அண்டம் ஆளும் காவேரி நதிக்கரையில் ஆடை ஆபரணங்கள் பூட்டி நான் அலங்கார பிரியனடா என்று அரங்கன் (ஸ்ரீ ரெங்கன்) ஒருபுறமும் .
உடல் முழுக்கச் சாம்பல் தரித்து நான் அபிஷேக பிரியனடா என்று பிறை சூடிய பித்தன் (திருஆனை கோவில்) ஒரு புறமும் இருக்க இருவருக்கும் நடுவில் உள்ள வடக்கு வீதியில் வசித்து வருகிறார் வணங்காமுடி.
அவரது பெயரை எண்ணி மனம் ஒரு கணக்கு வைக்க, ஆனால் அதற்கு எதிர் பதமாக இருந்தார் மனிதர். வீபூதி மனம் கமழ வெள்ளை வேட்டி சட்டையில் கண் மூடி வேண்டி நின்றவர்.
காளை போல் கம்பீரமான தோற்றம் கொண்டவர் திருமண பருவத்தில் உள்ளவர் போலும். இளமை வனப்பு சற்று எட்டி தான் பார்த்தது.
அவருக்கு எதிரில் அவரை விடப் பலமடங்கு கம்பீரத்துடன் அதே வெள்ளை வேட்டியில் வீற்றிருந்தார் திரு ஆணை (யானை) கோவில் குபேரலிங்கம்.
அகிலம் ஆண்ட ஈஸ்வரியாகிய அகிலாண்டேஸ்வரியும் ஜம்புகேஸ்வரரும் வீற்றிருக்கும் ஸ்தலம் தான் திருவானைகோவில் திருச்சியில் உள்ள புண்ணிய ஸ்தலத்தில் முதன்மை கொண்ட ஈசன் ஸ்தலம்.
கோவிலை சுற்றி வரும் போதுச் சிறு ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கும் ஆதி திருவானைக்கா என்று அழைக்கப் படும் சந்நிதியில் அழகாகக் காட்சியளித்தார் குபேரலிங்கம்.
ஜீவனே சிவன் என்று எண்ணினார் போலும் வணங்காமுடி அத்தனை சிரத்தையாக எம்பெருமானை வேண்டி நின்றார்.
பிராத்தனை முடிந்து கண் திறந்தவர் மீண்டும் ஒருமுறை அப்பனை கண் குளிர கண்டு நகர, அதற்காகவே காத்து நின்றவர் போல் அவரிடம் நெருங்கினார் அவரது தோழர் மற்றும் அவரிடம் பணி புரியும் வெற்றி வேலன்.
“டேய் வணங்கா கொஞ்சம் நில்லு டா” என்றவரை அசட்டை செய்து கருமமே கண்ணாக பிரகாரத்தை வலம் வந்து கொண்டு இருந்தார் வணங்காமுடி வேலனும் வேறு வழி இல்லாமல் அவர் பின்னே சென்றார்.
“அடேயப்பா நீ கும்பிடுற அழகுல அந்தச் சிவனே முன்ன வந்து நிக்கப் போறார் பார்” கேலி செய்த நண்பனுக்கு மௌனமே பதிலாகக் கொடுத்து தனது வேலையைச் தொடர்ந்தார்.
அவரது செயலில் பொறுமை காற்றில் பறக்க “டேய் நில்லேண்டா” எரிச்சலும் கெஞ்சலும் கொண்ட நண்பனது பேச்சில்.
“ப்ச் என்ன?” என்றவர் முழுதாக வலம் வந்து அமர அவர் பக்கத்தில் வந்து அமர்ந்தார் வேலன்.
அவர் கேட்ட அழகில் கோபம் கொப்பளிக்க “என்ன? என்ன?…. உங்க அண்ணனுங்க என்னை வேலை செய்ய விட மாட்டேங்கறாங்க”
“ஏன்?”
