வடக்கு வீதி வணங்காமுடி – 12
இன்று சனி கிழமை போலும் சற்று ஆறுதலாகத் தான் விடியல் இருந்தது. காலையில் குளித்து முடித்துப் புது மாப்பிள்ளை கிளம்பி வாசலுக்கு வர அவனுக்காகவே காத்திருந்த வணங்காமுடி அவனை நெருங்கி,
” என்னை திருவானைக் கோவில்ல இறக்கி விட்டுருங்க” என்றதும் வியப்பை மறைத்தவன்.
“சரிங்கப்பா வாங்க” வண்டியில் ஏறி அமர, அவன் பின்னில் அமர்ந்து தோளை பிடித்துக் கொண்டார் வணங்காமுடி.
பயணம் தொடங்க இருவரிடமும் அமைதி.
ஹுக்கும்!…… தொண்டையைக் கனைத்தவர் “எப்படி போகுதுங்க உங்க கல்யாண வாழ்க்கை” தந்தையின் தீடீர் கேள்வியில் திடுக்கிட்டவன் சிறு நொடிகள் எடுத்துக் கொண்டு தன்னை நிதானம் செய்த பிறகு,
“நல்ல போகுதுப்பா”
“அப்பா கிட்ட பேசுறதா எண்ணி பேசுனா இது தாங்க பதிலா வரும் நான் நண்பனா கேக்குறேன்” என்றதும் பெரும் அதிர்வில் வண்டியை நிறுத்தியே விட்டான் அவரது பேச்சு என்னவோ பண்ணியது.
“என்னங்க கேட்டேன் இப்படி தடுமாறி போறீங்க” வணங்காவின் கேள்வியில் சிறு புன்னகை கொண்டவன்.
“ப்பா வாழ்க்கை திகிலும் தேனுமா நல்லாவே போகுது” மகன் பதிலில் விரிந்த புன்னகை அவரிடம்.
“தேனும் தினையும் தெரியுமுங்க அது என்னங்க திகிலு? தேனு?”
“உங்க மருமக எதிர்பார்க்காத நேரம் எதையாவது செஞ்சு வைக்கிறா அப்போ திகிலடிச்சு போகுது, என்னைய கொண்டு குடும்பத்தோட இணங்கி நிற்கும் போது தேனு தான்”
“அப்போ நான் உங்களுக்கு நியாயம் செஞ்சுட்டேனு சொல்லுங்க” அவரது பேச்சில் சிறு சங்கடம் பிறக்க.
“ப்பா நான் வேண்டான்னு சொன்னதுக்குக் காரணம் படிப்பு தான் மத்த படி யோசிக்கல”
“நல்ல கெட்டிக்கார பொண்ணு அதுக்கு அனுபவ பாடம் அதிகம் கத்து கொடுங்க…. கற்பூரமா புடுச்சுக்கும்”
“ஹ்ம்ம் சரிங்கப்பா” என்றவன் மீண்டும் வண்டியை கிளப்பி அவரைக் கோவிலில் இறக்கி விட்டவன் சிறு தலை அசைப்புடன் விடைபெற.
இரு ஆண்கள் முகத்திலும் தெளிவு…
********
தந்தையை இறக்கி விட்டு திரும்பியவன் சிறு தூரம் தான் வண்டியை நகர்த்தி இருப்பான். அதற்குள் அவனது கை பேசி அழைக்க எடுத்து அதனைக் காதுக்குக் கொடுத்தவனை பலமாக தாக்கியது எதிர்முனை.
“டேய்!.. என்ன?.. போன் பண்ணா எடுக்க மாட்டியா நீ?” அந்தப் பக்கம் விசு எடுத்த எடுப்பில் உச்சம் தொட
“அண்ணே!.. இங்க இப்போ தான் எல்லாம் ஒரு அளவுக்குச் சரியாச்சு நானே இன்னைக்குப் பேசலாம்னு இருந்தேன்”
“எங்களை ஒதுக்கிட்டிங்க தானே” இது ஸ்வாமி இரண்டும் ஒரே தொடர்பில் இருந்து பேசியது போலும்.
“கான் கால் லா!…..சொல்லுங்க அண்ணே!…”
“என்னத்த டா சொல்ல… நீ மட்டும் அங்க இருந்து ஜாலியா இருக்க. நாங்க இரண்டும் பேரும் அம்மாக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம பாடாத பாடு படுறோம்,
வீட்டுல ஒருத்தரும் பேச மாட்டேங்கீறீங்க. நாங்க யாருக்குமே வேணாம்ல” ஸ்வாமி குரல் உடைய பேசி வைக்க.
