வடக்கு வீதி வணங்காமுடி – 13
அந்தி சாயும் வேளை வானம் மந்தகாச நிலையில் புன்னகை செய்ய, அந்த புன்னகையில் கூச்சம் கொண்டு வருடி சென்றது தென்றல்.மாலை வேளைக்கே உரிதான இதம் சதாசிவ இல்லத்தையும் சற்று உரசி சென்றது போலும்.
வீட்டின் பின் வாசலில் இருந்து அப்படி ஓர் நகையொலி அரிவை அனைத்தும் கூடி அமர்ந்து அடுத்த நாள் விஷேசத்திற்குப் பூ தொடுத்துக் கொண்டு இருந்தனர்.
கிசு கிசு பேச்சும் நொடிக்கு ஒரு முறை வெடிக்கும் சிரிப்பையும் கண்டும் காணாமல் ரசித்திருந்தனர் பெரியவர்கள்.
“அக்கா இதுங்க சேட்டை தாங்களை நாலு பொண்ணுங்களும் அரை படி பூவை ஒரு மணி நேரமா கட்டுதுங்க”
“விடு!… விடு!… இது போல சந்தர்ப்பமெல்லாம் அதுங்களுக்கு இனி அமையிறது கஷ்டம்.நல்ல நாள் தானே கூடிக்க முடியும்” வானதி கை வேலை செய்து கொண்டே அகிலாவிற்குப் பதில் அளித்தார்.
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே வாசலில் அரவம் கேட்க சுவாமிநாதனும் விசுவும் வந்து கொண்டு இருந்தனர்.
நாளை நடக்க விற்கும் சடங்கிற்குப் பானுமதி அழைத்துப் பேசி இருக்க இதோ குடும்பத்துடன் வருகை தந்தனர் பெரியவனும் நடுவரும்.
அவர்களைக் கண்டதும் “வாங்க!… வாங்க!….” என்று ஈஸ்வர் அழைக்கப் பெண்கள் கூட்டம் ஆர்வமாகக் கூடத்திற்கு வந்தது.
இந்துவும் மதுவும் “வாங்க மாம்ஸ்” என்றழைக்க
கன்னல், “பெரிய மாமா வாங்க!… அக்கா வாங்க!… சின்ன மாமா வாங்க!…” என்றழைக்க அந்தப் பெண்ணின் இயல்பு தடுமாற வைத்தாலும் மூவரும் தலையசைத்து வைத்தனர்.
மீனு இயல்பு போல் விமலாவிடம் வந்து சின்ன குரலில் “எப்படி இருக்க விமலா, என்கிட்ட வரேன்னு கூடச் சொல்லல அதுக்கு அப்புறமும் நீ பேசவனு எதிர் பார்த்தேன்”
“இல்ல மீனு நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தேன் அதான் கிளம்பி வந்துட்டேன்”
“ஹ்ம்ம்…” கேட்க கேள்விகள் இருந்தும் தற்போது கேட்க முடியாத சூழல் என்பதால் மீனுவும் அமைதியாகி விட்டாள்.
***********
அனு மெதுவாக அவளிடமிருந்து இறங்கி ஒவ்வொரு இடமாகச் சென்று தேடியது.இந்துமதி நெருங்கி ஆசையாகத் தூக்க ஒரே சிணுங்கல் அவளிடம் முரண்டு இறங்கி மீண்டும் ஒரு தேடல்..
அது அணிந்திருக்கும் குட்டி மிடி அவள் நடைக்கு ஏற்ப ஆட குட்டி கண்ணை உருட்டி உருட்டி அது தேடிய அழகும்,
குண்டு கன்னத்தைத் தீண்டிய முடியை அது ஒதுக்கிய அழகும் பார்க்கும் போது அள்ளி கொண்டு தான் போனது.
“இந்து அந்தக் குட்டியை தூக்கிட்டு வாயேன்” பெரும் ஆர்வமாகக் கன்னல்.
“குட்டி அத்தை அது கிட்ட போனாலே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும்.”
