வடக்கு வீதி வணங்காமுடி – 11
“க்கா!…. அக்கா!….. ப்ளீஸ் கா!…. நில்லுக்கா!….. நான் என்னக்கா பண்ணுனேன்” என்று கன்னிகா மற்றும் சித்ராவின் பின்னே அலைந்து கொண்டு இருந்தான் பசுபதி.
வீட்டில் நடந்த கூத்தை சொல்லி அகிலா பெண்களிடம் அழுது புலம்ப உடனே இருவரும் பெட்டியைக் கட்டி விட்டனர்.இங்கு வந்து மீதி கதையைக் கேட்ட பெண்களுக்கு அப்படி ஒரு கோபம்.
ஒரு நாள் ஒரு பொழுதும் இந்த வீட்டில் இது போல் சம்பவம் நடந்தாக நினைவில்லை.அவ்வப்போது சண்டைகள் வந்தாலும் அது தங்களைப் பாதிக்காத அளவிற்குப் பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இது போல் பெற்றவர்கள் கிட்டுவது வரம்.
செல்வ சீமாட்டியாக வளம் வந்த நாட்கள் இன்னும் பசுமையாக நெஞ்சில் தித்திக்க,.இத்தகைய தித்திப்பை கொடுத்த பெரியவர்களைத் தனது தம்பிகள் படுத்தியதை எண்ணி தாங்க முடியவில்லை.
இதில் சித்தப்பன், சித்தி என்றால் சிறப்புச் சலுகை வேறு உண்டு அல்லவா. அப்படி இருக்க அவர்களைப் பதம் பார்த்து வைத்தால்.அதான் சண்டைக்கு வந்து நின்றனர் பெண்கள்.
“அக்கா ஊருக்கு இளச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டினு ஆகி போச்சு என் கதை. வம்பு பண்ண அவனுகளை விட்டுட்டு என்கிட்ட முகம் திருப்புற நீ? இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன்” என்றதும் சித்ரா முறைத்து வைக்க.
“உங்களுக்கு என்ன முறைப்பு………….. இப்போ இரண்டு பேரும் பேச போறீங்களா? இல்லையா?” பசுபதி குரல் உயர்த்த.
“எதுக்குடா கத்துற எல்லாரும் தூங்குறாங்க” பெருசுகள் அனைத்தும் மதிய வேளை தூக்கத்தில் இருந்ததால் தம்பியை கடிந்தார் கன்னிகா.
“அப்போ பேசுங்க”
“என்னத்த பேச? கோபமா வருது, ஒரே நாளுல பானும்மா சோர்ந்து போயிட்டாங்க… அவனுகளுக்கு என்னடா பிரச்சனை?” கன்னிகா ஆத்தமாட்டாமல் புலம்பினாள்.
“நான் கேட்டுப் பார்த்துட்டேன் அண்ணே வாயே திறக்க மாட்டேங்கறார்”
“வேணும்னு அடமா நின்னு கல்யாணம் பண்ண தெரிஞ்துல.அப்போ பிரச்சனை வந்தாலும் நின்னு சமாளிக்கத் தான் வேணும். அதை விட்டுட்டு வயசான காலத்துல அவங்களை படுத்தி வைக்கனுமா?,
பசங்க மட்டும் தான் பெத்தவங்களைப் பார்த்துக்கணுமா என்ன? இந்தக் காலத்துல பெண் பிள்ளைங்க தான் பார்த்துக்குதுங்க.
நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயி சித்தப்பாவை பார்த்துகிறேன் இனி உங்களை நம்பி விடுறதா இல்லை” கன்னிக்காவின் தொடர் தாக்குதலில் அலறியவன்.
“ஐயோ!… அவங்க இல்லனா இந்த வீடு ஒண்ணுமே இல்லை”
“தெரியுதுல அப்போ எப்படி பார்த்துக்கனும்……அது வேணும், இது வேணும் குடைச்சல் கொடுக்கிற பெத்தவங்களடா?
உங்களை என்ன அவங்களைத் தலையில தூக்கி வச்சா பார்க்க சொல்லுச்சு” பேச்சில் அத்தனை ஆதங்கம் சித்ராவிற்கு.