“அண்ணே இது என்ன பேச்சு? பொண்டாட்டி சண்டை போயி பங்காளி சண்டை கட்டுற நீ… நான் ஜாலியா இருக்கேனா? அப்பாக்கு முடியாம போச்சுத் தெரியுமா?” பசுபதிக்குக் கோபம் வந்து விட்டது.
என்ன சூழ்நிலை என்று அறியாமல் பழியைத் தூக்கி தன் மேல் போட்டால் அவனும் என்ன தான் செய்வான்.
“அய்யோ!… என்னடா ஆச்சு”
“இப்போ கேளு” சலித்து கொண்டவனை
“எங்களுக்கு யாராவது பேசுனா தானே தெரியும். அப்பா அன்னைக்குப் போன் போட்டு பேசுனத்துக்கு அப்புறம் யாருமே பேசல,
வேலு மாமா ஒருதரம் போன் எடுத்தார் அப்புறம் அவரும் எடுக்கலை நாங்க என்னடா செய்றது”
“அண்ணே இங்க என்ன நடந்தது தெரியுமா?” என்று நடந்தவற்றைச் சொல்லி முடிக்க விசு, ஸ்வாமி இருவரும் மௌனம் கொண்டனர்.
“சொல்லுங்க இப்போ நான் சந்தோசமா இருக்கேனா?”
“எதோ வேகத்துல அந்த வார்த்தை சொல்லிட்டேன் பசுபதி மன்னிச்சிடு டா…… அவளும் இல்லாம பைத்தியம் பிடிக்குது எனக்கு” உண்மையாக வருந்தி நின்றான் விசு அவனது நிலை புரிய.
“அண்ணே அடுத்த வாரம் இரண்டு பேரும் வாங்க.என் பொண்டாட்டிக்கு தாலி பெருக்கி போடுறாங்க, அன்னைக்கே மறு வீடு கிளம்பிடுவேன்.
வீட்டுல அக்காங்க, அப்பா, அம்மா, எல்லாரும் இருப்பாங்க என்ன யோசிக்கிறீங்களோ அதைப் பேசி சுமுகமான முடிவை எடுங்க.
இனி ஒருதரம் எல்லாரையும் கூட்டி பேசுற நிலை வர வேணாம் …வரவும் விடாதீங்க. அது கணவன் மனைவி உறவுக்கு நல்லதில்ல” தம்பியின் முதிர்வு பேச்சில் இருவரும் அசந்து நின்றனர்.
“பரவாயில்லையே பக்கா குடும்பஸ்தன் ஆகிட்ட போ” என்று கேலி போல் பெருமை கொண்டான் விசு.
“ப்ச் அட நீ வேற ஏண்ணே!…” என்றவன் முகத்திலும் சிரிப்பு.
“எப்படி டா இருக்கா” விசுவின் குரல் சற்று இறங்கி மனைவியை பற்றி கேட்க அதனை கண்டு கொண்ட பசுபதி.
“அதை ஏன் கேக்குற வீட்டுல ஒரே பெண்கள் ஆதிக்கமா போச்சு இந்து, மது, விமலா அண்ணி, அது போக என் பொஞ்சாதி நாலு பேரும் அடிக்கிற லூட்டி தாங்க முடியலை,
சமைக்கிறேன்னு வீட்டை ஒரு வழி பண்ணுறாங்க, அது போகத் பக்கத்து வீட்டில் திருட்டு மாங்கா. இதுக்கெல்லாம் தலைவர் யாரு தெரியுமா” தம்பியின் பேச்சில் வியந்த தமையன்கள் ஆவல் பொங்க
“யாருடா”
“வேற யாரு என் பொண்டாட்டி தான். வாலு மட்டும் தாண்ணே குறை வச்சு செய்றா” என்றதும் அப்படி ஒரு சிரிப்பு. தம்பியின் பேச்சில் விசு மகிழ,ஸ்வாமி மனம் ஏனோ ஏங்கி நின்றது.
