வடக்கு வீதி வணங்காமுடி – 4
வழியெங்கும் சிறு பிள்ளை போல் அழுது கொண்டே வரும் பானுமதியை பார்க்க பாவமாகத் தான் இருந்தது வேலனுக்கு அவரும் ‘அழுகாதம்மா’ என்று சொல்லி பார்த்து ஓய்ந்து விட்டார்.
இருவரும் வீட்டுக்குள் நுழைய பானுவை பார்த்த அனைவர் முகத்திலும் அதிர்ச்சி. அவரது நிறத்திற்கு அழுததினால் முகம் மூக்கெல்லாம் சிவந்திருந்தது.
வானதி, “வேலா என்ன ஆச்சு எதுக்குப் பானு இப்படி அழுகுது கொழுந்து ரொம்பக் கோபப்பட்டாரா என்ன?”
“கோபமா பேசல ஆனா கோபம் தான்” என்றதும் இன்னும் பானு தேம்பி தேம்பி அழுக பசுபதியால் தனது அன்னையின் அழுகையைக் காண முடியவில்லை. பானுமதியை சமாதானம் செய்யும் பொருட்டு அவன் நெருங்கும் சமயம் இவர்களை வால் பிடித்தார் போல் வந்து நின்றார் வணங்காமுடி.
மனைவியின் அழுகையைப் பார்த்துக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கோபமாக நடுக் கூடத்திற்கு வந்தவர் தனது மகனிடம் “நான் அடுத்த வண்டிக்கு கமுதி போறேன் கல்யாணம் வேணான்னு சொல்லிட்டு வந்துறேன்.யாரும் ஏங்கி இங்கன அழுக வேணாம் ”என்க
“அப்பா!…”
“பேசாதீங்க நீங்க ஒரு பொறுப்பைக் கொடுத்தீங்க அதை என்னைக் கொண்டு நான் சரியாத்தான் செஞ்சு இருக்கேன். நீங்க ஒன்னும் யாரோ இல்ல எனக்கும் மகன் தான் அப்படி என்ன உங்க வாழ்க்கையில கெடுதல் பண்ணிடுவேன் நான்?
நம்பிக்கை இல்லாதவரு எதுக்கு என்கிட்ட பொண்ணு பார்க்க சொல்லனும்? அண்ணனுங்களைக் கொண்டு பண்ணிக்க வேண்டியது தானே,
யார் எப்படி கல்யாணம் பண்ணாலும் என் கடமையை நான் சரியா தான் செய்வேன் உங்க அண்ணன்களுக்குச் செய்யல அது போல” என்றவர் வெளியில் செல்ல பார்க்க ஓடி வந்து அவரது கையைப் பற்றிக் கொண்டான் பசுபதி.
அப்பா!… ப்பா!…. என்று அவரது கையைப் பற்றியவன் பதட்டத்தில் உளறினான் என்று தான் சொல்ல வேண்டும் “அப்பா! பொண்ணு சிவப்பா அழகா தான் இருக்கா.முடி கூட நீளமா நல்ல இருக்கு. அம்மா மாதிரி அழகா மூக்குத்தி வேற போட்டுருக்கா, ஆனா பாருங்க மழைக்குக் கூடப் பள்ளிக் கூடத்துக்கு ஒதுங்கி இருக்க மாட்டா போலப்பா அது மட்டும் தான் இடிக்குது”
இந்துமதி“அடப்பாவி மாமா பொண்ணு போட்டோ கூடப் பார்க்க மாட்டேன்னு சொல்லுச்சு, ஆனா பொண்ணை நேருல பார்த்தது போல பேசுது”
“அதானே முடி டூ மூக்குத்தி வரை நோட்பேட் வச்சு எழுதி இருக்கு இது” இளவட்டம் கிசு கிசுக்க உஷ்…. என்று எச்சரித்தார் அகிலா.
