வடக்கு வீதி வணங்காமுடி – 14
வழமை போல் விடியல் என்றாலும் சதாசிவ இல்லம் குதூகலமாக இருந்தது. பட்டு புடவை சரசரக்க பாந்தமாகப் பேரிளம் பெண்கள் ஒருபுறமும்.
அவரவர் விருப்பத்திற்கேற்ப உடுத்தினாலும் அள்ளி கொட்டிய அழகுடன் அரிவை பெண்கள் ஒருபுறமும்.அது போக சந்தனம், குங்குமம், ஜவ்வாது, மல்லிகை என மனத்துக் கிடந்தது இல்லம்.
சற்று முன் தான் தாலி பெருக்கிய சடங்கு முடிந்தது போலும் முக்கிய உறவுகள் என்றாலும் சற்றுக் கூட்டமாகத் தான் இருந்தது.
மீனு, விமலா இருவரும் கல் வைத்த புடவை உடுத்தி இருக்க.இந்துவும் மதுவும் ஒன்று போல் சுடிதார் அணிந்து தனது தாய்கள் ஏவும் வேலைகளைச் செய்து கொண்டு இருந்தனர்.
நாத்திகளாகக் கன்னிகா மற்றும் சித்ரா வந்தவர்களைக் கவனிக்கப். பேரிளம் பெண்கள் அனைத்தும் அடுக்கலைக்குள் தஞ்சம்.
ஓரகத்திகளே மதிய சாப்பாடு செய்வதால் அவர்களுடன் சில உறவின பெண்கள் சேர்ந்து அவர்களுக்கு உதவி கொண்டு இருந்தனர்.
விமலா, மீனுவை வந்தவர்களுக்கு மஞ்சள் குங்குமம் டப்பாவில் அடைத்து அதில் வெற்றிலை, பாக்கு, பூ வைத்து கொடுத்துக் கொண்டு இருந்தனர்.
ஆண்கள் அனைவரும் திண்ணையில் அமர்ந்து தொழில், வீடு ,தங்கள் பிள்ளைகள், பொருளாதாரம்,அரசியில் என்று பேச்சில் இறங்க சரியாகச் சென்றது நேரம்.
“இந்து உள்ர போயி கொஞ்சம் காலி பை இருந்தா எடுத்துட்டு வா. எல்லாருக்கும் தட்டு வச்ச பழத்தை பிரிச்சு கொடுப்போம்” சித்ரா சொல்ல.
“சரிங்கம்மா” என்றவள் பையை எடுக்கச் சென்றாள்.
அதற்குள் மதுவை அழைத்து ஒரு வேலையைக் கொடுக்க அவளுடன் இணைந்து கொண்டாள் கன்னல். இரு பெண்களும் சல சலத்துக் கொண்டே வேலையைச் செய்தனர். அதனை கண்ட கன்னலின் தாய் செல்வி தனது கணவன் பொன்னுசாமியிடம்.
“என்னங்க இவளை பார்த்தீங்களா? இதைப் பார்த்தா புதுப் பொண்ணாட்டமா தெரியுது?. அந்தக் கையும் காலும் ஒரு இடத்துல இருக்குதான்னு பாருங்களேன்” என்று புள்ளி மானாக துள்ளி திரிந்த கன்னலை சுட்டி காட்டி கவலை கொண்டார்.
“விடுமா நானே பயந்து போயி இருந்தேன் பாப்பா என்ன செய்யிமோனு,ஆனா பரவாயில்ல நல்லா மனுஷாள் கூட ஒட்டிக்கிச்சு அது போதும்”
“என்ன? அது போதும்!….. வாய் ஓயம பேசிகிட்டு திரியிறா வாங்கனு சொன்னதோடு சரி. ஏன் மறு வீடு வர இத்தினி நாள்னு? கேட்கலாம் ‘னு’ பார்த்தேன் அம்புட மாட்டேங்கறாளே” என்றவர் முகத்தில் பெரும் பதட்டம்.
