வடக்கு வீதி வணங்காமுடி – 15
புழுதி செம்மண் காடாக இருக்க,சுற்றிலும் கருவேல மரங்களும் முள்ளு காட்டு மரங்களும் அப்பகுதி முழுமையும் நிறைந்திருந்தது.
காலையில் கொளுத்திய வெயிலின் தாக்கம் சற்று குறைய மிதமான வெட்பத்துடன் சிறிதே சிறிது குளிர் கலந்து வீசியது மாலை வேளை தென்றல்.
அச்சூழலை உள் வாங்கியவாறு தேனீர் அருந்தி கொண்டிருந்தான் பசுபதி. மறு வீடு வந்து ஒரு வாரம் கடந்த நிலையில் நாளை மாலை திருச்சிக்குப் பயணப் பட வேண்டும் அதனை எண்ணி கொண்டே அமர்ந்திருந்தான்.
அன்று சிறு பயத்துடன் வீட்டினுள் நுழைந்தவனைப் பார்க்க சிரிப்பாகத் தான் இருந்தது கன்னலுக்கு.
நேரம் செல்ல செல்ல அந்த வீட்டின் அமைப்பு பிடிபட அவள் தன்னை வம்பு செய்திருக்கிறாள் என்பதை கண்டு கொண்டவன். ‘
‘கொழுப்பே வர வழி முழுக்க பயந்துட்டே வந்தேன்டி’
‘கல்யாணம் முன்னாடி இதை சொல்லி தானே என்ன வம்பு செஞ்சீங்க அதான் பழிக்கு பழி’ என்றவளை ஒரு வழி செய்த பிறகே ஓய்ந்தான்.
அவ்வூர் பொட்டல்காடு தான் இல்லை என்பதிற்கில்லை, ஆனால் அதிலும் மக்கள் வாழ தான் செய்தனர்.
இக்கால நாகரிகத்தின் சாயல் சிறு முகம் காட்ட தங்கள் வசதிக்கு ஏற்ப சிமெண்ட் வீட்டை நவீன முறையில் கட்டி இருந்தனர்.
வாத்தியாரும் சகல வசதியுடன் தான் கட்டி வைத்திருந்தார். என்ன சுவரில் அடித்த வண்ணம் தான் கண்ணைப் பறித்தது.
ஊரை சுற்றி பார்க்க ஒன்றும் இல்லையென்றாலும் மாமனாரிடம் பேசி, அவரது மகளிடம் வம்பு செய்து மிகுந்த நேரம் தூங்கி,
நிறைவாக உண்டு ‘சொர்கமே என்றாலும் தனது மாமனார் வீடு போல வருமா’ என்று பாடாத குறையாக விருந்தோமினான் புது மாப்பிள்ளை.
அவ்வப்போது மனைவியுடன் பெரும் பகுதியில் காதல் செய்வும் தவறவில்லை அத்தருணம் கண் முன் வர ஏகாந்த நிலை தான் பசுபதிக்கு.
பசுபதியின் மோன நிலையை கலைத்தது மாமனாரின் குரல்
“என்ன மாப்பிள்ளை பலமான யோசனை போல”
“அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா” என்றவன் சிறு இடைவேளை விட்டு,
“மாமா நான் கேட்கிறேனு கோச்சுக்காதீங்க. அப்பவே கேட்கனும் யோசிச்சேன் சந்தர்ப்பம் கிடைக்கலை. ஏன் மாமா வசதி இருந்தும் கன்னலை படிக்க வைக்கல?” என்ன முயன்றும் மனம் கன்னல் படிப்பிலே உழன்றது.
“அதையேன் கேக்குறீங்க மாப்பிள்ள பெரும் பிடிக்கையுடன் பொன்னுசாமி.அஞ்சாப்பு படிக்கும் போது பள்ளி கூடம் போயிட்டு வூட்டுக்கு வர புள்ளைய காணலை” மாமனார் கதை போல் சொல்ல ஹ்ம்!.. கொட்டினான் மருமகன்.
மகளின் வரலாறு பெரும் வரலாறு போலும் மனிதன் முகத்தில் அத்தனை தீவிரம்.