மகனது பேச்சில் கோபம் போயி எரிச்சல் வர “இப்போ என்ன தான் சொல்ல வாறீங்க முடிவு சொல்லுங்க” என்றதும்
“நான் அவளையே கல்யாணம் பண்ணிக்கிறேன்” முனகல் போல் சொல்ல
“கசப்பை முழுங்கி நின்னு இதை நீங்க செய்ய வேணாம் அதுவும் எனக்காக. மனசு ஒத்து வாழ போறது நீங்க தான் விளையாட்டு பண்ணாதீங்க எதா இருந்தாலும் சட்னு சொல்லிடுங்க எனக்கு எந்த வருத்தமும் இல்ல” என்றவர் பார்வை அழுகை நின்றும் சிறு பிள்ளை போல் தேம்பி நின்ற மனைவியைத் தொட்டு மீண்டது.
“இல்லப்பா அவளையே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றவன் பார்வை வேலனை தீண்ட தன் துணை தேடும் கண்ணுக் குட்டியை அழகாக அரவணைத்துக் கொண்டார் வேலன்.
“வணங்கா அதான் கண்ணு குட்டி சொல்லிடுச்சே பிறகு என்ன அதுக்குப் படிப்பு தான் தடை வேற ஒண்ணுமில்ல”
“திரும்ப சொல்லுறேன் வேலா பொண்ணு புள்ள விவகாரம் நானும் உறுதி கொடுத்து வந்ததுல இருந்து பாக்குறேன் வீட்டுல உள்ள எல்லாம் பேச்சுக்கு வாறீங்க.
நாளை பின்ன கல்யாணம் முடிச்சு வந்த பிறப்பாடு பொல்லா பேச்சு வர கூடாது. என்னால அந்தப் பொண்ணுக்குப் பாவம் பண்ண முடியாது சொல்லிட்டேன்” என்றவர் வேகமாக வெளியில் சென்று விட்டார்.
அவர் சென்றது தான் தாமதம் அனைவரும் பசுபதியை பிடித்துக் கொண்டனர்.
“டேய் என்ன குதி குதிச்ச யாரும் கேட்க மாட்டீங்களா? சொல்ல மாட்டீங்களானு? இப்போ என்ன எங்களை உன் அப்பன் கிட்ட மாட்டிவிட்டு நீ மாத்தி பேசுற படுவா” அருணகிரி இளயவனைக் கடிந்து கொள்ள.
“உங்களுக்கு மட்டுமா எனக்கும் தான் அவரைப் பார்த்தா பேச்சே வரமாட்டேங்குது எதிர்த்து பேச முடியல நான் என்ன செய்ய”
“தம்பி அதுக்குன்னு பிடிக்காத பொண்ணைக் கல்யாணம் பண்ணி அது வாழ்க்கையும் வீணா போகவா? இப்பவும் ஒன்னும் கெட்டு போகல முடியாதுனு சொல்லிடு” அகிலா சொல்ல.
“இல்ல அகிலாம்மா எனக்குப் பிடிச்சு இருக்கு அவ படிப்பும் பேச்சும் நாட்டுப்புறம் மாதிரி இருக்கு அதான் இடிக்குது மத்தபடி நல்லாத்தான் இருக்கா” என்றவனை முறைத்தார் பானுமதி.
“ஏண்டா இதை முன்னாடியே சொல்லி இருந்தா. அவர் என் மேல கோப பட்டிருக்க மாட்டார் தானே பார் இப்போ” என்றவர் நடுவில் நின்றவனை கோபமாக தள்ளி விட்டு அவரது அறைக்குள் புகுந்து கொண்டார்.
வீட்டில் உள்ள அனைவரும் ஒரு முறைப்புடன் கலைந்து செல்ல எஞ்சி நின்றது இரு அக்கா மகள்கள் மட்டுமே. அனைவரும் சென்றதை உறுதி செய்து கொண்ட அரிவை இரண்டும் தனது மாமனை சுற்றி வந்தது.