“செல்வி தேவையில்லாம பயந்துக்காத அவளைக் கொண்டு எதுவும் சங்கடமிருந்தா நமக்குத் தெரிய படுத்தி இருப்பாங்க,
அதான் உங்க அண்ணி சொன்னாங்களே வீட்டு சூழ்நிலை சரி இல்லனு.அப்போ அவங்க குடும்பத்துக்குள்ள எதோ. அது நமக்குத் தேவை இல்லை உன் பொண்ணு நல்லா இருக்கா அது போதும். நம்பக் கூடத் தான் மறு வீடு வர போறாங்க அதுனால பேச்சை விடு”
“சரிதாங்க நம்பக் கிட்ட அவங்க சொல்ல வேணாம் இவ நிலைமையைச் சொல்லலாம் தானே”
“அது சரி அவளும் இந்த வீட்டு பொண்ணு தானே தினமும் இரண்டு வேளை பேசற புள்ள இங்கன நடக்குறதை சொல்லலைனா,
நம்ப நல்லா பிள்ளைய வளர்த்து இருக்கோம்னு அர்த்தம். எந்தச் சூழ்நிலையிலும் பாப்பா பொழைச்சுக்கும் அதை எண்ணி சந்தோச படு. நான் இப்போதான் நிம்மதியா இருக்கேன் போ போயி வேலையைக் கவனி” என்றவர் அடுத்த வேலையைப் பார்க்க சென்று விட்டார்.
இன்று மாலை ஊருக்கு செல்ல கார் ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தார். அந்த வேலை இருக்கவே அவர் நழுவி விட்டார்.
திருமணத்திற்கு முன்னே மாப்பிள்ளையும் சரி பொண்ணும் சரி ஒரு பிடிப்பில்லாமல் இருந்ததால் அதனை கொண்டு மனதளவில் தவித்துப் போயிருந்தார்.
ஆனால் இங்கு வந்த பிறகு மனம் தெளிவு கொண்டு விட்டது. சற்றும் தடுமாற்றமின்றிப் பெண் சிரித்த முகமாக உரிமையாக வளம் வர மனம் நிறைந்து போனார் மனிதர்.
அதனை வணங்காமுடியிடம் சொல்லி அவரது கையைப் பற்றிக் குலுக்கி தனது நன்றியையும் தெரிவிக்க மறக்கவில்லை.
**************
அடுக்கலைக்குள் சமையலை முடித்தவர்கள் ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து வந்தனர் “அகிலா கன்னிகாவை கூப்பிட்டு பந்திய ஆரம்பிக்கச் சொல்லு ஆம்பளைங்களை உட்கார வை.
ஒருபக்கம் பொண்ணு, மாப்பிள்ளை, அப்புறம் மல்லி அத்தை , வேம்பு சித்தின்னு பெரிய டிக்கெட் எல்லாத்தையும் உட்கார வைக்கச் சொல்லு” வானதி கட கடவென சொல்ல அதனை செயல் படுத்தினார் அகிலா.
உறவு பெண்கள் அனைத்தும் அடுக்கலைக்குள் இருந்து வெளியேறிருக்க ஓரகத்திகள் மட்டுமே உள்ளே. பாத்திரத்தை ஒழுங்கு பண்ணி கொண்டே வானதி “பானு ஊருக்கு வேண்டியது எல்லாம் எடுத்து வச்சுட்டியா?”
“எல்லாம் எடுத்து வச்சாச்சு க்கா. அங்க என்ன சாமான் இருக்குனு பார்த்துட்டு உங்களுக்குச் சொல்லுறேன் கொஞ்சம் வாங்கிக் கொடுங்க”
“நீ முதல கிளம்பி போ, போயி இரண்டு நாள் ஓய்வா இரு, அப்புறம் வேலைய பார்க்கலாம். போன உடனே வேலை செய்ய வேண்டாம்” சிறு கண்டிப்பாகச் சொல்லி வைத்தார் வானதி.
“சரிக்கா”
“பானு இந்தப் பொண்ணு சொல்லுறதை பார்த்தா அங்க நிறைய வேலை இருக்கும் போல. ஒரே நாளுலே செய்றேன்னு படுத்துறத பொறுமையா செய்” அகிலா சற்றுக் கலவையாகச் சொல்லி வைத்தார்.
