வடக்கு வீதி வணங்காமுடி – 2
இருள் பிரிந்து நன்றாக விடிய தொடங்கும் வேளை இரவெல்லாம் பனியில் உல்லாசமாகக் குளித்த சீமை ஓடு ஒரு வித நறுமணத்தை பரப்ப,
அதனோடு சேர்ந்து நல் மலர்கள் வாசமும் அந்த வீடெங்கும் வீசியது, இத்தகைய திவ்வியமான காலை வேளையில் சதாசிவப் பிள்ளை இல்லத்தின் பெண்கள் காலில் சக்கரத்தை கட்டி கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தனர், இதில் புதுப் பெண்ணும் அடக்கம்.
புதுப் பெண்ணா? ஆம்!.. புதுப் பெண் திருமதி.பானுமதி வணங்காமுடி.. அன்று பெண் பார்த்து பேசியவர் நேராகச் சென்றது தனது அண்ணன்களிடம் தான்.
ஒரு மாதம் தவமிருந்தவர்களுக்கு வரம் கிட்டியது போல் வணங்காமுடி சம்மதம் கிடைத்ததும் உடனே திருமணத்தை முடித்து விட்டனர். இதோ திருமணம் முடிந்து ஒரு மாத காலமும் ஓடி விட்டது.
பெண்ணும் மெல்ல மெல்ல அந்த வீட்டில் பழகி கலந்து போனாள். ‘வானதி ’ பெரியவர் ஈஸ்வருடைய மனைவி இட்லி சுடுவதில் கருத்தாக இருக்க.
நடுவர் அருணகிரி மனைவி ‘அகிலாண்டேஸ்வரி’ மற்றொரு அடுப்பில் அனைவருக்கும் தேனீர் விட .சின்னவர் வணங்காமுடி மனைவி ‘பானுமதி’ தேங்காய் துருவி கொண்டு இருந்தார்.
அவர் துருவிய அழகில் வேலை செய்து கொண்டு இருந்த வானதி, பக்கத்தில் நிற்கும் அகிலாவின் தோள் இடித்து பானுமதியை சுட்டி காட்ட அவருக்கும் சிரிப்பு வந்தது. கோபத்தில் இருந்த பானுமதி தேங்காயை ஒருவழி செய்து கொண்டு இருந்தார். வேகமாக வேலை செய்வதால் அது ஒருவித சத்தம் எழுப்பி இவர்களது கவனத்தை கலைத்தது போலும் .
“ஏன் அகிலா? இந்த வருஷ சித்திரை திருவிழாக்கு உங்க அப்பாரு வீட்டுக்கு போவியா” வானதி ஜாடையாகக் கேட்க.
“போவேன் க்கா ஏன்?”
“இல்ல அநேகமா திருவிழால தேங்கா துருவி புதுசு வாங்குற மாதிரி வரும் போல” என்று சொல்ல. அதுவரை அதனைப் போட்டு படாத பாடு படுத்திக் கொண்டு இருந்த பானுமதி இருவரையும் தலை உயர்த்திப் பார்க்க இருவர் இதழும் குறும்பில் வளைந்தது.
அவர்களது கேலி புரிய முகத்தைத் தூக்கி கொண்டு இருந்தது பெண் அவளது செயலில் மேலும் புன்னகை வர.
“பானு நானும் நேத்துல இருந்து பார்க்குறேன் நீ ஒரு திசை கொழுந்து ஒரு திசைனு போறீங்க சரி புருஷன் பொண்டாட்டி சங்கதி போலன்னு தான் கேட்கல, ஆனா அது இல்ல போல” என்று வானதி கேட்க.