தன்னைச் சுற்றி வட்டமடித்த வஞ்சிகளைப் பார்த்தவன் எரிச்சல் மிகுதியில் “என்னங்கடி நான் என்ன தாஜ்மஹாலா சுத்தி சுத்தி பார்க்க”
“என்ன? என்னங்கடி? பொண்ணு பிடிக்கலை, பட்டிக்காடு, நான் பார்க்க மாட்டேன், தட்டு மாத்த வர மாட்டேன்னு என்ன அலும்பு பண்ண நீ!.. ஆனா பொண்ணை நேருல பார்த்த மாதிரி நிறத்துல இருந்து எல்லாமே சொல்லுற”
“ப்ச்.. ஆமாடி நேருல போயி பார்த்து பேசிட்டு தான் வந்தேன்” என்றவன் ஆ! என்று அதிர்ந்து நின்றவர்களைச் சுற்றிக் கொண்டு சென்று விட்டான்.
“ஆத்தி!… பார்த்து பேசுச்சாமே இது எப்போ?” இந்துமதி வாய் பிளக்க.
“எங்க அம்மா அப்பவே சொன்னாங்க ” மதுமிதா
“என்னானு”, இந்துமதி.
“நான் அம்மாகிட்ட தட்டு மாத்தும் போது மாமாகாகப் பேசுமானு சொன்னேன்” அதுக்கு அம்மா ‘உங்க மாமனை நம்பி பேச முடியாது அவன் நம்பக் கிட்ட வேணான்னு சொல்லி என்ன நடக்கப் போகுது.
உண்மையா வேணான்னு யோசிச்சா உங்க தாத்தா கிட்டயே சொல்லி இருப்பான் அவரும் அழுத்தம் கொடுக்க மாட்டார் பாப்பா. இவனை நம்பி எதுவும் பேசி வைக்க முடியாதுனு சொன்னாங்க’
“சரிதான் பிராடு மாமா”
“இதை கொண்டு வீட்டுல எத்தனை கலவரம் பாரு”
“அதைச் சொல்லு சின்னத் தாத்தா வேற கோபமா போறாரு” இந்துமதி வருத்தமாகச் சொல்ல
“ஹ்ம்ம்!.. விடு வருவார் அம்மாச்சி தாண்டி பாவம் வா அவங்களை போயி பார்ப்போம்” என்று அரிவை இரண்டும் பானுமதியை பார்க்க சென்றது.
**************
திருச்சியில் நிலவரம் சற்று அடங்க அங்கு சென்னையில் கலவரம் தொடங்கியது..
“என்னங்க மீனு இப்படி ஆகி போச்சு”
“எனக்கும் ஒன்னும் புரியல விமலா பசுபதிக்கு எப்படியாவது என் சித்தி பொண்ணைப் பேசி முடிக்க யோசிச்சேன் ப்ச்… போச்சு”
“அதுக்கு வாய்ப்பே இல்லை மீனு அத்தை, மாமா ரொம்ப ட்ரடிஷன் அது போக பசுபதியே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாராம்”
“ஹ்ம்ம் ஸ்வாமி நேத்து தான் சொன்னார்”
“சரி அதை விடுங்க எப்போ திருச்சி கிளம்புறீங்க மீனு”
“அடுத்த மாசம் தானே பார்ப்போம் உங்க வீட்டுக்காரர் என்ன சொல்லுறாரு”
“அவர் பத்து நாள் லீவு எடுக்கச் சொல்றார்”
“ஐயோ! லாஸ் ஆப் பே வருமே”
“நானும் சொன்னேன் வரத்தான் செய்யும். நீ வராட்டி நான் கிளம்புறேன் உனக்கு எப்போ ஓகே வோ அப்போ வானு சொல்றார்.அவர் சொன்ன தோரணையில் டிக்கெட் போட சொல்லிட்டேன்”
“இங்கையும் அதே கதை தான் லீவு மெயில் அனுப்பிட்டார் என்னையும் கேட்டார் நான் இரண்டு நாள் முன்னாடி போலாமேனு தான் சொன்னேன் மறு பேச்சே இல்ல அவருக்கு மட்டும் டிக்கெட் போட்டுட்டார்”
“ஐயோ!… என்ன மீனு இது?”