“அக்கா அதெல்லாம் இல்லக்கா குழந்தை இல்லனு யோசனை விசு அண்ணாக்கு.அண்ணிய எண்ணி சின்ன மனஸ்தாபம் இதுக்கு மேல உள்ர போயி என்னால கேட்க முடியாதுக்கா” பசுபதி சொல்வதும் உண்மை தானே
“அந்த பொண்ணை சொல்லி தப்பிக்க வேண்டாம் பசுபதி இவன் மனசுல ஒன்னை வச்சுக்கிட்டு அந்தப் பொண்ணைப் படுத்துனா, அவ என்ன செய்வா?
இவனுக்குத் தான் நம்பக் குடும்பத்தைப் பத்தி தெரியும் இவன் தான் வர போகப் பழக்கி விடனும். அதை விட்டுட்டு அந்தப் பொண்ணைச் சொல்ல என்ன இருக்கு?
இதோ காலையில தான் வந்தோம்.அந்த விமலா பொண்ணு நல்ல தான் பேசுது. அப்படி ஒன்னும் அது அடாவடி பொண்ணு மாதிரி தெரியலை” விமலா பேசிய சில நொடிகளிலே கன்னித்து விட்டனர் நாத்திகள்
“நானும் அதைத் தான் யோசிச்சேன் கன்னல் கிட்ட ரொம்ப நெருங்கிட்டாங்க” பசுபதியும் அதனை ஒப்பு கொண்டான்.
“அவ கிட்ட மட்டுமில்ல இந்து, மது கிட்ட கூட நல்லாத்தான் பேசுறா. இப்ப கூட நாளும் மொட்டை மாடில தான் இருக்குங்கா”
“அது சரி”
“அதை விடு விசு என்னதான்டா சொல்றான்”
“அண்ணி வேலைய விட்டுட்டு வந்துட்டாங்க. வேலைய விடப் போறேன்னு அவர் கிட்ட சொல்லல போல, அது போக அன்னைக்கு வீட்டுல வச்சு அவங்க அம்மா எல்லாரும் இருக்க அப்பா பேசுனது அவனுக்கு ரொம்ப வருத்தம்”
“ஏண்டா? அவன் கல்யாணம் பண்ணி அஞ்சு வருஷம் அவன் போக்குல தான் இருந்தான் அப்பா எதுவும் கேட்டாரா?”
இல்லை என்பது போல் தலையை ஆட்டினான் பசுபதி
“அப்புறம் என்ன? விமலா அம்மா வந்து அப்பா கிட்ட பேச போயி தான் அவர் பேசி இருக்கார். அவரா ஒன்னும் பேசலை, அப்படி பேசுற ஆளும் அவரில்லை அது அவனுக்குத் தெரியாதா?” சரியாக கேட்டு வைத்தார் கன்னிகா.
“நீங்க சொல்றது எல்லாம் எனக்குப் புரியுது அது அவருக்குப் புரியனுமே.அண்ணி வேற அவர் கூடப் பேசுறதில்லை போல,
அதுல கோபமாகி அம்மாக்கு போன் போட .அதை நெனைச்சு அம்மா படுக்க.அம்மாவை பார்த்து அப்பா டென்ஷனாகி அய்யயோ முடியல சாமி”
புது மாப்பிள்ளைக்கு அடி பலம் போலும் கடந்த சில நாட்களாக வாங்கிய அடி புது குடும்பஸ்தனை அலற வைத்தது. அவனது நிலையை எண்ணியும் பாவமாக இருந்தது பெண்களுக்கு.
“சரி விடுடா நான் அவன் கிட்ட பேசுறேன் ஒரு பத்து நாள் போகட்டும் இங்க வர வச்சுப் பேசிடலாம் என்ன?”
“சரிக்கா வரும் பொதுப் பெரியவரையும் குடும்பத்தோடு வர சொல்லுங்க”
“அவனுக்கு என்னடா?” சித்ரா அலற
“அவர் விசுவுக்கு மேல பண்ணி கிட்டு இருக்கார் போல, விமலா அண்ணி கன்னல் கிட்ட சொல்லி வருத்தப்பட்டங்களாம்.அவ என்கிட்ட சொல்லி வானதி அம்மா கிட்ட சொல்ல சொன்னா.”