“ஐயோ!…… கன்னத்தைக் கடிச்சு அமுக்கி கொஞ்சனும் போல இருக்கு” கன்னல் தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் அனுவை நெருங்கி தூக்கி அமுக்கி, கசக்கி கொஞ்ச அது தனது தொண்டையைத் திறந்து வீடே அலறும் அளவுக்குக் கத்தி வைத்தது.
பசுபதி,“அடியேய்!… பிள்ளைய விடுடி எப்படி அழுகுறா பாரு”
“ப்ச் கொஞ்சம் நேரம் அழுவா அப்புறம் பழகிடும் நீங்க கடைக்கு போங்க” என்றவள் குழந்தை அழுக அழுக பின்புறம் தூக்கி செல்ல,
அவள் பின்னால் சென்றனர் இந்துவும் மதுவும். மீனு எதற்கும் அலட்டி கொள்ளவில்லை மெதுவாகத் தனது பைகளைத் தூக்கி கொண்டு அறைக்குள் நுழைய அவள் பின்னால் சென்றாள் விமலா.
விசுவின் பார்வை தன்னைத் துளைத்தாலும் அசர வில்லைப் பெண்.அறைக்குள் நுழைந்ததும் மீனு அமைதியாக அமர அவளுக்கு எதிரில் அமர்ந்தாள் விமலா
“அத்தை எங்க விமலா?”
“அத்தையும் மாமாவும் கடைக்குப் போயி இருக்காங்க”
“ஹ்ம்ம்…….”
“எப்போ வருவாங்க?”
“போயி ஒரு மணி நேரமாகுது வர நேரம் தான் ஏன்ப்பா”
“ப்ச்” சலித்துக் கொண்ட மீனு “பேசனும் விமலா நான் வந்ததே அதுக்குத் தான்”
“என்ன சொல்லுறாரு ஸ்வாமி” விமலா ஒருவித தயக்கத்துடன் கேட்டாள்
“எதுவுமே சொல்ல மாட்டேங்கறார், அது தான் பிரச்சனை அவர் சரியா பேசி ரொம்ப நாள் ஆகுது.தேவைக்கு மட்டும் தான் பேச்சு அதுவும் பாப்பாக்கு எதுவும் வேணுனா சொல்வேன் மத்தபடி யாரோ போலத் தான் பேச்சு”
“என்னவோ போ”
“என்னை விடு நீ எப்படி இருக்க?…… அண்ணன் தம்பி பேச போயி தான் எனக்கு விஷயமே தெரியும். இப்போ விசு எங்க வீட்டுல தான் இருக்கார்….”
“ஹ்ம்ம்………”
“என்ன விமலா?”
“இப்போ தான் கொஞ்சம் தெளிவா இருக்கேன் மீனு”
“நீ ஏன் வேலைய விட்ட”
“எனக்கு வேலையை விட வாழ்க்கை முக்கியம் அதான்” பட்டெனப் பதில் தந்தது அரிவை.
“அங்க இல்லாத ஹாஸ்ப்பிடல் இல்லை. நீ கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம் விமலா”
“இல்ல மீனு நான் இப்போ எடுத்தது தான் சரியான முடிவு.சரி அதை விடுங்க போயி முகம் கழுவிட்டு வாங்க உங்களுக்கு டீ எடுத்துட்டு வரேன்” என்றவள் மீனுவின் பதிலை எதிர்பார்க்காமல் செல்ல விமலா பேச்சை தவிர்ப்பதை கண்டு கொண்டவள் அத்துடன் பேச்சை நிறுத்தி கொண்டாள்.
எல்லை வைத்து பழகும் படித்த பெண்கள் அல்லவா அவர்கள்.
**********
தனது அறைக்கு வந்த விசு கூண்டு புலியாக நடை பயின்று கொண்டு இருந்தான்.அவள் இல்லாத நாட்களைக் கடக்கத் தான் பட்ட பாட்டை எண்ணியவனுக்கு அவளைப் பார்த்ததும் கோபமாக வந்தது.
வீட்டு மக்களோடு அவள் பாந்தமாகப் பொருந்தியது மட்டுமே அவனுக்கு ஆறுதல்.மேலும் அவனுக்கு ஆச்சிரியம் கொடுத்த விடயம் என்றால் அது விமலாவை புடவையில் கண்டது தான்.