“என்ன செய்றதுன்னு தெரியல விமலா வர வர ரொம்ப கோப படுறார் பேசி இரண்டு நாள் ஆகுது,நல்லா பேசி பல மாசமாகுது எங்க வீட்டுல சொன்னா நீ தானே கல்யாணம் பண்ணணு சொல்லுறாங்க.அவர் பக்கம் யார்கிட்டையும் நெருக்கம் இல்ல என்ன செய்றதுன்னே தெரியல இதுல பாப்பா வேற படுத்துறா”
“என் நிலை அதை விட மோசம் மீனு”
“திருச்சி போகவே பயமா இருக்கு இன்னும் குழந்தை இல்ல நான் சொல்ல வர்றது புரியுதா?” கலங்கிய குரலில் விமலா சொல்ல.
“புரியுது விமலா விடு எதுவா இருந்தாலும் பார்த்து தானே ஆகனும்” ஒரு சேர பெருமூச்சு ஓரகத்திகளிடம் இருந்து.
என்ன செய்யக் காதல் திருமணம் வேறு முரண் இருக்கத் தானே செய்யும். இது போல் உரசல்கள் வழமை தான் என்றாலும் இந்த முறை எல்லை தாண்டியதாகத் தோன்றியது இரு பெண்களுக்கும்.
இங்கு மனைவிகள் பேசி கொள்ள அங்கே அண்ணனும் தம்பியும் புலம்பி கொண்டு இருந்தனர். இருவரும் வேலை முடிந்தவுடன் பேசி வைத்து கடற்கரை வந்துவிட்டனர்.
“பாவம் பசு அப்பா ஏன் இப்படி பண்ணுறார்? நம்ப மேல உள்ள கோபத்துல அவனை வச்சு செய்றார் பாவம்டா அவன்” விசு புலம்ப
“விசு அப்படி இல்லடா அப்பா எது செஞ்சாலும் சரியாதான் செய்வார் அப்படியே அதுல சறுக்கல் வந்தாலும் சரி பண்ணிடுவார்”
“என்ன ஸ்வாமி நீ”
“உண்மையா சொல்றேன் விசு இது என் அனுபவம். அப்பா சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் சக்தி இருக்கு போல இப்போ நான் உணர்றேன்.சரி அதை விடு பசுபதி செம மூளை காரன் காரியவாதி. ஊருல தானே தொழில் செய்றான் பொண்ணு படிக்காட்டியும் பார்த்துப்பான்”
“அது சரி ஸ்வாமி இப்போ இருக்குற காலக் கட்டத்துல எல்லாரும் ஒரு டிகிரியாவது வச்சு இருக்காங்க டா. இந்தப் பொண்ணு என்னனா ஸ்கூலுக்கே போகலானு சொல்லுது இந்த லட்சணத்துல அவங்க அப்பா தமிழ் வாத்தியார் வேற கஷ்டம் காலம் டா” என்று நொந்து கொண்ட தம்பியை பார்த்து.
“எனக்கும் அந்தக் கேள்வி இருக்கு இதை போயி அப்பா கிட்ட கேட்க முடியுமா?” ஸ்வாமி சொல்ல
“அவர் கிட்ட யாரு பேச” விசு முனகினான்.
படிப்பு படிப்பு என்று பேசிய அனைவரும் பகுத்தறிவு கொண்ட கன்னல்மொழியிடம் மண்டியிட போவது தெரியாமல். அவளை வைத்து ஒரு வாக்கு வாதமே செய்து கொண்டு இருந்தனர். அவர்களுக்கு யார் சொல்வது இது வணங்காமுடியின் தேர்வென்று.