“விளங்கும் போ” சித்ரா சலித்துக் கொண்டாள்.
“அவனுகளைப் பிறகு பார்க்கலாம் ஐயா! கதை என்ன? கல்யாணத்துக்கு முன்ன ஆச்சா…. போச்சான….” தமக்கையின் கேள்வியில் ஜெர்க்கான கடைக்குட்டி.
“அது!… அது!… …..இப்போ பொண்ணு ஓகே தான்” மழுப்பலாக பதில் அளித்து வைக்க.
“என்ன வார்த்தை வாயிதா வாங்குது” குறும்பாக தம்பியை சீண்டினார் கன்னிகா.
“அக்கா உன் பொண்ணுங்களோட சேர்ந்து நீ ரொம்பக் கெட்டுப் போயிட்ட போ” என்றவன் திரும்பி செல்ல பார்க்க அவனது பின் புற சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்திய சித்ரா.
“எங்கடா ஓடுற கேட்டதுக்குப் பதில் சொல்லிட்டு போ”
“அய்யயோ அக்கா விடு” என்றவன் முகத்தில் வெட்கத்தின் சாயல் அதனை கண்டவர்கள் அதற்கு மேல் அவனை சீண்டாமல்.
“சரி இப்போ போ மூணு மாசம் போகட்டும் அப்புறம் பேசுகிறோம்” விட்டால் போதுமென வேகமாக நடந்தவன் அந்த மூணு மாச கணக்கை எண்ணியவாறே மாடிக்குச் சென்றான்.
*********
மாடியில் மங்கையர் கூட்டத்தை கண்டவன் நெஞ்சை பிடிக்காத குறை தான்.
“ஏய்!… இந்து தள்ளி விட்டுறாத விழுந்தேன் நேரா கைலாசம் தான்” கன்னல்.
“குட்டி அத்தை யாராவது வந்துட்டா வம்பு”
“ஆமா சீக்கரம் பறி பக்கத்து வீட்டம்மா பார்த்துச்சுச் சண்டை கட்டும்” மது பயந்து கொண்டே சுற்றி சுற்றி பார்த்தவாறு கன்னலிடம் பேசி கொண்டு இருந்தாள்
“மது பயப்புடாத யாராவது வந்தா ஓடிடலாம்” இது விமலா.
“இல்ல அத்த அந்த வீட்டம்மா ரொம்பப் பேசும். அது வீட்டு கிளைல நம்ப வீட்டு பொருள் பட்டுச்சுனா கூட அந்த பேச்சு பேசும் அதான் பயமா இருக்கு” இந்துமதி சொல்வது போல் பக்கத்து வீட்டு பாட்டி சர்ச்சையான ஆள் தான்.
“அப்போ போதும் கன்னல் இறங்கு” விமலாவுக்கு இப்போது கொஞ்சம் பயமாக தான் இருந்தது.
“இன்னும் ஒன்னே ஒன்னு தான் விமலாக்கா வரேன்” என்றவள் ஆளுக்கு ஒரு விதம் என மாங்காயை பறித்துக் கொண்டு,
சுவற்றில் இருந்து குதிக்கப் எங்கே அவள் விழுந்து வைத்து விடுவாளோ என்று பதறியெடுத்து ஓடினான் பசுபதி.
அதற்குள் குதித்தவள் கெத்தாக நிற்க “அடிப்பாவி எங்கிருந்து குத்துகிற கை கால் உடைஞ்சா என்னத்துக்கு ஆகும் ………..” அப்போது தான் பசுபதியை பார்த்தனர்.
“இந்தாங்கடி நீங்களும் கூட்டா” மனைவியை கடிந்தவன் அக்காள் மகள்களையும் சாடினான்.
“எஸ் எஸ் நாங்க எல்லாம் ஒரு டீம் ஆகிட்டோம்” பெருமையாக இந்து.