“அதெல்லாம் ஒன்னுமில்லக்கா…. சிறு இடைவேளை மௌனம் கொண்டு “தண்டல் காரர் பண்ணுறது எதுவுமே சரியில்லை” என்றதும் இரு பெண்களுக்கும் தூக்கி வாரி போட்டது
“என்ன சொன்ன? என்ன சொன்ன? யார் தண்டல் காரர்?” என்றதும் தான் நாக்கை கடித்துத் தனது தப்பை உணர்ந்தார் பானுமதி. கண்ணை மூடி கொண்டார் கோபத்திலும் வெட்கம் வந்து தொலைத்தது அவரது செயலில் அகிலாவுக்குச் சிரிப்பு வர.
“அக்கா கொழுந்துக்குச் செல்ல பெயர் போல”
“ஓ !….அப்போ நம்ம மறந்துடனும் இந்தப் பெயர் சொன்னதைச் சரிதானே”
“சரிதான் க்கா” இருவரும் கேலி செய்ய செல்லமாகச் சினுங்கினார் பானுமதி
அகிலா,“சரி சொல்லு என்ன ஆச்சு”
“பெருசா ஒன்னுமில்ல அப்பா அம்மாக்கு அடுத்தத் தெருவுல வீடு பார்த்து இருக்கார். நேத்து மதியம் அம்மா என்னை வேலை செய்யிற இடத்துல பார்க்க வந்தாங்க அப்போ சொன்னாங்க” பெண்களுக்கு விடயம் பிடிபட.
“சரி அதுக்கு என்ன பானு வயசானவங்க ஆண் பிள்ளை இல்லாத வீடு வேற, உனக்கு அப்புறம் கொழுந்து தானே பார்க்கணும்”
“இல்லக்கா அது சரிவராது நான் கொடுக்குற பணமே அம்மாக்கு போதும் ,அது போகப் பிள்ளை பேறு, நல்ல நாள், கிழமை, சீர்ன்னு எல்லாமே ஏற்பாடுல இருக்கு…,
கொண்டான் கொடுத்தான் கைய எதிர் பார்க்குறது நாளைக்கி ஒரு சொல்லாக வாய்ப்பு இருக்கு” பானுமதி கூற்று விளங்கினாலும் இரு பெண்களுக்கும் கோபம் வந்தது.
“அந்த ஒரு சொல் எங்கிருந்து வரும்னு சொல்ல வர ?…” பெண் அமைதியாக இருக்க
“எங்களைச் சொல்ல வரியா பானு?” ஏனென்றால் மாமியார் மாமனார் இல்லாத வீடு அல்லவா இருப்பது ஓரகத்திகள் மட்டுமே.
“அக்கா என்னை நீங்களாவது புரிஞ்சுக் கோங்க”
“என்ன புரியனும் நாங்க உன் அளவுல கஷ்ட பட்டு வளரல, இருந்தாலும் எந்தச் சூழ்நிலையையும் அனுசரிச்சு போற குடும்ப அமைப்புல தான் இருந்திருக்கோம்.அதுனால எங்களுக்கும் உன் மனநிலை புரியுது கொழுந்து செய்றது சரிதான்,
அது போகப் பிள்ளை உண்டான அந்த ஊருல இருந்து வயசானவங்க ஒத்தையா இருந்து என்ன பண்ணுவாங்க?
இங்கன கைராசி மகப்பேறு மருத்துவச்சி இருக்காங்க நாங்க இருக்கோம் பார்த்துக்குவோம் சற்றுக் கோபமாகத் தான் பேசினார் வானதி ” அவரது பேச்சில் நெகழ்ந்தாலும் நிதர்சனம் என்று ஒன்று உண்டல்லவா.
“அக்கா!…. அப்பா!, அம்மா! எனக்கு நல்ல படிப்பை கொடுத்து இருக்காங்க. உறவுல அதிகம் படிச்சு சர்க்கார் உத்தியோகத்துல இருக்குற முதல் பெண் தலைமுறை நான் தான். அதுக்காக எங்க அப்பா அம்மா வாங்குன பேச்சும் ஏச்சும் கொஞ்சம் நஞ்சமில்ல,
நல்ல வாழ்ந்த குடும்பங்குற பெயர் மட்டுமே அதை வச்சு கிட்டு வயித்து பாடு பார்க்க முடியுமா? அதையும் தாண்டிஎன்னை வளர்ந்தவங்கள யார் உதவியும் இல்லாம நானே பார்த்துக்கணும் அது தான் முறை, என் ஆசையும் கூட.