“என்னடா தெரியாத மாதிரியே கேட்குற ஒரு மாசமா அந்தப் பொண்ண முடிக்க உங்க அண்ணா அண்ணிங்க போராடுறாங்க டா பாவம்…
“நல்ல பொண்ணு நல்ல குடும்பமா இருந்தா போதும் வேற எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லை, ஆனா அவங்க பார்த்த பொண்ணு தபால் நிலையத்துல வேலை பாக்குது அரசு உத்தியோகம் எதிர்பார்ப்பு அங்க இருக்க வாய்ப்பிருக்கு,நான் சொல்ல வர்றது விளங்குதா”
“விளங்குது விளங்குது அதான் பொண்ணே சரினு சொல்லிடுச்சே பிறகு என்ன”
“அவங்கள மாதிரியே புரியாம பேசாத வேலா. ஒரே பொண்ணு நம்பக் கூட்டுக் குடும்பம் இப்போ சரினு தோணும் பிறவு எல்லாம் தப்பா போகும். அதெல்லாம் சரி வராது அது போக அண்ணிங்க இரண்டு பேருக்கும் உரசல் வர வாய்ப்புண்டு”
“வணங்கா நீ சொல்லுறதும் ஒருவகையில் சரிதான்னு வச்சுக்குவோம். அவங்க மனசுக்காக ஒருதரம் பொண்ணைப் பாரு பிடிக்காட்டி பிறகு பேசிக்கலாம் என்ன சொல்லுற?”இது தொடரும் படலம் என்று எண்ணினாரோ என்னவோ ஒரு நொடி நண்பனை பார்த்தவர் பளீர் சிரிப்புடன்.
“சரி பண்ணிடலாம் அதன் பிறவு என் முடிவு தான்”
இதுவரை இறங்கி வந்ததே போதும் மீதம் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணிய வேலன் “சரிடா” என்க உடனே வேலனது கையை இறுக்க பற்றினார் வணங்காமுடி
“பொண்ணு தானே பார்க்கணும் இப்பவே பார்த்துடலாம் வா” என்று அவனை இழுத்து செல்ல அதிர்ந்தார் வேலன்
“டேய்!.. டேய்!… எங்கடா போற கடையத் திறக்கனும் என்னை விடுடா”
“நீதானே தூது வந்த அப்போ நீதான் வரனும்” என்றவருடன் வேறு வழியில்லாமல் சென்றார் வெற்றி வேலன்.
****************
திருச்சி திருவானைக்கோவிலை சேர்ந்த சதாசிவம் பிள்ளை மற்றும் அவரது மனைவியுமான விசாலாட்சிக்கு பிறந்த மூன்று முத்துக்கள் ஈஸ்வரன், அருணகிரி மற்றும் வணங்காமுடி.
சிவன் மீது தீரா பக்தி கொண்டவர் என்பதால் மகன்களுக்கு சிவனின் பெயர்களை சூட்டி மகிழ்ந்தார். ஒழுக்கம் பேணி நன் நடத்தை கற்பித்து பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்தார்.
பாரம்பரியமான செழுமையான குடும்பம். தோட்டம் தொறவு என்று இருந்தாலும். இவர்களது முதன்மை தொழில் என்று பார்த்தால் நகை வைத்துப் பணம் வட்டிக்குக் கொடுப்பது.
சதாசிவம் விசாலாட்சி மறைவுக்குப் பிறகு தொழிலை மூன்று மகன்களும் சிறப்பாகவே நடத்தி வருகின்றனர். திருவானைக்கோவில் வடக்கு வீதி சதாசிவப் பிள்ளை அடகு கடையென்றால் எல்லோருக்கும் நன்கு பரிச்சயம் .
சதாசிவம் இருக்கும் போதே பெரிய மகனுக்கும், அவரை அடுத்து உள்ள அருணகிரிக்கும் திருமணம் செய்து வைத்து விட்டார். இருவருக்குமே கருவேப்பிலை கொத்தாக ஆளுக்கு ஓர் பெண் வாரிசும் உண்டு .