“போன் பேச சொல்லுடா உங்க அண்ணிய”
“எதுக்குத் திரும்ப அடிச்சுகிட்டு இருக்கவா. இருந்தது இருந்தாச்சு இன்னும் ஒரு வார பொழுது சமாளி. அப்புறம் இங்க வந்து நேருல பேசு முகத்துக்கு முகம் கண்ணாடி”
“நீ சொல்றதும் சரிதான்”
“என்ன ஸ்வாமி ண்ணே!.. பேச்சே காணோம்”
“ப்ச் ஒன்னுமில்லடா”
“நீங்க சொல்லுற தினுசே தெரியுதுண்ணே.வாய்ய திறந்த பேசுங்க அப்போ தான் நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு எங்களுக்கு தெரியும்”
“ஹ்ம்ம்!..”
விசு,“டேய் அம்மா,அப்பாகிட்ட பேசணும் டா”
“அதான் சொல்றேனே அம்மா பேசுவாங்க தாலி பெருக்கி போடுறதுக்கு அப்போ பேசுங்க. அப்பாகிட்ட நேருல வந்து பேசுங்க அப்போதான் சரியா இருக்கும்.
“சரி டா இரண்டு போரையும் பார்த்துக்கோ”
“கண்டிப்பா அதை விட என்ன வேலை என்றவன் அண்ணே சொல்ல மறந்துட்டேன் அப்பாக்கு அறுபது பண்ணலாம்னு இருக்கோம்” பசுபதியின் பேச்சில் அமைதியாகி போனார்கள் இருவரும்.
“என்ன இரண்டு பேரும் பேச மாட்டேங்கீறீங்க”
“இதுல கூட எங்களை ஒதிக்கிடீங்களா?”
“அட நீ வேற இன்னும் முடிவு பண்ணலை உங்களுக்காகத் தான் கன்னிகா அக்காவும், சித்ரா அக்காவும் காத்து இருகாங்க.உங்க பிரச்சனையை மனசில் வச்சு அப்பா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டார்” அதுவரை இருந்த வருத்தம் முற்றிலும் பறக்க.
“ஐயோ! என்னடா சொல்லுற” ஸ்வாமி பதறினான்
“இருங்க.. இருங்க,,,, பதறாதீங்க அக்காவும், ஈஸ்வர் அப்பா ,அருணகிரி அப்பா எல்லாரும் சேர்ந்து சம்மதம் வாங்கிட்டாங்க”
“அப்பாடா”, விசு.
“நீங்க வந்து உங்க பக்கத்தை சரி பண்ணிட்டா நம்பக் கல்யாண வேலையைப் பார்க்கலாம்” மீண்டும் இருவரும் மௌனம் கொள்ள
“அண்ணே!… எதுவும் யோசிக்காதீங்க பார்த்துக்கலாம்”
“சரி டா”
“சரிண்ணே வைக்கிறேன் கடைக்குப் போகனும்”
“சரிடா பார்த்துக்கோ”
“ஹ்ம்ம்,, சரிண்ணே” என்றவன் போனை அனைத்து விட்டு கடையை நோக்கி விரைந்தான்.
*********
இங்கு கோவிலில் வழமை போல் குபேர லிங்கத்தை கண் குளிர கண்டு அவரிடம் சில வாக்கு வாதங்கள் செய்து விட்டு வேலன் அமர்ந்திருக்கும் இடத்தில் வந்து அமர்ந்தார் வணங்காமுடி.
அவர் அமர்ந்த நொடி “என்ன வணங்கா கடைய விட்டுட்டு காலையில கோவிலுக்கு வர சொல்லி இருக்க எதுவும் முக்கியமா”
“ப்ச் சும்மா பேசத்தான் கொஞ்சம் மனசு சரியில்லை” நண்பனது பேச்சில் பதறிய வேலன்.
“என்னடா ஆச்சு”
“எல்லாம் பிள்ளைகளை பத்தி தான்”
“கடவுளே!….. வணங்கா பார்க்க போனா இது பெரிய அளவு சங்கதி இல்லடா பேசி சரி பண்ணிக்கலாம்”
“அது எனக்கும் புரியுது ஆனா என் வீட்டுக்காரம்மாக்கு புரியனுமே”
“சரி விடு பொம்பளைங்களுக்கு பயம் இருக்கத்தான் செய்யும்”
“இருக்க வேண்டியது தான் ஆனா உடம்பை போட்டு அலட்டுற அளவுக்கு இருக்க கூடாது வேலா. இந்த லட்சணத்துல 60 வேற”
“ஈஸ்வர் அண்ணே சொன்னாரு அது அது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கனும் பிள்ளைகளும் ஆசை படுதுடா பண்ணிக்கோ”
“பெரியவரும் நடுவரும் என்ன யோசனைன்னு தெரியலையே?” என்றதும் சிறு புன்னகை அவரிடம்.