“சரி விடுடா ஊருக்கு போயி பேசிப்போம் அங்க போனா தான் நிலவரம் தெரியும்,ஆனா ஒன்னுடா விசு நம்மளை விடப் பசுபதி கொடுத்து வச்சவன்” எதையோ யோசித்துக் கொண்டே ஸ்வாமிநாதன் சொல்ல அவனைக் கேள்வியாகப் பார்த்து வைத்தான் இளையவன்.
***********
மதியம் கோபத்தில் வீட்டை விட்டு சென்ற வணங்காமுடி இரவு பத்து மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை என்றதும் பானுமதிக்குப் பயம் வந்துவிட்டது.
அவர் அடித்துப் பிடித்து வேலனுக்குப் போன் செய்ய இன்னும் கடையில் தான் இருப்பதாக சொன்னவர் வேலை முடித்து வர நேரம் பிடிக்கும் என்ற தகவலையும் சொல்ல ஓய்ந்து போனார் பானுமதி.
திருமணமாகி இத்தனை வருடங்களில் எத்தனையோ சண்டைகள், உரசல்கள், வருத்தங்கள் வந்ததுண்டு, ஆனால் அவை அனைத்தும் ஓர் இரு நாட்களில் காணாமல் போய்விடும் ஏனென்றால் அதனை வணங்காமுடியும் சரி பானுமதியும் சரி வளர விட மாட்டார்கள்.
இருவரும் அமர்ந்து பேசி அன்றோ அல்லது இரு தினங்களிலோ அதற்கு ஒரு முடிவு கட்டி விடுவார்கள், ஆனால் சில காலங்களாக அதாவது பெரியவன் திருமணத்தின் பொது ஆரம்பித்த உரசல் தற்போது பசுபதி வரை இழுக்கப் பயந்து போனார் பானுமதி.
காரணம் பிள்ளைகள் விருப்பத்திற்குப் பானுமதி எளிதாக விட்டு கொடுக்க வணங்காமுடியால் அவ்வாறு இருக்க முடியவில்லை போலும்.
காலங்கள் மாறினாலும் மாற்றங்கள் வந்தாலும் சில மனிதர்கள் என்றும் பழமைவாதி தான் அவர்களால் சில விடயங்களைச் சகித்துக் கொள்ள முடியாது.
சில மாற்றத்தை நிதர்சனம் உணர்ந்து வணங்காமுடி ஏற்றுக் கொண்டாலும் பல விடயத்தில் மனிதர் தளர்த்திக் கொடுக்க மாட்டார். அது போல தான் பிள்ளைகள் திருமண விடயமும்.
பானுமதியும் இரவு உணவை தவிர்த்து அறையில் படுத்து கொள்ள பசுபதி தான் தவித்துப் போனான். தன்னால் தாயும் தந்தையும் இப்படி இருப்பது அவனுக்குக் குற்ற உணர்ச்சியாகி போனது.
அவனும் உண்ணாமல் படுக்கப் போக அவனை அரட்டி வைத்து உண்ண வைத்தார் வானதி.
அடுத்த மாதம் திருமணம் என்று தேதி குறித்து வந்தாயிற்று இந்த அழகில் வீட்டில் திருமணம் வேண்டுமா? வேண்டாமா? என்று தர்க்கம் செய்தால் என்ன தான் செய்வது.
அதிலும் பங்காளி உறவு பெண் வேறு அந்த கவலையில் இருந்தனர் நால்வரும்.ஈஸ்வர், அருணகிரி, வானதி, அகிலா, பெரியவர்கள் அனைவரும் கலக்கத்துடன் பெயருக்கு உண்டு சென்றனர்.