ஈஸ்வரன் – வானதி தம்பதியருக்கு ஆறு வயதில் ஒரு மகள் கன்னிகா.
அருணகிரி – அகிலாண்டேஸ்வரி தம்பதியருக்கு நான்கு வயதில் ஒரு மகள் சித்ரா.
இளைய மகன் வணங்காமுடி வெகு நாள் சென்று பிறந்தவர் என்பதால் இளமையின் முதல் கட்டத்தில் நிற்கிறார் .
பேரன் பேத்தி பார்த்த களிப்போ, மகன்கள் மீதுள்ள நம்பிக்கையோ அல்லது வாழ்ந்த நிறைவோ சதாசிவம் இறந்து போக, ஒரு மாத காலத்தில் தனது மூச்சை நிறுத்தி முக்தி கொண்டு விட்டார் விசாலாட்சி.
தாய் தந்தை மறைவுக்குப் பிறகு அந்த இடத்தை அண்ணன்களும் அண்ணிகளும் நிரப்பி நின்றனர் அது வரை வணங்காமுடி கொடுத்து வைத்தவர் தான்.
மூன்று மகன்களும் தொழில் செய்ய அதில் கணக்கராக இருந்தார் வணங்காமுடியின் பள்ளி தோழன் வெற்றி வேலன்.
நண்பன் என்றாலும் கை சுத்தம், வாய் சுத்தம் என்பதால் இவர்களது உறவில் வேலனுக்குக் கூடுதல் சலுகை உண்டு.அதன் பெயரில் தான் இப்பொழுது உரிமையாகக் கேள்வி கேட்பது
“அடேய் எங்கடா வந்து இருக்கோம்”
“ஏன் படிக்க தெரியாதா? இல்ல கண்ணு தெரியாதா? ”
“எகத்தாளம் ஹ்ம்ம்…..உன்கூட இருந்தா எனக்கு எதுவுமே தெரியாம போயிடும் போல விடுடா என்னை …… என்ன காரியம் பண்ணுற”
“நீ தானே பொண்ணைப் பார்க்க சொன்ன”
“சரியா போச்சு போ. அதுக்கு அவங்க வீட்டுக்கு போகனும் வேலை செய்யிற இடத்துக்கு இல்ல” என்றவர் செல்ல பார்க்க விடுவேனா பார் என்பது போல வேலனை தர தரவெனத் தபால் நிலையத்திற்குள் இழுத்து சென்றார்.
ஒரே ஊர் என்றாலும் பெண் வயலூர் வாசி,அதனால் தான் அறிமுகம் தேவை பட்டது. பெண் நிழல் படம் எல்லாம் நடைமுறையில் இல்லை அல்லவா.
ஸ்ரீ ரெங்கம் தபால் நிலையத்தில் மும்மரமாகத் தந்தி பிரிவில் வேலை செய்து கொண்டு இருந்த பெண்ணை நெருங்கினார் வணங்காமுடி. ஒரே ஒரு பெண் ஊழியர் மட்டுமே அந்த நிலையத்தில் என்பதால் அவர் தான் பார்க்க வந்த பெண் பானுமதி என்று சரியாக கணித்தவர் .
அவர் இடம் நோக்கி சென்று “ஏங்க?…இங்க பாருங்க டைப்பிஸ்ட்டம்மா, இங்க பானுமதிங்கிறது யாருங்க ?” என்க பக்கத்தில் இருந்த வேலனுக்குத் தான் தூக்கி வாரி போட்டது.
வணங்காமுடியை பார்த்த பானுமதி எந்த வித அலட்டலும் இல்லாமல் அமைதியாகப் பதில் அளித்தார் “நான் தான் பானுமதி சொல்லுங்க என்ன வேணும்?” மெல்லிய குரல் என்றாலும் ஆளுமை கொண்டது போல் இருந்தது.
