உங்க மகன்களுக்குக் கல்யாணமாகி போச்சு.இனி அவங்க வாழ்க்கையைப் பார்த்துப்பாங்க பொறுப்பு சொல்லி கொடுத்தாச்சு இன்னும் என்ன வேணும்?”
“ஹ்ம்ம்!… விசு?” பானுமதி கேள்வியாக நிறுத்த
“என்னங்க காலமாகி போச்சு இன்னும் அவங்களுக்குக் காலம் நீண்டு கிடக்கு.எங்க அக்காக்கு கன்னல் பிறக்கலையா? பதினாறு வருஷம் சென்டு.அது போல அவங்களுக்கும் வரும், நித்தமும் என் வேண்டுதல் அதான்.
“எனக்கு இப்போ கவலை இல்ல தண்டல் காரரே!, ஆனா வருத்தமா இருக்கு அந்தப் பொண்ணுக்கு ஏக்கமிருக்குமே” விமலாவை எண்ணி பேசினார் பானுமதி.
“கண்டிப்பா இருக்கும் தான் எல்லா ஒரே வயசு பிள்ளைங்க வேற, ஆனா கடந்து தான்மா ஆகனும் நம்ப அந்தப் பொண்ணுக்குக் கை கொடுப்போம்” என்றவரது கையைப் பிடித்துக் கொண்டார் பானுமதி.
யோசனை வந்தவராக…..
“அண்ணன் அண்ணிங்க செஞ்ச காரியத்தைப் பார்த்தியா?” இப்பொது தான் இதைப் பற்றிப் பேச நேரம் கிடைத்தது இருவருக்கும்.
“ஹ்ம்ம்!… அடிக்கடி சொல்லுவாங்க நான் பெருசா அந்த கண்டு கிட்டதில்ல. பெரிய மாமா யோசனை படி தான் எல்லாம்,
ஆனா ஒன்னுங்க வானதி அக்கா, அகிலா அக்கா. மாதிரி ஓரகத்திங்க கிடைக்க நான் புண்ணியம் பண்ணி இருக்கனும்”
“இல்லம்மா நம்ப அம்மா அப்பா பண்ண புண்ணியம் இது.பக்கத்து வீட்டு ஐயர், தெற்கு வீதி ராமலிங்கம் இவங்க வீட்டுல எல்லாம் சொத்துக்கு அடிச்சுகிட்டு எத்தனை பஞ்சாயத்து தெரியுமா?,
எங்க அப்பார் வழி நாங்க….. அதை உங்களுக்குப் சொன்னோம் உங்க சிறப்பான வளர்ப்பும் சேர போட்டி, பொறாமை இல்லாம அமைதியா போச்சு இத்தினி வருஷ வாழ்க்கை” உண்மையான வார்த்தைகள்.
வளர்க்க பட்ட முறை ஒன்று உள்ளதே. வெவ்வேறு நிறம் கொண்ட மலர்கள் என்றாலும் அனைத்தும் செழிப்பாக வளர்க்க பட்டு கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சி தந்து நின்றது.
**********
சதாசிவம் விதைத்த நல் விதை இன்று வேர் ஊன்றி ஆலமரமாகப் பல விழுதுகளுடன் கம்பீரமாக நின்றது.அவரும் நல் முறையில் அவர் பெரியோர்களால் தானே விதைக்கப் பட்டிருப்பார்?.
“என்னங்க இப்படி கேட்டுடீங்க… இல்லையா பின்ன?. ஒரு கணவனைப் பாவம் செய்ய விடாம தடுக்குறது மனைவியுடைய கடமை,
அதே போல் மனைவியைப் புண்ணியம் பண்ண வைக்குறது கணவனுடைய கடமை அப்படி பார்த்தா நம்ப ஆதர்ச தம்பதி தாங்க.
எந்த நிலையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் கருத்தை கேட்டு தானே செய்ரோம் அப்புறம் என்னங்க”. மீண்டும் யோசனைக்குச் சென்ற பானுமதியை பார்த்து,
“இன்னும் என்னங்க யோசனை?”
“இல்ல தண்டல் காரரே இனி வரும் காலம் நம்ப வாழ்க்கை போல் இருக்காது. இதுல எப்படி பிள்ளைங்க கரை சேர போகுதுனு தெரியல” மீண்டும் அவர் மகன்களிடமே வந்து நின்றார்.
“அது சரி நல்ல வேளை உங்களுக்குப் பெண் பிள்ளை இல்லை”
“அது என்ன?.. அப்படி சொல்றீங்க கன்னிகா, சித்ரா யாராம்”
“அவங்க கல்யாணம் பண்ணி அவங்க பிள்ளைக்கே கல்யாணம் ஆகி போச்சுங்க, அது போக அதுங்களை எண்ணி பயமே வேணாம்”
“ப்ச்” சலித்துக் கொண்டவரை.