***************
மேலும் ஒரு மணி நேரம் சென்று வீட்டுக்கு வந்த வணங்காமுடி குளித்து முடித்துத் திருநீர் அணிந்து வழமை போல் இரு நிமிடம் ஈசனை கண் முன் நிறுத்தி விட்டு அறைக்கு படுக்க வர, அவரது மனைவி அவருக்கு முதுகு காட்டி படுத்திருந்தார்.
அவர் இன்னும் விசும்பி கொண்டே இருக்க வணங்காமுடி அவரைப் பார்த்துக் கொண்டே கதவை அடைக்க அந்த அரவத்தில் சடாரென எழுந்து அமர்ந்தார் பானுமதி.
அவரைக் கண்டு கொள்ளாமல் வேட்டியை சற்று தளர்த்தியவர் அப்படியே குப்புற படுக்க அவரையே பார்த்துக் கொண்டு இருந்த பானுக்கு இன்னும் அழுகை வந்தது.
அழுது கொண்டே அவரை நெருங்கியவர் நரை கூடிய அவரது புஜத்தில் முகத்தை வைத்து தேய்க்க அச்செயலில் கோபம் சற்று மட்டுப்பட வணங்காமுடி இதழில் சிறு வளைவு.
“என்ன டைப்பிஸ்ட்டம்மா அழுது முடிச்சுடீங்களா?….” பெண்ணிடம் மௌனம்.
“அது என்னங்க முட்டாயப் புடுங்குன புள்ள கணக்கா ஏங்கி ஏங்கி அழுகை… ஹ்ம்ம்..உங்க புள்ள அத்தினி ஒசத்தி?”குரலில் அத்தனை ஆதங்கம் அவருக்கு .
இன்னும் அவர் அழுகை ஓய்ந்த பாடில்லை இது சரிவராது என்று எண்ணியவர். அவரைச் சற்று நகர்த்தி மல்லாக்க படுத்துக் கொண்டு மீண்டும் அவரை வாகாகத் தனது நெஞ்சில் படுக்க வைத்துக் கொண்டார்.
“நீங்க இப்படி அழுது இத்தனை வருசத்துல நான் பார்த்ததே இல்லங்க உங்க பெத்தவுங்க இறப்புக்கு கூட” அவரின் பேச்சு பேரிளம் பெண்ணுக்கு கோபம் தர .
“தண்டல் காரரே சில வருசமா ரொம்பக் கோவம் வருது உங்களுக்கு”
“டைப்பிஸ்ட்டம்மாக்கு என்னை விடப் பிள்ளைங்க பெருசா போச்சு அதான் கோபம் வருது அவனுக பின்னாடியே போறீங்களே அப்போ என் கோபம் நியாயம் தானே”
“என்ன பேசுறீங்க”
“சரியாத்தாங்க பேசுறேன் ஒன்னு மனுசுல நல்லா பதிய வைங்க என்னைக்கும் நான் தான் உங்களுக்கு இனி அவனவன் குடும்பம் குட்டின்னு போயிடுவான்”
“அப்படி சொல்லாதீங்க தண்டல் காரரே ஏத்துக்க முடியல”
“நிதர்சனம் சொல்லுறேன் அப்புறம் உங்க விருப்பம். அது சரி அப்படி என்ன உங்க புள்ளைக்கு நான் கெடுதல் செய்வேன்னு நீங்க இந்த அழுக அழுகுறீங்க”
“அது என்ன உங்க பிள்ளை அவன் உங்களுக்கு யாரு”
“அது உங்களுக்கு புரிஞ்சா சரிதான்… நம்பிக்கை இல்லாம தானே இந்த அழுகை”
“நான் அதுக்கு ஒன்னும் அழுகல நீங்க கோபமா பேசுனீங்க அதுக்குத் தான்”
“அது சரி”
“அது என்ன நம்பிக்கை இல்லனு சொல்லுறீங்க அதுவும் இத்தனை வருஷம் போயி”
