வடக்கு வீதி வணங்காமுடி – 10
“என்னடா செய்தி!…. இல்ல என்ன செய்தினே!…. உங்க அண்ணனுங்க இனி இங்க வரவே கூடாது சொல்லிட்டேன்” கோபத்தின் உச்சத்தில் நின்ற வணங்காமுடியின் குரல் அறையெங்கும் ஒரு அதிர்வை கொடுத்தது.
“அப்பா!..”
“பேசாதீங்க நல்ல இருந்தவங்க… உங்களையெல்லாம் எண்ணி எண்ணியே காய்ச்சல் கண்டு படுத்துட்டாங்க பிள்ளைங்களா நீங்கெல்லாம்?”
“அப்பா கொஞ்சம் பொறுமையா இருக்காங்கப்பா எப்படி வேர்க்குது பாருங்க”
“வேர்த்துட்டு போகுது விடுங்க” என்றவர் ஆடிய ஆட்டத்தில் வேட்டி அவிழ்ந்து கொண்டு வர, அதனை இறுக்கி பிடித்தவாறு மீண்டும் சண்டை கட்ட ஆரம்பித்து விட்டார்.
கடையின் உள் அறையில் இவர்கள் இருக்க இந்தக் கூத்தை கண்ணாடி தடுப்பின் வழியே பார்த்துக் கொண்டு இருந்தார் வேலன்.
அவரும் வணங்காவிடம் போராடி சட்டை ஒரு கோலம் வேட்டி ஒரு கோலமாகக் களைத்து போயி அமர்ந்திருந்தார் அவரிடம் ஓடி வந்த மணி.
“அண்ணே! என்னன்னே இது?”
“எதுவும் பேசுற நிலைமையில நான் இல்ல அந்தப் போனை எடு” என்றதும் ஓடி போயி மேஜையில் இருந்த அவரது கை பேசியை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தான்.
கடை ஊழியர் அனைவரும் வேடிக்கை பார்த்து நின்றனர். அவர்கள் பல நாள் பழக்கத்தில் உள்ளவர்கள் முதல் அனுபவமாக வணங்கா கோபத்தைக் கண்டு அதிர்ந்து நின்றனர்.
போனை எடுத்த வேலன் அவரசமாக ஈஸ்வருக்கு அழைக்க சில நொடிகள் சென்று அழைப்பை ஏற்றார் வானதி.
“ஹலோ!…”
“யாரு வானதி அண்ணிகளா?”
“ஆமா வேலா நான் தான் பேசுறேன்”
“அண்ணி அண்ணனை உடனே கடைக்கு அனுப்பி வைங்க” என்றதும் முறுமுனையில் பெரும் பதற்றம்
“ஏன்? என்ன ஆச்சு?”
“படுத்தி எடுக்குறாண்ணி சென்னைக்குப் போனை போட்டு அந்தப் பிள்ளைங்களை அந்தப் பேச்சு. அதுங்க இரண்டும் எனக்குப் போன் பண்ணி தவிக்கிதுங்க”
“ஐயோ!… அவரை என்ன செய்யுறது.இங்க அவளைப் படுத்தி வச்சாருனு தான் அங்க அனுப்பி வச்சேன். இரு வேலா அவர் கிட்ட தரேன்” என்றவர் ஈஸ்வரிடம் விடயத்தை சொல்லி போனை தர.
“வேலா கிரி தோட்டத்துக்குப் போயிருக்கான். நான் போனை போட்டு அவனைக் கூட்டிட்டு வரேன் அது வரை சமாளி”
“என்னால முடியலை ண்ணே கண்ணு குட்டி தான் உள்ர இருந்து கதறுது. பாவம் பிள்ளை நீங்க வெரசா வாங்கண்ணே”
“சரி வேலா!.. வரேன்!… வரேன்!…” என்றவர் போனை அணைத்த வேகத்தில் கிரிக்கு அழைத்து விடயத்தைச் சொல்ல .அவரும் உடனே வருவதாக சொல்லி போனை அணைத்தார்.