“நேர வூட்டுக்கு வராம தெக்கால இருக்கத் தோப்புக்கு விளையாட போயிருக்கு அது கூட இன்னும் இரண்டு பிள்ளைங்க போயி இருப்பாங்க போல”
“ஹ்ம்ம்”
“சோடி சேர்ந்த பிள்ளைங்க அம்புட்டும் நேரமாக வூட்டுக்கு வந்துடுச்சுங்க நம்ப பாப்பா வரவே இல்லை”
‘அவ எப்படி வருவா அது தான் அடங்காத புள்ள யாச்சே’ மனைவியின் குணம் எண்ணி மனதுக்குள் நொடித்து கொண்டான்.
“பாப்பாவை எங்க தேடியும் காணலை”
“ஐயோ!…” பதறினான் பசுபதி என்னவோ சற்று முன் நடந்த நிகழ்வு போல.
“அதே தான் மாப்புள எனக்கும் ஐயோனு!….. போச்சு.தேடி ஒரு மணி நேரம் சென்டு தான் அந்தச் சின்னப் புள்ளைங்க அவ தோப்புல இருக்கானு சொல்லுச்சுங்க,
போயி பார்த்தா பாப்பா கிணத்துல மல்லாந்து பேச்சு மூச்சு இல்லாம கிடக்கு உசுரே போச்சுங்க மாப்பிள்ளை”அவனுக்கும் அதே நிலை தான் போலும் இடப் புற மார்பு பகுதியை தடவி கொண்டான்.
“எத்தினி வருஷம் தவமிருந்து கிடைச்ச வரமுங்க மாப்புள பாப்பா!… புள்ள தேறி வர அவங்க அம்மா இந்தப் புள்ளைய எண்ணி படுத்துருச்சு.அதுக்கு பின்னே படிக்கவே அனுப்பல.
என்ன தான் நான் வாத்தியாரா இருந்தாலும் படிப்பு அருமை புரிஞ்சாலும் புள்ள உசுரு தானே முக்கியம் அதான் நானும் விட்டுட்டேன்” மகளின் வீர தீர வரலாற்றை சோக கதையாக சொல்லி முடிக்க.
‘அடி குறை மாசத்துல பொறந்தவளே உன்ன………….’ மனதுக்குள் மனைவியைக் கடிந்து கொள்ள அவன் மனதில் எண்ணியதை தான் அவரும் வாய் வழி மொழிந்தார்.
“இந்தப் புள்ள இருக்குற சூட்டிகைய பார்த்தா குறை மாசம் மாதிரியா தெரியுது மாப்புள்ள?”
‘அது சரி உண்மையாவே இவ குறை மாசமா’ மனதுக்குள் அலுத்து கொண்டான்.
“எலும்பிச்சை அளவு தான் தம்பி தலை இருக்கும் குட்டிக்கு. அந்த அளவுக்குள்ள கண்ணு, மூக்கு, காது வாயின்னு, எல்லாமே குட்டி குட்டியா இருக்கும்.
எப்படி சொல்லுறது தடுமாறியவர் எதோ பிடப்பட ஆஹான் பேப்பர்ல குட்டி மூக்கு, கண்ணு வரைவோமே அது போல இம்புட்டு காண்டு இருக்கும் கையை சுருக்கி காண்பித்தார்.
நல்ல ரோசாப்பூ நிறம், ஆனா என் கையளவு தான் இருப்பா பாப்பா” இந்த அடாவடியை பெற்ற தகப்பனுக்கு பெண்ணைப் பற்றிய பேச்சு அத்தனை களிப்பை கொடுத்தது போலும்”
அவரது பேச்சில் ‘பெரிய சாகசம்’ மனதுக்குள் எண்ணி சிரித்துக் கொண்டவனைக் கலைத்தது அவனது கைபேசி.
“யாருங்க மாப்பிள்ளை?” வரலாறு தடைபட்ட எரிச்சலில் பொன்னுசாமி.
“வேலன் மாமா!….”