ஏனென்றால் நேற்றைய தினம் மீனுவிடம் வீட்டை பற்றித் தொடங்கிய பேச்சு. பெண்களின் ராஜ்யம் செய்யும் இடத்தைச் சற்று தீண்ட பெரிய குண்டை தூக்கி போட்டது அரிவை பெண்.
‘என்ன மீனு சொல்ற அடுப்படி சுத்தம் பண்ணி மூணு வருஷம் ஆச்சா?’ பெண்கள் வாய் பிளக்க பாவமாகத் தலையை ஆட்டி வைத்தாள்.
‘நாள் முழுக்க வேலை, வீடு, பாப்பா, அவர், சமையல்னு ஓடும். வார இறுதி முழுசா ஓய்வு அப்போ அடுப்படி பக்கம் போகவே பிடிக்காது அத்தை’ பெண் கொஞ்சல் போல் சொல்ல திட்டவா முடியும். மாமியார் அனைத்தும் அலண்டு நின்றது.
‘சரி மா என்னனு பார்ப்போம்’ அத்துடன் பானு முடித்துக் கொண்டார்.
அதனால் தான் அகிலா கவலை கொண்டது . இந்த அழகில் விசு வீடு வேறு உள்ளது வார இறுதி இரண்டு நாட்களும் பானு அவனுடன் என்ற முடிவு.
அகிலாவின் கவலை உணர்ந்து “அதெல்லாம் இழுத்து வைக்க மாட்டேன்க்கா. முடிஞ்சதை பார்த்துப்பேன் நிலைமை மோசமான உடனே போன் போடுறேன் நீங்க வந்துடுங்க”
“அதை விட என்ன வேலை எங்களுக்கு வந்துடுறோம்” என்றார் வானதி.
“சரி போகட்டும் பானு கொழுந்துக்கு என்னவாம் ஒரே பாச பார்வையா இருக்கு” பானுவை அவ்வப்போது முறைத்துக் கொண்டே சுற்றிய கொழுந்தனை கண்டு கொண்ட அகிலா சீண்ட
“அட ஏன் க்கா அந்தக் கூத்தை கேட்குறீங்க. நான் இரண்டு மாசம் சென்னைல இருக்கக் கூடாதாம். மிஞ்சி மிஞ்சி போனா ரெண்டே வாரம் தான் இருக்கனுமாம் என்கிட்ட ஒரே சண்டை உங்க கொழுந்தன்.
இத்தினி நாள் பெரியவன் வாயையே திறக்கலை.இப்போ அந்தப் பொண்ணும் கஷ்டம்னு சொல்லுது அப்போ நம்பத் தானே பிள்ளைகளுக்குக் கை கொடுக்கனும்.
இதெல்லாம் நான் சொல்லி தான் அவருக்குத் தெரியுமா? ஒரே அடம் சமாளிக்க முடியல அனு தேவலாம் போங்க” என்று அலுத்துக் கொண்ட பானுமதியை பார்த்து இரு பெண்களும் உரக்க சிரித்தனர்.
“இந்த விஷியத்துல என்ன பேசுறதுனு தெரியல. சரி விடு நாங்க இருக்கோம் பார்த்துகிறோம்” வானதி சொல்ல
“ஆனா பானு அப்போ பால் குடிக்கிற பிள்ளைய விட்டுட்டு போன சமாளிச்சோம். இப்போ நீ விட்டுட்டுப் போறது அடாவடி பிள்ளையை அதை நெனைச்சா தான் பயமா இருக்கு போ” அகிலா கேலி பேச அப்படி சிரிப்புப் பேரிளம் பெண்களுக்கு.
*************
பந்தி முடிந்து சிறுது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு உறவினர்கள் அனைவரும் விடைபெற அவர்களை அனுப்பி வைத்து விட்டு மேலும் சில வேலைகளை முடித்து பெண்கள் அமர வெகு நேரம் பிடித்தது.
இன்னும் சற்று நேரத்தில் பசுபதி கிளம்ப வேண்டும் என்பதால் கன்னிகா சித்ரா இருவரும் பேசி விடும் நோக்கத்தில் காத்திருந்தனர்.