***************
சுமார் ஒரு மணி நேரமாக ஆடிய ஆட்டத்தின் விளைவாக சோர்ந்துக் கண் மூடி அமர்ந்தவரை பார்த்து பதறிய பசுபதி வேகமாக வெளியில் வந்து.
“மணி தண்ணி கொண்டு வா” என்றவன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த ஊழியர்களை
“எல்லாரும் போயி வேலையைப் பாருங்க.வெங்கடேஷ் மாமா கொஞ்சம் கடைய பார்த்துக்கோங்க” அங்குப் பல நாள் வேலை செய்து வரும் அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவரை அழைத்துப் பொறுப்பைக் கொடுத்தவன் மணி கொடுத்த தண்ணியைப் பெற்றுக் கொண்டு மீண்டும் தந்தையை நோக்கி ஓடினான்.
கண் மூடி உடல் சோர்வில் அமர்ந்திருந்தவரை நோக்கி வந்தவன் அவரது கையைப் பற்ற உடலெல்லாம் சில்லிட்டு இருந்தது. பயந்தவன் தண்ணீர் லோட்டாவை போட்டுவிட்டு வெளியில் ஓடி…
“மாமா!… மாமா!… அப்பாக்கு உடம்பு ஜில்லனு போச்சு வாங்க” என்றதும் பதறி ஓட அவர் பின்னே ஊழியர்கள் அனைவரும் ஓடினர்.
அங்கே மயக்கத்தில் இருந்தவரை அள்ளி கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல.செல்லும் வழியின் ஊடே பசுபதி வீட்டுக்கு அழைத்து தகவலை சொல்லி கொண்டே வந்தான்.
விமலாவை மட்டும் தூங்கி கொண்டு இருந்த பானுக்குத் துணை வைத்து அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
‘நடக்கும் அனைத்துக்கும் நான் தான் காரணியோ’ என்று பதறிய விமலா பயந்து கொண்டு மௌனமாகக் கடவுளை வேண்டி நின்றாள்.
**********
இரு தினங்களுக்கு முன் கணவனிடம் சொல்லி கொண்டு அவனது பதிலை கூட எதிர் பார்க்காமல் திருச்சிக்கு வந்து விட்டாள்.
முதலில் மனைவி ‘இனி நான் திருச்சி வாசம்’ என்றதும் திகைத்த விசு மேலும் பேசும் முன்னே கிளம்பி ஓடி வந்து விட்டாள்.
இரு தினங்கள் அவளது இருப்பில்லாமல் தவித்தவன் அதற்கு மேல் தாங்கமாட்டாது போனில் அழைக்க. விமலா அழைப்பை ஏற்க வில்லை அந்த எரிச்சலில்,
தாயிக்கு அழைத்தவன் தனது ஆற்றாமை, குழப்பம் இயலாமை அனைத்தையும் திரட்டி கத்தி தீர்க்க பிள்ளைகளின் நிலையை எண்ணிய பானு தன்னுள் வைத்து உலண்டே காய்ச்சலில் விழுந்து விட்டார்.
கண்ட நேரத்தில் ஓய்வு கொள்ளாத மனைவி முழு நேர தூக்கத்தில் இருக்கப் பதறிய வணங்காமுடி அவரை நெருங்கி தொட உடல் நெருப்பாகத் தகித்தது.அப்போது பிடித்த வெறி மனிதனுக்கு.
************
அங்கே மருத்துவர் அவரைப் பரிசோதித்து விட்டு குறைவான இரத்த அழுத்தம் தான் என்று சொல்லிவிட அனைவரும் ஓய்ந்து அமர்ந்தனர்.
“ப்பா இத்தினி வருஷ பழக்கத்துல அவன் இந்த கத்து கத்தி நான் பார்த்ததே இல்லண்ணே” வேலன் முகத்தில் நண்பனை எண்ணி அத்தனை வேதனை.