“ஓ!… சரி சரி பேசுங்க நான் கொஞ்சம் நடந்துட்டு வரேன்” என்றவர் பெரிய மனது வைத்து வரலாற்றை பாதியில் விட்டு எழுந்து சென்றார்.
அவர் சென்றதும் போனை காதுக்குக் கொடுத்த பசுபதி “மாமா நல்லா இருக்கீங்களா?” பசுபதி கேள்விக்கு அலறியது மறுமுனை.
“இல்லவே இல்ல கன்னுகுட்டி உங்க அப்பன் என்னைக் கதற விடுறான்” என்றதும் சிரித்தவன்
“ஏன் மாமா?”
“நீ புது ஜோடி இல்ல…. அவந்தான் புது ஜோடி!… புதுசா கல்யாணம் பண்ண சம்சாரம் மறு வீட்டுக்கு போன மாதிரி உங்க அம்மாளை வம்பு பண்ணிக்கிட்டு இருக்கான்”
“ஹா!… ஹா!…. மாமா நான் தொடர்ந்து போன் போட்டேன் அவர் எடுக்கலை. அதான் வீட்டுக்கு அடிச்சு கேட்டேன் போன் உடைஞ்சு போச்சுன்னு சொன்னாங்க அதான் அங்க நிலவரம் தெரியல”
“ஆமா!… ஆமா!…. ஆனா அதுவா உடையலை சாமி விசிறி அடிச்சு புட்டான்”
“என்ன மாமா சொல்றீங்க”
“நான் ஒன்னும் சொல்றதுக்கில்ல மறு வீட்டுக்கு போன புள்ளைய சிரமம் பண்ண வேணாமேன்னு போன் போடலை,ஆனா நிலைமை இங்க சரியில்லை” என்றதும் சற்று கூர்மையானவன்
“என்ன மாமா ஆச்சு”
“கன்னுகுட்டி தூக்கமே இல்லாம, ஒரு வேளை சாப்பிட்டு ஜீவனைச் சமாதானம் செஞ்சா. அந்த உடம்பு என்னத்துக்கு ஆகும்.
இவன் அலுப்புக்கான காரணத்தை வெளில சொன்னா சிரிப்பாங்க அநியாயம் பண்ணி வைக்கிறான் அண்ணன் அண்ணி பாவம் இவனை வச்சு சமாளிக்க முடியலை”
“ப்ச் எனக்கே அம்மா போனது பிடிக்கலை தான் மாமா”
“இது என்ன பேச்சு அப்போ அவனுக இரண்டு போரையும் தவுட்டுக் கா வாங்குனோம். உங்களையே சுத்தி வர முடியுமா. நீ அப்பனுக்கு மேல பேசி வைக்கிற கன்னுகுட்டி” வேலன் பேச்சில் சிறு பதற்றமாக.
“மாமா!.. அதுக்கில்ல மாமா!… அம்மாக்கு போன் போட்டேன் ரொம்பப் பிஸி போல மூச்சு வாங்கிட்டே பேசுறாங்க.
என்கிட்ட பொதுவா பேசி போனை வச்சாச்சு அப்புறம் நான் அகில அம்மாகிட்ட பேசும் போது தான் தெரியும் வீட்டை சுத்தம் பண்ணுறாங்கனு ஒரு ஆளா முடியுமா மாமா?” பசுபதியின் பேச்சில் அதிர்ந்தவர்.
“அது சரி பிள்ளைங்க கூட இருக்கும்னு பார்த்தா, இது என்ன வேலை? இந்தச் சங்கதி எனக்குத் தெரியாதே”
“அதுக்குத் தான் அப்பா யோசிச்சு இருப்பார் மாமா அவருக்கு தெரியும் இவங்க பண்ணுற வேலை எல்லாம்”
“அது சரி பாம்பின் கால் பாம்பறியும். என்னையும் வீட்டு ஆட்களை விடுமா ஏன் மத்தவங்களைப் படுத்தி வைக்கிறான் இது சரியா?”
“விடுங்க மாமா ஒரு நாள் பொழுது நாளை பொழுது சாயும் போது அங்க இருப்பேன் அதுவரை சமாளிங்க மாமா”
“சரி சாமி நீங்க பார்த்து வாங்க” என்றவர் போனை அணைத்தார்.