இது சம்பாரிக்கிற திமிர் இல்ல, வேலை செய்யிறேங்குற கர்வம் இல்ல… என்ன சொல்லுறது … நன்றி கடன்னு வச்சுக்கலாம், இது புரியாம என்கிட்ட பாயிரார் தண்டல் காரர் நான் என்ன செய்ய”
இப்போது பெண்கள் இருவரும் முழித்து நின்றனர். என்ன சொல்வது பானு சொல்வதும் சரிதானே, ஆனால் இதனை வணங்காமுடியிடம் பேச முடியுமா என்ன?
தாங்களோ தன் கணவன் மார்களோ பேசுவது அத்தனை நாகரிகம் அல்ல. அதுவும் இதனைத் தங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கும் பொழுது எப்படிப் பேச முடியும்?
“சரி!… சரி!…. பிறவு இதைப் பொறுமையா பேசி புரிய வை. இப்போ நாழி ஆகுது வேலையைப் பார்ப்போம் நீயும் போயி வேலைக்குக் கிளம்பு பானு” என்று தற்காலிகமாக பானுமதியை திசை திருப்பினார் அது சரியாக வேலையும் செய்தது
*********************
அனைவரும் காலை உணவை உண்டு கொண்டு இருக்கப் பானுமதி அவசரமாகக் கிளம்பி கணவனுக்காக காத்திருந்தார்.ஆண்கள் மூவரும் பேசிய படியே உண்டு கொண்டு இருந்தனர்.
“வணங்கா நம்ப நாராயண மாமா இருக்காருல்ல”
“ஆமாண்ணே!”
“அவர் பட்டு ஜவுளி கடையக் கொடுக்குறதா இருக்கார் போல அதுவும் சரக்கோட”
“ஏன்?” புருவம் சுருங்க அருணகிரி.
“பார்த்துக்க முடியலையாம் அவர் பையனுக்கு பட்டணத்து வேலைல நாட்டம் போல அதான் விலை பேசி தர சொன்னார்”
“ஹ்ம்ம்…..”
“நான் அதை வாங்கிப் பண்ணலாம்னு இருக்கேன்” விடயத்தை அலுங்காமல் ஈஸ்வர் போட்டு உடைக்க .சாப்பிட்டுக் கொண்டு இருந்த இரு ஆண்கள் கையும் அப்படியே நின்றது பெண்களுக்கும் அதிர்ச்சி தான்.
ஒரு நொடி மட்டுமே அதிர்ச்சி, மீண்டும் உணவை தொடர்ந்த வணங்காமுடி அமைதியாக “எதுக்குனே தொழில்ல பிரிவினை”
“டேய் என்ன பேச்சுப் பிரிவு அது இதுனு எனக்கு ஜவுளி கடையில நாட்டம். இப்போ அருணகிரி மட்டும் எங்க வட்டி கடைக்கு வரான்.
அவனுக்குத் தோட்டம் வயல் தானே நாட்டமா இருக்கு அது போலத் தான்” ஈஸ்வர் சொல்வது சரி தான் என்றாலும் வணங்காமுடியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவரது முகத்தை வைத்தே கண்டு கொண்ட ஈஸ்வர் “சரி வணங்கா நல்ல யோசிச்சு சொல்லு எனக்கு நாட்டம் மட்டும் தான் நீ வேற எதுவும் யோசிக்காத. டேய்!.. அருணகிரி உனக்குத் தான் சொல்றேன்”
ஹ்ம்ம்.. சரிண்ணே!…. என்றவர்களுக்கு பெரும் யோசனை தான்.