“பின்ன என்னங்க பொண்ணு பார்த்ததுக்கு இந்தப் பேச்சு பேசுறீங்க”
“ஐயோ!…. தண்டல் காரரே பேச்சு பொண்ணை பத்தி இல்ல அவ படிப்பை பத்தி இந்தக் காலத்துல கூலி வேலை செய்றவங்க கூட அவங்க பிள்ளையைக் காலேஜ் அனுப்பிப் படிக்கச் வைக்கிறாங்க, ஆனா அந்த அண்ணன் டீச்சர் அவர் பிள்ளையைப் படிக்கச் வைக்கலனா யோசிக்கத் தானே வேணும்”
“நல்ல கேள்வி தான் ரொம்ப வருஷம் செண்டு பிறந்த குழந்தை. எங்க அக்கா பொத்தி வளர்க்குறேனு அந்தப் புள்ளைய பள்ளி கூடத்துக்குக் கூட அனுப்ப மாட்டேன்னு ரகளை பண்ணிட்டாங்க மாமா எத்தினி தூரம் சொல்லியும் அழுதே சாதிச்சுட்டாங்க படிப்பில்லை தான்,ஆனா பொண்ணு தங்கம்.
“………” மீண்டும் மௌனம்
“இன்னும் என்னங்க யோசனை”
“யோசனை எல்லாம் இல்ல தண்டல் காரரே” என்றவர் அவரது கன்னத்தில் தனது மூக்கை வைத்து அவரது வாசத்தை நுகர முயற்சிக்க அவரும் அவரை இறுக்கி கொண்டார்.
“டைப்பிஸ்ட்டம்மா என்னங்க இது உலக அதிசயமா இருக்கு கட்டிக்கிறீங்க”
“ப்ச்” என்றவர் மீண்டும் தனது மூக்குத்தி கொண்டு அழுத்த அது சிறு காயத்தைக் கொடுத்தது அதில் ஸ்ஸ்…. ப்பா இது என்னங்க வாய் சண்டை முடியாதுனு புது விதமா காயம் பண்ணுறீங்க”
“தண்டல் காரரே! அறுபதில் தான் ஆசை கூடுமாம்” செய்தி போல் பெண்
“சரிதானுக அதுக்குத் தானே விருப்ப ஓய்வு எழுதி கொடுக்கச் சொல்லி வேலையை விடச் சொன்னேன், ஆனா பாருங்க என்னை விட்டுட்டு பால் குடிக்கிற பிள்ளைகளை சுத்தி வர மாதிரி,
அந்த மூணு தடியனுகளைச் சுத்தி வாறீங்க. நம்ப கடமையை சிறப்ப பண்ணியாச்சுங்க என்னங்க இது நியாயம்?” கேலி போல் பேசினாலும் அவரது ஏக்கம் புரிய.
அவரது முகம் பற்றித் தன்னைக் காண செய்தவர் அவர் கண்ணை அசையாமல் பார்க்க, அவரும் அவரைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தார். முதுமையின் முதல் அடியில் இருந்தாலும் நரை கூடி நின்றாலும் அன்று போல் இன்றும் அன்பு நிறைந்து நின்றது இருவர் கண்ணிலும்.
“பார்த்தே பசியாற முடியாதுங்க டைப்பிஸ்ட்டம்மா ” என்றவர் அவரைக் கீழே தள்ளி அவருள் ஆழ புதைந்து சில மணி நேரம் காதல் காயங்கள் செய்ய அதனைச் சுகமாகத் தாங்கி நின்றார் பானுமதி.
தற்காலிகமாக அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு. ஒருவர் உயிரை ஒருவர் நுகர்ந்தவரே தூங்கி போனார்கள். அக்காலம் கொண்ட காதல் காலம் தாண்டி வெற்றிக் கொண்டு நின்றது இங்கே.
.