******
இங்கும் அதே கதை தான் பானுவை வெளுத்து வாங்கினர் வானதியும் அகிலாவும்.விமலா துணையுடன் போனை ஸ்பீக்கரில் போட்டு பேசி கொண்டு இருந்தனர்.
“பானு!…. என்ன பானு பண்ணி வச்சிருக்க படிச்சு படிச்சு தானே சொல்லி அனுப்புனோம்”
“அக்கா ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வேலைனு தான் செஞ்சேன். தூசி சேர்ல போல அதான் காய்ச்சல் கண்டுருச்சு அவர் கிட்ட சொல்லிடாதீங்க பெருசு பண்ணிடுவார்”
“அந்தப் பயம் இருந்தும் நீ என்ன பண்ணி வச்சிருக்க”, அகிலா.
“அக்கா ப்ளீஸ் இந்தச் சின்னக் குட்டி தூங்கும் போதே நான் தூங்குனாதான் உண்டு. நான் சொல்ற சாமானை முதல எழுதுங்க”
“சொல் பேச்சே கேட்டுறாத நீ” என்று கடிந்து கொண்டவர் ஒரு பேப்பரை எடுத்து அவர் சொல்ல சொல்ல விமலாவை எழுத சொன்னார் அனைத்தும் முடிந்து.
அந்தச் சிட்டை யை வாங்கி பார்த்து வானதி அதிர்ந்து விட்டார் “பானு அங்க சமைக்கிற சாமானே இல்லையா? இதுங்க என்னத்த சாப்பிட்டு ஜீவனம் செய்துங்க?”
“அதயேன் கேக்குறீங்க எல்லாமே ரெடிமேட் பதார்த்தம் நூடுல்ஸ், பழம், பிஸ்கட், ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமேட் சூப் ,ரெடிமேட் புளியோதரை……… இது போலச் சொல்லிகிட்டே போகலாம்”
“விளங்கும் இந்தப் பொண்ணு சாம்பார், ரசம், கூட்டு இதெல்லாம் வைக்காதா”, அகிலா.
“தெரியலையே?”
“ஸ்வாமிய விடு அனு குட்டிக்கு என்னத்த குடுப்பா” பயந்து போயி வானதி கேட்டார் வளரும் பிள்ளை அல்லவா.
“தினமும் மதியம் பருப்பு சோறு, பழம், உளர் திராட்சை” என்றதும் சிறு நிம்மதி பிறக்க
“நல்ல வேலை புள்ள தப்புச்சுது ஆனா என் புள்ள தான் பாவம்” அகிலா ஸ்வாமி யை எண்ணி கலங்கினார் இதையே உண்டு என்ன சத்தை உடம்பில் சேர்ப்பது.
“ஹ்ம்ம் எனக்கும் மனசே ஆறலக்கா. இன்னும் கேளுங்க ஆடம்பரமான அடுப்படி, இல்லாத சாமானே இல்லை ,
ஆனா எல்லாமே தூசி, எண்ணெய் பிசுக்குனு இருக்கு . இட்டிலி குண்டான்னு ஒன்னு இல்லவே இல்லக்கா பார்த்த முத நாளே தலையைச் சுத்திடுச்சு”
“அதானே பார்த்தேன் உனக்கும் அதை பார்த்த உடனே கை பரப் பரன்னு வந்துருக்கும். ஒரே மூச்சுல இறங்கி இருப்ப” சரியாகப் பானுமதியை கணித்தார்.
“விடுங்க க்கா”
“சரி விசு என்ன கதை அவனுக்கும் ஒரு செட் சாமான் வாங்கனுமா” அங்கிருந்த விமலாவை பார்த்தவாறு கேட்டு வைத்தார் வானதி.
பெரிய மாமியார் பேச்சில் பெண் ஈ என்று இளித்து வைத்தது.
“என்ன பானு விமலா சிரிப்பே சரியில்ல அங்க என்ன கதை” என்றதும் அவரும் சிறு புன்னகையுடன்.