ஈஸ்வர் சொல்லுவதும் சரிதான் வணங்காமுடி தான் தந்தை தொழிலை ஈடுபாடோடு செய்வது பணம் செழிக்கும் தொழில் என்றாலும் ஏனோ அதில் ஈஸ்வருக்கும் அருணகிரிக்கும் நாட்டமில்லை என்பது மறுக்கப் படாத உண்மை.
*********************
யோசனையாக ஆண்கள் உண்டு முடித்துக் கிளம்பி செல்ல தனது வேட்டியை மடித்துக் கட்டி தனது சைக்கிளை எடுத்து கொண்டு வந்து மனைவியின் புறம் நிறுத்தினார் வணங்காமுடி, எந்த வித பேச்சுகளும் இல்லை.
பானுமதி சற்று முறுக்கி நிற்க.
“டைப்பிஸ்ட்டம்மா கெஞ்சி நிற்க நேரமில்ல வாரீங்களா? இல்ல தூக்கி முன்னுக்கு வச்சுட்டு கிளம்பவா” முகத்தில் கடுமை பூசி கொண்டு பேச பானுமதி பதறி விட்டார்.
அதன் பின் சமத்துப் பிள்ளையாகப் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டார் வண்டி ஸ்ரீ ரெங்கம் தெற்கு வாசலில் உள்ள தபால் நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தது.
மூன்று கிலோமீட்டர் தூரம் என்பதால் பொறுமையாக சைக்கிளை மிதித்தார் வணங்காமுடி. சுற்றிலும் வயல்வெளி, தூய்மை காற்று நாசியைத் தீண்டி ஒரு வித அமைதியை கொடுக்க மனம் உல்லாசமாக மனைவியை சீண்ட சொல்லியது போலும்.
“சொல்லுங்க என்ன கோபம் டைப்பிஸ்ட்டம்மாக்கு முன்னுக்கு போனா பின்னுக்கு வாரீங்க, முகம் பார்க்க முறுக்குறீங்க சரியில்லையே” என்றதும் பானுமதிக்கு போன கோபம் திரும்பி வர.
“அம்மா அப்பாக்கு எதுக்கு வீடு பார்த்து கொடுத்தீங்க அதையும் என்கிட்ட சொல்லல”
“இனி அவங்க அங்க இருக்குறது சரிவராது”
“ஏன்?”
“கண்டிப்பா காரணம் சொல்லனுமா?”
“ஆமா”
“சொன்னா என் மவுசும் என் மேல உள்ள பயமும் போயிடுங்க உங்க பயத்து மேல தான் என் கிறுக்கே” அவரது கிறக்கம் புரியாத மக்கு பானு
“ப்ச் புரியும் படி சொல்லுங்க தண்டல் காரரே” சிடு சிடுத்தார்
“ஹ்ம்ம்…. என் பொண்டாட்டி பக்கத்துலயே இருக்கணும், அம்மாவை பார்க்கணும் அப்பாவை பார்க்கணும் அது போகப் பிள்ளை பேறுனு, போயி அம்மா வீட்டுல உட்காந்து கிட்டா நான் என்ன செய்ய. நீங்க இல்லாம இனி ஒரு நாள் கடத்த முடியாது போல” என்றதும் வந்த கோபம் வந்த வழியே செல்ல தருணம் பார்க்க.நன்றாகச் சண்டை கட்ட வேண்டும் என்று எண்ணிய பானுமதிக்கு பேச்சே வரவில்லை
“என்ன பேச்சை காணோம்”
மெல்லிய குரலில் “ஒரு மாசம் பழக்கம் தானே” வேண்டுமென்றே கேட்டு வைத்தார் பானுமதி.
“இதுக்குத் தான் படிச்ச புள்ளைய கட்ட கூடாது பாருங்க மனசுக்கு பதிலா மூளை முன்னுக்கு வந்து நிக்குது………” எரிச்சலாக மொழிந்தவர்
“ஒரு மாசம் பழக்கம் தான், ஆனா ரொம்பக் கெட்ட பழக்கம் அதான் விட முடியல” பேச்சில் அத்தனை நக்கல் பின்னால் இருந்தே கையில் வைத்திருக்கும் குடையில் தன்னை மீறி அடித்து விட்டார் பானுமதி .