கைத்தறி புடவையில் தலையில் பூ வைத்து முந்தியை மடிக்காமல் தளர்வாக விட்டுருந்தாள். இதற்கு முன் இது போல் அவளது தோற்றத்தை கண்டதுண்டா என்ற சிந்தனை வேறு ஒரு பக்கம் ஓடியது,
கல்யாணத்தன்றும் அதை ஒட்டி சில நாட்கள் மட்டுமே அவளைப் புடவையில் பார்த்தது. அதன் பின் இந்த ஐந்தாண்டுகளில் இப்படி சம்பவம் நடந்ததாக நினைவே இல்லை.
அது போகத் தன்னைக் கண்டு கொள்ளாமல் ஆட்டம் காட்டும் அவளை எண்ணி கோபம் பொங்கியது.
அறைக்குள் வருவாளா என்று எட்டி எட்டி பார்த்தவன் பொறுமை பறக்க கோபமாக வெளியில் வரவும் வணங்காமுடி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
ஸ்வாமிநாதன் கூடத்தில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு இருந்தான் தகப்பனை பார்த்ததும் இரண்டும் ஆடு திருடிய கள்ளன் போல் முழித்து நின்றது.
வாங்க! பொதுவாக அழைத்தவர் தனது அறைக்குள் செல்ல
“வா தம்பன்!…வா விசு குட்டி!…..” என்றழைத்த பானு கையில் உள்ள பொருளை சுட்டி காட்டி வச்சுட்டு வந்துறேன் என்று செல்ல விசு ஸ்வாமியுடன் அமர்ந்து கொண்டான்.
இவர்கள் தலையை கண்டதும் அகிலா “இந்து!…. மதுவை கூப்பிடு” என்றதும் இரு பெண்களும் வந்தனர். அவர்களுடன் கன்னலும் வந்தாள் அழுகை நின்று அனு சமத்தாக அவளது கையில் அமர்ந்திருந்தது.
“இந்து!… நீயும் மதுவும் வேலன் தாத்தா வீட்டுக்கு போயி இருங்க நான் போன் பண்ணதும் வாங்க”
“சரி அம்மாச்சி” மறு பேச்சின்றி இருவரும் கிளம்ப
கன்னல்,”அத்தை நானும் போயிட்டு வரேன்” சிறு யோசனைக்குப் பின்பு “சரி பசுபதிகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடும்மா” என்றார்
“அவர் கடைக்கு கிளம்பிட்டார் அத்தை கடையைத் தாண்டி தானே போவேன் சொல்லிடுறேன்” என்றவள் அனுவை தூக்கி கொண்டு மீனுவிடம் சென்று
“அக்கா நான் பாப்பாவை வேலன் அப்பா வீட்டுக்கு தூக்கிட்டு போகவா”
“அழுவலே கன்னல் உங்களுக்கு தான் சிரமம்”
“இல்லக்கா பழகிட்டா” அதற்கு மேல் மறுக்க முடியாமல் தலை ஆட்டினாள் மீனு.மூன்றும் கிளம்பி செல்ல பெரியவர்கள் மட்டும் வீட்டில்.
வணங்காமுடி வெளியில் வந்து அமர பானுமதி அவருக்கு டீ கோப்பையைக் கொடுத்து விட்டு அவரும் அமர்ந்து கொண்டார்.
அருணகிரியும் அங்கே அறைக்குள் தான் இருந்தார் போலும் அவரும் வெளியில் வந்து அமர அமைதியான சூழல் அங்கு..
மீனுவும் விமலாவும் வழமை போல் தூணிடம் தஞ்சம்…
ஈஸ்வர் ஒருமுறை சுற்றி பார்த்தவர் மெதுவாகப் பேச்சை தொடங்கினார் “என்ன விசு காதுல கேக்குறதும் கண்ணுல பாக்குறதுக்கு எதுவும் மனசுக்கு சரியா படலையே” சற்றுக் கோபமாகத் தான் கேட்டு வைத்தார்.
