நாள் முழுதும் ஓடிய ஓட்டத்தைத் தனிப்பதே இரவின் தனிமை தான். இளமையில் பொருள் தேடி ஓர் ஓட்டம்.
இளமையைச் சுகித்து முடித்தால் பிள்ளைகளைக் கொண்டு ஓர் ஓட்டம். அதன் பின் அவர்களை வளர்ந்து வாலிபம் பண்ணி சமூகத்தின் முன் நிறுத்தி என்று பெற்றவர்களின் கால் நிற்காமல் ஓடி கொண்டே இருக்கும்.
ஆனால் இந்த ஓட்டத்தை நிறுத்தும் காலமும் உள்ளதே!….. அது முதுமை அந்தப் பருவத்தில் நின்ற தம்பதியினருக்குத் தனிமை என்பது வரம் தானே இதோ வணங்காமுடி மற்றும் பானுமதியின் ஆஸ்தான பள்ளியறை.
வழமை போல் குளித்து முடித்து வந்தவர் புத்தகம் படித்துக் கொண்டு இருந்த மனைவியிடம் சென்று “சாரிங்க” என்க எதுக்கு என்று புரியாமல் யோசித்துக் இருக்கும் போதே கையில் உள்ள புத்தகத்தை உருவி மூடி வைத்தார்.
படிக்கும் போது புத்தகத்தைப் பிடுங்குவது ஒழுங்கற்ற செயல் அல்லவா. அதற்குத் தான் முன் எச்சரிக்கை முனி சாமியாக இந்த மன்னிப்பு என்பதைக் கண்டு கொண்ட பானுமதி.
“இப்போ எதுக்குத் தண்டல் காரரே!.. புத்தகத்தை வாங்குனீங்க”
“டைப்பிஸ்ட்டம்மா நான் இருக்கும் போது அதை எதுக்குங்க கட்டிக்கிட்டு. வூடு முழுக்கப் புத்தகம் தான் அதுவும் இலக்கியம் சொட்ட சொட்ட காதல் காப்பியங்கள்” என்றவரை போலியாக முறைத்தவர்.
“ஏன் வரலாறு புத்தகமும் தான் இருக்கு. அது உங்க கண்ணனுக்குத் தெரியாதா… சும்மா வம்பு பண்ணிக்கிட்டு கொடுங்க தண்டல் காரரே!..”
“அப்படி என்னங்க வாசிப்பு” என்றவர் பார்க்க தமிழ் இலக்கியம் குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு பத்துப்பாட்டு, மணிமிடைபவளம் என்று இருக்க.
அதில் அகநானூறு மட்டும் எடுத்து கொண்டவர் வம்பு செய்யக் கிளம்பி விட்டார். இன்றைய பொழுது போக வேண்டுமே அவருக்கு.
“ஏங்க டைப்பிஸ்ட்டம்மா அகநானூறு படிச்சும்மாங்க ‘அந்த’… வேளையில் மக்கா இருக்கீங்க” என்றதும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“வேணாம் தண்டல் காரரே!.. ஏற்கனவே உங்க மேல கோபத்துல இருக்கேன்” என்றவரை கண்டு கொள்ளாமல்
“பதில் சொல்லுங்க டைப்பிஸ்ட்டம்மா”
“நான் மக்கு தான் எனக்கும் சேர்த்து அகநானூறே அல்லல்படுற அளவுக்கு வம்பு செய்யதான் நீங்க இருக்கீங்களே அப்புறம் என்ன?”
“அப்போ நான் சிறந்த படிப்பாளன் அப்படி தானே டைப்பிஸ்ட்டம்மா” குறும்பு கொப்பளிக்க கேட்டு வைத்தார்.
“இல்ல வில்லங்கம் புடிச்ச கிழவன்” என்றவர் அவருக்கு முதுகு காட்டி படுத்து விட்டார்.
“என்னங்க டைப்பிஸ்ட்டம்மா கிழவன் சொல்றீங்க” என்றவர் அவரைத் திருப்பி எழுந்து அமர வைத்தவர்
“ஏங்க முக்கியமா பேசனுங்க”
“தண்டல் காரரே!… வம்பு பண்ணாதீங்க சொல்லிட்டேன். நீங்க பண்ண வேலைக்கு வானதி அக்கா மட்டும் இல்லை.சின்னப் புள்ளைங்க முன்னாடி இன்னைக்குச் சங்கடமா போயிருக்கும்” இது மதிய நடந்த கூத்து என்பதை கண்டு கொண்டவர்.