“டைப்பிஸ்ட்டம்மா சத்தியமா நம்ப புள்ளைங்க பொழைச்சு வரும் நம்புங்க.என்ன இந்தச் சமுதாய மாற்றம் நம்ப வளர்ப்பை உரசும் போது, சில தடு மாற்றம். அதை ஒன்னும் செய்யவே முடியாதுங்க.
என் வருத்தமெல்லாம் நம்ம போல ரசிச்சு,ருசிச்சு ஒரு நிறைவான வாழ்க்கை நம்ப பிள்ளைங்க வாழ்றது ரொம்பக் கஷ்டம். அப்படியே அவங்க வாழ யோசிச்சா அதுக்கு சில ஆசைகளை விட்டு கொடுக்கனும்.
பணம், பொருள், பெயர், சொத்து, ஆடம்பரம் கேளிக்கை இதைக் கொண்டு தான் இப்ப உள்ள இளசுங்க ஓட்டம்.
அதை குறைச்சு பசிக்கு உண்டு, தேவைக்குச் சம்பாத்தியம் பண்ணி, சலிக்கச் சலிக்க அன்பு செஞ்சு. இது போதும்னு வாழ்ந்தா வேணா நம்மைப் போல வாழலாம்”
வணங்காமுடி சொல்வது சரிதானே.இக்கால வாழ்க்கை முறை என்பது நெறி தவறிய பாதையைக் கொண்டு அல்லவா செல்கிறது.
பெரியோர்கள் வீட்டில் இருந்து அவர்கள் சொல் படி நாம் செயல் பட்ட காலங்களிலும் நெறி தவறியது தான், ஆனால் அதன் எண்ணிக்கை கைக்குள் அடங்கி விடும்.தற்போது அது போலவா நிலை உள்ளது?
பெரியவர்களே வேண்டாத பொருளில் அடக்கிய காலம் இது.ஓட்டத்தின் பிடியில் அவர்களது மதிப்பை நாம் உணர மறுக்கிறோம் என்பதே உண்மை.
சில வீடுகளில் பெரியவர்களின் பொறுப்பைத் தவிர்த்து நிற்க, சில வீடுகளில் மறந்து நின்றனர்.
அது சரி ஒரு கையில் உள்ள விரல்களே சம அளவு இல்லை என்ற நிலையில் மனிதர்களை நாம் சொல்ல முடியுமா என்ன?
**********
இக்கால நிலையைச் சில வார்தைகள் கொண்டு அடக்கியவரை காதலாகப் பார்த்தார் பானுமதி. தன் முகம் வாட்டம் கண்டே நடப்பவரை காதலாகப் பார்த்து வைத்தது பேரிளம் பெண்.
முகத்தோடு முகம் தேய்த்து அநியாயம் பேசிய இதழ்களில் இளைப்பாறி நிற்க தடுமாறிப் போனார் வணங்காமுடி. சிறு மணி துளிகள் எடுத்து கொண்டவர் குனிந்து கொள்ள,
அவரது முகம் பற்றிக் காதலாகப் பார்த்தவர் “இம்புட்டு வக்கனம் பேசுற எனக்கே ஓர் பேராசை உண்டுங்க டைப்பிஸ்ட்டம்மா” கிசு கிசுப்பாகத் தண்டல் காரர் சொல்ல.
அவரது குரலில் கூச்சம் கொண்ட பானுமதி நெளிந்து கொண்டே “என்னங்க தண்டல் காரரே!..”
“மீண்டும் ஓர் சென்மம் எடுத்து உங்களையே கட்டி, இதே போல காமந்து பண்ணி,எல்லையே இல்லாம அன்பு செய்யனும்” அந்த எல்லையில் அவர் கொடுத்த அழுத்தம் பெண்ணை வெட்கம் கொள்ள வைக்கக் கண் மூடி அழகாக சிரித்தார்.
அவரது சிரிப்பில் மயக்கம் கொண்டு “இப்படி சிரிக்காதீங்க டைப்பிஸ்ட்டம்மா” என்றவர் அதற்கு மேல் முடியாமல் அவருள் தொலைய தொடங்கினார் .
காதல் என்பது யாதெனில் உன்னை கொண்டு என்னை நிறைத்து. நீ, நான் என்ற இடம் தொலைந்து நாமாகி நிற்பது தான்.சுருக்க சொன்னால் ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுப்பது .
இதோ இவர்கள் ஆயுள் முடிந்தாலும் அழியாத காவியமாக அவர்களது காதல்.
அவர்களது நிலையைக் கலைக்காமல்,தண்டல் காரரையும் டைப்பிஸ்ட்டம்மாவையும் இதே அன்புடன் அவர்கள் பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு வாழ வாழ்த்தி நாமும் விடை பெறுவோம்.