“இது வேற வகைக்கா வீடு சுத்தமா தான் இருக்கு. அடுப்படியும் நல்ல வச்சுருக்கா, ஆனா என்ன எல்லாமே இரண்டு ரெண்டா வாங்கி வச்சு அத்தினி பொருளும் வண்டு வந்து கிடக்கு”
“ஏன் ?” என்ற வானதி கேள்விக்கு அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் விமலா வே பதில் சொன்னாள்.
“அதுங்க அத்த சாமான் எங்க இருக்குனு தெரியாது அவசரத்துல வச்ச இடத்தை மறந்து போயிடுவேன், அப்புறம் தேட சோம்பேறியா இருக்குமா சோ புதுசு வாங்கிடுவேன்” விமலாவின் பேச்சில்
“ஹ்க்கும் கிழிஞ்சுது போ” நொடித்துக் கொண்டவர்
“சரி பானு நீ சொன்னதை வாங்கிடுறேன்.நீ உடம்பை பார் நான் அப்புறம் பேசுறேன்”
“அக்கா அவர் என்ன பண்ணுறார்?”
“யாரு கொழுந்தா?”
“ஆமா வேற யாரை நான் கேட்க போறேன்” சிறு சலிப்பு அவரிடம்.
“அது சரிதான் உண்மைய சொல்லவா? இல்ல பொய் சொல்லவா?”
“உண்மையே சொல்லுங்க”
“சத்தியமா முடியல பானு அராஜகம் பண்ணுறார். சாப்பிடுறது ஒரு வேளை.அதுவும் குருவி கொறிக்கிற மாதிரி கொறிச்சு வச்சுட்டு போக வேண்டியது.
ராத்திரி உங்க பெரிய மாமா சண்டை போட்டுத்தான் வீட்டுக்கு வர வைக்க வேண்டியதா இருக்கு. கண்ட மேனிக்குக் கலவரம் பண்ணுறாரும்மா உன் புருஷன்” வணங்காமுடியின் செயலில் அல்லல்பட்டு போனார் போலும்.
“இந்த மனுஷனை என்ன பண்ணுறது”
“ஒன்னும் பண்ண முடியாது நீ திருச்சி வர வழிய பார் அகிலா பார்த்துக்கட்டும்”
“இல்லக்கா அது சரிவராது நீங்க இல்லனா கல்யாண வேலைய பார்க்க முடியாது”
“ஹ்ம்ம் அதுவும் சரிதான் கன்னிகா சித்ரா எல்லாம் நாளை மறு நாள் வருதுங்க தாலி எடுக்கப் போகணும்”
“சரிக்கா நீங்க பாருங்க”
“சரி நீயும் பார்த்துக்கோ” என்றவர் யோசனை வந்தவராக சரி பானு வாங்குன பொருளை எப்படி அனுப்புறது”
“அதை மறந்துட்டேன் பாருங்க விமலா பொண்ணைத் துணைக்குப் போட்டு அகிலா அக்காவை அனுப்பி வைங்க”
“சரி மா நான் அனுப்புறேன்” என்றவர் போனை வைக்க அவருடன் பேசி அணைத்த பானு அடுத்ததாக வேலனுக்கு அழைத்தார்
மறுபுறம் அழைப்பை எடுத்தவர் “சொல்லுமா பானு”
“அண்ணா என்ன பண்ணுறார்? அவர் போன் என்ன ஆச்சு”
“அதைத் தூக்கி விசிறி அடிச்சிட்டார்”
“அய்யயோ!…”
“ஆமா மா என் பேரன் சொல்லுறதை போல உன் வீட்டுக்காரர் அரியவகை உயிரினமா மாறிட்டு வரார்”
“ஹா!…ஹா!… என்ன ண்ணே” அவர் சொன்ன தினுசில் சிரிப்பு வந்தது.
“ஆமா பின்ன என்ன எதுக்கெடுத்தாலும் காரணமே இல்லாம கத்தி வைக்கிறான். போட்டு உடைகிறான் கேட்க போனா போடங்கிறான். நான் தான் அவன்கிட்ட விவாகரத்து வாங்கனும் போல”
“ரொம்ப படுத்துறாரா”
“ப்ச் அவனை விடு உனக்கு ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?”