“எல்லாரும் வணங்காமுடி பிள்ளைங்க தானே யோசனைக்கு அப்பாற் பட்டு தான் நிற்பாங்க”
“என்னடா நீ கேலி பண்ணுற”
“உண்மை அது தானே நீ பண்ணாத சேட்டையா?”
“நான் இவங்களை மாதிரி என் சம்சாரத்தை நடத்தலை”
“வணங்கா நம்ப காலம் வேற டா”
“எல்லாம் காலமும் வாய்ல தானே திங்கிறோம்”
“இது விதண்டாவாதம் நான் சொல்லுறதை பொறுமையா கேளு நீ!..” என்றவர் பல நாள் பழக்கத்தை கொண்டு பிள்ளைகளை கணித்தார்
“பெரியவன் அப்படியே பானு மாதிரி எதையும் சடார்னு பேச மாட்டான். விசு உன்ன மாதிரி ஒரு சில நேரம் அடமா நிக்கும் இறங்கி வராது என்றதும்
“நான் அடாவடி காரனா?”
“பின்ன இல்லையா? ப்ச் கேளுடா….ஆனா கடைக்குட்டி இருக்கு பார் அது புருஷன் பொண்டாட்டி கலவை.
அறிவு பிள்ளையா இடத்துக்கு தக்கன மாறி பொழைச்சுக்கும்.அதுனால பிள்ளைகள் கொண்டு கவலை படாத,
பெரியவங்களா நம் கடமை எடுத்து சொல்வோம். கேட்கலன்னா அனுபவம் வலிக்க சொல்லி கொடுக்கும்” மனதில் கொண்டதை பேசினார் வேலன்.
“அந்த வலி அவங்களுக்கு வேணான்னு தானே நான் பேசுறேன்”
“புரியுதுடா”
“என்னவோ போ வேலா”
“ப்ச் வணங்கா அடுத்த வாரம் பிள்ளைங்க விசேஷத்துக்கு வாரங்க தானே. அப்போ வச்சு பேசிடு இது நம்ப கடைசி முயற்சி அப்புறம் கடவுள் விட்ட வழி.
“சரி வேலா!….. … “குடும்ப பேச்சை விடுத்தவர்கள் இப்போது தொழிலுக்கு தாவினர்.
“அப்புறம் கடை விஷயம் என்ன ஆச்சு”
“கடை பேச்சு வார்த்தை போயிட்டு இருக்கு. நம்ப விலைக்கு படிஞ்சு வந்தா முடிச்சுடலாம்” நகை கடையை புதிப்பித்து விசால படுத்த வேலை நடக்கிறது.
“பழகுன மனுஷன் தானே குறைக்க கூடாதா”
“அவர் குறைக்க தயார் தான் அவங்க பிள்ளைங்க யோசிக்கிறாங்க போல “
“ஓ!… நான் பேசவா வேலா”
“அதெல்லாம் கண்ணு குட்டி பார்த்து கரை சேர்த்துடும் நீ யோசிக்காத”
“ஹ்ம்ம்!….. நல்ல வியாபார யுக்தி சிறுசுக்கு” எங்கோ பார்த்து கொண்டே வணங்காமுடி சொல்ல.
“யாரு மவன் அவரு” என்றார் வேலன் இருவரும் சிரித்து கொண்டனர்.
நண்பனுடன் வெகு நாள் சென்று கலந்து பேசியது மனதுக்கு நிறைவை கொடுக்க. சிறிது நேரம் இருவரும் பல விடயங்கள் பேசி கொண்டு இருந்துவிட்டு சென்றனர்.
******
மனம் இன்று சமநிலை பட மெல்லிய உற்சாகம் கொண்டார் போலும் வணங்காமுடி. மனிதனுக்கு சன்னமாக விசில் பறந்தது.
கையில் உள்ள காகிதத்தில் யோசித்து யோசித்து வரும் வாரம் வரவிருக்கும் விஷேசத்திற்கான பொருள்களை பட்டியலிட்டு கொண்டு இருந்தார் பானுமதி.