அவரது அடிகளை அலுங்காமல் வாங்கிக் கொண்டவர் “பாரதி கண்ட புதுமை பெண்ணாங்க நீங்க புருஷனை இந்த அடி… அடிக்கிறீங்க”
“ஐயோ!.. போங்க தண்டல் காரரே கறார் பேர்வழின்னு வெளியில பேச்சு, ஆனா பாருங்க நீங்க சரியான குசும்பு புடிச்ச ஆளுன்னு எனக்குத் தானே தெரியும்”
“உங்களுக்குத் தானுங்க தெரியனும் என்னை பத்தி முழுசா…..” வில்லங்கம் பேசி வைக்க வெட்கம் நெட்டி தள்ளியது பானுமதிக்கு.
“டைப்பிஸ்ட்டம்மா நான் ஒன்னு கேட்பேன் பதில் சொல்லுவீங்களா?” மனிதர் குரல் அத்தனை தாபத்தில் ஒலிக்க. அதனை இனம் காண முடியாத பானுமதி வெகு தீவிரமாகச் கணவனது பேச்சுக்கு பதில் கொடுத்தார்.
“சொல்லுங்க என்ன?”
“இல்ல நல்ல வெள்ளை தாள் இருக்கு”
“ஹ்ம்ம்”
“அது நடுவாப்புல சிறுசா ஒரு கரும்புள்ளி வச்சா பார்க்க எப்படி இருக்கும்” என்று ரசனை சொட்ட பேசி வைக்க,
“வெள்ளையில் கருப்பு புள்ளி அழகு தான், இதுல என்ன இருக்கு புரியல”
“அது ஒன்னுமில்லங்க ராவுக்கு என் கையில நீங்க சிக்கும் போது வெள்ளை தாளத்தான் தெரியுறீங்க” என்று சூசகமாகக் கூடல் பொழுதின் உவமை சொல்ல. அதன் அர்த்தம் பிடப்படவே பல நொடிகள் கடந்தது மக்கு பெண்ணுக்கு.
ஐயோ!……… கருமம்! சீ!…….. தண்டல் காரர் மகா மோசம்” என்று அமர்ந்த வாக்கிலே அவரது இடுப்பை பிடித்தவர் முதுகில் முகத்தைப் புதைத்துக் கொண்டார். அதில் இன்னும் சிரிப்பு வர வெடித்து சிரித்தார் வணங்காமுடி.
இலை மறை காய் மறை கூடல் புனிதம் கொண்ட தாம்பத்தியத்தின் சுவை அலாதி தான் போலும்.
***********
மாலை வேளையில் பெண்கள் அனைவரும் வெளி திண்ணையில் காற்று வாங்க அமர்ந்திருந்தனர். காலையில் முகம் முழுவதும் கடுமை பூசி கொண்டு திரிந்த ஓரகத்தி தற்போது முகம் கொள்ளா புன்னகையோடு தனது ஆறு வயது மகளை மடியில் வைத்துக் கொண்டு,
அதற்கிருக்கும் நான்கு முடிகளைத் திரட்டி அலங்காரம் செய்து பூ வைக்க முயற்சித்துக் கொண்டு இருக்க. வானதி முகத்திலும் அகிலா முகத்திலும் சிரிப்பு பானுவை வம்பு செய்யும் பொருட்டு.
“ஏன் அகிலா பானு முகம் கொஞ்சம் பள பளன்னு இருக்கே ஸ்நோ (அந்தக் காலத்து முகத்துக்குப் போடும் கிரீம்) போட்டு இருக்கோ.
“அந்தப் பழக்கமே இல்லையே இது பயித்தமாவு ஆளு ”
“பிறவு என்ன பொலிவு”
“கொழுந்து ஸ்பெசலா எதுவும் கொடுத்து இருப்பாரோ?”