“உங்களைக் கொண்டு அவனும் பானுவும் படுத்தாச்சு என்ன வேலை இது ஆஹான் ..” அருணகிரி
பெரியப்பன்கள் கேள்விகளுக்கு இருவரும் மௌனமே பதிலாகத் தர வணங்காமுடி தொடங்கினார்.
“வந்ததும் வாரததுமா இது என்ன பேச்சுன்னு நினைக்க வேண்டாம்.பேச வேண்டிய கட்டாயம் நாளைக்கு ஆளும் பேருமா இருப்பாங்க எதுவும் பேச முடியாது அப்புறம் நீங்க கிளம்பி ஆகனும்.
“எப்போயாவது தான் வரீங்க வேற.ஒவ்வொரு முறை நீங்க கிளம்பும் போது இப்படி பேசி அனுப்புறது எங்களுக்குத் தான் சங்கடமா இருக்கு” என்றவர் ஒரு பெருமூச்சுடன் மருமகளைப் பார்த்து.
“அம்மாடி சொல்லுமா” பொதுவாக அவர் கேட்க மீனு விமலாவை பார்க்க. விமலா மீனுவை பார்க்க இவர் எந்த அம்மாடியை சொல்கிறார் என்று இருவரும் முழித்து நின்றனர். அவர்கள் எண்ணத்தை கணித்தவர் போல.
“பெரியவர் சம்சாரம் உங்களைத் தான்” என்றதும் மீனுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. இருந்தும் இன்று பேசியே ஆக வேண்டிய நிலை என்பதால் முயன்று பேச்சை தொடங்கினாள்.
“சொல்லுங்க உங்களுக்கு என்ன?” மீண்டும் அவர்
அவரை நேர் கொண்டு பார்த்த அரிவை பெண் பேச தொடங்கியது எடுத்த எடுப்பிலே “விமலா மாதிரி எங்க அம்மாவோ இல்ல, எங்க அப்பாவோ இல்ல, எங்க அண்ணனோ யாருமே எனக்காக வரமாட்டாங்க மாமா. எனக்கு நான்தான் ஏன்னா எங்க கல்யாணம் அவங்களுக்கு பிடிக்கலை”
“தெரியுமே கல்யாணம் அப்போ உங்க அப்பா நேரடியாவே பேசிட்டார்” வணங்காமுடி சொல்ல இது அனைவருக்கும் புதுச் செய்தி.முதல் பேச்சு வார்த்தையின் போதே அவர்களைக் கண்டு கொண்டார் வணங்காமுடி.
“நாங்க வளர்ந்த விதமே வேற மாமா. இங்க வந்து தான் நான் உறவுகளைப் பாக்குறேன்.எப்படி சொல்லுறது எங்க வீட்டுல இது போலக் கூட்டமே வராது” என்றதும் பெரியவர்களுக்கு முனுக்கென கோபம் வந்தது.
அதனைக் கண்டு கொண்ட விமலா மீனுவின் கையை இடிக்க அப்போது தான் அவள் சுற்றி இருந்தவர்களைப் பார்த்தாள்.
”சாரி சாரி எனக்கு…. தப்பா சொல்லல” அரிவை பதறி தடுமாறி நிற்க.
“எனக்குப் புரியுதுங்க சங்கட படமா நம் குடும்பம் இதுனு பேசுங்க தடுமாற்றம் வராது” என்ற வணங்காமுடியை பார்த்த பெண்.
“நான் உங்களை ரொம்ப அட்மியர் பண்ணுறேன் மாமா எப்படி சொல்றது ஒரு அழகான பொறுப்பான குடும்பத் தலைவர் நீங்க.
நீங்க மட்டுமில்லை பெரிய மாமா அத்தை சின்ன மாமா அத்தை எல்லாரும். ஆனா உங்களைப் போல எங்க வீட்டுல இருக்க மாட்டாங்க.
இப்போ நான் போயி விமலா மாதிரி எங்க அம்மாகிட்ட சொல்லி அழுதேனா.அவங்க விமலா அம்மா மாதிரி பேசி நிற்க மாட்டாங்க இரண்டு வழி தான் எனக்குச் சொல்லுவாங்க.