“ப்ச் இவங்க மேலையும் தப்பிருக்கு வேலா சும்மாவெல்லாம் அவன் கோப பட மாட்டான்” தம்பியை எண்ணி சோர்ந்து போனவாரே பேசினார் அருணகிரி.
“விடுங்க அடுத்தது என்னானு பார்ப்போம்”, ஈஸ்வர்.
“என்னங்க நாங்க ஒரு எட்டு கொழுந்த பார்த்துட்டு வீட்டுக்கு கிளம்புறோம். அங்கன பானு தனியா இருக்கும் அது போக அந்த விமலா பொண்ணு பயந்துகிட்டு இருக்கும்” வானதி சரியாக வீட்டின் நிலையைப் பிடித்தார் அது சரி அனுபவம் பேசும் பாடம் அல்லவா.
“சரி நீங்க கிளப்புங்க நாங்க இங்க பார்த்துக்குறோம்”
அடுத்து வந்த பொழுதுகள் அனைவருக்கும் ரெக்கை கட்டி பறந்தது என்று தான் சொல்ல வேண்டும். கணவர் ஒரு கரையும், மனைவி மறு கரையுமென்று அவர்களைப் படுத்தி எடுத்தனர்.
ஒருவாராக அனைத்தும் முடிந்து வணங்காமுடியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வர.
அவரது நிலையைப் பார்த்து பானு பதறி விட்டார். அவளது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு வணங்காவின் இன்றைய கூத்தை மறைத்து விட்டனர் வீட்டு மக்கள்.
கையில் ஊசி துளைத்த இடத்தில பஞ்சை வைத்து கட்டி இருக்க வேட்டியை அவர் பிடித்து நடந்த வந்த கோலம் பானுவுக்குத் திகில் பிடிக்க வைத்தது.
காய்ச்சல் சற்று இறங்கி இருக்க ஓடி வந்து அவரது கையைப் பற்றிக் கொண்டவர் “சின்ன மாமா என்ன ஆச்சு?” அருணகிரியை பார்த்து கேட்க.
“ஒண்ணுமில்ல மா கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டான் உனக்கு இப்போ எப்படி இருக்கு”
“பரவாயில்லை மாமா கையில என்ன? ட்ரிப் போட்டாங்களா” அவருடன் நடந்து கொண்டே பேசினார்.
“ஆமா மா!.. நீ பயந்துக்காத உன்னைக் கொண்டு தான் இந்த ஆட்டமே” பேசி கொண்டே அவர்களது அறையில் படுக்க வைத்து விட்டு வணங்காவை பார்த்தவர்
“இங்க பார் வணங்கா ஊருல உலகத்துல இல்லாதது இல்லை சொல்லப் போனா நம்ப எவளவோ நல்ல இருக்கோம் அதை மனசுல வை,
பொறுமை பழகு, நிதானத்தை விடாத, பிள்ளைங்க வாழ்க்கை சரியா போகும். முடிஞ்சா சரி பண்ணுவோம் இல்லையா மூட்டி மோதி அதுங்களே வரட்டும் விடு,
அவனுகளை எண்ணி இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் படுத்தா ஆச்சா? உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை பார்த்துக்கோ” என்றவர் கூடி நின்றவர்களை
“எல்லாரும் வாங்க அவன் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்” என்க அனைவரும் வெளியில் வந்தனர்.
ஈஸ்வர், “அம்மாடி விமலா நீ எதுவும் யோசிக்காதா. என்ன முடிவெடுத்து வந்தியோ அதுல உறுதியா இரு இதெல்லாம் குடும்பத்துல சகஜம் தான் சரியா”
கண் கலங்க “சரிங்க மாமா”
“கொஞ்ச நாள் அவன் கிட்ட பேசாதம்மா ஆற போடுவோம் அவனே தெளிஞ்சு வரட்டும்” இது அருணகிரி.