கன்னிகா முதலில் பேச்சை ஸ்வாமிநாதனிடமிருந்து தொடங்கினாள் “பெரியவனே சித்தப்பா, சித்திக்கி அறுபது பண்ணலாம்னு பேச்சு இருக்கு. இதைப் பிள்ளைகள் தான் பண்ணனும் நீ என்ன சொல்லுற”
“நீங்க என்ன பண்ணனும் சொல்லுங்க க்கா பண்ணிடலாம்” விசு
“அம்மாகிட்ட கேட்டு எழுதி வச்சு இருக்கேன். நான் பட்ஜெட் போட்டு அனுப்புறேன் இன்னும் இரண்டு மாசம் முழுசா இருக்குப் பண்ணிடலாம்”, சித்ரா.
“அக்கா காசு சொல்லிடு வேற வேலை என்ன செய்யணுமோ அதைச் சனி ஞாயிறு பண்ணிடுறோம்” ஸ்வாமி.
“பெரியவனே கல்யாண செலவு அஞ்சு பேருக்கும் சம பங்கு தான். நீ வேலைய பாரு நான்,சித்ரா, பசுபதி பார்த்துக்குறோம்” கன்னிகா சொல்ல முகம் வாடியது இரு ஆண்களுக்கும் அதனைக் கண்ட சித்ரா.
“டேய் எங்களுக்கு ஒரு வேலையும் இல்ல.அது போகப் பக்கத்துல இருக்கோம் நீங்க அப்படியா சொல்லு?” தம்பியின் வாட்டம் பொறுக்காமல் நிலையை விளக்க முயன்றார் சித்ரா.
“இல்லக்கா சின்னச் சின்ன வேலை கொடுங்க”
“சரி துணி எடுக்குறது. போக்கு வரத்து வேன் பிடிக்கிறது எல்லாம் நீங்க இரண்டு பேரும் பொறுப்பெடுங்க”
“சரிக்கா”
“சாப்பாடு பசுபதி எடுக்கட்டும். அப்பாங்க கோவில் மண்டபம் பார்ப்பாங்க. நானும் சித்ராவும் என்ன சடங்கோ அதைப் பார்த்துக்குறோம்” மேலும் ஒரு சிறு ஆலசோனை நடந்தது.
இறுதியில் முடிவாக சில பொறுப்புகள் பிரிக்கப் பட வணங்காமுடி பானுமதி தம்பதியினரின் அனுபவம் கொண்ட அன்பிற்குச் சான்றளிக்கும் விழா இனிதே பிள்ளையார் சுழியிட்டது.
அதன் பின் செல்வி ,பொன்னுசாமி பிள்ளை ,பசுபதி கன்னல் கிளம்ப. அவர்களைத் தொடர்ந்து கிளப்பி நின்றனர் ஸ்வாமி, மீனு, விசு, அவர்களுடன் பானுமதி அது வரை வணங்காமுடி அவரைக் கண்டு கொள்ளவே இல்லை.
அனு குட்டியை கையில் வைத்து பேசி கொண்டு இருக்கும் கணவனை ஜாடையாகப் பானுமதி பார்க்க அவரோ அதனுடன் லயித்து விட்டார் போலும்.
இந்தப் பொல்லா சிட்டு குருவியும் தாத்தனுடன் கை கோர்த்து பாட்டியை வம்பு செய்து வைத்தது.
அதி முக்கியப் பேச்சு வார்த்தை போலும் தாத்தனுக்கும் பேத்திக்கும்.பேச்சின் முடிவில் நரை கூடிய மீசையில் கன்னத்தை வைத்து தேய்த்து.
அதனைப் பிடித்திழுத்து காது மடலை அதன் அலகு கொண்டு உரசி தாத்தனை தனக்குத் தெரிந்த வகையில் அன்பு செய்து கொண்டு இருந்தது.
இந்தப் பிணைப்பை அனைவரும் கண்டும் காணாமல் நின்றனர். காரில் ஏறும் முன்பு பானு வணங்காவை பார்த்து வைக்க அவரைக் கண்டு கொள்ளாமல் பேத்தியை மருமகளிடம் கொடுத்தவர் “எல்லாம் சரியா இருக்காம்மா”
“இருக்கு மாமா”
“சரிமா பத்திரமா போயிட்டு வாங்க” என்றவர் சிறுதும் தாமதம் செய்யாமல் கடை யை நோக்கி நடக்க அத்தனை கோபம் பானுமதிக்கு.