ஒன்னு தனியா வாழு இல்ல அடுத்தக் கல்யாணம் பண்ணிக்கோ இதைத் தவிர அவங்ககிட்ட வேற எந்தப் பதிலையும் எதிர் பார்க்க முடியாது என் பிறந்த வீடு சமூகம் அப்படி”
“புரியுதும்மா உங்க அப்பாவும் வட நாடு தானே”
“ஆமா மாமா ஆனா சின்ன வயசுலையே வெளி நாடு போயிட்டார். அம்மா பிறந்தயிடம் பம்பாய் ஆனா அவங்களும் வெளி நாடு வாசி தான். இப்பவும் கொஞ்ச நாளுல அண்ணன் கூடப் போயி செட்டில் ஆகுறதா பிளான் மாமா”
“அந்தப் பையன் குடும்பமா அங்க தானே இருக்கார்” யோசனை போல் ஈஸ்வர்.
“ஆமா மாமா அண்ணன் அந்த ஊர் சிட்டிசன்”
“சரிமா இப்போ உங்க இரண்டு பேருக்கும் என்ன உரசல்”
“இது தான் என் பிறந்த வீடு இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த நான் எல்லாமே சொல்லி தான் ஸ்வாமியையைக் கல்யாணம் பண்ணது, ஆனா இப்போ கொஞ்ச நாள் எதுவுமே எங்களுக்குள்ள சரியில்லை”.
“ஏன்?” சிறு பதற்றத்துடன் பானுமதி.
“கேட்டுட்டேன் சொல்ல மாட்டேங்கிறார் அத்தை” என்றதும்.
“ஏன் தம்பன்” தாயின் கேள்வி மகனை வெடிக்க வைத்தது போலும்.
“என்ன? ஏன் கேக்குறீங்க? அதான் சொல்லுறாளே அவ வளர்ந்த முறையை” என்றதும் இப்போது வணங்காமுடிக்குக் கோபம் வந்து விட்டது.
“ஏன் அது பழகும் பொது உங்களுக்குத் தெரியலையா? நீங்க காதல்னு வந்து நின்னீங்களே இதெல்லாம் நான் எடுத்து சொன்னேன் அப்போ தெரியலையா உங்களுக்கு இப்போ என்னங்க புதுசா” என்றதும் வேகம் தணிந்தவன்.
“பாருங்கப்பா எனக்குப் பிள்ளையைக் கவனிக்கனும் நேரத்துக்கு அனுக்கு சாப்பாடு கொடுக்கனும்.நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு வந்து போகனும்,
உறவை அனுசரிக்கனும் இதெல்லாம் என்னோட சின்ன சின்ன எதிர்பார்ப்பு,ஆனா இங்க ஒரு நல்ல நாள் கூட லீவு போட கெஞ்ச வேண்டியதா இருக்கு”.
“…………………”
“இந்த வீட்டுல வளர்ந்த உங்களுக்கே கல்யாணம் ஆகி இத்தனை வருசத்துல இப்போ தான் உங்க எதிர்பார்ப்பு குடும்பத்தை நோக்கி வந்து இருக்கு.
அந்தப் பொண்ணு வளர்ந்த விதத்துக்கு உடனே எல்லாப் பொறுப்பும் வரணும்னு எதிர் பாக்குறது பேராசை என்ன பொறுத்தவரைக்கும்” பெரியவனுக்கு நச்சென்று குட்டு வைத்தார் வணங்காமுடி.
“அப்பா!…….”
“பேசாதீங்க” என்றவர் நீங்க சொல்லுங்கம்மா
“மாமா ஒருநாள் கூட அவர் எதிர் பரப்பை வாய்விட்டுச் சொன்னது இல்லை. இதோ இப்போ சொன்னதை என்கிட்ட சொல்லி இருந்தா நான் செஞ்சுட்டு போறேன்”
“சரி தானே”
“எனக்கு என் வேலை ரொம்பப் பிடிக்கும் மாமா என்னால வேலைய விட முடியாது.எனக்குத் தெரிஞ்ச மாதிரி நான் பிள்ளையைப் பார்த்துட்டு தான் இருக்கேன் …”
“பிறகு என்ன உங்களுக்குப் பொண்ணு தெளிவா சொல்லுதே” அருணகிரி ஸ்வாமிநாதனை பார்த்து கேட்க.