“உங்க அம்மா கிட்ட பேசுமா இல்லையா நம்பர் கொடு நான் பேசுறேன்” அகிலா சொல்ல
“சரிங்க அத்தை” என்ற பெண் பெரியவர்கள் சொன்னதை செய்தாள். இது பிழைக்க தெரிந்த அரிவை போலும்.
“கன்னல்!”
“அத்தை!”
“கொஞ்சம் பார்த்துக்குறியா?…. ராத்திரி சமையலே பண்ணிடு நாங்க குளிச்சுட்டுக் கோவில் போயிட்டு வரோம்”
“விமலா அக்கா இருக்காங்க அத்தை. நாங்க பார்த்துக்குறோம்” என்றதும் அகிலாவும் வானதியும் குளிக்கச் சென்றனர்.
இன்றைய கூத்தில் மதியம் சமையல் மறந்து போக ஒருவரும் உண்ண வில்லை.மனம் இருக்கும் போக்கில் வேலை செய்யவும் முடியவில்லை.
அதான் மருமகளிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு மாமியார்கள் கடவுளை நாடி செல்ல முடிவெடுத்தனர் இருக்கும் சூழலில் நிம்மதி கொள்ளும் ஒரே இடம் கோவில் தானே.
**********
பசுபதியை போனில் அழைத்த கன்னல் “மாமா சாப்பிட வாங்க மணி எட்டு”
“ப்ச் அது ஒன்னு தாண்டி குறைச்சல்” இன்று பட்ட பாட்டில் நொந்து கொண்டான்.
“மாமா சாப்பிடாம இருந்தா எல்லாம் ஆச்சா? வாங்க முதல”
“சாப்பிடுற மூடுல இல்லடி நான்… அப்பா, அம்மா சாப்பிட்டாங்களா?”
“உங்கள மாதிரி வம்பு பண்ணாங்க பேசி பேசியே சாப்பிட வச்சுட்டோம். இப்போ காதல் கிளிகள் இரண்டும் அந்தப்புரம் பறந்தாச்சு” மனைவியின் பேச்சில் அதுவரை இருந்த இறுக்கம் தளர
“ஓய்!… கொழுப்பே!… எங்க அம்மா அப்பாவை வம்பு பண்ணுறியா?”
“ஆமா பின்ன என்ன காதல் மன்னனெல்லாம் எங்க மாமனார் முன்னாடி பிச்சை வாங்கனும் போலையே” என்று பெண் சிரிக்க
“ஹ்ம்ம்…. தகப்பன் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறடி பாயுமாம்” பெரும் குறும்பு பசுபதி யிடம்.
“அது போல ஒன்னும் செயல் இல்லையே பா!….” அவளும் அவனைச் சீண்டி விட
“அடிங்க… வரேண்டி இப்போ!..”
“வாங்க!.,.. வாங்க!…..” என்று கல கலத்துச் சிரித்த பெண் போனை அணைக்க சட்டென மாறியது வானிலை பசுபதியின் எண்ணத்துக்கு அப்பாற்பட்டு நின்றது இந்த கன்னல் பெண்.
சிறு பிள்ளை, வெகுளி என்ற பேச்செல்லாம் அபத்தம் போல் தோன்றியது. வீட்டின் சூழல் மாறவும் பெண் துரிதமாகச் செயல் பட அவள் ஒவ்வொரு செயலுக்கும் அசந்து நின்றான் பசுபதி.
‘உன்னுடைய வயதை மீறியது என் அனுபவம்’ என்ற தந்தையின் கூற்று அவ்வப்போது செவி தீண்டி சென்றது.
*******
அறையில் தளர்வாகப் படுத்துக் கொண்டு இருந்த கணவனைக் கண் இமைக்காமல் பார்த்து வைத்தார் பானுமதி. தற்போது தான் வேலனிடம் பேசி விடயத்தை வாங்கினார்.
வீட்டில் உள்ள அனைவரிடமும் கேட்டு பார்த்து ஓய்ந்தவர் வேலனை பிடித்து அழுது அடம் செய்து செய்தியை வாங்கி இருந்தார்.