அடர் வண்ண காபி நிறத்தில் பருத்தி புடவை கட்டி கண்ணியமாக இருந்த பானுமதியை ஒரு நொடி தலை முதல் கால் வரை முழுமையாக ஆராய்ந்தார் வணங்காமுடி.
அவரது பார்வையில் சிறு கோபம் வர மெல்லிய குரலில் “என்னங்க வேணும்? வேலை இருக்கு.. பொதுவா முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேசுறது என் பழக்கம் இல்லை”
“ஓ!..” போட்டவர் கையைப் பிடித்து இழுத்தார் வேலன். நற்பெயர் கொண்டு வாழும் இடம். இது போல் பெண்ணைத் தனியாகச் சந்திப்பது என்பது முரண் வகையில் சேர்த்தி அவர்கள் வளர்ப்பு அப்படி.
மீண்டும் சில நொடி மௌனம் கொண்டு பானுமதியை பார்த்தவர் எந்த வித முக ஸ்துகளும் இல்லாமல் அதிரடியாக “பொண்ணு பார்க்க வந்தேன்” என்று தகவல் போல் சொல்ல அதிர்ந்து நின்றார் பானுமதி.
அப்பெண்ணின் முகத்தைப் பார்த்த வேலன் பயந்து ஓடியே விட்டார் வேலனை கருத்தில் கொள்ளாமல் இருவரும் நிற்க.
பானுமதியின் கண்களைக் கவ்வி கொண்டவர் தனது தொண்டையைச் செருமி கொண்டு, “மதிய வேலை சாப்பாடு எப்போ” என்க பானுமதியும் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்தவர் தலையைக் குனிந்து கொண்டே “இன்னும் அரை மணி நேரம் இருக்கு”.
“சரி வெளில காத்து இருக்கேன் வாங்க” என்றவர் தனது வேட்டியை மடித்துக் கொண்டு திரும்பி நடக்க, தலையை உயர்த்தி பார்த்த பானுமதி நெஞ்சில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டார்.
இது போல் நிகழ்வை அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை போலும் முகமெல்லாம் வியர்த்து விட்டது.
பெயர், குடும்பம் மட்டுமே சொல்லி ஒப்புதல் பெற்ற திருமண ஒப்பந்தம் என்பதால் முதல் அறிமுகம் சற்றுப் பயத்தைக் கொடுத்தது. அதுவும் தனிமை பேச்சு , சந்திப்பு என்பதெல்லாம் எண்ணி பார்க்க கூட அஞ்சிய விடயங்கள்.
வெளியில் நின்று இருந்த வேலன் வணங்காமுடியை பார்த்து முறைக்க அவர் முகமோ சிரிப்பில்…
“எத்தனை நாள் வஞ்சம் இது”
“எது”
“அதான் இப்போ பண்ணிக்கிட்டு இருக்குற காரியம் அந்தப் பொண்ணு பாவம் பயந்து போச்சு இது என்னடா பழக்கம் அவங்க வீட்டு ஆளுங்களுக்குத் தெரிஞ்சா சங்கடமா போகும்”
“கட்டிக்கப் போறவன் நாந்தானே அப்புறம் என்ன” என்றவனது பேச்சு சிறு நேரம் கண்டு பிடிபட
“ஆ!.. ஆ!… என்ன சொன்ன?… என்ன சொன்ன?…”
“பொறு டா பொண்ணு புடிச்சு போச்சு ,ஆனா ஒருக்கா பேசிக்கிறேன்”
“இதுக்கு ஒரு மாசம் எங்களை படுத்தனுமா……” என்று அலுத்து கொண்டாலும் அவருக்கும் முக்கால் முழுதும் களிப்பே.
“அட மானஸ்தனே! இப்போ எங்க போச்சு உன் யோசனை எல்லாம்? இப்போ மட்டும் நீங்க கூட்டுக் குடும்பம் இல்லையா சாமி?”
நண்பனது மனது லேசாகப் பிடிபட அவரை வம்பு செய்யும் பொருட்டு அடப்பாவி!…….. பேசி சரி வரலைனா?