அனைவரும் ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்ப, சென்னை நோக்கி பறந்தது அந்த நான்கு கால் வாகனம்.
*******************
இங்குக் கமுதியை நோக்கி சீறி பாய்ந்து கொண்டு இருந்த வாகனத்தில், பாரம் பட்சம் பார்க்காமல் பசுபதியை வதைத்துக் கொண்டு இருந்தாள் கன்னல்மொழி.ஏனோ! இன்று கணவனைச் சீண்டி பார்க்க தோன்றியது.
அரக்கு நிற பட்டு புடவையில் வளையல் குலுங்க, தலையில் உள்ள மல்லிகை மனதை மயக்க, பின் சீட்டில் மனைவியை அனைத்துக் கொண்டு உல்லாசமாக வந்தவனை,
அலற வைக்கும் நோக்கத்தோடு அரிவை பெண் முன் சீட்டில் உறக்கத்தில் இருக்கும் தாய், தந்தையை ஒருமுறை பார்த்து கொண்டவள் கணவனிடம் வம்பை தொடங்கினாள்.
“என்னங்க”
“என்னம்மா”
“அங்கன எங்க வீட்டுல வந்து எப்படி இருப்பீங்க?” பெண்ணின் முகம் போலி கவலை கொள்ள அதனைத் தாங்க முடியாத புதுக் கணவன் பதறி.
“ஏய்! கல்யாண முன்ன சொன்னதைப் பத்தி யோசிக்காத கன்னல் நான் சமாளிப்பேன்”
“சரிங்க…. ஆனா ஆத்துல தான் குளிக்கிற மாதிரி இருக்கும்”
“சரிம்மா பார்த்துக்கலாம்”
“ஆத்திர அவசரத்துக்கு ரொம்பக் கஷ்டம்” இந்தப் பேச்சில் ஜெர்க்கானவன்
“ஏன் வீட்டுல டாய்லெட் இல்லையா?”
“இல்லையே” உதட்டை பிதுங்கியது பெண் அதில் கலவரமானவன்.
“என்னடி சொல்லுற அதுவும் இந்தக் காலத்துல பொம்புள புள்ள இருக்குற வீட்டுல டாய்லெட் இல்லையா? உங்க அப்பா வாத்தியார் தானே?……” என்றவன் குரல் உயர அவனது கையைப் பற்றித் தடுத்தவள்
“ப்ச் கத்தாதீங்க மாமா மெதுவா பேசுங்க அப்பா சங்கடப்படுவார்” உடனே குரலை குறைத்து
“என்னடி இது”
“நாங்கெல்லாம் காத்து வாங்கிட்டே கம்மா பக்கம் கல கலனு போவோம் .உங்கள மாதிரி நாலு சுவத்துக்குள்ள இல்ல” என்றதும் பயந்தே விட்டான் இது போல் எல்லாம் அவனது வாழ்க்கையில் நிகழ்ந்ததே இல்லை.
அதி முக்கிய கேள்வியாக முகத்தை ஒருமாதிரி வைத்து “ஏண்டி கழுவ என்ன பண்ணுவீங்க” கிசு கிசு குரலில் சங்கடமாக கேட்க.
“ஊரணி இருக்கு அதுல அம்புட்டு தண்ணி இருக்கும் பிறவு என்ன” என்றதும் அவனது முகம் போன போக்கை கண்டு அப்படி ஓர் சிரிப்பு வந்தது சிரமம் கொண்டு அதனை அடக்கியவள்.
“உங்களுக்குச் சங்கடமா இருந்தா முள்ளு காட்டு பக்கம் ஒரு அடி பைப்பு இருக்கு அங்கன போயிக்கலாம் அப்பா தண்ணி அடிச்சு விடுவார்” என்றதும் அதிர்ந்தவன்
அந்த எண்ணமே அலறலை கொடுத்தது போலும் “ஏண்டி உங்க அப்பா தண்ணி அடிச்சு நான் கழுவ வா”. அவன் சொன்ன தினுசில் சத்தியமாகச் சிரிப்பை அடக்க முடியவில்லை,
ஆனால் இன்னும் அவனை ஒரு வழி செய்ய வேண்டும் போல் இருக்க யோசிப்பது போல் பாசாங்கு செய்தவள்
“ஏங்க?………..”