முக்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு இருந்தும் முறைகள் உள்ளதே அதான்.
தனது அறைக்கு வந்து சில மணி நேரம் கடந்தும் தன்னை காணாமல் கருமமே கண்ணாக இருந்த மனைவியின் மீது வழமை போல செல்ல கோபம் வர சீண்டலை தொடங்கி விட்டார் வணங்காமுடி.
“என்ன டைப்பிஸ்ட்டம்மா காதல் கவிதையா? யோசிச்சு யோசிச்சு எழுதுறீங்க”
கணவனது பேச்சில் சிரிப்பு வர அதனை மறைத்தவர் எழுதி கொண்டே “குசும்பு தானே தண்டல் காரரே”
“உண்மையா தாங்க கேக்குறேன்”
“நான் எதுக்குங்க கவிதை எழுத போறேன்”
“அதானே” சலித்து கொண்டார்
“காதல் கடிதம் வேணா எழுதலாம்” என்றதும் குஷியாகி போனவர். படு ஆர்வமாக “ஏங்க எழுதுங்களேன் படிப்போம் எனக்கு ஆசையா இருக்கு” அவரது ஆர்வத்தில் சிரிப்பு பொங்கி கொண்டு வந்தாலும் அதனை அடக்கி.
“உங்களுக்காக எழுதுறேன் தண்டல் காரரே” என்றவர் நோட்டில் இருந்து பேப்பரை கிழித்து பிள்ளையார் சுழியிட்டு எழுத தொடங்கினார்.
வணங்காமுடிக்கு எதிரில் அமர்ந்து கொண்டு அவரை பார்த்து பார்த்து எழுதினார் அது போததென்று யோசனை வேறு பெண்ணுக்கு.
தலையை தட்டி கொள்வதும், யோசிப்பதும், சிரிப்பதும், வெட்கம் கொள்வதுமென்று வணங்காமுடியை கொலையாக கொன்று எடுத்து வெற்றிகரமாக கடிதத்தை முடித்து அவர் கையில் கொடுக்க,
ஆர்வம் பொங்க வாங்கியவர் அக்கடிதத்தை படித்த சில நொடியில் அதிர்ந்து விட்டார்.
முகத்தை அழுவது போல் வைத்து கொண்டு “டைப்பிஸ்ட்டம்மா!…..ஆ!….. ஏங்க இந்த வேலை உங்களுக்கு” அவர் சொன்ன தினுசில் விழுந்து விழுந்து சிரித்தார் பானுமதி.
அப்படி என்ன எழுதினார்?,,,,,,,,,, இதோ அவரது காதல் மடல்.
அன்புள்ள தண்டல் காரருக்கு காதல் கொண்ட மனைவி பானுமதி வணங்காமுடி எழுதிய காதல் மடல்………
முதலில் அற்புதமான துணைவனைத் தந்த கடவுளுக்கு நன்றிகள் பல.உங்களைத் தேர்வு செய்த எனது பெற்றோருக்கும் லட்ச நன்றிகள்.உங்களது பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் கோடி..
வாழ்க்கையின் ஒவ்வொரு ஏணி படியிலும் உங்கள் துணை கொண்டு என்னை ஏற்றி. தற்போது உச்சியில் வைத்து அழகு பார்த்ததற்கும், பார்ப்பதற்கும் நன்றியை ஆயிரம் முத்தங்கள் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நானின்றி போனாலும் நினைவுகள் கொண்டு வாழ வைத்து விடும் நாம் வாழ்ந்த வாழ்க்கை…….
( இது வரை கடிதம் நன்றாக தான் இருந்தது)
தற்போது உங்கள் மேல் கொண்ட காதல் தாறுமாறாக……… இந்த இடத்தில் கடிதத்தை நிறுத்தி தான் தண்டல் அலறியது.
“சும்மா படிங்க தண்டல் காரரே” என்றதும் மீண்டும் தொடர்ந்தார்.
தற்போது உங்கள் மேல் கொண்ட காதல் தாறுமாறாகப் பொங்கி கண்,காது, மூக்கு என்று வழிந்து ஓடியதால் என் காதலை இக்கால நாகரீகம் கொண்டு கடிதம் மூலம் கவி படிக்கிறேன்.