“கிழிஞ்சுது சேர்ந்ததெல்லாம் சிவலிங்கம் தான் போ” என்றவன் விமலாவிடம் திரும்பி “அண்ணி நீங்களுமா?” பாவம் போல் கேட்ட கொழுந்தனிடம்
“திருட்டு மாங்கா செம டேஸ்ட்டா இருக்குங்க அதான் ட்ரியல்” படு தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு பெண் பதில் சொல்ல பலம் கொண்டு தலையில் அடித்து கொண்டான்.
“நான் ஒன்னுமே சொல்றதுக்கில்ல ஏற்கனவே இரண்டு வால் இல்லாத வானரம் இதுல இன்னும் இரண்டு பேர் கூட்டு”
“மாமா அப்போ உங்க அண்ணியையும் குரங்குனு சொல்லுறீங்களா” கன்னல் கோர்த்துவிட பதறியவன்.
“ஐயோ! அண்ணி இல்லண்ணி! நான் பொதுவா சொன்னேன்” இன்னும் நின்றால் வகைத் தொகையாக இதுங்களிடம் மாட்டி கொள்வோம் என்றதை கண்டு கொண்டவன்.
கன்னலை பார்த்து முறைத்துக் கொண்டே விலகி செல்ல அத்தனை பெண்கள் இதழ்களும் அழகாக நெளிந்தது.
“வீட்டையே ஆட்டி வச்ச சிங்கத்தோட நிலைமைய பார்த்தியா இந்து?” மது பசுபதியின் காதில் விழும் படி உரக்க சொல்ல.
“நானும் அதை தான் பார்த்துட்டு இருக்கேன் இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்” என்றதும் படியில் இறங்கியவன் அங்குக் கிடந்த குச்சியைத் தூக்கி எரிந்து விட்டு
“ரவடி பொம்பளங்களா” என்று சொல்லி செல்ல பெண்கள் வாய் விட்டு சிரித்தனர்.
******************
சுட்டெரிக்கும் சூரியன் தனது கோபம் முழுவதையும் கொட்டி சற்று தனியா. இதமாக வந்தது மாலை வேளை வீட்டின் கூடத்தில் அனைவரும் அமர்ந்திருக்க வெகு நாள் சென்று ஒன்றாக டீ அருந்தினர்.
நடுத்தர அளவுள்ள வட்டாவில் ஏலக்காய், இஞ்சி சேர்த்து இனிப்போடு சிறு எரிச்சல் தரும் தேநீர் நிரம்பி இருக்க வானதி ஒவ்வொரு லோட்டாவிலும் அதனை நிரப்பி வைக்க. இந்துவும். மதுவும் ஒவ்வொரு ஆளுக்கும் சென்று கொடுத்து வந்தனர்.
சுற்றி அனைவரும் அமர்ந்திருக்க பெண்களுக்கு ஜாடை செய்து மெதுவாகப் பேச்சை தொடங்கினார் ஈஸ்வர் “வணங்கா பாப்பாங்க எதோ சொல்லனுமா என்னானு கேளு” என்று கன்னிகா சித்ராவை இழுத்து முன் நிறுத்தினார்
கன்னிகா, “சித்தப்பா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்”
“அது ஒன்னு தான் குறைச்சல் எனக்கு……. அம்மாடி சங்கடபட்டுகாத இப்போ சூழ்நிலை சரியில்ல இந்த மனநிலையில கல்யாணம் காட்சி சரி வராது.
“வணங்கா வீடுன்னா பிரச்சனை இருக்கத் தான் செய்யும் அதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்” அருணகிரி கோபமாகத் தான் பேசினார்.
“அண்ணே இங்கன பாடு என்னானு தெரியும் தானே, நீங்களே கண் கொண்டு பார்க்கறீங்க என்ன செய்தின்னு இந்த நிலையில கல்யாணம் எப்படினே? வணங்காமுடியின் பேச்சுப் புரிந்தாலும் கடமை, முறையென்று உள்ளதே.