“தயவு செஞ்சு எதுவும் பேசி வைக்காத சொன்ன தகவல் வரை போதும்” என்றவன் இன்னும் ஒரு வாரம் மாமனார் வீட்டின் வசம் என்பதை எண்ணி மனதளவில் நொந்தே போனான்.
அதன் பின் அவனது பயணம் திகிலோடு தான் தொடர்ந்தது……
*****************
இங்கு பயணத்தின் ஊடே சிறு ஓய்வெடுக்க ஓட்டுநர் நிறுத்த அந்நேரம் வணங்காமுடிக்குப் போனை போட்டார் பானுமதி. எத்தனை கோபமாக இருந்தாலும் அது என்ன பேச்சை நிறுத்துவது என்ற கோபத்தில் அழைக்க.
மறுமுனை எடுக்கப்பட அமர்த்தலாக வந்தது “ஹலோ!”
“என்ன ஹலோ!…. என்னது இது? சின்னப் பிள்ளை மாதிரி பத்திரமா போயிட்டு வானு கூடச் சொல்ல முடியாதா தண்டல் காரரே அப்படி என்ன பிடிவாதம்” பானுமதி பொரிந்து தள்ள அதனை புறம் தள்ளியவர்.
“யாருங்க பேசுறது பானு…மதி அம்மாங்களா அது யாரு?” பானுவின் நிலை அறியாமல் படு நக்கலாகத் தண்டல் கேள்வி கேட்டு வைக்கப் பொங்கியது டைப்பிஸ்ட்.
“திருச்சி எல்லையக் கூடத் தாண்டல அதுக்குள்ள பானுமதி யாருனு தெரியாம போச்சா?”
“ஓ!… இப்போ தெரியுதுங்க திருவாளர் ஸ்வாமிநாதன், விசுவநாதன், பசுபதி நாதன் அம்மாங்களா?” என்றதில் உனக்குப் பிள்ளைகள் தானே முக்கியம் என்று சொல்லாமல் சொல்ல.
அவரது கோபம் புரிய தான் செய்தது இருந்தும் இது தேவையற்ற கோபம்.
பக்கத்தில் அமர்ந்து வணங்காமுடி பேச்சை கேட்டு கொண்டு இருந்த வேலனுக்கும் கோபம் வந்தது ‘லொள்ளு புடிச்சவன்’ சன்னமாக முனகி கொண்டார்.
“இங்க பாருங்க தண்டல் காரரே பேச்சே சரியில்லை சொல்லிட்டேன்”
“என்னங்க மிரட்டி பாக்குறீங்களா?…. அதான் போயாச்சே”
“இந்த பேச்சு சரியா?”
“நான் சரியாதாங்க…..” மேலும் என்ன பேசி இருப்பாரோ அதுவரை அமைதியாக இருந்த வேலன் அவரிடமிருந்து போனை பிடுங்கி,
“அம்மாடி பானு நீ பிள்ளைகளைப் பாரு பேச்சு வேணாம் கொஞ்ச நாள் நிம்மதியா இரு. முதல பத்திரமா போயி சேருமா என்ன ?
காலம் போன கடைசில கழண்டு போயி திரியிறான் இவனை விடு” என்றவர் பானுவின் பதிலை எதிர்பார்க்காமல் போனை அனைத்து வைக்க.
அந்தப் போனை வெடுக்கென பிடுங்கி விசிறி விட்டுப் போனார் வணங்காமுடி. நண்பனது செயலை பார்த்தவர் “இவனை என்ன செய்ய?… சரியான ராங்கி காரன்” நண்பனை கடிந்து கொண்டவர் மீண்டும் வேலையில் கவனமானார்.
தற்போதைய வடக்கு வீதி சதாசிவ இல்லத்தின் நிலை ‘இருபது ஆடி அடங்க அறுபது ஆடி பார்க்க எண்ணியது போலும்’.