டேய்!… தண்டல் காரா (ஆத்தி மனம் அலற தொடர்ந்தார் வணங்காமுடி) உன் பொல்லா காதலை எழுத்து மூலம் என்னால் வடிக்க முடியாதுடா,
“டா” என்னும் எழுத்தை அவர் மூன்று நான்கு முறை பென்னில் எழுதி இருப்பார் போலும் பார்த்த உடனே பளிச்சிட்டது….
அது என்னாடா அது உன் காதல் கொண்டு அத்தனை கர்வம் உனக்கு .மீசை கார!… அறுபதில் ஆசை கொண்டு நீ செய்யும் சேட்டை முதுமையின் வரலாற்று காவியமோ!….
(சரி தான்)
அடேய்!……….. தண்டல்!……. மகனாய்,தம்பியாய்,கொழுந்தனாய் ,காதலனாய் நல்ல கணவனாய் , பொறுப்பான தந்தையாய் நீ கொள்ளும் ஒவ்வொரு பரிமாணமும் என்றும் கல் வெட்டாய் என்னுள்
என்னைப் படிக்கும் ஆக சிறந்த வாசகனடா நீ!…
(அது சரி)
உன்னைக் கொண்டு கவி படைக்க எண்ணி வார்த்தைகள் கோர்க்க அனைத்தும் சதி செய்து நிற்கிறது.
என்ன சொல்லி என்னுள் உன்னை நிறைக்கச் சொல்லுடா என் ஆசை தண்டல்! ……. இந்த இடத்தில் கடிதத்தை நிறுத்தி நெஞ்சை பிடித்துக் கொண்டார் மனிதன்.
“சுத்தம்!…. எத்தனை ‘டா’ ஏங்க ரொம்ப நாள் வஞ்சமோ?” அலறிய மனிதனை பார்த்து பெண் வாயை பொத்தி சிரிப்பை அடக்கியது.
போனது போகட்டும் ஒரு வரியில் உங்களை நிரப்பி நான் நின்ற இடம் நாம். இந்த இடத்தில் மனம் சற்று தடுமாறியது மனிதனுக்கு மீண்டும் அவர்………………..
உங்களுடன் நான் இருந்த ஒவ்வொரு நொடியும் எனது மன பெட்டகத்தில் பொக்கிஷமாக.நல்லவை அல்லவையில் என்னைத் தாங்கி நின்ற என் தண்டலுக்கு என் ஆயுள் உள்ளவரை உண்மையான காதலோடு இருப்பேன்….
வார்த்தைகளற்ற மௌனமே என் காதல் தண்டல் காரரே. ஏனென்றால் உங்களைச் சிறப்பிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.
மொழியே மௌனம் கொண்டது உங்கள் காதலில்…… என முடித்திருந்தார்.
விளையாட்டு போல் கடிதம் இருந்தாலும் அதில் நின்ற பொருள் அவரையும் கலங்க வைத்தது (இது காதலின் களி ப்போ? …) அதனை மறைத்தவர் கடிதத்தை மடித்துக் கொண்டே
“இனி உங்களைக் காய் கறி கணக்கு கூட எழுத சொல்ல மாட்டேங்க” என்றதும் பேரிளம் பெண் வெடித்து சிரிக்க அவரைப் பார்த்துக் கொண்டே அந்தக் கடிதத்தை அவர் அறியா வண்ணம் பத்திரப்படுத்தினார்.
இன்னும் பெண் சிரித்துக் கொண்டே இருக்கத் தாங்க மாட்டாதவராக அவரை ஒரே இழுப்பில் இழுத்து அனைத்தவர்.
அவரது தாடையைச் சற்று வன்மையாகப் பிடித்து உயர்த்தி முகம் காண செய்து “என்னங்க அப்படி ஒரு சிரிப்பு உங்களுக்கு ஹ்ம்ம்!……” என்றவர்
உன் கடிதத்திற்கு இதோ பார் கன்னத்து முத்தமொன்று என்று எண்ணினார் போலும். சிறு எச்சில் கொண்டு பெரும் ஒலியுடன் கன்னத்தில் அழுத்தி ஓர் முத்தம் வைக்க சிரிப்பு போயி சிலிர்த்து நின்றது பேரிளம் பெண்.
உடலுக்கு தெரிந்த வயது காதல் கொண்ட நுண் உணர்வுகளுக்கு தெரியவில்லை போலும்.
‘ஆன்றோர் வாக்கு படி இங்குக் காவியம் பேசி நின்றது இவர்களது (அக்காலத்தின்) காதல்’