“கொஞ்சம் காய்ச்சல்”
“அப்போ கன்னுகுட்டி சொன்னது சரிதான். அவன் கோப படுறதுல தப்பே இல்லை நீ முதல கிளம்பி வாமா”
“அண்ணே ஒரு முறை சொல்லி கொடுத்துட்டா அதுங்க பார்த்துக்கும் பக்குவம் பண்ணிட்டா வந்துடுவேன்”
“அது சரி நல்ல உடம்பா இருந்தா பரவாயில்ல. நீ என்னமா நீ!..”
“அவர் கிட்ட சொல்லிக்காதீங்க ண்ணே அவரைச் சாப்பிட வைங்க”
“அது சரி அவன் கிட்ட யார் பேசுறது நான் போராடி அசந்து போயிட்டேன் மா”
“………….”பேரிளம் பெண் மௌனம் கொள்ள.
“சரி சரி சங்கடப்படாத மா உனக்காக அந்த ராங்கி பைய கிட்ட பேசி சாப்பிட வைக்கிறேன்” என்றதும் சற்று நிம்மதி பிறக்க.
“சரிண்ணே” என்றவர் போனை அனைத்து விட்டு அனுவுடன் படுத்துக் கொண்டார். கண்ணெல்லாம் எரிந்து உடல் ஓய்வுக்குக் கெஞ்சியது.
பானுமதிக்கு அதிக வேலை தூசி இதெல்லாம் அறவே ஆகாது, ஒரே நாளில் வீட்டை சுத்தம் செய்தவர் அதீத உழைப்பால் காய்ச்சல் கண்டு படுத்து விட்டார்.
ஸ்வாமியும் மீனுவும் பயந்து ஒரு நாள் விடுமுறை எடுத்து கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு விட்டு வந்தனர் இருந்தும் உடல் வலித்தது.
வேலைக்குச் செல்லும் முன் ஸ்வாமிநாதனும் வேறு கடுமையாக எச்சரித்து விட்டு தான் சென்றான்.
கணவன் செய்யும் சேட்டை மன சோர்வை கொடுக்க காய்ச்சல் கண்ட உடலும் அசந்து கொள்ள படுத்த உடனே தூங்கி போனார்.
************
மறு நாள் விடியல் அமோகமாக விடிந்தது பானுவிற்கு வழமை போல் கணவன் மனைவி வேலைக்குச் செல்ல.
அனு குட்டியை பக்கத்தில் இருக்கும் சிறுவர் காப்பகத்தில் விட்டவர் சற்று நேரம் உறங்கலாம் என்று அப்போது தான் படுத்தார் பாவம் வெளியில் மணி அடித்து அவரை எழுப்பி விட்டது.
நேற்று பானு சொன்ன பொருட்களை நேரம் கடத்தாமல் உடனே வாங்கி வைத்து விட்டார் வானதி.
அது மட்டுமில்லை பானுவின் நிலையை எண்ணி இரவே அகிலாவையும் விமலாவையும் கிளப்பி இருந்தார். ஈஸ்வர் தான் விடியலில் செல்லுமாறு அவர்களை நிறுத்தி வைத்தார்.
நேரம் மதிய வேளையை நெருங்க அவர்கள் தான் வந்து விட்டார்கள் போலும் என்று அவசரமாக எழுந்தவர். வாயில் நோக்கி சென்று கதவை திறக்க. ஒரு சேர பானுவும் எதிர் முனையும் அலறி அதிர்ந்து நின்றனர்.
“ஐயோ!…. தண்டல் காரரே!”
“ஆத்தி!…………. என்ன உடுப்பு இது டைப்பிஸ்ட்டாம்மா!………………….”
அவர் அதிர்ச்சியில் குரல் சற்று ஓங்கி ஒலிக்க அவருக்கு வழி காட்ட வேண்டி வந்த காவலன் அவரது குரலை கேட்டு என்னவோ ஏதோவென்று ஓடி வந்தார்.