“ப்ச் ப்பா!…. இரண்டு மாசத்துக்கு முன்னாடி பாப்பாவை பார்த்துக்குற இடத்துல வழக்கம் போல அவளைக் கூப்பிட போனேன்.
அங்க பாப்பா தூங்கிட்டா போயி தூக்க போறேன் புள்ள துணி முழுக்க ஈரம் மூச்சி போயிட்டா போல .எத்தினி நேரம் இருந்தாலோ அடுத்த நாள் நல்ல காய்ச்சல்,
ஓடி ஓடி உழைக்கிறது பிள்ளைக்காகத் தான், ஆனா அவளை ஒழுங்கா பார்த்துக்க முடியலைன்னா எதுக்கு?” ஆதங்கமாக முடித்தான் சுவாமி.
‘இதற்கு என்ன பதில்?’ என்பது போல் வணங்காமுடி மீனுவை பார்த்து வைத்தார்.
“கல்யாணமாகி இத்தனை வருசத்துல என் வீடு எங்கன்னு தெரியுமா உங்களுக்கெல்லாம்” அடுத்த கட்ட குற்றத்தை பெரியவர்கள் மீது போட்டு வைக்க பொங்கிவிட்டார் வானதி.
“டேய்! மீனு அம்மா பாப்பாவை பார்த்துக்கிட்டாங்க அதான் நாங்க வரல இல்லனா அகிலா வரதா தான் பேச்சு” ஸ்வாமிக்கு குழந்தை பிறந்ததுமே வானதி அகிலா பானு மூவரும் பேசி வைத்து கொண்டனர்.
“அவங்க அம்மா ஆறு மாசந்தான் பார்த்தாங்க”
“சரிடா அதை நீ சொன்னா தானே தெரியும்”, அகிலா.
“அது அகிலாம்மா!….” தடுமாறி நின்றான் ஸ்வாமி சொல்லி இருந்தால் இவர்கள் கை கொடுத்து இருப்பார்கள் தான், ஆனால் அவனுக்கு அப்போது தனிமை தேடியதே அதை சபையில் சொல்ல முடியாம என்ன.
“சரி போனது போகட்டும் இப்போ என்னதான் சொல்லவாறீங்க இரண்டு பேரும்” அருணகிரி பொறுமை இழந்து கேட்டு வைத்தார்.
நித்தம் ஓர் சண்டை நாளும் ஒரு பஞ்சாயம் என்று இவர்கள் இருப்பது அத்தனை எரிச்சலை கொடுத்தது பெரியவருக்கு.
ஸ்வாமி சொல்ல வர அவனை முந்திய மீனு “எனக்கு அவரை ரொம்ப புடிக்கும் அவர் என்ன சொன்னாலும் நான் செய்றேன்,ஆனா என்னால வேலைய விட முடியாது.
நீ எனக்கு மட்டும் தான் என் குடும்பம் தான் முக்கியம் உங்க அம்மா வீட்டுக்கு நீ செய்யக் கூடாது போகக் கூடாது அப்படிங்கிற பொண்ணு நான் இல்ல. உங்களை மாதிரி இருக்க முடியாட்டியும் நான் ஒதுங்கி போக மாட்டேன் மாமா.
பாப்பாக்குக் கண்டிப்பா கேரிங் வேணும். அதுக்கு நான் கண்டிப்பா யோசிக்கிறேன். மிஞ்சி மிஞ்சி போன ஒரு பத்து வருஷம் என்னால வேலை பார்க்க முடியும் அப்புறம் வேலைய விட்டுருவேன்”
படு தெளிவாக விடயத்தைக் கிரகித்துப் பெண் தனது நிலையை பட படவென சுருக்கி சொல்லி, அதற்கு ஒரு தீர்வும் கண்டு சொல்ல வணங்காமுடியே ஓர் நொடி மெச்சினார்,ஆனால் மனம் தனது மனைவியை ஒப்பிட்டு பார்க்கவும் மறுக்கவில்லை.