சித்ரா, “அப்பா எல்லாம் சரிதான் உங்க நட்சத்திர பிறந்த நாள் வர இன்னும் இரண்டு மாசம் இருக்கு. அதுக்குள்ள எல்லாம் சரியா போகும் சரினு சொல்லுங்கப்பா”
“சித்தப்பா இதெல்லாம் புண்ணியம். எங்களுக்குப் புண்ணியம் செய்ய வாய்ப்பு கொடுங்க. அப்பா அம்மாக்கு பண்ணியாச்சு அதே போல உங்களுக்கும் பண்ணி பார்க்கணும்” கெஞ்சினார் கன்னிகா.
“அம்மாடி எல்லாம் புள்ளைங்களும் சேர்ந்து செய்றது தான் ‘சஷ்டியப்த பூர்த்தி’, ஆனா இங்க ஆளுக்கு ஒரு திசையா இருக்கு,
எல்லாம் ஒன்னு சேரட்டும் பிறகு இந்தப் பேச்சை எடுக்கலாம்” என்றவர் எழுந்து செல்ல பார்க்க அவரைத் தடுத்த கன்னிகா.
“சித்தப்பா எல்லாச் சரியா போகும் நீங்க கல்யாணத்துக்கு ஒப்புதல் கொடுங்க ப்ளீஸ் சித்தப்பா”
“அம்மாடி”
“ப்பா….. ப்ளீஸ்” சித்ரா.
வணங்காமுடி மௌனம் கொள்ள அகிலா பெண்களை ஊக்கினார் சன்னக் குரலில் மகள்களிடம் “விடாத.. பேசு…. பேசு….”
“ப்பா ஒரு பத்து நாள் போகட்டும் ஸ்வாமி, விசுவை அழைச்சுப் பேசலாம்”
“ப்ச் என்னத்த பேசுறது” வணங்காமுடி எரிச்சல் கலந்த குரலில் சொல்ல பானுமதி அமைதியாக வேடிக்கை பார்த்து நின்றார்.
“வணங்கா என்ன உரசல் வந்தாலும் பேசினா பஞ்சா போகுமுடா. நம்மில் கெட்டது கோடி பார்த்துக்கலாம் விடு. நீ கல்யாணத்துக்கு மட்டும் சரினு சொல்லு”
ஈஸ்வரும் சொல்ல… மறுக்க வழி இல்லாமல் போனது வணங்காமுடிக்கு.
“சரி எப்படி பண்ண போறீங்க?” பொதுவாகக் கேட்டு வைத்தார்.
பசுபதி, “இன்னும் முடிவு பண்ணலைப்பா, ஆனா கல்யாணம் திருக்கடையூர்ல… கோவிலா? மண்டபமானு? பேசணும்”
“அண்ணா!..” வணங்கா எதுவோ சொல்ல வர
“கல்யாணத்துக்கு மட்டும் நீ ஒப்புதல் கொடுத்தா போதும் மீதமெல்லாம் நானும் பிள்ளைகளும் பார்த்துக்குவோம்” என்றதும்.
சரி என்பது போல் தலையை ஆட்டியவர் பானுமதியை பார்க்க. பல வருடங்கள் சென்று பெண் முகத்தில் மந்தகாச புன்னகை.
அன்று திருமணம் ஒப்புதல் வாங்கிய தருணம் வணங்காமுடிக்கு மின்னலாக வந்து மறைந்தது.
******************
இரு மாதங்களாகக் கடை கணக்கை பார்க்க வில்லைக் கல்யாணம் வேலை.அது போக ஒரு வாரமாகப் பிள்ளைகளின் பிரச்சனை என்று உலண்டவர் இன்று தான் அதனை கையில் எடுத்தார்.
வேலன், வெங்கடேஷ், பசுபதியென்று கடையைப் பார்த்து கொண்டாலும். ஒவ்வொரு மாத கணக்கை முடிப்பது வணங்காமுடி தான்.
இடையில் இரவு உணவை உண்டவர் இரு மாதங்கள் நிறுத்தி வைத்த வேலையை முடிக்கும் போது மணி நடு நாசியைத் தொட்டு விட்டது.கணக்கை முடித்து விட்டு பசுபதியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்
பானுமதி உறங்காமல் கணவனுக்காகக் காத்துக் கொண்டு இருந்தார். நேரம் சென்று இரவு செய்யும் வேலை அவருக்கு அத்தனை ஒவ்வாமையைக் கொடுத்தது.