“இருக்கலாம் யாரு கண்டா” என்றதும் தான் தாமதம் வெட்கம் கொண்டு உள்ளே ஓடியே விட்டார் பானுமதி.
அவரைக் கண்டு இரு பெண்களும் சிரிக்க என்னவென்று அறியாத பொழுதும் தாய்களின் சிரிப்பை பார்த்து கன்னிகா, சித்ரா வாண்டுகளும் சிரித்து வைத்தது.
***********
தெளிந்த நல் ஓடையாக நாட்கள் அது போக்கில் செல்ல. பெரிய வாதத்திற்குப் பிறகு ஜவுளி கடை ஈஸ்வரும் ,தோட்டம் அருணகிரியும், வட்டி தொழில் வணங்காமுடியும் என்றாகி போனது அதற்கே இரு அண்ணன்களிடம் மல்லு கட்டினார் வணங்கா.
பெரும் பாடு பட்டுப் பிரிக்கப் பட்டது தொழில் மட்டுமே குடும்பம் வழமை போல் சண்டை, சச்சரவு, ஏற்ற, தாழ்வு கொண்டாலும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர் .
பெண்களும் அதற்கு துணை நின்றனர் என்றே சொல்ல வேண்டும். ஒரே இரத்தமான அண்ணன் தம்பிகளை விட அனைத்திலும் வேறு பட்டு வளர்ந்து,
வாழ வந்த இடத்தில் முரண் கொள்ளாமல் விட்டு கொடுத்து தன் பிள்ளைகள் என்ற பாரபட்சமின்றி தாங்கி நின்ற பெண்களே இங்கு சிறப்பு.
**********************
அண்ணன்களைக் காட்டிலும் இளையவன் ‘இளையது காளை’ என்பதை நிரூபித்துத் தொழிலில் முன்னேறினான். ஈஸ்வருக்கும் அருணகிரிக்கும் தொழில் உச்சம் என்றாலும் வசீகரம் கொண்டது என்னவோ வணங்காமுடி தான்.
இன்பங்கள் கொண்ட இல்லத்தில் இனிதே தரித்தது மூன்று முத்து. அது என்னவோ இரு தலைமுறையாக அவர்கள் வழியில் பெரியவர்களுக்குப் பெண் பிள்ளைகள் தான், சதாசிவம் மட்டுமே மூன்று ஆண்களை ஈன்றார்.
அதே போல் ஈஸ்வர் மற்றும் அருணகிரிக்கு ஒரே பெண் பிள்ளைகளாகத் தங்கி போகப் பானுமதி வணங்காமுடிக்கு மூன்று ஆண் செல்வங்கள்.
இரு வருடங்கள் இடை வெளியில் இரு ஆண் குழந்தை பிறக்க பத்து வருட இடைவெளியில் வந்து பிறந்தான் கடை குட்டி.
பெண்கள் ராணிகளாக வளர்க்க பட ,ஆண்கள் ராஜாக்களாக வளர்க்க பட அழகே உருவாக வந்து நின்றது அடுத்தத் தலை முறை.
அழகும், அறிவும், காதலும், கலவியும், உண்மையும், நேர்மையும், தொழிலும், சுத்தமும் விட்டு கொடுக்கும் நடத்தையும் இம்மையும் ,மறுமையும் தாங்கி.
அல்லவை அகற்றி நல்லவை கொடுத்து அவயத்தில் தாங்கி பிடிக்கும் உறவுகள் கொண்ட குடும்பமாக வாழ்ந்து நிற்கும் இவர்கள். இருபது ஆண்டுகள் கடந்து எப்படி வாழ்வார்கள்? இதே போல் அடுத்த தலை முறையும் சிறக்குமா என்ன?
பயணித்து பார்த்தால் அல்லவா தெரியும் எண்பதா ?………. நூற்றாண்டா?…………………… என்று.