மீனுவை போலச் சுயம் கொண்டு தனது மனைவி நின்றாலும். வேலையையும் குடும்பத்தையும் சரி விகிதம் சமாளித்த நிலை இன்னும் கண் முன் நின்றது.
பால் குடிக்கும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வேலைக்குச் செல்வது என்பது அத்தனை சுளுவா என்ன? அதுவும் அக்காலத்தில்.அதையும் சமாளித்து நின்றாளே என் அழகி மனம் மனைவியைக் கொஞ்சி நின்றது.
மீண்டும் நடப்புக்கு வந்தவர்……
“சொல்லுங்க பெரியவரே பொண்ணு தெளிவா சொல்லிடுச்சு இது.. இது… தான் பிரச்சனை .எதுவா இருந்தாலும் பேச சொல்லுங்க சரி பண்ணிக்கலாம் ஒரே போடா போட்டுருச்சு நீங்க என்ன சொல்லுறீங்க”
“………”அவனது மௌனம் எரிச்சலை கொடுக்க
“என்னங்க”
“சரிங்கப்பா எதுவா இருந்தாலும் இனி பேசுறேன்”, ஸ்வாமிநாதன்..
“ஹ்ம்ம்!…. நம்பப் பேச ஆரம்புச்சு எத்தினி மணி நேரம் இருக்கும்” என்றதும் அவரது உள் குத்துத் தெரியாமல் படு தீவிரமாகப் பதில் அளித்தான் ஸ்வாமிநாதன் ஒரு இருபது நிமிஷம்.
“ஹ்ம்ம்!..”
“ஏன்ம்மா இவர் உங்க கூடப் பேசி எத்தினி நாள் ஆகுது” மகனை சுட்டி காட்டி வணங்காமுடி மருமகளிடன் கேட்டு வைக்க.
“ஆறு மாசமாவே சரியா பேசுறதில்ல மாமா”
“இருபது நிமிஷம் பேசி சரி பண்ணிக்கிற செய்தியை ஆறு மாசம் போட்டு ஒலட்டி. என்னை சூடாக்கி உங்க அம்மாவை படுக்க வச்சு என்னங்க இது?
இது தான் கடைசி திரும்ப சொல்ல மாட்டேன்.எனக்கு அவங்க மட்டும் தான் இருக்காங்க இனி உங்களைக் கொண்டு அவங்களுக்கு எதுவுமானா என்னை மனுஷனாவே பார்க்க மாட்டிங்க” வணங்காமுடி கோப குரலில் பேசி முடித்தார்.
“கல்யாணமாகி போச்சு இனி நல்லது வந்தாலும் சரி, அல்லது வந்தாலும் சரி .நீங்களே தான் பார்த்துக்கனும் பெரியவங்களா உங்களுக்குக் கை கொடுப்போம் அது தான் எங்களால முடியும்” என்றார் அருணகிரி
“சரிங்கப்பா” இருவருக்கும் பொதுவாக சொல்லி வைத்தான்
மீனுவும் ஸ்வாமியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.சில நிமிட பேச்சில் மாற்றம் வருவது சாத்தியமில்லை என்றாலும் உரசலுக்கான காரணம் பிடிபட இருவரும் இனி வரும் காலம் அதனைச் சரி செய்யக் கண்டிப்பாக முயற்சிப்பார்கள் அல்லவா.
வரைந்து கொண்டு வரும் வாழ்க்கை ஓவியத்தில் சிறு பிழை உண்டாக. அதனைச் சரி செய்யும் வழி தெரியாமல் சிறியவர்கள் அல்லாடி நிற்க.பிழை திருத்தி கொண்டு அதனைச் சரி செய்ய வழி செய்தனர் பெரியவர்கள்.
சில நொடிகள் மௌனம் கொண்ட வணங்காமுடி அடுத்து விசுவை பார்க்க எச்சில் கூட்டி விழுங்கினான் நடு மகன்.