நண்பனது கேள்விக்கு அதே புன்னகையுடன் “வர வச்சுடலாம்” என்று உல்லாசமாகப் பதிலளிக்க அதில் மகிழ்ந்து போன வேலன்.
“நான் கிளம்புறேன் உங்க அண்ணங்ககிட்ட போயி கல்யாணம் நாள் பார்க்க சொல்றேன். நீ பொறுமையா பேசிட்டுவா” என்றவர் வணங்காமுடி பதிலை எதிர்பார்க்காமல் செல்ல மெல்ல சிரித்துக் கொண்டார் வணங்காமுடி.
கடை குட்டியாக இருந்தாலும் கருத்தான பிள்ளையெனப் பெயர் பெற்ற வணங்காமுடி சற்று வித்தியாசமான மனிதர் தான்.
***************
ஆவலே உருவாக வாயிலை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்க அரை மணி நேரம் கழித்துச் சற்றுப் பயந்து போயி தயங்கி தயங்கி வந்தார் பானுமதி.
தன்னை நெருங்கும் பெண்ணைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார் வணங்காமுடி.அவர் முன் வந்து நின்ற பானுமதி அவரை நேர் கொண்டு பார்க்க சங்கடம் கொண்டு தலை கவிழ்ந்து நிற்க.
அவரை மட்டுமே பார்த்துக் கொண்டு வெகு இயல்பாகப் பேச்சை தொடங்கினார் “நான் யாருனு தெரியுதுங்கலா?”
“ஹ்ம்ம்!…”
“அப்போ சரி உட்காருங்க ஒரு கால் மணி நேரம் பேசிடலாம்” என்றதும் அவர் அருகில் சற்று இடைவெளி விட்டு அந்த ஆல மரத்து வேரில் அமர, பக்கவாட்டில் திரும்பி கொண்டு பேச ஆரம்பித்தார் வணங்காமுடி.
“பொண்ணு பார்த்து வேணான்னு சொல்லத்தான் வந்தேன்” இந்த இடத்தில மனிதன் பேச்சை நிறுத்த பெண் அதிர்ந்து அவன் முகம் பார்த்தது அவளது தோற்றம் சிரிப்பை தர.
“ஆனா பார்த்த உடனே பிடிச்சு போச்சு அதான் பேசிடலாம்னு” என்றதும் செல்ல கோபம் வர முயன்று அவரைப் பார்க்க முயற்சித்தார் பானுமதி அவரது தடுமாற்றம் புரிய மேலும் அவரை சங்கட படுத்தாமல் .
“உங்க வீட்டு பெரியவங்க குடும்ப விவரம் சொல்லி இருப்பாங்க நான் புதுசா சொல்ல ஒன்னுமில்லை, சின்ன வேண்டுகோள் மட்டுமே கூட்டுக் குடும்பம் அனுசரிச்சு போகனும்,
படிப்பும் வேலையும் உங்களுக்கு கூடுதல் சிறப்பு அதைக் கொண்டு ஏற்ற தாழ்வு என்னைக்கும் சதாசிவப் பிள்ளை குடும்பத்துக்கு வர கூடாது” என்றதும் பெண்ணின் அறிவும் அகமும் சற்று கூர்மை ஆகியது.
மாப்பிள்ளை பார்க்க வந்தால் பேச்சுக்கள் போகும் திசை அறிமுகம், கடமை, பொறுமை, தன்மை, அன்பு, அக்கறை, காதல், கூச்சம், வெட்கம் என்று எண்ணி இருக்க இந்த மாப்பிள்ளை என்னவென்றால் நிதர்சனம் பேச.பெண்ணும் ஓர் நொடி தடுமாறி சற்று விழித்துக் கொண்டது படித்த பெண்ணல்லவா.
“எல்லாரும் சரிசமம் தான் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும். தனியா போகுற சூழ்நிலை வரவே கூடாது. அதுவும் என்னை சேர்ந்தவங்க கிட்ட இருந்து” கட்டளையா இது பெண்ணின் நுண் அறிவு ஆராய்ந்து கொண்டு இருந்தது.