‘என்ன மனுஷன் யா நீ’ என்பது போல் அவர் பார்த்து வைக்க மனைவியின் பார்வையை உணர்ந்தாலும் மனிதன் அசையவில்லை.
“தண்டல் காரரே!..”
“………………”
“தண்டல் காரரே!..”
“…………….”அடமாக நின்றார் மனிதர்.
“பேச மாட்டிங்களா?”
“………………”
“சரிங்க நான் போறேன்” பானுமதியின் பேச்சில் கோபம் தலைக்கேற அதுவரை மௌனமாக அமர்ந்திருந்தவர்.
“அதானே போறதுலையே இருங்க நானும் இல்லாம போயிடுறேன்” என்றதும் பதறியெடுத்து அவரை நெருங்கியவர் அவரது புஜத்தில் பலம் கொண்டு கிள்ளி,அடித்து,கடித்து வைத்தார்.
“என்னங்க இது? கடிச்சு வைக்கிறீங்க வெளில தெரிஞ்சா என்னத்துக்கு ஆகும்”மனைவியின் பிள்ளை செயலில் கோபம் சற்று தனிய குறும்பை தொடங்கினார்.
“என்ன ரொம்பப் படுத்துறீங்க தண்டல்காரரே!”
“யாரு நானாங்க? இது அநியாய பழி”
“ப்ச் பிள்ளைங்க வேற மாதிரி நீங்க வேற மாதிரி”
“உங்களுக்கு என்ன இருந்தாலும் தொப்புள் கொடி தாங்க ஒசத்தி”
“என்ன பேச்சு இது? உங்களுக்கு மட்டும் அக்கறை இல்லையா”
“ஆனா நான் உங்களை மாதிரி உடம்பை வருத்திகளையே”
“இப்போ நீங்க மட்டும் என்ன பண்ணி வச்சு இருக்கீங்க”
“இங்க பாருங்க டைப்பிஸ்ட்டம்மா உங்க மகன்களுக்கு நீங்க இருக்கீங்க. உங்களுக்கு அண்ணன், அண்ணி, உங்க மகனுங்க எல்லாரையும் விட நான் இருக்கேன்,
ஆனா எனக்கு யாருங்க இருக்கா? ஆயி, அப்பன் இல்லாத புள்ளைங்க” என்றவர் குரல் திடமாக இருந்தாலும் கண் கலங்கியது போல் இருந்தது.
“ஐயோ தண்டல் காரரே! என்ன இது?” என்றவர் அவரை அனைத்துக் கொண்டார்.
“நான் சரியாதாங்கப் பேசுறேன் காலம் போன கடைசில நிம்மதி வேணுமுங்க. என் கடமையைச் செஞ்சுட்டேன், இனி உங்க கூடச் சுகமா இருக்கனும்,
அதை விட்டுட்டு அவனுக பின்னாடியே திரிய சொல்லுறீங்க இது என்னங்க நியாயம்?
பிரச்சனை கண்டு ஒதுங்கி போற உங்க மகன்களை எனக்கு என்ன செய்யறதுனே தெரியலைங்க . நீங்க அதுக்கு மேல பண்ணி வைக்கிறீங்க நான் என்னங்க செய்யட்டும்”.
அவரைப் போட்டுப் படுத்தியது விளங்க தான் செய்தது. இருந்தும் வயது முதுமை கண்டதால் சிறு உரசலை கூடத் தாங்க முடிவதில்லை.
“தண்டல் காரரே! முன்ன மாதிரி எதையும் எடுத்துக்கட்டி என்னால செய்ய முடியல ஒரு சின்ன விஷயம் தவறா நடந்தாலும் படப் படனு வருதுங்க”
“என் மேல நம்பிக்கை இருந்தா ஏன் பயம் வருது?”