“என்னங்க அநியாயமா இருக்கு சொந்த பொண்டாட்டிக்கு பூ வாங்கிக் கொடுத்தது ஒரு குத்தமாங்க கலி காலங்குறது சரியா தான் இருக்கு போங்க”முகத்தைப் பாவம் போல் வைக்கச் சிரிப்பு வர பார்த்தது அவருக்கு அதனைக் கண்டு கொண்டவர்.
“ஏங்க இந்தப் புள்ளைங்க சொல்லுற மாதிரி அங்கன இங்கன போயி எதையாவது முகத்துக்கு அப்பிட்டு வராதீங்க உங்களுக்குப் புண்ணியமா போகும்.
நம்பப் பின் புறம் இருக்குற மருதாணி செடியை அரைச்சு கைக்கு அழகா வைங்க போதும். எப்பவும் போலப் புடவை நகை நான் எடுத்துடுவேன் கஸ்தூரி மஞ்சள் மட்டும் முகத்துக்குப் போதும்,
அதுவும் என்றவர் அவரை நெருங்கி அவரது கழுத்தோரம் தனது முகத்தைப் புதைத்து மூச்சை ஆழமாக இழுத்து சுவாசிக்க அந்தக் குறு குறுப்பில் சற்று சாய்த்துக் கொண்டார் பானுமதி.
இதோ இது தாங்க இந்த வாசனை தான் இதை எதாவது பண்ணி புடாதீங்க நீங்க. சிறு தவிப்பாக அடுத்த என்ன சொல்ல என்று தெரியாமல் .அந்தப் புள்ளைங்க கூடச் சேராதீங்க டைப்பிஸ்டாம்மா” என்று முடிக்க அவருக்கு அப்படி ஓர் சிரிப்பு.
வெளி பூச்சு நாகரிகத்தை வன்மையாக வெறுக்கும் வர்கம் அவர், அதனால் இந்தப் பெண் பிள்ளைகள் தனது மனைவியை எதுவும் பண்ணி விடுவார்களோ என்ற பயத்தில் தான் அவர் பேச வந்தது.
“என்னங்க டைப்பிஸ்ட்டம்மா சிரிப்பு”
“இல்ல இத்தினி வருஷ வாழ்க்கையில நான் பண்ண முடியாததை என் மகன்களும், மருமக பொண்ணுங்களும் பண்ணுறாங்களே அதான்” என்றவரை பார்த்து.
“ஏங்க சொல்ல மாட்டீங்க” என்று பேசி கொண்டே நெருங்க அவரது மார்பில் கை வைத்து தள்ளியவர் இன்னும் கேளுங்க தண்டல் காரரே!…
“கல்யாணம் முடிஞ்ச இரவே டூர் போறோம் அந்த நாள் முழுமையும் என் மருமகள் கூடத் தான் இருக்கனுமாம்” நமுட்டு சிரிப்புடன் பானுமதி சொல்லி வைக்க.
“ஏன்?… ஏன்?.. ஏன்?… அதெல்லாம் முடியாது இது என்னங்க இது காலம் போன கடைசில எனக்கு வந்த சோதனை” என்று தலையில் கை வைக்க இப்பொழுது வாய் விட்டு சிரித்தார் பானுமதி.
“ஏங்க என்னையே வம்பு பண்ணுறாங்க” பாவம் போல் கேட்க அதற்கும் சிரிப்பு.
சிரிக்கும் அவரை அன்பு பொங்க பார்த்து நின்றார் வணங்காமுடி.கவர்ந்திழுக்கும் பருவம் இல்லை என்றாலும் அன்பு கொண்ட மனதுக்கு முதுமையும் இளமை கொண்டு கூத்தாடியது போலும்.
இனி வரும் காலங்களில் யார் முந்தியோ யார் பிந்தியோ,ஆனால் காலன் வரும் வரை அவரைக் கண்ணில் நித்தமும் நிரப்பி நிற்பார் மனிதர்.
காலங்கள் ஓய்ந்தாலும் காவியம் படைத்து நிற்கும் இக்காதல் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.