அது போக அவரது தற்போதைய உடல் நிலை வேறு இதையெல்லாம் எண்ணி பெண் விழித்திருந்தார்.
வழமை போல் தனது செயலை முடித்துக் கொண்டு வந்தவர் படுக்கையில் படுத்துக் கொண்டு இரு கைகளையும் இடுப்பில் வைத்து அழுத்தி முகம் சுருக்க
“இடுப்பு கடுக்குதா இதுக்குத் தான் சொன்னேன்….. வயசு திரும்புதா தண்டல் காரரே!…. பசுபதிகிட்ட கொடுக்க வேண்டியது தானே”
“அவர் தாங்க எல்லாமே பண்ணுறார் கணக்கு மட்டும் தான் நான் பார்க்கிறேன்”
“என்னவோ போங்க… தைலம் எடுக்கவா”
“வேணாமுங்க….. இங்க வாங்களேன்” ஒருமாதிரி குரலில் மனைவியை அழைக்க.
நெருங்கிய பேரிளம் பெண்ணை இழுத்து தன் புஜத்தில் சரித்துக் கொண்டவரை பார்த்து
“என்ன தண்டல் காரரே!”
“என்னங்க திரும்பக் கட்டிக்கப் போறீங்களா?”
“வேற வழி”
“ஏங்க அப்படி ஒரு சலிப்பு”
“ஒரே கிழவனைக் கல்யாணம் பண்ணுரேனு வருத்தம் தண்டல் காரரே”
“குசும்பு தானுங்க டைப்பிஸ்ட்டம்மா நான் கிழவனா?”
“பின்ன இல்லையா? பேத்தி எடுத்தாச்சு கொள்ளு பேத்தியும் பார்த்தாச்சு” கன்னிகா சித்ராவின் மகன் வழி பிள்ளையை எண்ணி சொல்ல.
“ஓ! நீங்க யாருங்க”
“நான் கொஞ்சமா கிழவி” கண்ணைச் சுருக்கி கொண்டு நரம்புகள் புடைத்த கையைச் சுருக்கி காட்ட சொக்கி தான் போனார் தண்டல்காரர்.
முதுமையின் முதல் படியில் உள்ள மாற்றங்கள் தலை முடியில் தொடங்கி,தோள்,உடல் பருமன் என்று நிறைய உண்டு.
சிலருக்கு தோள் சுருங்கும், சிலருக்கு முடி இருக்காது சிலருக்குத் தொப்பை இருக்கும். இளமை அள்ளி தந்த அழகை முதுமை கரைந்து நிற்க அந்த நிலையிலும் ரசிக்கத் தூண்டியது தண்டல் காரரின் இந்தப் பொல்லா காதல் மனம்.
“டைப்பிஸ்ட்டம்மா அள்ளிக்கணும் போல இருக்குங்க”
“அய்யயோ!…. தண்டல் காரரே!… வர வர பேச்சு எல்லை மீறுது”
“என்னங்க இது நீங்க தானே அறுபதில் ஆசை கூடுமுன்னு சொன்னீங்க.இங்கன எக்கச்சக்கமா கூடி போச்சுங்க” என்றவர் நெருங்க அவரைத் தடுத்தவரே அலறினார் பானு.
“ தண்டல் காரரே! பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாண்ட கதைத்தான் …….”
“இன்னொரு முறை கிழவன்னு சொல்லாதீங்க டைப்பிஸ்ட்டம்மா” போலி கோபம் போல் வணங்காமுடி சொல்ல.
“கிழவனை………. “பானுமதி எதுவோ சொல்ல போக அதனை முடிக்க விடாமல் வம்பு செய்து வைத்தார் வணங்காமுடி.
இத்தகையா அன்பு சாத்தியமா என்ற எண்ணத்தை விடுத்து. இது சாத்தியமென்று அடித்துக் கூறியது இவர்களது வாழ்க்கை.
இளமையில் நம்பிக்கை கொண்டு கைகூடிய கண்ணியமான காதல் முதுமையில் வெற்றிக் கொண்டு கம்பீரமாக நின்றது.
இது காலம் தாண்டும் காவியம் போலும்………..