“பயந்துக்க வேணாம் இதெல்லாம் நான் கட்டிக்கப் போற பொண்ணுகிட்ட என்னோட எதிர்பார்ப்பு” என்று நிறுத்தி தனது சம்மதம் சொல்ல.
இப்பொழுது பெண்ணின் முறை போலும் அவரை நேர் கொண்டு பார்த்தவாரே “எனக்கும் சில எதிர்பார்ப்பு இருக்கலாம் இல்லையா” என்றதும் சிரித்துக் கொண்டவர் .
“இருக்கலாமே” என்று சொல்ல
“நீங்க சொன்னதுக்குப் போட்டியா நான் சொல்லல பேச வாய்ப்பு கிடைச்சதுனால சொல்றேன், இல்லனாலும் கல்யாணத்துக்குப் பிறகு கண்டிப்பா பேசி இருப்பேன்”
“புரியுது சொல்லுங்க கேட்போம் அதான் நியாயமும் கூட ” அவரது கேலி இல்லாத ஒப்புதல் மனதுக்கு நிறைவை தர.
“எனக்கு 165 ரூபா சம்பளம் அதைக் கொண்டு அம்மா சேர்த்தது இருபது பவுன், கல்யாண செலவுக்கு ஐம்பதாயிரம், அது போக அப்பா வயசானவர் நான் தான் ஆண் பிள்ளையா இருக்க வேண்டிய சூழ்நிலை என்று நிறுத்த.
“உங்க சம்பளம் எனக்கு வேண்டாங்க ” கேலி பேசினார் அதில் பதறிய பெண்.
“இல்ல இல்ல அப்படி சொல்லல “ஐம்பது ரூபா அவங்களுக்குப் பதினஞ்சு ரூபா என் செலவும் சேமிப்பும்,மீதி நூறு குடும்பத்துக்கு இது என் கணக்கு, இதுல விரிசல் வராமல் இருந்தா போதும் சமாளிச்சுடுவேன்,
நாங்க நல்ல வாழ்ந்த குடும்பம் இப்போ பெயர் மட்டுமே சொல்லிக்கலாம். என் வருமானம் மட்டும் தான். நீங்க பாரம்பரியமான குடும்பம் உங்க வீட்டுக்கு வந்த மருமகள்களும் நல்ல செழுமை….” அதில் பெண் நிறுத்த அவரை மேலும் தொடரும் மாறு செய்கை செய்தார்.
“பிற்பாடு அவங்களை கொண்டு என்னை ஒப்பிட கூடாது இது என் எதிர்பார்ப்பு”
“தப்பில்லை நியாயமான எதிர்பார்ப்பு தானே நான் உறுதி தரேன்…… அப்புறம் வேற எதுவும் மாப்பிள்ளை பத்தி” குறும்பாகச் சிரிப்பை அதக்கி கேட்க
பானுமதி நாணம் கொண்டு புன் சிரிப்புடன் தலையை இடமும் வலமும் ஆட்டியவர் மேற்கொண்டு அங்கே நிற்க முடியாமல் திரும்பி செல்ல பார்க்க.
“சொல்லிட்டு போகனும்” என்றார் வணங்காமுடி குரலில் கடுமை இல்லாமல் இருந்தாலும் சிறு அழுத்தம் இருந்தது அதனைக் கண்டு கொண்டவர்.
தனது நாணத்தை நான்கடி தூரம் தள்ளி வைத்து விட்டு மெதுவாகத் திரும்பி அவரது கண் பார்த்து “வரேங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக செல்ல.
முகம் கொள்ளா புன்னகையுடன் எழுந்தவர் தனது வேட்டியில் உள்ள தூசியைத் தட்டிவிட்டு அதனை மடித்துக் கட்டி கொண்டு சதாசிவப் பிள்ளை இல்லம் நோக்கி சென்றார்.