“ப்ச் நிதர்சனம் புரிஞ்சு பேசுங்க அந்த நேரத்துல எனக்கு எதுவும் யோசிக்க முடியல”
அவர் சொல்வதும் உண்மை தான் அக்காலத்திலே வேலைக்குச் சென்று பெற்றவர்களைக் காப்பாற்றித் தன் சம்பாத்தியத்தை வைத்துக் கொண்டு தனக்கே சீர் செய்த பெண் அவர்.
அவரது தன்னம்பிக்கையும் தைரியமும் அவை கொண்டு அவர் நடத்தும் வாழ்க்கையும் நிரம்பப் பிடிக்கும். வணங்காமுடி ஒவ்வொரு முறையும் தனிமையில் விளையாட்டு போல் இதனைச் சொல்லியதும் உண்டு.
ஆனால் இன்று முதுமை முன் நின்று சில பயங்கள் காட்டியது, அது போக வெளியில் சுற்றமும், உறவும் அதில் பிள்ளைகள் கொண்டு வரும் சர்ச்சையை பார்த்துப் பயம் கொள்ளச் செய்தது.
“தண்டல் காரரே! நீங்க சொல்லறது எல்லாம் சரிதான் நம்ப இதைப் பேசிடலாம் நான் உங்களுக்கு ஒரு உறுதி தரேன் அதே போல் நீங்களும் தரணும்”
எந்த வித எதிர் வாதமின்றி தலை அசைத்தார்
“நம்பக் கல்யாணம் பண்ணும் போது பேசியது தான் என்ன பிரச்சனை வந்தாலும் பேசி சரி பண்ணிக்கலாம் பிள்ளைங்களுக்கு என்ன செய்றதுன்னு யோசிச்சுப் பண்ணலாம்.
இது போல இனி மனசை சங்கட படுத்த மாட்டேன் உங்களுக்கு அதே தான்”
“சரிங்க” சிறு மௌனம் இருவரிடமும் உறுதியை கைவிட்டது பிள்ளைகளைக் கொண்டு என்றாலும் இருவருக்கும் முள்ளாக உறுத்தியது.
மனம் தெளிய சிறு இடைவேளை இருவருக்கும்.
“ஹ்ம்ம்!…. நல்ல வேளை நமக்குப் பெண் பிள்ளை இல்லை” பானு யோசனை போலச் சொல்ல.
“இருந்திருந்தா பதிவிசா இருக்குற இடம் தெரியாமல் இருந்திருக்கும், எனக்கும் தோதுக்கு ஆள் சிக்கியிருக்கும்”
“ஓ !….”
“உங்க முந்தானைய நீங்க உங்க மகன்களுக்குக் கொடுத்த மாதிரி. என் வேட்டிய நான் என் மகளுக்குப் பிடிக்கக் கொடுத்து இருப்பேன் “
“இப்போ என்னவாம்” கோபம் போல் பெண்.
“ஒண்ணுமில்லங்க ஊடல் பின் வர கூடல் இனிக்குமாமே நெசமுங்களா” குறும்பு கொப்பளிக்கக் கேட்டு வைத்தார் மனிதர்.
பேச்சின் ஊடே சிந்தனையில் இருந்தவருக்கு வணங்காமுடியின் பேச்சுப் பிடிபடச் சில நொடிகள் ஆனது போலும் புரிந்த பின்
“தண்டல் காரரே உங்களை!……….. “என்றவர் அவர் மேல் பாய்ந்து அனைத்துக் கொள்ள வெடித்து சிரித்தார் மனிதர். அவரது சிரிப்பை கண்டு பானுவும் சிரிக்க.
முதல் முறை இருவரது சிரிப்பொலியும் அறையைத் தாண்டி சென்றது கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் செவி தீண்ட அவர்களிடம் மெல்லிய புன்னகை.
இது போல் வசந்தம் கிட்டுமா என்று இளைய பெண்கள் மனம் பேராசை கொண்டது,ஆனால் அதற்கு பல காலம் பிடிக்குமே அவர்களுக்கு என்ன செய்ய…